மகாபாரதம் பற்றி மேலும் சில…

மேலும் உனது கேள்விகளுக்கெல்லாம் பதில்களை இங்கே தொகுத்துத் தருகிறேன். இத்துடன் முடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

க பூரணச்சந்திரன்: 1. சாந்தனு செய்தது, அவன் மனைவி கங்கை செய்தது எல்லாமே தவறுதான். ஓரவஞ்சனை.
2. ஒரு மனிதன் தன் செயல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறான், வெறும் சொற்களால் அல்ல என்பது உண்மை என்றால், மகாபாரதத்தின் அத்தனை கேரக்டர்களும் தவறு செய்தவர்கள், தீயவர்கள்தான். அதில் சந்தேகமேயில்லை.

3. தன் தம்பியின் சுயம்வரத்திற்கு பீஷ்மன் சென்றது தவறு. சென்றது மட்டுமல்ல, மூன்று பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்தது மிகமிகத் தவறு. அது அவனது பிரம்மச் சரியத்துக்கு ஏற்றதும் அல்ல. ஏன் விசித்திரவீரியன் செல்லவில்லை என்று தெரியவில்லை. சுயம்வரத்தில் பெண்தான் நாயகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு பீஷ்மன் ஒரு பெண் தேவைப் பட்டதற்கு மூன்றுபேரை தூக்கிக் கொண்டுவருகிறான். இதுவே முரண்பாடுதான். (எந்த மூலிகை பயன்படும் என்று தெரியாமல் அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தது போல இருக்கிறது இது). அம்‍பை ஏற்கெனவே ஒருவனை வரித்தவள் என்று தெரிந்து அவளை அவள் தந்தையின் இடத்திலேயே விட்டிருக்க வேண்டும். மற்றப் பெண்களை தூக்கி வந்தது காட்டு தர்பார். வல்லான் வகுத்ததே வாய்க்கால். ஆணாதிககத்தின் உச்சம்.
4. மகாபாரதக் கதை மாந்தர்க்கு குடும்ப வரைபடமே தேவை யில்லை. ஒருவனும் முறையாகப் பிறந்தவன் அல்ல. ஆனால் அதுதான் கதையின் தெய்விகத் தன்மையை காட்டுகிறது என்கிறார்கள். (எல்லாமே அற்புதச் செயல்கள் அல்லவா?)மேலும் குந்தியுடனும் மாத்ரியுடனும் உறவு வைப்பவர்கள் எல்லாமே தேவர்கள் அல்லவா? அவ்வளவு உயர்ந்தவர்கள் எல்லாரும். (அல்லது தேவர்கள் அத்தனை பேருமே அவ்வளவு இழிந்தவர்கள் என்றும் கொள்ளலாம். புராண தேவர்களுக்கு பெண்களைக் கூடி பிள்ளை தருவதை விட வேறு வேலை இருந்ததாகத் தெரியவில்லை).

தமிழர் ஒழுக்கம் இலட்சியப் படுத்தப் பட்டதுதான் (stylized). ஆனால் உலகியலுடன் நெருக்கமானது. மகாபாரதம் முற்றிலும் புனைவு. அதாவது உயர்ந்த மேன்மையான மனிதர்கள் முயன்றால் தமிழர்தம் இலட்சிய வாழ்வை அடையலாம். பாரதத்தில் போல எந்த மேன்மையான மனிதனும் சூரியனுடனும் யமனுடனும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது.

5. மகாபாரதம் ஒரு பங்காளிச் சண்டை என்பதற்கு மேல் வேறில்லை என்பது உண்மை.

6. கிருஷ்ணனைப் பற்றி நீ‍ கேட்கும் கேள்விகளைக் கேட்டால் அதெல்லாம் அவரவர் தலைவிதி என்று கூறிவிடுவாரகள். கர்ணன் குந்தி புத்திரன் என்பதை வெளிப்படுத்தியிருந்தால் மகா பாரதப் போரே நடந்திருக்காது. பாண்டவர்கள் கர்ணனிடம் தஞ்சமடைந் திருப்பார்கள். துரியோதனனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். எல்லாம் சுபம். ஆனால் அப்படி நடக்கலாகாது என்பதற் காகத்தான் இந்தக் கதைத் திருப்பங்கள் வைக்கப் படுகின்றன.

கடைசியாக, பாரதத்தை நீ நல்ல விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறாய். இதில் கதையமைப்பில் உள்ள தவறுகளாக நீ சுட்டிக் காட்டுவன சரியானவை, ஏற்கத் தக்கவை. ஆனால் ஒரு புராணக் கதையில், ஒரு பக்கம் கடவுளர்களும், மறுபக்கம் மனிதர்களும் ஊடாடும் ஒரு கதையில், எப்படி நல்லது கெட்டது என்பதை தீர்மானிப்பது? கேரக்டர்களும் அப்படியே தீர்மானிக்கப்பட முடியாதவை. பாரதக் கதையில் எனக்கு முக்கியமாகப் படும் சில நீதிகள்.

பங்காளிச் சண்டை, குறிப்பாக மண்ணுக்காகச் சண்டை கூடாது. அது அனைத்தையும் அழித்து விடும்.

பெண்களை இழிவுபடுத்தக் கூடாது (பாஞ்சாலியை துரியோதனன் செய்ததைப் போல, அல்லது மூன்று பெண்களை பீஷ்மன் தூக்கி வந்தத‍ைப் போல…)இவை அனைத்துமே மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. பாஞ்சாலி சபதம் செய்ய வில்லை என்றால் பாரதப் போர் நடக்கக் காரணம் இல்லை. பாண்டவர்கள் எதுவும் வாங்காமல்கூடப் போயிருப்பார்கள். துகில் உரிக்கும்போதுதான் பீமன் துரியோததனைக் கொல்வதாகச் சபதம் செய்கிறான். அதேபோல அமபையும சிகண்டியாப் பிறந்து பீஷ்மனைக் கொல்கிறாள். பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது இராமாயணத்தைவிட மகாபாரதத்தில் முனைப்பாக இருக்கிறது.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல பண்புகள், தீய பண்புகள் அனைத்துமே உள்ளன. உண்மையில் முற்றிலும் நல்லவன் என்றோ, தீயவன் என்றோ ஒருவனும் இல்லை. பலசமயம் நடத்தைப் பிறழ்வுகள்தான் உண்டு. இது இன்றைய உளவியல் நோக்கிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே எந்த மனிதனையும் அநாவசியமாக வெறுக்கவோ, அளவுக்கு அதிகமாக நேசிக்கவோ தேவையில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு நடுநிலை தேவைப் படுகிறது.

