இலக்கிய இயக்கங்கள்

இலக்கிய இயக்கங்கள்
குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் குறிப்பிட்ட அளவு இலக்கியம் ஒரு மொழியில் தோன்றுவதற்கு ஒரே மாதிரியான ஓர் இலக்கியப் போக்கு காரணமாக இருந்தால் அதனை ஓர் இலக்கிய இயக்கம் எனலாம். ஓர் இலக்கிய இயக்கம் ஆதிக்கம் செலுத்தும் காலப்பகுதியில் ஏறத்தாழ ஒரே மாதிரியான இலக்கிய வடிவம், அமைப்பு, இலக்கியக் கருப்பொருள்கள் ஆகியவை இலக்கியங்களில் பயில்கின்றன.
பிறகு காலம் மாறுகிறது. கால மாறுதலுக்கேற்ப மக்களின் வாழ்நிலைகளும் மாறுகின்றன. மக்களின் வாழ்நிலைகள் மாறும்போது அவர்களது கருத்தியல்களும் மாறுகின்றன. அதாவது வாழ்க்கை பற்றியும் பிறவற்றைப் பற்றியும் மக்கள் கொண்டிருக்கும் எண்ணங்களும் மாறுகின்றன. அதனால் இலக்கியப் போக்குகளும் மாறுகின்றன. அதனால் ஒரு மொழியின் இலக்கிய இயக்கங்களும் காலப்போக்கில் மாறுகின்றன. இலக்கியத்தில் எந்த இயக்கமும் நிரந்தரம் இல்லை. சாசுவதமாக நிலைத்துவிட்டால் இயக்கமும் இல்லை.
இலக்கிய இயக்கங்களைப் பொதுவாக அக இயக்கம், புற இயக்கம் என்று பிரித்துக் காண்பார்கள். சமுதாயத்தின் தாக்கம் அதிகமின்றி மொழியின் ஊடாக ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் இயக்கங்களை அக இயக்கங்கள் எனலாம். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால், புறத்தாக்குதலினால், மொழிக்குள் ஏற்படும் இயக்கங்களைப் புற இயக்கங்கள் எனலாம். செவ்வியல் இயக்கம், குறியீட்டு இயக்கம், ரொமாண்டிக் இயக்கம் போன்றவற்றை அக இயக்கங்கள் எனலாம். தேசிய இயக்கம், பெரியாரியம், மார்க்சியம் போன்ற சமூக இயக்கங்கள் காரணமாக மொழிக்குள் ஏற்படும் இலக்கிய விளைவு களைப் புற இயக்கங்கள் எனலாம்.
தமிழில் பலவித இலக்கிய இயக்கங்கள் மாறிமாறி எழுந்துள்ளன என்பது மேலோட்டமாக நோக்குவோர்க்கும் புரியும். மேலும் இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக வரலாறு உடைய ஒரு மொழி மாறாமல் அப்படியே இருக்குமா? சங்ககாலப் பகுதியைப் பொதுவாக மதுரையில் அமைந்த தமிழ்ச்சங்கம் என்ற ஒரு இலக்கிய நிறுவனத்தை வைத்துச் சங்க இலக்கியம் என்று கூறுவது மரபாக உள்ளது. அதனை ஓர் இயக்கமாகக் காண்பதே முறை. சங்க இலக்கியத்திற்கு உருக்கொடுத்த பல நூற்றுக் கணக்கான புலவர்களும் தொண்டை நாடு முதல் குமரிமுனை வரை பலவேறிடங்களில் வசித்தவர்கள். இவர்கள் மிகுதியாகப் பயணம் செய்பவர்களாகவும் இருந்தனர். சான்றாக, தென்கோடி இரணிய முட்டத்தைச் சேர்ந்த பெருங்கௌசிகனார், தமிழகத்தின் வடபகுதியிலுள்ள செங்கண்மாவுக்குப் (இப்போதுள்ள செங்கம்) பயணம் செய்து நன்னன்சேய் நன்னனைப் பாடியுள்ளார் (மலைபடு கடாம்). எனவே இவர்கள் அனைவரும் தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்ற புலவர்களாக இருந்திருத்தல் இயலாது. இவர்கள் தமிழகத்தின் பலவேறு பகுதிகளை, பல வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள். (ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை.) இவர்கள் எல்லாரும் ஒரே மரபினைப் பின்பற்றிப் பாடியுள்ளனர்.
ஆகவே, ஒரே மாதிரியாக அகம் புறம் என்ற அடிப்படையில் அமைந்த, ஒரே மாதிரியான யாப்பு, வடிவம் ஆகியவற்றைக் கொண்ட ஓர் தமிழ்ச் செய்யுள் இயக்கம் அக்காலத்தில் பரவலாக இருந்திருந்தால் மட்டுமே இம்மாதிரி ஒரு தமிழ்இலக்கியத் தொகுதி நமக்குக் கிடைத்திருக்க இயலும். இந்த இயக்கத்தின் பொதுவான விதிகளைத்தான் தொல்காப்பியத்தின் பொருளதி காரம் நமக்கு எடுத்துரைக்கிறது. இதுதான் தமிழ் இலக்கியத்தின் முதல் இயக்கம். செவ்வியல் இயக்கம் என்று இதனைக் கூறலாம். இவ்வியக்கத்தின் விளைவுகள்தான் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய இரு தொகுதிகளாக நமக்குக் கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே மதச்சார்பற்ற ஓர் இயக்கமாகவும் பழந்தமிழின் செவ்வியல் இயக்கம் இருந்தது. இதற்கு மாறாக, சமஸ்கிருதம் ஒரு மத இயக்கமாகவே, வேதகாலம் முதலாகக் கால்கொண்டது.
