வெள்ளாட்டின் பலி

நம் நாட்டில் கிராமத் திருவிழாக்களில் வெள்ளாட்டை பலி கொடுப்பது ஒரு முக்கியச் சடங்கு. திருச்சியில் உறையூரில் நடக்கும் ஒரு அம்மன் திருவிழாவில் (இதைக் குட்டி-குடி திருவிழா என்பார்கள்) ஓர் ஆட்டின் தலையை வெட்டி அப்படியே பூசாரி இரத்தத்தைக் குடித்துவிடுவான். இதுபோல இலத்தீன் அமெரிக்க நாடாகிய பெரூவிலும் ஒரு வெள்ளாடு பலி தரப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு வெள்ளாடு என்பது குறியீடாக அந்நாட்டுச் சர்வாதிகாரி ஒருவனைக் குறிக்கிறது.

வெள்ளாட்டின் விருந்து (The Feast of the Goat) என்பது பெரூ நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் மராயோ வார்காஸ் லோஸா என்பவரால் எழுதப்பட்டது. இது ஓர் அரசியல் வரலாற்று யதார்த்த நாவல். இப்படிப்பட்ட நாவல் தமிழில் இதுவரை கிடையாது. இது ஸ்பானிய மொழியில்  2000ஆம் ஆண்டில் வெளியானது. ரஃபேல் ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலனின் நீண்ட ஆட்சியின் (1930-61) இறுதிப்பகுதி பற்றியது. லத்தீன் அமெரிக்க நாவல்களின் ஓர் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது இந்த நாவல். பெரு நாவலாசிரியர்களில்

அகஸ்டோ ரோவா பாஸ்டோஸின் I the Supreme,

அலெஜோ கார்பெண்டியரின் Reasons of State.

காப்ரியேல் கார்சியா மார்க்விஸின் Autumn of the Patriarch

ஆகிய அரசியல் நாவல்களின் வரிசையில் வருகிறது வார்காஸ் லோஸாவின் இந்த நாவல்.

இந்த நாவலின் கதை மூன்று பகுதிகளாக உள்ளது. ஒன்று யுரேனியா சாப்ரால் என்ற டொமினிகன் பெண் சம்பந்தப்பட்டது. மற்றொன்று பெரு நாட்டின் சர்வாதிகாரி ட்ரூஜில்லோவின் கொலை தொடர்பானது. இன்னொன்று ட்ரூஜில்லோவின் இறுதி நாளில் நிகழ்ந்த அவனது சொந்த நிகழ்வுகள். 1961 முதல் 1996 வரை நடந்த கதையை இந்த மூன்று பகுதிகளும் மாறி மாறிச் சொல்கின்றன.

கதையின் தொடக்கத்தில் யுரேனியா தன் சொந்த நகரமான சாண்டோ டொமினிகோவுக்கு 1996இல் திரும்புகிறாள். 1961இல் 35 ஆண்டுகளுக்கு முன் தன் 14 வயதில் அதை விட்டுச் சென்றவள் அவள். பிறகு ஹார்வர்டு சட்டப்புலத்தில் பயின்று இப்போது அவள் நியூ யார்க்கில் உலக வங்கிக்கான ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருக்கிறாள். சாகக் கிடக்கும் தன் தந்தை அகஸ்டீன் சாப்ராலைக் காண வருகிறாள். அவள் தன் குடும்பத்தைப் பிரிந்து சென்றதிலிருந்து இதுவரை எந்தவிதத் தொடர்பையும் அவர்களுடன் வைத்துக் கொண்டதில்லை. ஒருவேளை தன் தந்தையின் மரணத்தில் தன் வெற்றியைக் காண வந்திருக்கிறாள் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது பகுதி 1961 மே 30இல் பெருவின் சர்வாதிகாரி ட்ருஜில்லோ வின் கொலை நடந்த நிகழ்வுக்குத் திரும்புகிறது. (இவன்தான் “ஆடு” எனப்படுகிறான்.) முதலில் அமெரிக்காவின் அன்புக்குப் பாத்திரமாக அவன் இருக்கிறான். ஓர் அமெரிக்கத் தலைவன் கூறியது போல, ‘he was a son of a bitch, but he was our son of a bitch.’ இப்போது அவன் அமெரிக்க ஆதரவை இழந்துவிட்டான். அவனால் பாதிக்கப்பட்ட சிலர் பிற அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மூன்றாவது பகுதி மே 30 அன்று ட்ருஜில்லோவின் சிந்தனைகள், செயல்கள் பற்றியதாக அமைகிறது. அவன் சிந்தனையில் 1937இல் பல ஆயிரக்கணக்கான ஹைட்டியர்களைக் கொன்றது போன்றவை வந்து செல்கின்றன. கென்னடி, ஃபிடல் கேஸ்ட்ரோ ஆகியவர்களின் சமகாலத்தொடர்பும் கொண்டிருந்தான். அவன் உடல்நலம் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் அதை ஏற்காமல் வழக்கம்போல் மாலை நேரத்தில் பெண்களைச் சந்திக்க விழைகிறான். அப்படிப்பட்ட சந்திப்பு ஒன்றிற்குச் செல்லும்போதுதான் அவன் கொலை செய்யப் படுகிறான். கொலைகாரர்கள் முதலில் போட்டிருந்த திட்டப்படி அவர்களின் காரியங்கள் நடக்கவில்லை. அவன் வரக் காத்திருந்த நேரத்தில் அவர்களில் ஒவ்வொருவனும் அந்தச் சர்வாதிகாரியால் தாங்கள். அடைந்த பாதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்றாலும் எதிர்பாராத விதமாக தனியாக அவன் சிக்கியதால் உடனே கொன்றுவிடுகிறார்கள்.

இந்த மூன்று பகுதிகளும் கதையில் கடிகார நிகழ்வுகள் போல மாறி மாறி வருகின்றன. கதையின் பெரும்பகுதி ட்ருஜில்லோ தன் மக்களை எவ்வாறு வதைத்தான் என்பதைச் சொல்கிறது.