இம்மாதிரிக் கருத்துகளைச் சொல்ல வந்ததாகத்தான் பாரதம் தோன்றியதாகப் படுகிறது. ஆனால் அந்தக்கால பிராமணர்களுக்கு இது போதியதாக இருந்திருக்காது. அதனால் எவனோ ஒருவன் தங்களுக்குச் சார்பாக, சாதியை வலியுறுத்த வேண்டி பகவத்கீதையை எழுதி இடையில் புகுத்திவிட்டான்.

கர்ணனை அவமானப் படுத்துமிடங்களிலும் ஏகலைவன் கதையிலும்…இப்படிப் பல இடங்களில் சாதி நிலைநிறுத்தத்தான் படுகிறது. அதில் சந்தேகமில்லை. மிக முக்கியமாக கவனத்தில் வராத சின்னச் சின்ன இடங்களில்கூட சாதித் தன்மை நோக்கப் படுகிறது. உதாரணமாக, குந்தி பாண்டவர்களுக்கு பதிலாக, ஒரு காட்டுச் சாதியினர் பிள்ளைகள் ஐவரையும் அவர்கள் தாயையும் அரக்கு மாளிகையில் படுக்க ஏற்பாடு செய்கிறாள். அவர்கள் கீழ்ச்சாதி என்பதால் திட்டமிட்டு எரிக்கப்படுகிறார்கள்.
பகவத் கீதை ஏற்கெனவே உள்ள சாதியமைப்பை இன்னும் அதிகமாக வலியுறுத்துகிறது. பிராமணர்கள், ஊழ்வினை, ஜாதிக்கொரு நீதி ஆகிய தங்கள் முக்கியமான கருத்துகளைக் கதையில் புகுத்தியும் ஆயிற்று. முடிந்தது மகாபாரதம்.

விவேக்: நன்றி மாமா.


மகாபாரதம் பற்றிய சிந்தனைகள்…

Vivek GK: ஆனால் ஏன் இந்த கண்ணோட்டத்தில் கீதை ஆராயப்படுவதில்லை…. இந்தியாவில் காந்தி, நேரு முதல் அப்துல் கலாம் வரை கீதையை புகழ்ந்திருக்கிறார்கள்…. மற்றும் western philosphers like Thoreau, Emerson, Herman Hesse to scientist Robert Oppenheimer… இவர்கள் அனைவரும் அதை புகழ்கிறார்கள்….
ஆனால் காந்தியை கொன்ற கோட்ஸேவும் கீதை தான் தன்னை influence செய்ததாக கூறுகிறான்… This is the reason I hate the concept of religious texts… The moral is twisted by people according to their desires…
என்னுடைய ஆதங்கம்… திருக்குறள் போன்ற அறம் போற்றும் தமிழ் text கீதை போன்ற sanskrit text overshadow செய்வது தான்…
ஒருவேளை கீதை மக்கள் self-identity செய்து கொள்ளும் வகையில், ஒரு grand romantic narrative கொடுப்பதால் (தர்மத்தின் பக்கம் தான் நின்று போர் செய்யும் தருவாயில் தன் சொந்தங்களே தனக்கு எதிராக நிற்பது) தான் popular ஆக‌ இருக்கிறதோ?…

க பூரணச்சந்திரன்: மக்கள் தர்மம் (நீதி) என்பது தர்மனின்/யுதிஷ்டிரனின் (பெயரையே பார்) பக்கமே இருப்பதாக மூளைச் சலவை செய்யப்படுகிறது என்பதுதான். மகாபாரதத்தில் நீதி எவர் பக்கமும் இல்லை. காரணம், மண்ணாசை என்று சொல்லப்படுகிறது. சாந்தனுவின் வம்சத்தில் மூத்தமகன் திருதராஷ்டிரன். அவனது மூத்தமகன் துரியோதனன். பழங்காலத்தில் மூத்த மகன்களே வாரிசுகள். அப்படியிருக்க பாண்டுவின் மகன்களுக்கு ஆட்சியுரிமை எங்கிருந்து வரும்? பாண்டு திருதராஷ்டிரன் சார்பாக ஆண்டுவந்தவன்தானே? இப்படி ஆரம்பத்திலிருந்தே கோளாறுகள். எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் திணிக்கப்படுகின்றன. அதனால்தான் புவிமன்னர்கள் யாவரும் சமமாகவே இரு பக்கமும் பிரிந்து நிற்கிறார்கள். உண்மையில் தர்மம் என்பது ஒன்றானால், அனைவருக்கும் அது தெரிந்தது தானே? கடைசிவரையிலும் பாண்டவர்களும் தவறுதானே செய்கிறார்கள்? (கிருஷ்ணனின் தூண்டுதலால் துரியோதனை இடைக்குக் கீழ் அடித்துக் கொல்லவில்லையா பீமன்? ஜெயிக்க வேறு வழி இல்லையே?) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற பொய்சொல்லியே ஜெயிக்கிறான் தருமன். இதெல்லாம் தருமம்தானா? பிறகு அஸ்வத்தாமன் பழிவாங்க முனைந்து அனைத்துப் பாண்டவ வமிசத்தையும் கொல்கிறான். இறுதியில் பாண்டவர் ஐவர், பாஞ்சாலி, உத்தரை தவிர வேறு எவரும் மிச்சமில்லையாம். போர் என்றால் இப்படித்தான் இருக்கும் – இரண்டு பக்கமும் முற்றிலும் அழியும் என்றுதான் மகாபாரதம் காடடுகிறது.

மக்கள் பாண்டவர் பக்கம் ஐடெண்டிஃபை செய்துகொள்கிறார்கள் என்பது வாஸ்தவம். இன்று ஹீரோக்கள் பக்கம் அடையாளப்படுத்திக் கொள்வதுபோல. நான் பலமுறை யோசித்திருக்கிறேன். எல்லா சினிமாவிலும் வில்லனைக் கொல்லும் முன்பு அவன் அடியாட்கள் அனைவரையும் கதாநாயகன் கொல்லுவான். அது குற்றம் என்று யாரும் சொல்வதில்லை. ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? வில்லன் ஹீரோவின் தாய்/தந்தை/நெருங்கிய ஓர் உறவைக் கொன்றதற்காக இவன் நூறுபேரைக் கொல்வதாகக் காட்டுவார்கள், ஆனாலும் ஹீரோ செய்ததே சரியென்று நிறுவப்படும் (மூளைச் சலவை செய்யப்படும்). இது போலத்தான்…

(உண்மையாக/கற்பனையாக) போரிடும் எல்லாருக்கும் ஒரு கிருஷ்ணன் தேவைப்படுகிறான். அதனால் அவர்கள் எல்லாருக்குமே கீதை தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். போரிடுபவன் காந்தியாக இருந்தால் என்ன, கோட்ஸேவாக இருந்தால் என்ன? இருவருக்குமே தங்களை நியாயப்படுத்த கிருஷ்ணன் தேவைதானே?
தமிழில் (வடமொழியிலும்கூட) நியாயம்-நீதி என்று இரண்டு இருக்கின்றன. அர்ஜுனன் சொல்வது நியாயம். கிருஷ்ணன் சொல்வது வறட்டு நீதி. (இன்றைய கோர்ட்நீதி). நீதியை விட நியாயமே முக்கியமானது.