தமிழ்நாட்டில் வைதிகத்தைவிட ஜைனம், பௌத்தம் போன்ற மதங்களே முதலில் பரவின என்று தோன்றுகிறது. ஜைன, பௌத்த மத இயக்கங்களே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள் ஆகியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன. ஐம்பெரும் காப்பியங்களில் சமண பௌத்தக் காப்பியங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரம், சமணம், மணிமேகலை பௌத்தம், சிந்தாமணி சமணம், குண்டலகேசி பௌத்தம், வளையாபதி சமணம். ஐஞ்சிறு காப்பியங்களிலும் சமண பௌத்த நூல்களே உள்ளன. இவற்றில் சேர்க்கப்படாத பெருங்கதை சூளாமணி போன்ற காப்பியங்களும் சமயக் காப்பியங்களாகவே உள்ளன.
மூன்றாவதாகத் தமிழில் தோன்றிய இயக்கம் பக்தி இயக்கம். காரைக்காலம் மையார், கண்ணப்ப நாயனார் போன்ற சைவ நாயன்மார்கள் காலம், முதலாழ் வார்கள் காலம் இவற்றை வைத்துப் பார்க்கும்போது ஏறத்தாழ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினை இதன் தொடக்கம் எனலாம். அவ்வாறாயின், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதலாக ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை நாம் இடைப்பட்ட ஜைன, பௌத்த மத இயக்கக் காலமாகக் கருதமுடியும். இதுதான் கீழ்க்கணக்கும், முதற்காப்பியங்களும் எழுந்த காலம்.
பக்தி இயக்கம் முதலில் வைதிக மரபுக்கு எதிரான இயக்கமாகத் தோன்றி, பிறகு காலப்போக்கில் அதற்கு அனுசரணையான இயக்கமாக மாறியது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பக்தி இயக்கம் முதன்முதலில் தோன்றி யது என்பதில் நமக்கு நியாயமான பெருமை உண்டு. “யாகக் கிரியைகள் வேண்டாம், மந்திரங்கள் வேண்டாம், சாதி வேறுபாடு காணத் தேவை யில்லை, பக்தி மட்டுமே இருந்தால் போதும் இறைவனை அடையலாம்” என்ற கொள்கைகளோடு தோன்றிய இயக்கம் இது. எத்தனையோ நாயன்மார்களின் ஆழ்வார்களின் வரலாறுகள் சாதி வேறுபாட்டினை பக்தி இயக்கம் ஏற்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.
“சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும்/ மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லராகில்/ அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்/ கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” (திருநாவுக்கரசர்)
என்பது போன்ற பாக்கள் பக்தி இலக்கியம் குறிப்பிடத்தக்க அளவு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருந்தது என்பதை விளக்கும். நாயன்மார்கள் தலங்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள இறைவனைப் பாடினர். பின்னர் அவர்கள் பாடல்கள் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப் பெற்றன. அதுபோலவே பன்னிரு ஆழ்வார்களின் பாக்களும் நாலாயிரப் பிரபந்தம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டன.
வைணவத்தின் மிக முக்கியமான ஆழ்வாரான நம்மாழ்வாரே பிராமணர் அல்ல. ஆனால் பக்தி இயக்கத்தின் இறுதிக் காலமான பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில் அது வைதிக மதத்தின் கொள்கைகளையும் சாதியையும் முற்றிலுமாக ஏற்றுக் கொண்டுவிட்டது. திருநாளைப் போவார் புராணம் இதைக் காட்டும். பக்தி இயக்கத்தினால் தமிழில் சைவத் திருமுறைகள், வைணவ நாலாயிரப் பிரபந்தம், கம்பராமாயணம், திருத்தொண்டர் புராணம் போன்ற எத்தனையோ சிறந்த இலக்கியங்கள் கிடைத்தன. பிற்காலத்திலும் ஈடு உரை போன்ற சிறந்த உரைகள் தோன்ற இவ்வியக்கம் காரணமாக இருந்தது.
இதற்குப் பின் (நான்காவதாகத்) தோன்றியது சிற்றிலக்கிய இயக்கம். முத்தொள்ளாயிரம், நந்திக் கலம்பகம் போன்ற பழைய இலக்கியங்களிலேயே சிற்றிலக்கியத் தோற்றத் திற்கான அடிப்படைகள் காணப்படுகின்றன. என்றாலும் பேரரசுச் சோழர்களின் பிற்காலம், பிற்பாண்டியப் பேரரசுக்காலம் தொடங்கியே சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றலாயின. ஏறத்தாழ பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒட்டக்கூத்தர் புகழேந்தி காலம் முதலாகத் தொடங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இந்த இயக்கம் நீடித்தது. நூற்றெட்டுவகைப் பிரபந்தங்கள்-அதாவது சிற்றிலக்கியங்கள் இருப்பதாகக் கூறுவது மரபு. எனினும் சிலவகைச் சிற்றிலக்கியங்கள் மட்டுமே போற்றப்படுகின்றன. அவற்றிலும் சிலவற்றுக்கு ஒவ்வொரு நூல் தலைமை சான்றதாக அமைந்துள்ளது. பரணிக்குக் கலிங்கத்துப் பரணி, தூதுக்குத் தமிழ்விடு தூது, குறவஞ்சிக்குக் குற்றாலக் குறவஞ்சி, உலாவுக்குத் திருக்கயிலாய ஞானவுலா, பள்ளுவுக்கு முக்கூடற்பள்ளு என்பதுபோலச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிற்றிலக்கிய இயக்கத்தின் காலப்பகுதியோடு இன்னும் மூன்று இயக்கங்களின் காலப்பகுதிகள் பெரும்பாலும் ஒன்றுபடுகின்றன. ஒன்று, புராண இலக்கிய இயக்கம். இதில் தலபுராணங்களும் அடங்கும். மற்றொன்று தனிப்பாடல்கள் இயக்கம். மற்றொன்று சித்தர் இயக்கம். இவை சிற்றிலக்கிய இயக்கங்கள் தோன்றத் தொடங்கி ஓரிரு நூற்றாண்டுகள் பிற்பட்டு நிகழத் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தன.