சதிகாரர்களில் மிக முக்கியமானவன் ப்யூபோ ரோமன் என்பவன். அந்நாட்டின் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவன். மற்றொருவன் பலாகேர் என்ற, அதுவரை பொம்மை ஜனாதிபதியாக இருந்த ஆள். ஆனால் கொலை நடந்த பிறகு சதிகாரர்கள் இருவரையும் தேடினாலும், அவர்களைக் காணவில்லை. கதை இந்த இருவரின் செயல்களையும் உணர்வுகளையும் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ட்ருஜில்லோவின் மகன் பாரிஸிலிருந்து வந்ததும், பலாகேர் அவனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கலகக்காரர்கள் அத்தனை பேரையும் அழித்து விடுகிறான். பிறகு கத்தோலிக்கத் திருச்சபையுடன் சமரசம் செய்து கொண்டு அவனே ஜனாதிபதியும் ஆகிவிடுகிறான்.

யுரேனியாவின் தந்தை முன்பு, 1960கள் காலத்தில் அரசாங்கத்தில் ட்ருஜில்லோவின் நெருக்கமான ஆளாக இருந்தவன். அவனுக்கு தலைவனின் ஆதரவு குறைந்ததால் அதனைச் சரிக்கட்ட ஒரு நண்பனின் ஆலோசனைப்படி தன் 14 வயது மகளை ட்ருஜில்லோவுக்கு “பலியாடாக” அனுப்புகிறான். ட்ருஜில்லோவின் பாலியல் வன்முறைக்கு ஆளான அவள் தான் படித்த கான்வென்ட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள். பிறகு அங்கிருந்த சகோதரியர் அவளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இப்போது மரணப்படுக்கையில் அவள் தந்தை இருக்கிறான். அவனைக் காணவந்தவள் இயக்கமிழந்த தன் தந்தையிடம் தானறிந்த வகையில் ட்ருஜில்லோவின் அரசாங்கத்தின் பயங்கரங்களைச் சொல்கிறாள். அவற்றில் எவ்வளவு சாப்ராலுக்குத் தெரியும், எந்த அளவுக்கு அவற்றில் அவனுக்குப் பங்கு இருக்கிறது என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் அவன் புரிந்துகொண்டானா என்பது கூடத் தெரியவில்லை. அவள் குடும்ப உறுப்பினர்கள் அவள் ஏன் தொடர்பை அறுத்துக் கொண்டாள் என்று வசைபாடுகிறார்கள். ட்ருஜில்லோவின் கொலைக்குப் பிறகு யுரேனியா தன் குடும்பத்து உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறி வெளியேறுகிறாள்.


உழைப்பாளர் தினம்!

எல்லா முதலாளிகளும் கையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினாலு மணி நேரம் (ஐடி தொழிலாளர்கள் உள்பட) வேலை வாங்கும்போது, எட்டு மணிநேர உழைப்பைக் கொண்டுவந்த தினம் என்று எல்லா மடத் தலைவன்களும் பாராட்டுகிறார்கள். போங்கடா நீங்களும் உங்கள் மே தினமும். பொய், பொய், எங்கும் கலப்படமற்ற பொய். அம்பானிகளிடமும் எலான் மஸ்குகளிடமும் உலகத்தை விற்றுவிட்டு உழைப்பாளர் தினம் பற்றிப் பேசக் கேவலமாக இல்லை?

என்னதான் தீர்வு? யோசியுங்கள் உழைக்கும் பெருமக்களே. முதலாளிகள் நீங்கள் யோசிக்க அவகாசம் தர மாட்டார்கள். இருந்தாலும் உண்ணும்போது, சிலவேளை ஓய்வுகளின் போதாவது உங்கள் நிலை பற்றி யோசியுங்கள்.

(இங்கு எட்டுமணி நேர உழைப்புக்குக் கூலி வாங்கி இரண்டுமணி நேர உழைப்பை அளிக்கவும் மேல்கூலி வாங்கும் அரசு கைக்கூலிகளைப் பற்றிப் பேசவில்லை!)


அழகிய தோட்டம்

ஒரு புகழ்பெற்ற கோயிலில் இருந்த தோட்டத்திற்குப் பொறுப்பாக ஒரு பூசாரி இருந்தார். பூக்கள், செடிகள், மரங்களையெல்லாம் அவர் நேசித்ததால் அவருக்கு அந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு அருகிலேயே இன்னொரு சிறிய கோயில். அங்கு வயதான மதபோதகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். 
ஒருநாள், பூசாரியைத் தேடிச் சில விருந்தினர் வருவதாக இருந்தது. அதனால் இன்னும் கவனத்துடன் தன் தோட்டத்தை அவர் அழகுசெய்தார். களைகளைப் பிடுங்கி எறிந்தார், செடிகளை வெட்டி ஒழுங்காக்கினார், பாசிகளையெல்லாம் நீவி விட்டார், மிக எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இலையுதிர்காலத்து உலர்ந்த இலைகளைத் தேடிச் சேகரித்து ஒதுக்கிவைத்தார். 
அவர் வேலைசெய்யும்போது, இரண்டு கோயில்களையும் பிரித்த குறுக்குச் சுவருக்கு அப்பாலிருந்து மதபோதகர் பார்த்துக்கொண்டேயிருந்தார். 
தன் வேலையை முடித்ததும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பூசாரி அழகு பார்த்தார். மதபோதகரைப் பார்த்து, "அழகாக இருக்கிறதா, தோட்டம்?" என்று கேட்டார். 
"ஆமாமாம், ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது. இந்தச் சுவரில் நான் ஏறிவர உதவுங்கள், சரிசெய்கிறேன்" என்றார் கிழவரான மதபோதகர்.
கொஞ்சம் தயங்கிவிட்டு, பூசாரி கிழவர் சுவரின்மீது ஏறிவர உதவினார். அவரை இறக்கிவிட்டார். 
மெதுவாக, தோட்டத்தின் நடுவிலிருந்த மரத்திடம் மதபோதகர் நடந்துசென்றார். அதன் நடுமரத்தைப் பற்றிக் குலுக்கினார். தோட்டம் முழுவதும் இலைகள் விழுந்தன. 
"இப்போது சரியாகிவிட்டது" என்றார் அந்தக் கிழவர். "என்னை அனுப்பி விடுங்கள்."

-ஜென் கதை.
கதையின் நீதி: மனிதன் உருவாக்கும் எதையும்விட இயற்கை மேலும் முழுமையானது. நமது பார்வையில் அதை அழகாக்குவது என்பது அதன் இயல்பான தன்மையைக் குலைத்து இயற்கையை அழகற்றுப்போகச் செய்வதாகும்.