மகாபாரதச் சிந்தனைகள்-தொடர்கிறது

ஏன் மகாபாரதக் கதையைத் தவிர இத்தனை நூற்றாண்டுகளாகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் வேறு எ‍தையும் கையாளவில்லை என்பது மிகப் பெரிய ஆய்வினை வேண்டுவது. மழை வேண்டுவது, பாரதம் படிப்பது, அதைக் கூத்தாகப் போடுவது எல்லாம் ஒரு தொடர்போல நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் அந்தக் கதைகளை ஒட்டி மக்கள் தங்கள் கற்பனையைச் செலுத்திக் கூத்துப் பாடல்களையும் வசனங்களையும் தாங்களாகவே உருவாக்கி வந்துள்ளனர். உதாரணமாக, நான் வல்லம் (ஆரணி) என்ற ஊரில் ஆசிரியனாக 1969-70இல் பணியாற்றினேன். அது வந்தவாசிக்கும், செய்யாறுக்கும், சேத்துப்பட்டுக்கும் இடையிலுள்ள ஓர் ஊர். இந்த மூன்று ஊர்களுமே பழங்காலத்தில் தெருக்கூத்தின் பயிற்றுமையங்களாகச் செயல்பட்ட ஊர்கள். என்னிடம் படித்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் தானாகவே பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பாடப்படும் கூத்துப் பாடல்களைப் பாடுவான், அவனாகவே இட்டுக் கட்டவும் செய்வான். எல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்துவிட்டது…காரணம் திரைப்படமா, அரசியலா, கூத்து மட்டுமே நடத்தி வாழ்க்கை நடத்த வசதியற்றுப் போனமையா, மாறிவந்த நவீனமயமாக்கலா, ஆபாசக் கலைகளா…என்னத்தைச் சொல்வது?

4. கேள்வி: தமிழில் இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் இருப்பதாக சொல்கிறார்கள்… ஆனால் அதில் நாடகங்கள் பற்றி குறைவாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…. அதை பற்றிய awareness ஏ மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை…. எனக்கு தெரிந்த நாடகங்கள்…. சினிமா மற்றும் TV நாடகங்கள் தான்…

பதில் : எனக்குத் தெரிந்தவரை இன்று இயலைத் தவிர இசை, நாடகத் தமிழ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பகுப்புக்கான நோக்கமும் தெரியவில்லை. உண்மையில் இவை மூன்றையும் தங்கள் மொழியில் கொண்ட ஏராளமான நாடுகள் உள்ளன. அங்கெல்லாம் இப்படி போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இல்லாத இசைப்பாடல்களா, இசையமைப்பாளர்களா, ஆபராக்கள் முதலிய இசைநாடகங்களா, பிற நாடகங்களா? அவர்கள் மூன்றிங்லீஷ் என்று போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கள் தங்கள் போக்கில் இயல்இசைநாடகம் மூன்றையுமே வளர்க்கிறார்கள். நாம் வாய்ப்பேச்சு வீரர்கள். தமிழ்இசை வளரும் வரை, தமிழில் நாடகங்கள் தனித்துறை என்று சொல்லுமளவுக்கு வளரும் வரை, இருப்பது முத்தமிழ் அல்ல, ஒரேஒரு இலக்கியத் தமிழ்தான். முத்தமிழ் என்பது அதுவரை பொய்.

5. கேள்வி: பகவத்கீதை பற்றி உங்கள் கருத்தென்ன?

க பூரணச்சந்திரன்: எந்த ஆய்விலும் பகவத்கீதை நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு மேல் மகாபாரதத்துக்குப் பின் வந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஏனெனில் மகாபாரத காலத்தில் நெகிழ்வாக இருந்த சாதிகள் பகவத்கீதை காலத்தில் முற்றிலும் இறுகிப் போயிருக்கலாம். எனவே பகவத் கீதை சாதிகளை வற்புறுத்தும் ஒரு நூலாகவே அமைந்துவிட்டது.

அது சாதியை வற்புறுத்துகிறது என்பது எனக்கு முக்கியமில்லை. அது அதன் இயல்பு. ஆனால் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கு நடக்கும் விவாதம் ஜாதி பற்றியதல்ல. கடமை பற்றியது. அர்ஜுனன் கேள்வி, முன்னால் இருக்கும் உறவினர் மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்த பல லட்சக்கணக்கான பேர்களையும் தருமத்தின் பெயரால் கொல்வது தகுமா என்பதுதான். கிருஷ்ணன் சொல்லும் பதில் இதற்கு ஏற்புடையதல்ல. அவன் சொல்வது, “எத்தனை பேரானால் என்ன, சொந்தமாக இருந்தால் என்ன, தருமம் (உன் சாதிக்கடமை யான கொல்லுதல்)தான் முக்கியம், ஆகவே கொல்” என்பது. பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும் தாண்டி அது என்ன தருமம், நீதி? தருமம் பற்றி எலலாருக்கும் இருப்பது ஒரு பார்வை தான். (நோஷன்). இது தருமமா, அது தருமமா என்றெல்லாம் ஆராய்ந்து எதையும் நிலைநிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் கேட்டால் எது உண்மை என்பது போலவே, ஆராய முடியாத முடிவற்ற ஒன்றாக இருப்பதுதான் எது தர்மம் (நீதி) என்பதும். (இங்கே தர்மம் என்ற வடசொல்லின் அர்த்தத்தை வைத்து (மதம்) பலபேர் குட்டை குழப்புகிறார்கள்.) நாம் பொதுவான எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற சமூகநீதியைப் பற்றித்தான் பேச இயலும். எல்லாருக்கும் உணவு தேவை. எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் என்பது சமூக நீதி.
கிருஷ்ணன் கூறும் நீதி, சிங்களர்கள் தமிழ் ஈழ மக்களைக் கொன்ற நீதிதான். அல்லது யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று கருதி ஹிட்லர் செய்த நீதிதான்.
mass destruction எதற்கும் பின்னால் கிருஷ்ணனின் நீதிதான் இருக்கிறது.
அதைக் கேள்வி கேட்கும் அர்ஜுனனின் (பொதுமக்களின்) வாயைச் சாமர்த்தியமாக அடைப்பதுதான் பகவத்-கீதை.