சித்தர் இயக்கம் வெறும் சடங்குகளில் மூழ்கிப்போன பக்தி இயக்கத்துக்கு எதிராக எழுந்தது. திருமூலர் காலம் தொடங்கி தாயுமானவர், மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரை நீடித்த இயக்கம் இது. இராமலிங்க வள்ளலார் பாக்கள் சித்தர் மரபில் வந்தாலும் அவற்றில் சமூக நோக்கும் இடம்பெற்றிருந் தது. தமது வழியினைச் சுத்த சமரச சன்மார்க்கம் என்று அவர் அழைத்தார்.
புராண இயக்கம், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புராண நூல்களோடு நிறைவு பெறுகிறது எனலாம். மதம் சார்ந்த சிற்றிலக்கியங்களும் புராணங்களும் தல புராணங்களும் பெரிதும் வளர்வதற்கு மடங்கள் காரணமாக இருந்தன. தமிழ் நாட்டின் மத, பக்தி இயக்கங்கள் இறுதியாக மடங்களில் வந்து முடிந்தன எனலாம். ஏறத்தாழ 13ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் சத்திமுற்றத் திருமடம், திருவிடை மருதூர் மாளிகை மடம், திருவானைக்கா ஆண்டார் எம்பிரானார் மடம், திருவாரூர் ஆசாரமழகியான் திருமடம் போன்றவை இருந்தன என்று தெரிகிறது. சாத்திர நூல்களை இயற்றிய சிவாசாரியார்களும் பல இடங்களில் மடங்களை நிறுவினார்கள். திருவாவடுதுறை, தருமபுரம், சூரியனார் கோயில், குன்றக்குடி போன்ற மடங்கள் தமிழ்சைவசாத்திரக் கல்விக்கு முதன்மை அளித்தன. தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களை எழுதியதோடு, காசி வரை சென்று அங்கும் தமிழ் மடங்களை அமைத்தார்.
தனிப்பாடல் இயக்கம் என்பதைத் தனியொரு இயக்கமாகக் கொள்ள முடியுமா என்பது ஓர் ஐயம். எனினும் காளமேகப் புலவர் காலம் தொடங்கி, பத்தொன்ப தாம் நூற்றாண்டின் வேதநாயகம் பிள்ளைவரை இதன் தாக்கம் நீடித்தது. எத்தனை எத்தனையோ கவிஞர்கள் (சிற்றிளம் பருவ பாரதியார் உள்படச்) சிறந்த தனிப்பாடல்களை இயற்றியுள்ளனர். புராண இயக்கம், தனிப்பாடல் இயக்கம் ஆகியவை விஜயநகரப் பேரரசுக் காலமுதலாக ஆங்கிலேயர் கால இறுதிவரை இருந்தவை.
பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வணிகத்துக்கென இந்தியாவிற்குள் வந்தனர். இவர்களில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், கடைசியாக ஆங்கிலேயர்கள்–நம் நாட்டைக் காலனிப்படுத்தவும் முனைந்தனர். இதன் விளைவாக ஏற்பட்டதுதான் தேசிய இயக்கம். இதனை இரு பிரிவுகளாகக் காணவேண்டும்.
முதற்காலப் பகுதியில் மருது சகோதரர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கான அறிக்கையை 1801 ஆம் ஆண்டு திருச்சி மலைவாசலில் ஒட்டினார்கள். அப்போதிருந்து தொடர்ச்சியாகத் தமிழகத்தில் சுதந்திரப் பேராட்டம் நடக்கலாயிற்று. முதலில் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய செய்திகள் நாட்டார் பாடல்களாகவே உருப்பெற்றன. கலியுகப் பெருங்காவியம், கட்ட பொம்மன் சண்டைக்கும்மி, பாஞ்சைக் கோவை, கட்டபொம்மன் கதைப்பாடல் போன்ற பல கதைப்பாடல்கள் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது.
ஆங்கிலேயரின் முறையான ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து சில மாற்றங்கள் நிகழ்ந்தன. பழைய நூல்கள் அச்சேறின. பத்திரிகைகள் பிறந்தன. உரைநடை வளர்ச்சி தொடங்கியது. நாவல் சிறுகதை போன்ற புதிய வடிவங்கள் பிறந்தன. மொழி ஆராய்ச்சி தோன்றியது. தொல்லியல் ஆய்வும் அகழ்வாய்வும் தொடங்கின. தமிழ் மொழிச் சிறப்பையும் பண்பாட்டுச் சிறப்பையும் உணர்ந்த பெரியோர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ. வே. சு. ஐயர், பாரதியார், வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினர். இம்மாற்றங்களை யெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்ற பெயரால் குறிக்கலாம். இதனுடன் தேசிய இயக்கத்தின் இரண்டாம் பகுதி இணைகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இறைவனைப் பாடுதல், அரசர்கள்-குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் உள்ளிட்ட மேன்மக்களைப் புகழ்ந்து பாடுதல் எனப் பாடாண் திணையாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றம், தமிழ் ஓர் நவீன மொழியாக, நவீன இலக்கிய மொழியாக உருப்பெற்ற நிலை. இலக்கியம் ஒரு சிறு குழுவினர் அல்லது புலவர்கள் உருவாக்குவது, வாசிப்பது என்ற நிலை மாறியது. புலவர்கள் பிழைப்புக்காகப் புரவலர்களை அண்டி வாழுகின்ற நிலையும் மாறியது. பழங்காலப் புலவர்கள், இன்றைய எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளர்கள் ஆயினர். முற்காலப் புரவலர்களுக்கும் அரசர்களுக்கும் பதிலாக ஊடகங்களின் ஆதரவு இன்றைய படைப்புகளுக்குத் தேவையாயிற்று. தமிழ் இலக்கியத்தின் வாய்மொழிப் பாரம்பரியத்தில் புலவர்கள் பாடி அரங்கேற்ற, அதைக் கேட்பவர்கள் இருந்தனர். அவர்களுக்கு பதிலாக இப்போது வாசகர் கூட்டம் தோன்றி விட்டது. இவற்றால் இலக்கியத்தின் நோக்கம், பணி பற்றிய கொள்கைகளும் மாறின. இதற்குமுன், சமகால மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதாக இலக்கியம் இருக்க வேண்டும், சமகாலப் பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்ற நோக்கு தமிழில் இருந்ததில்லை. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும் கவலைகொள்வதாகவும் மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம்.