இயற்கை நினைவில் கொள்கிறது, பரிசளிக்கிறது

ஒரு காலத்தில் ஆரோக்கியமான மூன்று பிள்ளைகளைக் கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். முதல் இரண்டு மகன்களும் காளைகளைப் போன்ற வலிமையும், குறி தவறாமல் எய்வதற்குக் கழுகினைப் போன்ற கூரிய பார்வையும் கொண்டவர்கள். மூன்றாவது மகனோ, சற்றே ஒல்லியான தோற்றத்துடன், சிந்தனையாளன் போலக் காட்சியளித்தான்.
தானே தன் பண்ணைநிலத்தை யாருக்குக் கொடுப்பது என்று முடிவு செய்வதைவிட, அவர்கள் தாங்களே தங்கள் எதிர்காலத்தைத் தேடட்டும் என்று முதிய விவசாயி நினைத்தான்.
ஆகவே அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் பாதைக்கருகில் ஓர் எறும்புப் புற்று உயரமாக இருந்தது. சலிப்புற்ற இரண்டாவது மகன் அதை உதைக் கச் சென்றான். அதிலிருந்து பயந்தோடும் எறும்புகளைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் என்று நினைத்தான்.
“உதைக்காதே” என்றான் மூன்றாமவன். “அவைகளுக்கும் பாதுகாப்பாக வாழ உரிமை இருக்கிறது.”
கொஞ்சம் கழித்து அவர்கள் தெளிந்த நீரைக்கொண்ட ஓர் ஏரியை அடைந்தார்கள். தங்கள் மூட்டைகளைப் பிரிக்க உட்கார்ந்தார்கள். சில வாத்துகள் ஏரியில் இறங்கி நீந்தின.
“இவற்றில் ஒன்று நம் உணவுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்” என்று முணுமுணுத்தவாறு தன் வில்லைத் தேடினான் மூத்தமகன்.
“நகராதே!” வாத்துகள் அதிர்ந்து, ஏரியிலிருந்து பறந்தோடி விடுமாறு உரக்கக் கத்தி னான் இளைய மகன். “பலநாட்களுக்குத் தேவையான உணவு நம்மிடம் இருக்கிறதே!”
ஒரு முதிய காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எழுத்து மறையும் நேரம். இரவுநேரத்தில் தங்கள் கூடுகளுக்குத் தேனீக்கள் திரும்பிய சத்தம் அமைதியைக் குலைத்தது.
“ஆஹா, என் ரொட்டிக்குக் கொஞ்சம் தேன் இருந்தால் போதுமே”….ஓசையைத் தொடர்ந்து அவன் சென்றான். உள்ளீடற்ற ஒரு மரத்தின் அருகில் சென்ற போது அதன் பட்டைமீது தேன் சொட்டிக்கொண்டிருந்தது.
மற்ற இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். நடுமகன் சொன்னான், மரத்தை நாம் எரித்தால், எழும் புகையில் தேனீக்களை விரட்டிவிடலாம்.
“அப்புறம் காடு முழுவதையும் உசுப்பிவிடுவதா?” என்றான் இளையவன். “தேனீக்களை அவற்றின் வீட்டில் விடுங்கள்.”
மற்ற இரண்டு சகோதரர்களும் எரிச்சலடைந்தார்கள். இவனை விட்டுவிட்டு வந்திருந் தால் நன்றாக இருக்குமே!
களைத்தவாறு நடந்து, இருண்ட காட்டின் மத்தியில், பாழடைந்த ஒரு குடிசையை அடைந்தார்கள் அவர்கள். மூத்தவன் கதவைத் தட்டினான். நரைத்த முதியவர் ஒருவர் அவர்களை உள்ளே அனுமதித்தார்.
“எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று ஓர் இனிய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஓர் அழகிய இளம்பெண்.
“எங்கள் அதிர்ஷ்டத்தை நாடிப் புறப்பட்டிருக்கிறோம்” என்று விடையிறுத்தான் மூத்தவன்.
“இதயத்தில் துணிச்சலும் கண்களில் கூர்மையும் இருந்தால் அதை நீங்கள் அடைந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்” என்றார் முதியவர்.
“இரண்டுமே எங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று பெருமையடித்துக் கொண்டான் இரண்டாமவன்.
“அப்படியானால்,” தொடர்ந்தார் முதியவர், “உங்களில் யார் இந்தக் கற்பலகையைப் பார்த்து முயற்சி செய்யத் தயார்?”
மூத்தவன் தைரியமாக எழுந்து கற்பலகையிலிருந்த செய்தியைப் படித்தான். “காட்டில் இருக்கும் முத்துகளைக் கண்டுபிடிக்கவேண்டும். சூரியன் மறையும்போது ஒரு முத்து கூட விடுபட்டிருக்கக்கூடாது. இல்லையென்றால் நீ கல்லாகிவிட நேரும்.”
கிழவரைப் பார்த்து மூத்தவன் கேட்டான்: “எத்தனை முத்துகள் விடுபட்டிருக்கின்றன?”
“ஆயிரம்.”
விடியலில் அவன் புறப்பட்டான். இலைகளும் கொடிகளும் மூடியிருந்த காட்டின் தரையைப் பார்த்து ஏறத்தாழப் புலம்பிவிட்டான்.
குன்றுகளின் பின்னால் சூரியன் மறைவதற்குள் பத்து முத்துகளை மட்டுமே பொறுக்கமுடிந்தது. குந்திய நிலையிலேயே சிலையாகிவிட்டான்.
இரண்டாம் சகோதரன் மறுநாள் காலையில் போனான். சூரியாஸ்தமனத்திற்கு முன் இருபது முத்துகளை மட்டுமே சேகரித்தான். அவனும் சிலையாகிவிட்டான்.
மூன்றாமவனின் முறை வந்தது. புறப்பட்டவுடன் அவன் காதில் ஒரு சன்னமான குரல் கேட்டது. “சஞ்சலப்படாதே.”
திகைத்துப்போய் காலடியைப் பார்த்தான். பாதை முழுவதும் எறும்புகளின் கூட்டம். மெல்லிய குரல் ஒன்று சொல்லியது: “நான்தான் நீ காப்பாற்றிய எறும்புக்கூட்டத்தின் அரசன். நாங்கள் உன்னைக் காப்பாற்றுவோம்.”
சூரியன் மறையும் நேரத்தில் அவன் ஆயிரம் முத்துகளைக் கொண்ட இரண்டு பெரிய பைகளுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தான்.
இரண்டாவது பணிக்கு அவனை முதியவர் அனுப்பினார். ஒரு பெண்ணின் மோதிரம். ஓர் ஆழமான கருத்த ஏரியில் விழுந்துவிட்ட அதைத் தேடி எடுக்கவேண்டும். சற்றேறக் குறைய அழுதேவிட்டான் இளைஞன்.
“பயப்படாதே” என்று ஒரு வாத்தின் ஒலி கேட்டது. “நீ ஏன் கூட்டத்தைக் காப்பாற் றினாய். உன்னை நாங்கள் காப்பாற்றுவோம்” என்றது தாய் வாத்து.
சூரியாஸ்தமன நேரத்தில் கையில் பொன் மோதிரத்தோடு திரும்பினான் இளைஞன்.
மூன்றாவது ஒரு பணிக்கு அவன் மீண்டும் அனுப்பப் பட்டான். ஒரு உயர்ந்த மாளிகையின் மேல்மாடிக்குச் செல்லவேண்டும். சென்றான். அங்கே மூன்று பட்டாடை அணிந்த பெண்கள்-அச்சாக ஒரே மாதிரி இருந்தார்கள்-உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் இளவரசி. தன் இளவரசனுக்காகக் காத்திருப்பவள்.
“ஐயோ” விசனித்தான் இளைஞன். “எப்படி நான் இவர்களில் என் இளவரசியைக் கண்டுபிடிப்பேன்?”
கவலைப் படாதே என விர்ரென்று ஒரு குரல் கேட்டது. அது இராணித் தேனியின் குரல். அது ஒவ்வொரு பெண்ணாக முகர்ந்துகொண்டே சென்றது. மூன்றாவது பெண் ணின் உதட்டில் போய் அமர்ந்தது.
அந்த அழகிய இளவரசிக்கு ஒரு தகுதியான கணவன் கிடைத்தான் என்று காட்டின் ஜந்துக்கள் யாவும் குதூகலித்தன.
-ஜெர்மானிய நாட்டுப்புறக் கதை.