மகாபாரதச் சிந்தனைகள்-‍ தொடர்கிறது

கேள்வி 2. ஆமாம் மாமா… இந்த கேள்வியை நான் பிராமண நண்பர் களிடமே கேட்டிருக்கிறேன்… அவர்கள் கூறுவது, வேதத்தில் எங்கும் பிறப்பு அடிப்படையில் சாதி பிரிவுகள் இல்லை என்பதுதான். பின் பிற்காலத்தில் எப்படி பிறப்பு அடிப்படையில் மாறியது…. தற்போதும் ஏன் தொடர்கிறது என்றெல்லாம் தெரியவில்லை…

நீங்கள் கூறியது போல எனக்கும் ராமாயணம் விட மகாபாரதம் பிடிக்கும் தான். மனித இயல்புகளின் சிக்கல்களை காட்டுவதால். என்னுடைய எதிர்ப்பு அதை (மற்றும் சனாதான தர்மம்) மட்டுமே நம் அடையாளமாக மாற்றுவதில் தான் உள்ளது…
உதாரணமாக ஏன் தெருக்கூத்து பாரதத்தை மட்டுமே நம்பி இருந்தது… ஏன் பிற நாடகங்களோ (ஆங்கிலத்தில் Shakespeare முதல் Bernard Shaw வரை இருப்பன போல), பிற இலக்கியங்களோ படைக்கப்படவில்லை?

பதில். வேதத்தில் பிறப்படிப்படையில் சாதி இல்லை என்பது சரி, ஆனாலும் அது ஒரு மூடநம்பிக்கைக் களஞ்சியம்தான். எனினும் சாதிக்கான வேர்கள் அதர்வத்தில் உள்ளன. மூலமின்றி ஒன்று பிறந்து விட்டது என்பது தர்க்கத்திற்கு ஒவ்வாது. சரி, சாதிதான் வேதத்தில் இல்லை என்கிறார்களே, பிறகு அதை விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் மனுதர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? அதில்தான் சாதி பற்றி விரிவான சூத்திரம் வருகிறது.

சாதியின் வேரைத் தேடுவது சநாதனிகளுக்கு ஆபத்தானது, பிறகு இப்போதுள்ள அவர்களுக்கு வசதியான இந்த சாதிமுறையைக் கைவிட வேண்டி வரும். அதனால் அதில் பிடிவாதமாக ஈடுபட மறுக்கிறார்கள்.
தற்போது வரை சாதி தொடர்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இது பிரித்தாளும் சூழ்ச்சிதான். ஆங்கிலேயனாவது மொழி, இன, சாதி போன்ற இருக்கின்ற குழுக்கள் அடிப்படையில் பிரித்தாள்வதைத் தொடங்கினான். ஆரியர்கள் சாதி அடிப்படையிலும் தனிமனித அடிப்படையிலும் பிரித்தாள்வதைத் தொடங்கி விட்டார்கள்.

சாதிகளைப் பிரிக்கும்போதே நீ உயர்ந்தவன், அடுத்துள்ளவன் தாழ்ந்தவன் என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதுபோல, அமைப்புகள். சிலசாதிகள், சிலபேர் மட்டும் பூணூல் அணியலாம் போன்ற சலுகைகள் இத்யாதி. அதனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் கூட உபசாதிகள் தோன்றி நான் பெரியவனா நீ பெரியவனா என்ற ஓயாத போராட்டம்.

முக்கியமாக தலைவிதி-முற்பிறப்பு என்ற இரண்டின் வாயிலாகவும் தனிமனிதர்களைப் பிரித்து விட்டார்கள். உதாரணமாக பக்கத்தில் ஒருவன் கஞ்சியில்லாமல் சாகிறான் என்றால் அவனுக்கு உதவுவதற்கு பதிலாக, அது அவன் தலையெழுத்து, நாம் நன்றாக இருப்போம் என்ற இந்திய மனநிலை. எவன் என்ன செய்தாலும் எங்கு பிறந்தாலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும் அது அவன் தலையெழுத்து என்று தலைமுழுகிவிடலாம்.

மனிதர்கள் எந்த அடிப்படையிலும் ஒன்‍று சேரவே முடியாத ஒரு கோட்பாடு இது. இது அரசுகளுக்கும் ஆள்வோருக்கும் எதிர்ப்புகளையும் கலகங்களையும் சமாளிக்க மிக உதவியாக இருந்ததால் அவர்கள் பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால்தான் இந்தியாவில் புரட்சி வரவே வராது, வரமுடியாது என்று நான் சொல்வதுண்டு. அடுத்தவன் மேல் அபிமானமும் அன்பும், அதன் அடிப்படையில் ஒன்றுசேர்தலும் இருந்தால்தானே புரட்சி வரும்?
ஆனால் நான் முன்பே சொன்னதுபோல இராமாயணம் அளவுக்கு மகாபாரதம் பார்ப்பனர்களின் அடையாளமாக இல்லை. எல்லாச் சாதியினரின் அடையாளமுமாகப் பார்க்கப்பட்டது.
தெருக்கூத்து மகாபாரதத்தை மட்டுமே நம்பியிருந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை இங்கே தொகுப்பது கடினம். ‍அதைப் படித்தால் மழைவரும் என்பன போன்றவை நம்பிக்கை அடிப்படையிலானவை. இன்னும் பல சமூகம் சார்ந்தவை. முக்கியமாகப் பிற சாதியினர் படிக்கலாகாது என்ற பார்ப்பனரின் கட்டுத்திட்டம். அப்படியானால் பிராமணன் மட்டும்தானே நாடகங்களை உருவாக்கவும் எழுதிவைக்கவும் முடியும்? இதுதான் இசையிலும் இப்போது நடக்கிறது.