சுப்பிரமணிய பாரதியார் 1882இல் பிறந்தார். சுதந்திரப் போராட்டமே தம்மை ஒரு தேசிய கவியாக மாற்றியது என்பதை அவர் உணர்ந்திருந்தார். முதன்முதல் தேசபக்திப் பாடல்களை இயற்றியவர் அவரே. 1908இல் வந்தே மாதரம், சுதந்திர தாகம், சுதந்திரப் பள்ளு போன்ற பாக்களை இயற்றினார். பாஞ்சாலி சபதம் சுதந்திரப் போராட்டத்தை மகாபாரதக் கதையின் வாயிலாகக் கூறிய ஒரு குறுங்காவியம். சுப்பிரமணிய சிவா, ஞானபாநு என்னும் இதழை நடத்தினார். ஏறத்தாழ இக்காலமுதல் சுதந்திரம் பெற்ற 1947வரை தொடர்ச்சியாகச் சுதந்திரப் போராட்டத்திற்கான இலக்கியங்கள் எழுதப்பட்டன. வ.வே.சு ஐயர் தேசபக்தன், பாலபாரதி போன்ற சஞ்சிகைகள் வாயிலாக எழுதி வந்தார். சுதந்திரப் போராட்ட காலம்தான் பத்திரிகைத் தமிழ் மிகுதியாக வளர்ந்த காலம்.
நாற்பதுகளின் இறுதியில் கல்கி கிருஷ்ணமூர்த்தி தேசிய இயக்கம் சார்ந்த நாவல்களை எழுதினார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை தியாக பூமி, அலை ஓசை. சுத்தானந்த பாரதியாரும் தேசியக் கவிதைகள் இயற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர். காந்திகாலத்தின் கவிஞராகக் கருதப்பெற்றவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. மிகுதியான சுதந்திரப் பாக்களையும், மலைக்கள்ளன் போன்ற நாவல்களையும், என் கதை என்னும் சுயசரிதையையும் அவர் எழுதியுள்ளார். பண்டிதை அசலாம்பிகை அம்மையார் காந்திபுராணம் என்னும் காவியத்தை வரைந்தார். கா.சி. வேங்கடரமணி, தேசபக்தன் கந்தன் போன்ற நாவல்களை எழுதினார். இவ்வாறு தமிழ் வளர்ச்சியில் தேசிய இயக்கம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது.
ஏறத்தாழ 1940களில் தமிழ் நாடகங்களும், தமிழ்த் திரைப்படங்களும் புத்துயிர் பெற்றன. தமிழ்நாடகக் கலைக்கு தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றோர் புத்துயிரூட்டினர். அவர்கள் காலத்தில் நாடகங்கள் சுதந்திரப் போராட்ட விஷயத்தைத் தழுவியவையாக இருந்தன. கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணன், கிந்தனார் சரித்திரம் இயற்றினார். பின்வந்த திராவிடஇயக்கத்தினர் நாடகங்களின் பொருளைப் பெரிதும் சமூகவயப்பட்டதாக மாற்றினர்.
சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே நீதிக்கட்சி தோன்றியது, தொடர்ந்து திராவிட இயக்கமும் வளர்ச்சி பெற்றது. இவற்றின் விளைவாக ஏற்பட்ட தமிழ்இயக்கங்களில், தமிழிசை இயக்கம், தூயதமிழ் இயக்கம், பகுத்தறிவு இயக்கம் அல்லது சுயமரியாதை இயக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை முன்னோடிகளில் முதல்வர். அவர் கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலைப் படைத்தார். ஆபிரகாம் பண்டிதர் காலம் முதல் 1950 வரை தமிழிசை பற்றிய உணர்வு மிகுதியாக வெளிப்பட்டது. விபுலானந்தரும் யாழ்நூல் இயற்றினார். தமிழ்வழிக் கல்வியும் தமிழ்க் கலைச் சொற்களும் தேவை என்ற ஞானம் தோன்றியது. இவை யாவும் சேர்ந்து தமிழ் இயக்கம் என்ற ஒன்றை ஏற்படுத்தின என்று கொள்ளலாம். தமிழிசைச் சங்கம் இவற்றின் முக்கியச் சாதனைகளில் ஒன்று.
தூயதமிழ் இயக்கமும் பகுத்தறிவு இயக்கமும் சேர்ந்து ஒரு கவிஞர் பரம்பரை யைத் தமிழில் உருவாக்கியது. பாரதிதாசன் இதன் முன்னோடியாவார். தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற உணர்ச்சிமயமான பார்வையை முன் வைத்தவர் பாரதிதாசன். அவரைப் பின்பற்றி வாணிதாசன், முடியரசன் போன்றோர் எழுதினர். இம்மரபு பொன்னடியான் வரை நீடித்துவந்தது. புலவர் குழந்தை இராவண காவியம் எழுதினார். தூயதமிழ் இயக்கத்தின் முன்னோடியாகக் கருதத் தக்கவர் பரிதிமாற் கலைஞர். பிறகு மறைமலை அடிகளால் வளர்ந்த இவ்வியக்கம், பெருஞ்சித்திரனார் போன்ற கவிஞர்கள் வரை தொடர்ந்தது.