வள்ளலார்

சிதம்பரம் இராமலிங்கம் என்று எளிமையாகத் தன்னை அழைத்துக் கொண்ட திருவருட்பிரகாச வள்ளலார் சித்தி பெற்று 148 ஆண்டுகள் ஆகின்றன. அவரது நினைவைப் போற்றும் வகையான் அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும், அவற்றிற்கு உறுதுணையான அவர் இயற்றிய பாடல்கள் சிலவற்றையும் காண்போம்.

வள்ளல் இராமலிங்க அடிகளார் ஒரு தலைசிறந்த ஞானி. இந்த உலகம் உய்வதற்காக சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியையும், அந்நெறி தழைக்க சமரச சன்மார்க்க சங்கம் என்கிற அமைப்பையும், அற்றார் அழிபசி தீர்க்க சத்திய தருமச்சாலை என்ற உணவுச்சாலையையும், மன இருளை அகற்றி நித்திய ஜோதியை நினைவில் இருத்த சத்திய ஞான சபை என்கின்ற அருள் நிலையத்தையும் சிதம்பரம் அருகிலுள்ள வடலூரில் அமைத்து, இம்மானுடம் மரணமிலாப் பெருவாழ்வு காண விழைந்த அவர் ‘திரு அருட்பா’ என்னும் ஞான நூலையும் அருளிச் சென்றுள்ளார்.

அவரது வாழ்க்கைக் குறிப்புகள்:
இயற்பெயர்: இராமலிங்கம்
தந்தை: இராமையா பிள்ளை
தாயார்: சின்னம்மாள்
சமயம்: சைவம்
குலம்: வேளாண்குலம்
மரபு: கருணீகர் மரபு
தோற்றம்: 5-10-1823
(சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள், 21-ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை, மாலை 5:30 மணியளவில்)
பிறப்பிடம்: மருதூர் (சிதம்பரம் அருகே)
உடன் பிறந்தோர்:
தமையன்கள்:
சபாபதி
பரசுராமன்
தமக்கைகள்:
உண்ணாமுலை
சுந்தரம்.
ஆசிரியர்கள்:
தமையனார் சபாபதி பிள்ளை
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
ஞானாசிரியர்: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இதை வள்ளலாரின் கீழ்வரும் பாடல்கள் கூறும்:

நாதா பொன்னம்பலத்தே
அறிவானந்த நாடகஞ் செய்
பாதா துரும்பினும் பற்றாத
என்னைப்பணி கொண்டெல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே
நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்தென்
நினைக்கேன் இந்த நீணிலத்தே!
(நான்காம் திருமுறை பாடல் 2775)
**
………..
கற்றது நின்னிடத்தே
பின் கேட்டது நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே
உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே
இன்புற்றது நின்னிடத்தே
பெரிய தவம் புரிந்தேன்
என் பெற்றி அதிசயமே!
(ஐந்தாம் திருமுறை பாடல் 3044)
**
ஏதுமறியாது இருளில் இருந்த
சிறியேனை எடுத்து விடுத்து
அறிவு சிறிது ஏய்ந்திடவும்
புரிந்து ஓதுமறை முதற்
கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந்து உணர்த்தி
அருள் உண்மை நிலை காட்டி….
(ஐந்தாம் திருமுறை பாடல் 3053)
**
…………..
ஓதி உணர்ந்தவர் எல்லாம்
எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம்
உருவுறச் செய் உணர்வே….
(ஆறாம் திருமுறை பாடல் 4112)
**
ஒன்றென இரண்டென
ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய
அருட் பெருஞ் ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி
அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்
பெரும் ஜோதி…!
(ஆறாம் திருமுறை பாடல் 4615 வரிகள் 21-24)
**
…………………
முன்னைப் பள்ளி பயிற்றாத
என்தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர்வித்து உடல்
பழுதெலாம் தவிர்த்தே
எனைப் பள்ளி எழுப்பிய
அருட்பெருஞ் சோதி
என்னப்பனே பள்ளி
எழுந்தருள்வாயே!
(ஆறாம் திருமுறை பாடல் 4891)
**
சோதி மலையில் கண்டேன்
நின்னைக் கண் களிக்கவே
துய்த்தேன் அமுதம் அகத்தும்
புறத்தும் பரிமளிக்கவே
ஓதி உணர்தற்கு அரிய
பெரிய உணர்வை நண்ணியே
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன்
நின் அருளை எண்ணியே!
(ஆறாம் திருமுறை பாடல் 5004)

ஞான வாழ்க்கை:
வள்ளலார் தமது பன்னிரண்டாம் வயதிலேயே
ஞான வாழ்க்கை வாழத்தலைப்பட்டார். கீழ்வரும் அவரது பாடல்களால் இதை அறியலாம்.