இயல் மட்டும் தப்பிப் பிழைத்ததன் காரணம், தமிழிலக்கியம் ஆரம்பத்திலிருந்தே வேளாளர் கையில் ‍எடுக்கப்பட்டது, சமஸ்கிருதத்திற்கு எதிரானதாகக் கட்டமைக்கப் பட்டு விட்டது. இசையும் நாடகமும் இயலைவிடப் புரவலர் ஆதரவை வேண்டுபவை. இது ஓரளவு விடைதான். முடிந்தால் போகிற போக்கில் இதற்கான விடையையும் மேலும் தேடவேண்டும்.

மிக முக்கியமான ஒன்று, ஆரியர்கள் தங்களுக்கு எதிரானவற்றை ஒன்று தங்களிடம் ஏற்கெனவே உள்ளதாக உள்வாங்கிக் கொள்வார்கள், அல்லது அதற்கு ஒத்துவராத பனுவலாக இருந்தால் அழித்துவிடுவார்கள். அதனால் சாதியின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வு சிக்கலாகியது. முக்கியமாக சார்வாகம், நாத்திகம், ஆசீவகம் போன்ற எதிர் மதங்களுடைய நூல்கள் யாவும் அழிக்கப்பட்டன. பெளத்தம் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்ததால் இந்த விபத்திலி ருந்து தப்பியது.

நூல்களை அழிக்க முடியாதபோது ஆரியர்கள் ஆட்களையே அழித்துவிடுவார்கள். உதாரணமாக மன்னர்கள் ஆதரவுடன் சமணர்கள் அழிக்கப்பட்டது (தமிழகத்திலும் 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டது) போன்றவை இத்தகையவை. ஆரம்பமுதலே ஆரியமும் சநாதனமும் ஆபத்தானவையாகத்தான் இருந்து வந்துள்ளன. இப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

தமிழ் இலக்கியத்திலும் மருத்துவத்திலும் பிற கலைகளிலும் முக்கியமானவை ஆரியர்களால் அழிக்கப்பட்டன. சித்தமருத்துவம் ஆயுர்வேதம் என்ற வடிவத்திற்குள் கொண்டுசெல்லப் பட்டது. கட்டடக்கலை, சிற்பக்கலை (தமிழகத்தில் ஊர் ஊருக்குக் கோயில்கள் இருந்தன, சிற்பங்கள் இருந்தன, யோசித்துப் பார், இவை பற்றிய நூல் எதுவும் தமிழில் கிடையாது.) நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, மூல நூல்கள் ஒன்று கூட இல்லாமல் அழிக்கப்பட்டன. இப்படி அவர்கள் அழித்ததை எதிர்ப்பதற்கு அறிஞர்களுக்கோ சாதாரண மக்களுக்கோ போதுமான அரசாங்க ஆதரவோ, பணமோ, செல்வாக்கோ எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அரசாங்கமே ‘அவாளுக்கு’ ஆதரவு…எங்கு பார்த்தாலும் அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள்…எல்லாக் கொடையும் பார்ப்பனருக்கே. ஒரு வேளாளனுக்கோ, மருத்துவனுக்கோ, பறையனுக்கோ, வைசியனுக்கோ கொடையளித்ததாக கல்வெட்டு இருக்கிறதா? அவர்கள் யாவரும் வாழப் போராடியாக ‍வேண்டும், அவர்களிடம் வரி பிடுங்கப் படும். ஆனால் இவர்களுக்கு ஊர்களும் நிலங்களும் இனாமாக அளிக்கப் படும், இவற்றுக்கு வரியும் கிடையாது (இறையிலி, வரியிலி நிலங்கள்). வேடிக்கை என்னவெனில், பின்வந்த நவாபுகள்கூட இதே இறையிலி நிலங்களைப் பார்ப்பனருக்கு அளிக்கும் முறையைப் பின்பற்றியிருக்கிறார்கள். படித்தவர்கள் ஆதரவு வேண்டுமல்லவா? தங்களை மட்டுமே படித்த சாதியாக, பிறரைப் படிப்பதற்குத் தகுதியில்லாதவர்களாகக் கட்டமைத்தது பார்ப்பனர்களின் பாரிய சூழ்ச்சிகளில் ஒன்று.


மகாபாரதம் – சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி 1 (கேட்பவர் விவேக்). தன்னுடைய காம இச்சைக்காக சாந்தனு தன மகனான பீஷ்மனை ப்ரஹ்மச்சரிய விரதம் மேற்கொள்ள செய்வது தவறில்லையா? Actually பீஷ்மனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து குலத்தை தழைக்க செய்வது தானே ஒரு நல்ல தந்தைக்கு அழகு/ ஒழுக்கம் ?

பதில் (பூரணச்சந்திரன்). உன் முதல் கேள்வி மிகவும் ஏற்புடையது. இந்த நியாயமான கேள்விக்கு பதில் கிடையாது. சத்யவதி மாதிரி கீழ்ச்சாதிப் பெண்களை நினைத்தால் அந்தக்கால அரசர்கள் ஒரு நொடியில் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள முடியும். (இப்பொழுதே உ.பி.யில் அப்படித்தான் நடக்கிறது). இவனும் அப்படியே செய்திருக்கலாம். அப்படியிருக்கும்போது இது ரொம்ப மிகையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இதற்காக ஒரு தேவதைக்கதை படைக்கப்படுகிறது.

அவள் சேதிநாட்டரசனின் மகள். மீன்வடிவ அப்சரஸ் ஒருத்தியை அவன் காதலித்ததால் மீன்நாற்றத்துடன் பிறந்து மச்சகந்தி எனப் பெயர் பெற்றவள். ஆனால் அவளுக்கு வியாசனை திருமணத்துக்குப் புறம்பான பந்தத்தில் கொடுத்த பராசர முனிவன் ஒரு யோசனை தூரம் அவள் உடலிலிருந்து நறுமணம் வீசுமாறு ‍செய்கிறான். அதனால் யோஜனகந்தி என்ற பெயர் பெறுகிறாள். பல காத தூரம் நறுமணம் வீசக்கூடிய உடலைப் பெற்ற ஒருத்தி சாதாரணப் பெண்ணாக இருக்கமுடியுமா? அதனால் அவள் (பின் வரப்போவதை அறியாமல்) “கண்டிஷன்” போடுகிறாள். (இங்குதான் காவியத்தின் அற்புதம் ஆரம்பிக்கிறது. a beautiful irony. எந்தப் பிள்ளைகளின் வம்சம் தழைப்பதற்காக பீஷ்மனை பிரம்மச்சாரியாக இருக்கச் சொல்கிறாளோ, அந்தப் பிள்ளைகள் அற்பாயுசில் மாண்டு போகிறார்கள். பீஷ்மனையும் பிரம்மச்சாரி ஆக்கிவிட்டதால் உதவாமல் போகிறான். திருமண உறவுக்கு முன் மற்றொருவனிடம் பெற்ற அவளது முதல்பிள்ளை வியாசன்தான் கெளரவ வம்சத்தை உருவாக்கவேண்டி வருகிறது.)
எப்படியிருப்பினும் சத்யவதி செய்ததும், சாந்தனு செய்ததும் தவறுகள்தான். ஆனால் அந்தத் தவறுகளில்தான் கதை தொடங்குகிறது. கதையின் தொடக்கத்தில் தவறுகளும், நம்பத்தகாத விஷயங்களும் இடம் பெறலாம் என்ற நோக்கில் இது ஏற்கப்படுகிறது.
இந்தத் தவறுகளின் விளைவுதான் (‍பெற்றவர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை பாதிக்கும் எனப் படுகிறது) வியாசனின் முதல் மகன் குருடனாகப் போவதும், இரண்டாவது மகன் தோல்நோய் (பாண்டு) பீடித்தவன் ஆவதும். மூன்றாவது மகன் அரச பரம்பரை அல்லாதவன் ஆவதும் (விதுரன்).