தமிழ் இலக்கியத்தில் மார்க்சியத்தின் தாக்கம் விரிவானது. கவிதை, கட்டுரைகள், நாவல், சிறுகதை, நாடகம், விமரிசனம் எனப் பல்வேறு தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது மார்க்சிய இயக்கம். தமிழில் மார்க்சிய இயக்கத்தின் தாக்கம் பற்றிப் பல நூல்கள் எழுத இடமுண்டு.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு கலை/இலக்கிய இயக்கங்களும் தத்துவக் கொள்கைகளும் தமிழ் இலக்கியப் பரப்பில் புகுந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. சான்றாக, ஃப்ராய்டியம், நவமார்க்சியம், இருத்தலியம், அமைப்பியம், பின்னமைப்பியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், பிற்காலனியம் போன்ற மேற்கத்தியத் தத்துவ, இலக்கியக் கொள்கைகள் தமிழில் இடம்பெற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவையன்றி வேறுபல அழகியல்/மெய்யியல் கொள்கைகளும் புகுந்துள்ளன. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து மாந்திரிக யதார்த்தம் என்ற சித்திரிப்பு முறை புகுந்துள்ளது. இம்மாற்றங்களின் காரணமாக, ஒரு புதிய இலக்கிய விமரிசன மரபும் தமிழில் உருவாகத் தொடங்கியுள்ளது.
இன்று தமிழ் இலக்கியப் பரப்பு ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. எத்தனை எத்தனையோ கொள்கைகள் இதில் தாக்கம் செலுத்துகின்றன. மேற்கின் அல்லது அயல்நாடுகளின் கொள்கைகளை நமக்கென ஏற்பதில் நாம் மிக எச்சரிக்கையாக விவேகத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டி யுள்ளது.


நவீனத்துவம்-சுருக்கம்

நவீனத்துவம் (மாடர்னிசம்)
மேற்கத்திய உலகில் முதல் உலகப் போருக்கு முன் தொடங்கி வளர்ச்சி பெற்ற வணிகப்போட்டிகள், அவை நாடுகளுக்கிடையில் உருவாக்கிய முரண்பாடுகள், பொருள்மயமாக்கப்பட்ட வாழ்நிலை போன்றவை நவீனத் தன்மை என்று வரையறுக்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்தம், அணு குண்டு போன்ற பேரழிவுகள் உண்டாக்கிய அதிர்ச்சிகள், தொடர்புத் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இந்தியப் பிரக்ஞையிலும் பேரதிர்வுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பரவியே இருந்தன. நவீனத்தன்மையை வெளிப்படுத்தக் கலைகள் உருவாக்கிக் கொண்ட வழிமுறைதான் நவீனத்துவம்.
ஒரு கருவியைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை மனித மனம் உணரும்போதே இன்னொருபுறம் அதன் போதாமைகளையும் உணர்ந்து கொள்கிறது. இந்தப் போதாமையுணர்வு புதிய புதிய கருவிகளைக் கண்டு பிடிக்கச் சொல்லி மனிதனைத் தூண்டுகிறது. புத்தம் புதிதாகக் கருவியை மாற்றியமைக்கச் சந்தர்ப்பம் இல்லாவிட்டால் புதிய பயன்பாடுகளுக்கெனப் பழைய கருவியை வடிவமைக்க முயலுகிறது. இதுபோல மொழியைப் புதிய பரிமாணங்களுக்கு விரிவாக்க முயலுகின்றபோது மொழி உடன்பட மறுக்கிறது. கடைசியில் மொழியைப் பகிர்ந்து கொள்வதே பெரிய பிரச்சினை ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட மொழிச்சூழல்தான் நவீனத்துவத்தைக் கட்டமைக் கிறது.
இந்தியாவின் மொழிகளிலும் நவீனத்துவம் பரவவே செய்தது. ஒரு பெரிய இயக்கமாக அல்ல-திரும்பத் திரும்ப அந்த எழுத்தாளர்களே சொன்னது போலச் சோதனை முயற்சிகளாக-சில எழுத்தாளர்கள் மட்டுமே கொண்ட ஒரு விசித்திர, தனித்த மனப்பான்மையாகத் தோன்றியது. எலியட்டையும் ஜாய்ஸையும் படித்திருந்த புதுமைப்பித்தன் போன்ற அக்கால எழுத்தாளர் களுக்குத் தாங்களும் புதிய வெளிப்பாட்டு முறைகளைக் கையாண்டு பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததில் வியப்பில்லை.
தமிழில் மணிக்கொடி இதழ்க் காலம் வரை மொழி ஒரு பெரிய பிரச்சினையாக உணரப்பட்டதில்லை. “உள்ளத்திலுள்ளது கவிதை” என்றும் அதனைத் தெளிவுறவே மொழிந்திடுவதில் எந்தத் தடையுமில்லை என்றும் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்றும் படைப்பாளிகள் நம்பிவந்தனர். இதற்கு மாறாகச் சொல்லவந்ததைச் சொல்லுவதற்குப் பழைய வழிமுறைகளின் போதாமையை உணர்ந்து வேறுவித வெளிப்பாடு முறைகளைத் தேடிப் புதிய பாதைகளைப் போட்ட புதுமைப்பித்தனிலிருந்துதான் நவீனத்துவம் தமிழில் கால்கொள்கிறது. கவிதை யிலும் புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி முதல் தான் நவீனத்துவம் மலர்ந்தது.
ஆங்கில இலக்கியத்தில் 1910-30கள் நவீனத்துவ காலம் என்று கூறலாம். அதாவது டி. எஸ். எலியட், வர்ஜீனியா வுல்ஃப், எஸ்ரா பவுண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி. எச். லாரன்ஸ் போன்ற மிகப் பெரும் எழுத்தாளர்கள் சாதனை புரிந்த காலம் நவீனத்துவக் காலம் என்று ஆங்கில இலக்கியத்தில் வரையறுக்க முடியும்.