பன்னிரண்டாண்டு தொடங்கி நான்
இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது
அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுள்ளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும்
இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த
வண்ணமே வகுப்பதென் நினக்கே!
(ஆறாம் திருமுறை பாடல் 3535)
**
பன்னிரண்டாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை
நினைக்கில் மலையும் கரையுமே
துனியாது அந்தப்பாடு முழுதும்
சுகமது ஆயிற்றே
துரையே நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5041)
**
ஈராறாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை
நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு
முழுதும் இன்பமாயிற்றே
இறைவா நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5042)

திருமணம்:
1850-ல் உற்றார் மனம் நோகாது, தன்னுடைய தமக்கை உண்ணாமுலை அம்மையின் மகள் தனம்மாளை மணம் முடித்தாலும் அவர் இல்லறத்தை ஏற்கவில்லை. இதனையும் அவருடைய பாடல்களால் அறியலாம்:

முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன், மோகம் மேலின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பினேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்ததோறும் உள்
உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்
(ஆறாம் திருமுறை பாடல் 3452)
**
முன்னொரு பின்னும் நீ தரு மடவார்
முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்தரசு
உன் புணர்ப்பலால் என் புணர்ப்பலவே
என்னொடும் இருந்திங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவதென்னோ
சொன்னெடு வானத்து அரம்பையர் எனினும்
துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே!
(ஆறாம் திருமுறை பாடல் 3391)

வள்ளலாரின் மாணாக்கர்கள்:
தொழுவூர் வேலாயுத முதலியார்,இறுக்கம் இரத்தின முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர ஐயர், பண்டார ஆறுமுகம் அய்யா,
வீராசாமி முதலியார் ஆகியோர்

உறைவிட மாற்றம்:
சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் வாழ்ந்து வந்த வள்ளலார் ஆரவாரம் மிகுந்த அவ்விடத்தைத் தவிர்த்து 1857-ல்
சிதம்பரம் அருகேயுள்ள கருங்குழி என்னும் கிராமத்தில் மணியக்காரர் வேங்கட ரெட்டியார் இல்லத்தில் 1867 வரை வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் அவர் நாள்தோறும் சிதம்பரம்
சென்று வழிபடுவது வழக்கம்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்:

வள்ளல் இராமலிங்கம் கடவுள் ஒருவரே என்றும், அவரை அன்புடன் ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்றும், சிறு தெய்வ வழிபாடு கூடாது, உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வேண்டும், ஏழைகளின் பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா, இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது,
கருமாதி; திதி முதலிய சடங்குகள் தேவை இல்லை, போன்ற நெறிகளை வலியுறுத்திய
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

சத்திய தருமச்சாலை:

வள்ளல் பெருமானின் தலையாய கொள்கை
ஜீவகாருண்யம். புலால் மறுத்தலும், அற்றார் அழிபசி தீர்த்தலும் ஜீவகாருண்யத்தில் அடங்கும்.
எனவே அற்றார் அழிபசி தீர்க்கும் பொருட்டு, வடலூரில் சத்திய தருமச்சாலையை 1867-ல்
நிறுவினார். தமது உறைவிடமாக அதனையே ஏற்று
1870 வரை அங்கேயே உறைந்திருந்தார்.

சித்திவளாகம்: (மேட்டுக்குப்பம்)

தனிமையை நாடிய வள்ளலார் 1870-ல் வடலூருக்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்தில் வாழத் தொடங்கினார். தாம் உறைந்த அத்திருமாளிகைக்கு சித்திவளாகம் என்ற பெயரை அவரே இட்டார். அவர் சித்தி அடைந்த வளாகமும் அதுவே.

சத்திய ஞானசபை:
இறைவனை ஒளிவடிவில் கண்ட பெருமானார்
ஒளி வழிபாட்டிற்கென சத்திய ஞான சபை என்னும் வழிபாட்டு சபை ஒன்றை நிறுவ எண்ணினார்.
அன்பர்கள் உதவியுடன் வடலூரில் 1871-ல் பணிகள் தொடங்கப் பெற்று, 1872-ல் தைப்பூசம்
நன்னாளில் தொடங்கிய சத்தியஞான சபையில் தினமும் ஜோதி வழிபாடு நடைபெறுகின்றது.

சன்மார்க்கக் கொடி:
ஞானிகள் தம் கொள்கைளுக்காக கொடி ஏதும் கண்டதில்லை. வள்ளலார் ஒருவரே தமது மார்க்கத்திற்கு தனிக்கொடி கண்டவர். 1873-ல் தாம் உறைந்து வந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்
திருமாளிகையில் சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருரை ஒன்றையும் ஆற்றினார்.

சித்தி
ஶ்ரீமுக ஆண்டு தைத் திங்கள் 19-ஆம் நாள் 30-1-1874, வெள்ளிக்கிழமை இரவு 12 மணி.
சித்திவளாகத்தின் திருமாளிகையில் தமது அறைக்குள் நுழைந்து, கதவைத் திருக்காப்பு
இட்டுக்கொண்டு, இரண்டரை நாழிகையில்
இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி
பெற்றார். வள்ளலார் சுத்த தேகம், பிரணவ தேகம்,
ஞான தேகம், என்னும் மூவகை தேகசித்தியையும்
பெற்றவர். அத்தகைய தேகசித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது. இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி பெற்ற அவருக்கு மறுபிறவியும் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு காண அவர் காட்டிய வழி சுத்த சன்மார்க்கம் என்பதாம். அதை வள்ளலார் கூற்றாலேயே காண்போம்:

இறப்பொழிக்கும் சன்மார்க்கம்:

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச்
சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேது செய் மரணத்துக் கெது செய்வோம் என்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து
ஆடேடி..
(ஆறாம் திருமுறை பாடல் 4959)
**
உற்றமொழி உரைக்கின்றேன்
ஒருமையினால் உமக்கே
உற்றவன் அன்றிப் பகைவன்
என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும்
அழிந்திடக் காண்கின்றீர்
காரணம் எலாம் கலங்க வரும்
மரணமும் சம்மதமோ
சற்றும்இதைச் சம்மதியாது
என் மனந்தான் உமது
தன் மனம்தான் கன்மனமோ
வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம்
என்னொடும் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே!
(ஆறாம் திருமுறை பாடல் 5601)