அந்தக் காலப் பழக்க வழக்கங்கள் பலவற்றை இது எடுத்துக் காட்டுகிறது. ஓர் அரசனுக்குப் பிள்ளை இல்‍லை என்றால் வேறு எவனிடமாவது அவன் பெண்டாட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதாவது தாய்வழிச் சமூகமாக இருக்கிறது. ஆனால் அரச வம்சத்தைச் சேராதவர்கள் (விதுரன் போன்றோர்) அரசனாக முடியாது…

சுயம்வரத்தில் மணாளனைத் தேர்வு செய்வதும், பாஞ்சாலி ஐந்து பேரை மணப்பதும் தாய்வழிச் சமூக வழக்கங்கள்தான். ஆகவே பாரதம், தந்தை வழிச் சமூகம் முற்றிலும் உருவாகாத ஒரு காலத்தைக் காட்டுகிறது என்றுதான் தோன்றுகிறது. இதிலேயே உன் கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. தாய்வழி கொண்ட அந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது என்றால், சந்தனு தன் மனைவியை (எதிர்கால ராஜமாதாவை) எவ்வளவு ‍எச்சரிக்கையுடன் ‍தேர்ந்தெடுக்கவேண்டும்? அதுவும் ராஜவம்சத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே ஆளவேண்டும் என்பதால்? ஆகவே இரண்டாவது அதீத சக்தி பெற்ற ஓர் இளம் பெண் கிடைக்கிறாள் என்னும்போது முதல் மனைவி பெற்ற மகனை பலிகொடுத்துவிட்டான் சாந்தனு.

ஒரு வேடிக்கையை நீ கவனிக்கவேண்டும். இராமாயணத்தை உருவாக்கியவன் வால்மீகி என்ற வேடன். மகாபாரதத்தைத் தொகுத்தவன் வியாசன் என்ற மீனவப்பெண் வயிற்றில் பிறந்த கீழ்ச்சாதிக்காரன். ஆனால் இந்தச் சாதிகளெல்லாம் மட்டும் பார்ப்பனர்களுக்கு ஆகவே ஆகாது. இது எப்படி? இவ்வளவு அறிவாற்றல் கொண்டவர்களாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்களால் தங்களுக்கென தங்கள் சாதியால் ஒரு இதிகாசத்தை உருவாக்க முடிந்ததா?


மகாபாரதம் – சில எண்ணங்கள்

கேள்வி – பதில் வடிவத்தில்…

கேள்விகளுக்கு ஒரு முன்னுரை (கேட்பவர் விவேக்): மகாபாரதம் தான் இந்திய கலாச்சாரத்தின் (தமிழ்நாடு உட்பட) ஆகப்பெரிய படைப்பு என்பது போன்ற பிம்பம் இன்று உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம். மகாபாரதக் கதையை ஆய்வு செய்து பார்த்ததில் அது ஒரு சாதாரணப் பழிவாங்கும் கதையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. இவாளெல்லாம் கூப்பாடு போடுவது போல பெரிய ஒழுக்கப் பண்புகள் கூட அதில் இருப்பதாக தெரியவில்லை. அதன் தொடர்ச்சியாகவே எனக்கு தோன்றிய சந்தேகங்களை கீழே தொகுத்துள்ளேன்.

பதில் (பூரணச்சந்திரன்) : மகாபாரதத்தில் எனக்கு ஒரு நிறைவு உண்டு. இராமாயணம் போல ‘உயர்ந்த’ ‘இலட்சியத் தலைவனைக் கொண்ட’ என்று வேஷம் போட்டுக் கொண்டு அது வரவில்லை. சாதாரண மக்களை, உள்ளது உள்ளது போல குற்றம் குறைகளுடன் படைப்பதில் அது இன்றைய நாவல் களை ஒத்துள்ளது. அதுதான் அதன் சிறப்பு. மகாபாரதத்தில் கண்ணன், பீஷ்மர் உள்பட எவனும் சிறந்தவனும் இல்லை, தலைவனும் இல்லை. எல்லாம் குறைகள் கொண்ட மனிதர்களே. கிருஷ்ணன் கீதை உரைத்ததும் அவன் இறைவன் அவதாரம் என்பதும் பின்னால் (நான்கைந்து நூற்றாண்டுகளேனும்) பின்னால் சேர்க்கப்பட்டது. அதனால் உன் முன்னுரையை பரிசீலிக்கலாம் என நினைக்கிறேன். மகாபாரதத் கிருஷ்ணன், துவாரகை நகரத்தைச் சேர்ந்த ஓர் இடையன். சாதாரண மனிதன்.
மகாபாரதம் போன்ற காவியங்களைப் படிக்கும்போது காவியப் பாத்திரம் இறைவன் என்று சொல்லி, அவன் செயல்களாக நிறைய இடைச் செருகல்கள் இருக்கும். அவற்றை ஒதுக்க வேண்டும். முதலில் நாம் அற்புதச் செயல்கள் தவிர்த்த நமக்கான ஒரு Plotஐ உருவாக்க வேண்டும். பிறகுதான் ஆய்வு செய்ய முடியும். இறைவன் செயல்களையோ, அற்புதச் செயல்களையோ யாராவது ஆய்வு செய்ய முடியுமா? நம் உச்சநீதிமன்றம் போல “நம்பிக்கை” என்று சொல்லிவிடுவார்கள்.
பார்ப்பனர்கள் இதை உயர்த்திப் பிடிப்பதில்‍லை. இராமன், சீதை பெயரை எல்லாம் வைத்துக் கொள்ளும் பிராமணர்கள் யாராவது தருமன், அர்ஜூனன், பீமன், திரெளபதி என்றெல்லாம் பெயர்வைத்துப் பார்த்திருக்கிறாயா? (கிருஷ்ணன் விதிவிலக்கு-கடவுள்). உண்மையில் மகாபாரதப் பெயர்கள் எல்லாம் கீழ்ச் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெயர்கள். அதுவே அதன் பண்பை எடுத்துக் காட்டுகிறது.