யதர்த்தவாதத்தை எதிர்த்து எழுந்த இயக்கம்தான் நவீனத்துவம் என்ற கருத்தும் உண்டு. பதிவு நவிற்சிக் கலை, கியூபிசம், வார்ட்டிசிசம், ஃப்யூச்சரிசம், வெளிப்பாட்டியம், டாடாயிசம், சர்ரியலிசம் போன்ற கலை இயக்கங்கள் யாவுமே யதார்த்தவாதத்தை எதிர்த்து எழுந்தவைதான். இவற்றின் தொகுப்பாக நவீனத்துவத்தைக் காணஇயலும். மார்க்சியமும் யதார்த்தவாதமும் கேள்விக்குறியாகின்ற நிலையில்தான் நவீனத்துவம் தோன்றுகிறது என்பது விமரிசகர்கள் பலரின் கருத்து. ஆனால் தமிழ்ச்சூழலில் நவீனத்துவம் யதார்த்தவாதத்தை மறுக்கவில்லை என்கிறார் விமரிசகர் ஞானி.
நினைத்ததைச் சொல்லவேண்டும் என்ற வெறிக்கும் சொல்ல முடியவில் லையே என்ற ஆதங்கத்திற்கும் இடையிலுள்ள இடை வெளியில் தோன்றும் போராட்டம்தான் நவீனத்துவத்தின் தோற்றக்களம். இந்தப் போராட்டம் பாரதிக்கு ஓரளவு இருந்தது. பின்வந்த பாரதிதாசனுக்கோ பாரதிதாசன் பரம்பரைக்கோ மார்க்சியம் சார்ந்த எழுத்தாளர்களுக்கோ ஜனரஞ்சகப் படைப்பு உற்பத்தியாளர்களுக்கோ அணுவளவு கூடக் கிடையாது.
நவீனத்துவத்திற்கு மாறான கலைஞர்கள், வாழ்க்கையில் உண்மை என்று ஒன்று உண்டு என்றும் அதைச் சொல்வதே அல்லது சொல்ல முயல்வதே கலை என்றும் நினைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை சுயம் என்பது பிளவுபடாதது. முழுமையானது. ஒருமையுடையது. கல்கி, அகிலன், மு. வ., நா. பார்த்தசாரதி எனப் பிரபலமான எழுத்தாளர்களுக்கும் தமிழ் வாசகர் களுக்கும் ஒரு பொதுவான தளமும் இலட்சியங்களும் இருந்தன. பொதுவாகப் பிரபல எழுத்தாளர்கள் தங்களுடைய வாசகர்களுக்கும் தங்களுக்கும் பகிர்ந்து கொள்ளக்கூடிய யதார்த்தமும் மெய்ம்மைகளும் இருப்பதாக திடமாக நம்பினார்கள். அவர்களுக்கு இலக்கியத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் இருந்தன, தேசத்திற்கு விடுதலை வாங்கித் தருவது, மனித இனத்தை மேம்படுத்துவது, எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இப்படி இலக்கியத்திற்குக் கடமைகளும் இருந்தன. நவீனத்துவத்திற்கு இதுபோன்ற பிரமைகள் இல்லை.
அவ்வாறாயின் நவீனத்துவத்திற்கு உகந்த மனப்பான்மை என்ன என்ற கேள்வி எழலாம். உளவியல் ஆழ்தன்மை என்று இதனைச் சுருக்கமாகச் சொல்லலாம். பிரபல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களை அல்லது இரசிகர்களைப் படைப்போடு ஒன்றச் செய்வதையே பெருமையாகக் கருதினார்கள். வாசகர்களை ஒன்றச் செய்யாமல் அவர்களைத் தொலைவி லேயே நிற்கச் செய்யவேண்டும், “இது படைப்புதானே தவிர வாழ்க்கையல்ல, யதார்த்தமல்ல” என்று அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது நவீனத்துவம். பிரெஹ்ட் இதனை ‘அந்நியமாதல் விளைவு’ என்றார். கலைஞர்களும் தாங்கள் படைக்கும் படைப்போடு, பாத்திரங்களோடு ஒன்றிப் படைக்கிறேன் என்று சொல்லாமல், அழகியல் தொலைவைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த இயல்புகளையெல்லாம் புதுமைப்பித்தன் படைப்புகளில் காணலாம்.
நவீனத்துவப் படைப்பாளர்கள் முழுமை என்பதிலும் நிலைத்த உண்மை என்பதிலும் நம்பிக்கை அற்றவர்கள். தங்கள் காலத்தில் தாங்கள் கண்ட உள்ளீடற்ற மனிதர்களையும் பிளவுபட்ட, சிதைந்த ஆளுமைகளையும்தான் அவர்களால் படைக்கமுடிந்தது.
இந்த மனப்பான்மைகள் சமூகத்தைச் சீர்திருத்தி அமைக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு எதிரானவையாக அமைந்தன. எனவே நவீனத்துவ இலக்கியங்களை மார்க்சியவாதிகள் நசிவு இலக்கியம், பாலியல் பிறழ்வு இலக்கியம், தனிமனிதச் சார்புடைய இலக்கியம், கலை கலைக்காகவே என்னும் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் என்றெல்லாம் குறைகூறினார்கள்.
போதிப்பதும் பிரச்சாரம் செய்வதுமே கலை என்ற மனப்பான்மை நமக்கு மிக நெருக்கமான ஒன்று. அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நு£ற்பயனே என்று இலக்கியத்தைக் கருவியாக மட்டுமே கண்ட பாரம்பரியம் நம்முடையது. தமிழில் முதல் நாவலை உருவாக்கிய வேதநாயகம் பிள்ளை, நவீன கதைகள் எவ்வாறு நீதி போதிப்பனவாக அமையவேண்டும் என்று பெரியதொரு இலக்கணத்தையே தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.