திரு அருட்பா:
சென்னை கந்தகோட்டத்துள் வளர் முருகனையும், திருவொற்றியூர் ஈசனையும் சமயக் குரவர்களையும் சிதம்பரம் நடத்தரசையும், திருத்தங்களையும் தன்னுடைய ஞானத்தின் ஒளியை உலக மக்கள் உணரும் வண்ணம் சமரச சுத்த சன்மார்க்க நெறியமைந்த பாடல்களையும் பாடினார். எளிமையும் இனிமையும் கொண்ட அவரது அருட் பாக்களின் உருக்கம் கல்லும் கரைய வைக்கும் தன்மையது. மனிதன் உயரிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு வேண்டிய அத்துணை வழிகளையும் அவரது ‘திருஅருட்பா’ பாடல்களில் காணலாம். அவர் பாடிய 5818 பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

அன்பு, தயவு இவைகளை இரு கண்களைப்போல் கருதிய வள்ளலார், ஞானத்தின் பழுத்த நிலையில் சமய நெறி மேவாது சன்மார்க்க நெறியைக் கண்ட பெருமான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்ற வள்ளல். வாழ்க அவரது புகழ்!
**
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே!
**
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
**

இக்கட்டுரையைத் தயாரித்து அளித்தவர் திரு. கோ. சுப்பிரமணியன் அவர்கள் (மேப்பத்துரை). புத்தாண்டுக்கு நல்ல தொடக்கமாக அமைய வேண்டி இது வெளியிடப் பெறுகிறது.


இன்றைய ஒன்றிய ஆட்சி செய்துள்ள குற்றங்கள்

படம்

இது பண்பாட்டுத் துறையில் மட்டுமே பாஜக ஆற்றிய குற்றங்கள் என மார்க்சிஸ்டு கட்சி பட்டியலிட்டிருப்பவை. சமூக, பொருளாதார துறைகளில் அவர்கள் ஆற்றிய குற்றங்கள் இன்னும் மிகப் பல. அவற்றை இன்னொரு நாள் வெளியிடுவோம்.


கடவுளின் அழுகை

கடவுள் ஒரு நாள், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் தன்னைச் சந்திக்க அனுமதித்தார்; அவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் தன்னிடம் எழுப்பலாம் என்றும் சொன்னார்.

“இந்த பூமிப் பந்தில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றும் உன்னதமான நாடாக அமெரிக்கா எப்போது ஆகும்?” என்று கேட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

“இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா அந்த மாதிரியான நிலைமையைப் பெறும்” என்று சொன்னார் கடவுள். அந்த பதிலைக் கேட்டதும், பைடன், “ஐந்து ஆண்டுகளா ? அதைக் காண நான் அதிபராக இருக்க மாட்டேனே!” என்று கதறிக் கண்ணீர்விட்டார்.

அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், “அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பிரிட்டன் எப்போது அதிவேகமாக வளர்ந்து மெச்சத் தகுந்த நிலையினை அடையும்” என வினவினார். “இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்” என்றார் கடவுள். “இன்னும் 25 ஆண்டுகளா? அதைப் பார்க்க நான் இருக்கமாட்டேனே!” என்று அரற்றி அழ ஆரம்பித்துவிட்டார் போரிஸ் ஜான்சன்.

அடுத்து நரேந்திர மோடிக்கான வாய்ப்பு. அவர் நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தார். தூய இந்தியில் கடவுளிடம் கேட்டார்; “இந்தியா எல்லோரும் போற்றும் எழிலார்ந்த நாடாக இன்னும் எத்தனை காலம் ஆகும்?” என்று. இதைக் கேட்டதும் கடவுள், தேம்பி அழத் தொடங்கினார். “அதைக் காண நானே இருக்க மாட்டேன்” என்றார் தேம்பிக்கொண்டே கடவுள்!

(கலைஞர் செய்திகளில் இருந்து)


புதுநெறி ஆத்திசூடி

பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய புதுநெறி ஆத்திசூடி

  1. அனைவரும் உறவினர்
  2. ஆட்சியைப் பொதுமைசெய்
  3. இசைமொழி மேலதே
  4. ஈதல் இன்பம்
  5. உடைமை பொதுவே
  6. ஊன்றுளம் ஊறும்
  7. எழுது புதியநூல்
  8. ஏடு பெருக்கு
  9. ஐந்தொழிற்கு இறைநீ
  10. ஒற்றுமை அமைதி
  11. ஓவியம் பயில்
  12. ஔவியம் பெருநோய்
  13. கல்லார் நலிவர்
  14. காற்றினைத் தூய்மைசெய்
  15. கிழிப்பொறி பெருக்கு
  16. கீழ்மனம் உயர்வுசெய்
  17. குள்ள நினைவுதீர்
  18. கூன்நடை பயிலேல்
  19. கெடுநினைவு அகற்று
  20. கேட்டு விடையிறு
  21. கைம்மை அகற்று
  22. கொடுத்தோன் பறித்தோன்
  23. கோனாட்சி வீழ்த்து
  24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
  25. சாதல் இறுதி
  26. சிறார்நலம் தேடு
  27. சீர்பெறு செயலால்
  28. சுவைஉணர் திறங்கொள்
  29. சூழ்நிலை நோக்கு
  30. செல்வம் நுண்ணறிவாம்
  31. சேய்மை மாற்று
  32. சைகையோடு ஆடல்சேர்
  33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
  34. சோர்வு நீக்கு
  35. தளையினைக் களைந்து வாழ்
  36. தாழ்வு அடிமைநிலை
  37. திருஎனல் உழுபயன்
  38. தீங்கனி வகைவிளை
  39. துன்பம் இன்பத்தின்வேர்
  40. தூயநீ ராடு
  41. தெருவெலாம் மரம்வளர்
  42. தேன்எனப் பாடு
  43. தைக்க இனிது உரை
  44. தொன்மை மாற்று
  45. தோல்வி ஊக்கம்தரும்
  46. நடுங்கல் அறியாமை
  47. நால்வகைப் பிறவிபொய்
  48. நினைவினில் தெளிவுகொள்
  49. நீணிலம் உன்இல்லம்
  50. நுண்ணிதின் உண்மைதேர்
  51. நூலும் புளுகும்
  52. நெடுவான் உலவு
  53. நேர்பயில் ஆழ்கடல்
  54. நைந்தார்க்கு உதவிசெய்
  55. நொடிதோறும் புதுமைசேர்
  56. நோய் தீ யொழுக்கம்
  57. பல்கலை நிறுவு
  58. பார்ப்பு பொதுப்பகை
  59. பிஞ்சுபழுக் காது
  60. பீடு தன்மானம்
  61. புதுச்சுவை உணவுகாண்
  62. பூப்பின் மணங்கொள்
  63. பெண்ணோடு ஆண்நிகர்
  64. பேய்இலை மதம்அலால்
  65. பைந்தமிழ் முதல்மொழி
  66. பொழுதென இரவுகாண்
  67. போர்த்தொழில் பழகு
  68. மறைஎனல் சூழ்ச்சி
  69. மாறுவது இயற்கை
  70. மிதியடியோடு நட
  71. மீச்செலவு தவிர்
  72. முகச்சரக்காய் வாழ்
  73. மூப்பினுக்கு இடம்கொடேல்
  74. மெய்கழிவு அயற்கின்னா
  75. மேலை உன் பெயர்பொறி
  76. மையம் பாய்தல் தீர்
  77. மொடுமாற்றுப் பொது இன்னா
  78. மோத்தலில் கூர்மை கொள்
  79. வறுமை ஏமாப்பு
  80. வாழாட்கு வாழ்வு சேர்
  81. விடுதலை உயிக்குயிர்
  82. வீடுஎனல் சாதல்
  83. வெறும்பேச்சு பேசேல்
  84. வேளையோடு ஆரஉண்
  85. வையம் வாழ வாழ்