தலித்துகள் நிறையப்பேர் அர்ஜுனன், பீமன், திரவுபதி என்று பெயர் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். திரவுபதி கீழ்ச்சாதிகள் வணங்குவதற்கென்று ஒதுக்கப்பட்ட கடவுள். நம் ஊரில் எல்லாம் கூட திரவுபதி கோயில் உண்டு. அவளும் ஒரு அம்மன் ஆகிவிட்டாள். திரவுபதி கோவிலில் சாதாரண மக்கள் பொங்கலிட்டு கூழ் ஊற்றுவதைப் பார்த்திருக்கலாம்.
அற்புதச் செயல்கள் தவிர்த்த ‘நமக்கான ஒரு பிளாட்’ என்பது முக்கியம். உதாரணமாக கிருஷ்ணன் திரவுபதிக்காக சேலையை வானத்திலிருந்து அனுப்பியதை அப்படியே ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்? சபையிலிருந்த சாதாரண மக்கள் சிலர் சேலை கொடுத்து திரவுபதியைக் காப்பாற்றிய செயலாக இதைக் கொள்ளலாம். ஏனென்றால் ஆள்பவர்களைவிட ஆளப்படுபவர்களுக்கு மனிதாபிமானம் நிறைய உண்டு.

அதேபோல, அர்ஜுனனுக்கு சிவபெருமானே வேடன் வடிவத்தில் வந்து பாசுபத அஸ்திரம் கொடுத்தார் என்பது பாரதக் க‍தை. உண்மையில் ஏகலைவன் (ஏக-லவ்யன்) என்ற வேடன் அர்ஜுனனை விட அதி வில்வீரனாகத் திகழ்ந்திருக்கிறான். (அதனால் கட்டைவிரலை ஒரு பிராமணனுக்கு பலி கொடுக்க வேண்டிவந்தது.) அதனால் வில்வித்தையில் சிறந்த ஒரு வேடனே (மனிதனே) அர்ஜுனனுக்கு அஸ்திரம் வழங்கியிருக்கிறான் என்றே கொள்ளவேண்டும்.


பாரதத்தை நான் போற்றுவதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது மக்கள் கதை. என் காலம் வரை மகாபாரதக்கதை மேமாதத்தில் (கோடையில்) மழை வேண்டி கிராமப்புறங்களில் வாசிக்கப்படுவதும், கதாகாலட்சேபம் செய்யப்படுவதும் உண்டு. அன்றன்று (மதியம் 2 முதல் 5 வரை) நடத்திய பாரதக் கதையை இரவில் 10 மணிக்கு மேல் கிராமங்களில் கூத்துத்திடல்களில் ஆட்டமாக (தெருக்கூத்தாக)ப் போடுவார்கள். மக்கள் விடியவிடிய அவற்றைப் பார்ப்பது வழக்கம். இந்தச் சிறப்பு இராமாயணத்துக்குக் கிடையாது.
நான் திமிரியில் 1957 முதலாகப் படித்தபோது, அங்கு பாரதக்கதையும் தெருக்கூத்தும் தவறாமல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது.
மகாபாரதக் கதையை என்று கிராமங்களில் போடுவதை நிறுத்தினார்களோ, அன்றே தெருக்கூத்துக் கலை அழிந்து விட்டது.


அரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்?

பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒரு காரியத்தை கண்ணும்,கருத்துமாகச் செய்கிறது எனில்,அது அரசுத் துறை நிறுவனங்களை அழித்து அம்பானியை வாழ வைப்பதாகும்! இதை ஏதோ எடுத்தேன்,கவிழ்த்தேன் என நான் எழுதவில்லை!அம்பானிக்கு சேவை செய்வதையே தன் பிறவிப் பயனாக பாஜக அரசு கருதி,தொண்டுழியம் செய்வதற்கும் மேலாக அம்பானிக்காக இந்திய பொதுத்துறை நிறுவனங்களை அழித்துக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனையாகும்!

கொரானா காலத்திலும் கூட – 140 கோடி மக்கள் ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையிலும் கூட – அம்பானி மட்டுமே அபார லாபம் ஈட்டினார் என்றால், இந்த காலகட்டத்தில் மட்டுமே அம்பானியின் சொத்து மதிப்பு 2,77,000 கோடிகள் அதிகரித்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அதாவது ஊரடங்கு காலகட்டத்தின் ஒவ்வொரு நிமிஷத்திற்கும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அம்பானி கம்பெனி லாபம் பார்த்துக் கொண்டிருந்தது. இந்திய அரசே இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டு கொண்டிருக்க,அம்பானியோ,இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தலையில் கால்பதித்து ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட அம்பானி நிறுவனங்களுக்குத் தான் அரசுத் துறை வங்கிகள் 1,25,000 கோடிகள் கடன்களாக அள்ளி வழங்கியுள்ளன! அம்பானிக்கும்,மோடிக்கும் உள்ள நட்பு இன்று,நேற்றல்ல, மோடி குஜராத் முதல்வராக இருக்கும் காலத்திலேயே அரும்பியது எனலாம்.

2012 குஜராத் முதல்வராக இருந்த போது தொடங்கியே மோடி தனது நண்பர்களான அம்பானி குழுமமும், அதானி குழுமமும் 1500 கோடி லாபம் பெறும் வகையில் நிதி ஆதாரங்களை தவறாக பயன்படுத்தினார். இதை முதன்முதலாக கண்டு பிடித்து மத்திய அரசின் முதன்மை தணிக்கையாளர் (CAG) அம்பலப்படுத்திய போது, அதை ஊடகங்கள் கண்டு கொள்ள வில்லை.