ஜான் ரஸ்கின் போன்றவர்களும் கலை அறத்தை போதிப்பதாக இருக்க வேண்டும் என்றே கருதினர். ஆனால் ஆஸ்கார் வைல்டு போன்ற எழுத்தாளர்கள், கலை எதனையும் போதிக்கவேண்டியதில்லை, அது கலையாக இருந்தாலே போதுமானது என்றனர். அதாவது அது அழகியல் இன்பம் பயப்பதாக அமைந்து விட்டால் போதுமானது. இதைத்தான் கலை கலைக்காகவே என்றனர். அழகியல் இயக்கம் என்றே அவர்கள் கொள்கை அறியப்பட்டது. கலை தன்னளவில் முழுமை பெற்றதாக இருககவேண்டுமே தவிர, இன்னொன்றின் கைப்பாவையாக, எடுபிடியாக இருக்கக் கூடாது என்பதே முக்கியம். இந்த அம்சங்கள் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு எரிச்சல் தருபவையாக இருந்தன.
வானம்பாடிகளின் ரொமாண்டிக் தன்மை வாய்ந்த பிரகடனக் கவிதைகளும் அவற்றிற்கு எதிர்வினையாக பிரமிளின் கவிதைகளும் இங்கே குறிப்பிடத்தக்கவை. எழுத்து பத்திரிகை, அதைத் தொடர்ந்து வந்த நடை, பிரக்ஞை, கசடதபற, தொடங்கித் தொண்ணூறுகள் இறுதிவரை கலை, கலைக்காகவா, மக்களுக்காகவா என்ற விவாதம் திரும்பத்திரும்ப நடை பெற்றுவந்தது.
தமிழில் நவீனத்துவம் சார்ந்த முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன் பலவிதமான சிறுகதைகளை எழுதிப்பார்த்தவர். அவர் எழுத்துகள் பலதன்மைகளை ஒரேசமயத்தில் உள்ளடக்கியிருக்கின்றன. அவர் எழுத்துகளில் ஒரு மாந்திரீக/தொன்மக் கவிதையியல் ஊடுருவி யிருக்கிறது. அவருடைய எழுத்துப் பண்புகளில் ஒவ்வொரு பண்பை ஏற்றுக் கொண்டுதான் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வண்ணநிலவன் போன்ற பல படைப்பாளிகள் பின்னனால் உருவாக முடிந்தது. இன்று பின்நவீனத்துவப் படைப்புமுறை சார்ந்து பேசப்படும் மேனிலை நாவல், தொடர்ச்சியறு எழுத்து, மாந்திரீக யதார்த்தம் முதலிய கூறுகளையும் புதுமைப்பித்தன் எழுத்துகளில் காணலாம். உளளத்தின் சிக்கலான தன்மைகளை வெளிப்படுத்த முயன்றதன் காரணமாக கு. ப. ரா.வின் எழுத்துகளில் நவீனத்துவம் இடம் பெற்றது. ஓர் அயலான் போலத் தமிழ்மொழியைக் கையாள முயன்றதனால் மௌனிக்கு நவீனத்துவம் கைவந்தது.
மணிக்கொடிக்காலத்தின் பார்வையாளர்களாக இருந்து சற்றே பின்னிட்டு எழுதத் தொடங்கிய லா.ச.ரா., எம்.வி. வெங்கட்ராம் இருவரது எழுத்துகளிலும் நவீனத்துவம் உண்டு. எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலில் நிகழும் விவாதங்களும் எதிர்விவாதங்களும் கூடிய மனப்போராட்டம் நவீனத்துவப் படைப்புகளுக்கே உரியது.
தமிழ் நவீனத்துவப் படைப்புகள் புரியவில்லை என்றும் ஜனரஞ்சக எழுத்தாளர்கள் கூறினர். “யாருக்காக எழுதுகிறார்கள் இவர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்கள். இதன் விளைவாக வாசகர்களை முன்னிருத்தி ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமா, அன்றி வாசகனைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னிச்சையாக எழுதவேண்டுமா என்ற விவாதம் எழுந்தது. வாசக ரசனைக்குத் தீனிபோடுவது மட்டுமே இலக்கியமல்ல, வாசகர்களைக் கருத்தில் கொள்ளாமல் எழுதினால்தான் நல்ல இலக்கியங்கள் உருவாகும் என்று க. நா. சு., சுந்தர ராமசாமி போன்றோர் கூறினர். அமைப்பியத்தின் அறிமுகம் இந்த விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
இதைத் தொடர்ந்து உள்வட்டக் கலைதான் சிறந்தது, வெளிவட்டக்கலை சிறந்ததல்ல என்ற கருத்து எழுந்தது. இதற்கு மார்க்சியத் தளங்களிலிருந்து எதிர்ப்புக்கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இலக்கிய முயற்சிகள் பலவகை. அவற்றிற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இலக்கிய மனப்பான்மைகளும், இலக்கியக் கொள்கைகளும் பலவகை. ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை மட்டும் பாராட்டி, இலக்கியத்தை வளர்ப்பது உள்வட்டமே என்ற முடிவுக்கு வருவது தவறு என்று இதற்கு விடையளிக்கப்பட்டது. அக்காலத்தில் நவீனத்துவ முயற்சிகள் செய்தவர்களுக்கு இக்கருத்துகள் மிக உற்சாகம் தருவனவாக இருந்தன.