நன்றி-பாவேந்தர்பாரதிதாசன் பேரவை


மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்துவருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடக அரசு முயற்சித்தும் தமிழக அரசின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டும் வந்தது. 1996ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. மேகதாதுவில் 2 நீர்மின் திட்டங்களையும் ஓகேனக்கல்லில் தேசிய நீர்மின் கழகம் அமைக்கும் என்கிற திட்டத்தையும் வைத்தது. தமிழ்நாடும் கர்நாடகாவுக்கு இதுகுறித்து பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்நாடகா தாங்களாகவே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்துபோது அந்த பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்நாடு விலகிக்கொண்டது. ஒன்றியத்தில் பாஜக வந்தபிறகு அணை கட்டுவதற்கான முயற்சிகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது . காவிரி நடுவர் ஆணைய உத்தரவை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் தெரிவித்து அரசிதழில் வெளியான பிறகு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அணை கட்டுவதற்கான வேகம் அதிகரித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் எழும் எதிர்ப்பை சமாளிக்க ஒன்றிய அரசு யோசித்து உருவாக்கிய திட்டம்தான் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். மேகதாதுவில் அணை காட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கர்நாடக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

மேகதாது அணை, கிருஷ்ணராஜ சாகர்-கபினி மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடையே கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மொழியில் “balancing reservoir” என்று அழைக்கப்படும் மேகதாது அணை கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நீரை தேக்கி குடிநீர் மற்றும் மின்னுற்பத்திக்கு பயன்படுத்துவதுதான் நோக்கம் என கர்நாடக அரசு சொல்கிறது.

தமிழ்நாட்டின் பார்வையில் மேகதாது அணையின் அடிப்படையே சிக்கல்தான். கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்தேக்கத்திலிருந்து வெளிவரும் “நீர்வழிப் பாதையில்” 67 டிஎம்சி கொள்ளளவில்  மேகதாது அணை அமைய இருப்பதால் கர்நாடகாவிற்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும்.

கடந்த 25 ஆண்டுகளில்,குறிப்பாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீர் இந்த இரு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீர்தான். கர்நாடகா திறந்துவிடும் நீர் கிடையாது. கிருஷ்ணராஜ சாகர் – மேட்டூர் அணைகளுக்கு இடையே உள்ளநீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து ஓடிவரும் நீரால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது.

இதுதான் கர்நாடகாவை உறுத்துகிறது.இதை குறிவைத்துதான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் துடியாய்த் துடிக்கிறது.

கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு தருவதற்கு நதியின் வடிகால் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் தண்ணீர் வருமா என்பது பெரிய கேள்விதான். இந்தியாவின் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளதை நாம் நினைவில் கொண்டால் எந்த கோதாவரி தண்ணீரை திருப்புவீர்கள் என கேள்வி கேட்கலாம்.

ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு நடத்தும் இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு குறித்த எந்த கோரிக்கையையும் வைக்க தேவையில்லை.

தமிழ்நாடு அரசு கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் என்கிற அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தபோது ஓடிச்சென்று வரவேற்றார் அன்றைய முதல்வர்  எடப்பாடி.

நதிகளை இணைக்கிற அறிவிப்பே காவிரியில் நமக்கு உள்ள உரிமையை மறுக்கச் செய்வதற்கான வேலை என அப்போதேபூவுலகு  உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்திருந்தனர். கடந்த வாரத்தில் மேகதாது அணை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்விதமாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.

எந்த நதிநீரும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இப்போது கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குக் கிடைப்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். எல்லா நதிகளும் ஆந்திரத்தின் மையத்தில் உள்ளன. அங்கிருந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் நீரைக் கொண்டுவருவது அரிது, வர முடிந்தாலும், 90 சதவீத நதிநீர் இணைப்புப் பகுதி ஆந்திரத்தின் எல்லைக்குள் இருப்பதால் அவர்களே பயன்பெறுவார்கள் (திருடிக் கொள்வார்கள் என்பது சற்றே வன்மையான தொடர்).

இனிமேலும் கர்நாடகா எந்த அணையும் கட்டாமல் தடுப்பதும் நீரைச் சிக்கனமாகக் கையாள்வதும் மட்டுமே தமிழகத்தின் டெல்டாப் பகுதியின் நீர்த்தேவையை நிறைவு செய்யும். கோதாவரி இணைப்பே சாத்தியமில்லை என்கிறபோது கங்கை-காவிரி இணைப்பு முதலிய திட்டங்கள் பற்றிப் பேசவே வேண்டாம். ஏறத்தாழ கடல்மட்ட அளவில் உள்ள கங்கைச் சமவெளியிலிருந்து 1000 மீட்டருக்குமேல் தக்கணப் பீடபூமியில் நீரை ஏற்றி, பிறகு கோதாவரிச் சமவெளியில் இறக்கி, கிருஷ்ணா, பெண்ணை சமவெளியைத் தாண்டி, மீண்டும் 500 மீட்டருக்கு மேல் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தாண்டி, அப்புறம் தமிழ்நாட்டுப் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாற்றாங்கரைப் பகுதிகளைத் தாண்டி காவிரியில் கொண்டு வந்து இணைப்பார்களாம். எந்த முட்டாள் பொறியியலாளன் சொன்ன ஐடியாவோ இது?