மோடி குஜராத் முதல்வரானதும் அரசின் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (GSPC) 2009 ஆண்டிலிருந்து படிப்படியாக அழித்தார். அதானி, எஸ்ஸார், அம்பானி குரூப்களுக்கு சாதகமாக அதை மாற்றினார். தணிக்கை ரிப்போர்ட் சொல்வது என்னவென்றால் GPSC தனது எரிவாயுவை மிகக் குறைந்த விலையில் அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுள்ளது. இதனால் அரசுக்கு ஐயாயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மோடியை வைத்து குஜராத்தை சுரண்டியது போல், இந்தியா வையே சுரண்ட ஒரு திட்டத்தை அம்பானி தீட்டினார். அதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் விளம்பரத்திற்கும் 5000 கோடியை செலவு செய்தார். வங்கக் கடலில், 11,000 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான ஒ.என்.ஜி.சி எரிவாயு வயல்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் க்கு மாற்றப்பட்டது. அங்கு ரிலையன்ஸ் சட்டவிரோதமாக எரிவாயு எடுக்கத் தொடங்கியது. பெருவாரி யான ஊடகங்கள் இதை மறைத்துவிட்டன. ஒரு சில ஊடகங் களே இதை எழுதின.

2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பிக்கப்பட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனம் படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் உடமைகள், அலைக்கற்றைகள் அம்பானிக்குச் சாதகமாக மாற்றப்பட்டன. உதாரணத்திற்கு பி.எஸ்.என்.எல் லின் 66,600 செல் பேசி டவர்களை ரிலையன்ஸ் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது பாஜக அரசு.

4 ஜி அலைக்கற்றை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லுக்கு ஒதுக்க மறுத்து ரிலை யன்ஸ் ஜியோவிற்கு வழங்கியது பாஜக அரசு! இதனால், ஜியோ தனது சேவையை மேற்கொள்ளவும், அரசு நிறுவனம் மக்கள் ஆதரவை இழக்கவும் துணை போனது மோடி அரசு. அத்துடன் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சுமார் 78,000 பேர் ஒரே நாளில் விருப்ப ஓய்வு தந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். கிட்டத்தட்ட சரிபாதி ஊழியர்களை அரசு நிறுவனம் இழந்த துர்ப்பாக்கியமான புதிய வரலாற்றை இந்தியா கண்டது. அந்த ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் இன்று வரை முழுமையாகத் தரப்படவில்லை. பி.எஸ்.என்.எல்லின் ஒப்பந்த ஊழியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்… ஆலமரம் போல விழுதுகள் விட்டு கிளை பரப்பி நின்ற அரசு நிறுவனம் ஒரு தனி முதலாளிக்கு சேவை செய்ய அராஜகமாக அழிக்கப்பட்ட வரலாற்றை பாஜக. எழுதியது.

தொலைத் தொடர்புத் துறையில் சட்டவிரோதமாக மூன்று மாதத்திற்கும் மேல் இலவசமாகச் சேவை வழங்கியது ஜியோ. இது அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத் தியது. ஜியோவின் இலவச சேவையை அனுமதித்து, கோடிக் கணக்கான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை ஜியோ விற்கு மாற்றியது மத்திய அரசு. பி.எஸ்.என்.எல் மட்டுமல்ல, ஏர்டெல்,வோடோ போன் ஆகிய பல நிறுவனங்கள் பலவீனப் பட மத்திய அரசின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. மிகச் சிறிய முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஜியோவிற்கு பல நூறு கோடிகள் கடன் அரசுத்துறை வங்கிகள் மூலமாக வழங்கப் பட்டது. ஆனால் ஒன்றரை லட்சம் கோடி சொத்து மதிப்புக் கொண்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பாஜக அரசு பிச்சைக் காரனாக்கிவிட்டது.

இதைப் போன்று பல பொதுப்பணித்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்காக அழித்தது, அழித்துக் கொண்டுள்ளது மோடியின் அரசு.

பல பொதுத்துறை நிறுவனங்களை ( BSNL, BHEL, ONGC, HAL, SAIL, BPCL, Air India..) உருவாக்கிய நேரு, அவற்றை நவீன இந்தியாவின் ஆலயங்கள் என்றார். ஏனென்றால், பொதுத் துறை மூலம் மக்களுக்கு சேவை தரமுடிவது ஒருபுறமென் றால்,அவற்றின் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. இதனால்,அரசுக்கு அதிக வருவாயும் வந்தது, அதைவைத்து பல சமூகநலத் திட்டங்களைச் செயல் படுத்த முடிந்தது. ஆனால் இப்போது எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுக்கொண்டு வருகிறது பாஜக அரசு. நன்றாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிற பஞ்சமா பாதகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அம்பானியின் நிறுவனங்கள் அனைத்துமே பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வளர்க்கப்பட்டவைகளே. அப்படிப்பட்ட அம்பானி நிறுவனங்களின் பட்டியலே இது:

BSNL > Reliance Jio; BPCL > Reliance Petroleium; LIC > Reliance Insurance; ONGC > Reliance Gas; HAL > Reliance Naval and Engineering Ltd. ; APMC > Reliance Retail; Airports. Railways. Power, Ports > Reliance Infrastructure…

அதிரடியாக ஒரு நாள் நள்ளிரவில் தொடங்கப்பட்டது ரிலை யன்ஸ் டிபன்ஸ். இதற்கு இத் துறையில் முன் அனுபவம் கிடையாது, ஒரு தொழிற்சாலை கிடையாது, வெறும் லெட்டர் பேட் நிறுவனமான இதற்குத் தான், ரபேல் விமானம் செய்யும் ஆர்டர் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான HAL ஓரம் கட்டப் பட்டது. புதிதாக ரஷ்யா, ஸ்பெயின் நாடுகளிடம் போடப்பட்ட ஒப்பந்தங்களிலும் ரிலையன்ஸ்க்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் முயற்சித்தது பாஜக அரசு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக அரசு பதவி ஏற்ற 2014 ஆம் ஆண்டு அம்பானியின் சொத்து மதிப்பு 1,68,000 கோடியாக இருந்தது. தற்போது அது 6,58,400 கோடியாக வளர்ந் துள்ளது! அதானியின் சொத்து மதிப்பு 50,400 கோடியாக இருந்தது. அது தற்போது,1,40,200 கோடியாக வளர்ந்துள்ளது!தனியார் நிறுவனங்கள் செழிக்கவும், அரசுத் துறை நிறுவனங் களை அழிக்கவுமான அணுகுமுறைை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். மக்கள் உருவாக்கிய மாபெரும் இந்தியாவை அம்பானி, அதானி போன்ற ஆலகால விஷப் பாம்புகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு…

(ஒரு முகநூல் பதிவிலிருந்து)