நம்பிக்கை

பொழுதும் விடியும் பூவும் மலரும்

பொறுத்திருப்பாய் கண்ணா…

இது ஒரு திரைப்படப் பாடலின் பல்லவி. இது காட்டுகின்ற வாழ்க்கை நம்பிக்கை அசாத்தியமானது. கண்ணதாசன் பாடல் என்றே நினைக்கிறேன். கடவுள் அடிப்படையிலான அழகிய நம்பிக்கை இது. மனம் தளர்ந்திருக்கும் ஒரு நாயகனுக்கு நாயகி நம்பிக்கை தரும் பகுதி.

நாளைய உலகை நமக்கெனத் தர ஓர் நாயகன் இருக்கின்றான்… என்று அடுத்த பகுதி தொடங்குகிறது. அவன் நல்லவர் வாழும் இடங்களில் எல்லாம் காவல் இருக்கின்றான். இப்படிப்பட்ட அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்துபவள் ஒரு பெண். என் தாயிடமும் இம்மாதிரி அழுத்தமான நம்பிக்கை இருந்தது. ஆனால் என் காலத்தில் இந்த நம்பிக்கை பல காரணங்களால் இல்லாமல் ‍போயிற்று என்பது வருத்தத்திற்குரிய உண்மை. என் தாயிடமிருந்து இந்த நம்பிக்கை என் மனைவிக்கு வந்திருக்க வேண்டும். இப்படி வழிவழியாக வாழ்க்கையில் தொடரும் நம்பிக்கை இது. இந்த நம்பிக்கை அழுத்தமாக இருந்தால் வாழ்க்கையில் எதையும் ஜெயிக்கலாமே?

அந்தக் காலத்தில் அதிகமாகப் படிக்காவிட்டாலும் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தார்கள். இப்போது அது இல்லை என்பதை நடைமுறையில் பார்க்கிறேன்.