தமிழ் ஆண்டுகளாம்!

தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் ஓர் ஆண்டுப்பெயர் கூட தமிழில் இல்லை. எல்லாம் வடமொழிப் பெயர்கள். மெனக்கெட்டு இவற்றைத் தமிழ்ப்படுத்தி (மொழிபெயர்த்து) இவைதான் தமிழ் ஆண்டுகள் என்று ஒரு குழுவினர் அளித்திருக்கிறார்கள். அதைக் கீழே தருகிறேன் ஆனால் அப்படி நீங்கள் தமிழ்ப்படுத்தி இவைதான் தமிழாண்டுகள் என்று கூறினாலும் சித்திரைதான் முதல் மாதம் என்பதை மாற்ற முடியாதே? தை மாதம்தான் தமிழின் முதல்மாதம் என்பதற்கு அது சான்றும் ஆகாதல்லவா?

பிரபவ – நற்றோன்றல்
Prabhava1987-1988

விபவ – உயர்தோன்றல்
Vibhava 1988–1989

சுக்ல – வெள்ளொளி
Sukla 1989–1990

பிரமோதூத – பேருவகை
Pramodoota 1990–1991

பிரசோற்பத்தி – மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992

ஆங்கீரச – அயல்முனி
Aangirasa 1992–1993

ஸ்ரீமுக – திருமுகம்
Srimukha 1993–1994

பவ – தோற்றம்
Bhava 1994–1995

யுவ – இளமை
Yuva 1995–1996

தாது – மாழை
Dhaatu 1996–1997

ஈஸ்வர – ஈச்சுரம்
Eesvara 1997–1998

வெகுதானிய – கூலவளம்
Bahudhanya 1998–1999

பிரமாதி – முன்மை
Pramathi 1999–2000

விக்கிரம – நேர்நிரல்
Vikrama 2000–2001
Photo

விஷு – விளைபயன்
Vishu 2001–2002

சித்திரபானு – ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003

சுபானு – நற்கதிர்
Subhaanu 2003–2004

தாரண – தாங்கெழில்
Dhaarana 2004–2005

பார்த்திப – நிலவரையன்
Paarthiba 2005–2006

விய – விரிமாண்பு
Viya 2006–2007

சர்வசித்து – முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008

சர்வதாரி – முழுநிறைவு
Sarvadhari 2008–2009

விரோதி – தீர்பகை
Virodhi 2009–2010

விக்ருதி – வளமாற்றம்
Vikruthi 2010–2011

கர – செய்நேர்த்தி
Kara 2011–2012
Photo

நந்தன – நற்குழவி
Nandhana 2012–2013

விஜய – உயர்வாகை
Vijaya 2013–2014

ஜய – வாகை
Jaya 2014–2015

மன்மத – காதன்மை
Manmatha 2015–2016

துன்முகி – வெம்முகம்
Dhunmuki 2016–2017

ஹேவிளம்பி – “பொற்றடை”
Hevilambi 2017–2018

விளம்பி – அட்டி
Vilambi 2018–2019

விகாரி – எழில்மாறல்
Vikari 2019–2020

சார்வரி – வீறியெழல்
Sarvari 2020–2021

பிலவ – கீழறை
Plava 2021–2022
(இவ்வருடம் “கீழறை” தமிழ் புத்தாண்டு)

சுபகிருது – நற்செய்கை
Subakrith 2022–2023

சோபகிருது – மங்கலம்
Sobakrith 2023–2024

குரோதி – பகைக்கேடு
Krodhi 2024–2025

விசுவாசுவ – உலகநிறைவு
Visuvaasuva 2025–2026

பரபாவ – அருட்டோற்றம்
Parabhaava 2026–2027

பிலவங்க – நச்சுப்புழை
Plavanga 2027–2028

கீலக – பிணைவிரகு
Keelaka 2028–2029

சௌமிய – அழகு
Saumya 2029–2030

சாதாரண – பொதுநிலை
Sadharana 2030–2031

விரோதகிருது – இகல்வீறு
Virodhikrithu 2031–2032

பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033

பிரமாதீச – நற்றலைமை
Pramaadhisa 2033–2034

ஆனந்த – பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035

ராட்சச – பெருமறம்
Rakshasa 2035–2036

நள – தாமரை
Nala 2036–2037

பிங்கள – பொன்மை
Pingala 2037–2038

காளயுக்தி – கருமைவீச்சு
Kalayukthi 2038–2039

சித்தார்த்தி – முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040

ரௌத்திரி – அழலி
Raudhri 2040–2041

துன்மதி – கொடுமதி
Dunmathi 2041–2042

துந்துபி – பேரிகை
Dhundubhi 2042–2043

ருத்ரோத்காரி – ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044

ரக்தாட்சி – செம்மை
Raktakshi 2044–2045

குரோதன – எதிரேற்றம்
Krodhana 2045–2046

அட்சய – வளங்கலன்
Akshaya 2046–2047

இவ்வாறே தமிழ் மாதங்கள் பெயர்கள் இவையாம்–

  1. சுறவம் (தை)
  2. கும்பம் (மாசி )
  3. மீனம் ( பங்குனி)
  4. மேழம் ( சித்திரை)
  5. விடை (வைகாசி)
  6. ஆடவை (ஆனி)
  7. கடகம் (ஆடி)
  8. மடங்கல் (ஆவணி)
  9. கன்னி (புரட்டாசி )
  10. துலை (ஐப்பசி )
  11. நளி (கார்த்திகை)
  12. சிலை (மார்கழி)

இவற்றைக் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெருமக்களுக்கு என் வணக்கங்கள். ஆனால் உருவாக்கும்போதே, இவை வடமொழியில்தான் இப்பெயர்கள் முதலில் இருந்தன, நாங்கள் அவற்றைத் தமிழில் மாற்றிக் கொள்கிறோம் என்று வடவருக்கு முதன்மை தருகின்ற செயலாக இது மாறிவிடுகிறதே.