மணிக்கொடிக் காலத்திற்குப் பிறகு நவீனத்துவ எழுத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையின் தோற்றம், நவீனத்துவ வாதிகளுக்கும் சோதனை முயற்சியாளர்களுக்கும் ஒரு நல்ல களம் அமைத்துத் தந்தது. சுந்தர ராமசாமியின் ‘உன் கை நகம்’ போன்ற கவிதைகள் நவீனத்துவக் கவிதைக்கு நல்ல எடுத்துக்காட்டுகள். பிருமீள், சி. மணி போன்றோரும் எழுத்து இதழில் எழுதினர். அவை பெரும்பாலும் நவீனத்துவ தொனி கொண்டிருந்தன. பிறகு ‘நடை’ இதழ் முதலாக ஞானக்கூத்தன் எழுதலானார். பிறகு கசடதபற, ஞானரதம், பிரக்ஞை என்று நவீனத்துவ முயற்சிகளுக்கு ஆதரவளித்த இதழ்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தங்களை நவீனத்துவவாதிகளாக முதலில் வெளிக்காட்டிக் கொண்டவர்கள், பின்னர் அதே பாணி எழுத்தைப் பின்பற்றினார்கள் என்று கூற முடியாது. உதாரணமாக, பசுவய்யாவின் உபயம், சவால் போன்ற கவிதைகள் நவீனத்துவ பாணியைச் சேர்ந்தவை அல்ல. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைகள் பல அங்கதம், நையாண்டி என்னும் வகைகளில் அடங்குபவை.
நவீனத்துவம் என்பது ஒரே பாணி அல்ல. பெரும்பாலும் தமிழ்க் கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை ரொமாண்டிக் தன்மை கலந்த நவீனத்துவ எழுத்துகள் என்றே மதிப்பிட முடியும். அபி, பசுவய்யா போன்றவர்களின் கவிதைகளும் பிருமீளின் கவிதைகளும் பொதுவாக இத்தன்மையைப் பலவேறு அளவுகளில் பெற்றிருந்தன. சா. கந்தசாமியின் சாயாவனம் நாவலும் இத்தன்மை உடையது. இவை மனித ஆளுமையின் சிதைவைச் சொல்லக்கூடியவை அல்ல. மேற்கத்திய நவீனத்துவத்தின் ஒரு முக்கியப் போக்கு மனித ஆளுமையின் சிதைவைச் சொல்லுதல். இத்தன்மையை ஓரளவு சித்திரித்தவர்கள் என்று ஜி. நாகராஜனையும் நகுலனையும் குறிப்பிட முடியும்.
சி. சு. செல்லப்பா வெளியிட்ட புதுக்குரல்கள் கவிதைத் தொகுப்பும் நகுலனின் குருக்ஷேத்திரம் தொகுப்பும் நவீனத்துவ இலக்கியப் போக்கிற்கு உந்துதல் அளிப்பவையாக இருந்தன. சிறுகதையில் நவீனத்துவப் பாணியைக் கையாளப் பலரால் முடிந்தது. குருக்ஷேத்திரம் தொகுப்பில் சிறுகதை எழுதிய சுஜாதாவின் சில சிறுகதைகள் நவீனத்துவப் பாணியில் அமைந்தவை. ஜி. நாகராஜன், நகுலன் எழுதிய சிறுகதைகள் சிறப்பானவை. ந. முத்துசாமியின் சிறுகதைகள் பல நவீனத்துவமானவை. நாற்காலிக்காரர்கள், காலம் காலமாகி போன்ற நாடகங்களும் நவீனத்துவத் தன்மை பெற்றவை. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதினாலும் ஜெயகாந்தனின் பல படைப்புகளில் நவீனத்துவம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. ‘பாரிஸுக்குப் போ’ நாவல் முழுதுமே நவீனத்துவத்திற்கு மாறான, மரபான கலைப்போக்குகளையும் நவீனத்துவப் போக்கையும் ஒப்பிட்டு விவாதிக்கும் ஒரு விவாதக்களம்தான்.
சா. கந்தசாமியின் மூன்று நாவல்கள்-அவன் ஆனது, சூரிய வம்சம், தொலைந்து போனவர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சற்றும் மிகையான உணர்ச்சி வெளிப்பாடற்ற நவீனத்துவப் பண்பு அசோகமித்திரனின் பல நாவல்களிலும் சிறுகதைகளிலும் காணக் கிடக்கிறது. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் ஒரு நவீனத்துவப் பாணி நாவலே என்றாலும், எழுததமைப்பில் அது வெளிப்படுகிறதே ஒழிய உள்ளடக்கத்தில் வெளிப்பட வில்லை. அம்பை, சில்வியா ஆகியோரின் சில சிறுகதைகள் நவீனத்துவப் பாணியில் அமைந்தவை.
பிரம்மராஜன் கவிதைகள் யாவுமே நவீனத்துவப் பாணிக் கவிதைகள். ஆனால் அவரது பெரும்பாலான கவிதைகள் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்புகள் போலவோ கம்ப்யூட்டர் கவிதைகள் போலவோ அமைந்து சலிப்பூட்டுகின்றன. ‘அறிந்த நிரந்தரம்’ தொகுதியைவிடப் பின்வந்த தொகுதிகளிலுள்ள பல கவிதைகள் நன்றாக உள்ளன எனத் தோன்றுகிறது. ‘அறிந்த நிரந்தரம்’ கவிதை, பலவித உருவகங்களைச் சிறப்பாக உருக்கி இணைத்துப படிமப்படுத்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தேவதச்சன் ஆனந்த் போன்ற பலரை நவீனத்துவக் கவிஞர்களாகக் குறிப்பிட முடியும்.
மார்க்சியவாதிகள் இத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்க இயலும். அவர்கள் பாராட்டிப் பேசும் மயகாவ்ஸ்கி, பாப்லோ நெரூடா இருவருமே நவீனத்துவவாதிகள்தான். கார்க்கியின் தாய் நாவலிலேயே நவீனத்துவக் கூறுகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ் நவீனத்துவப் படைப்புகளை பிறழ்வு இலக்கியம் என்று ஒதுக்கிவிட்டதனால் சோதனை முயற்சிகள் யாவும் இங்கு ஒரு குறிப்பிட்ட குழுவினரின் அல்லது சாதியின்ரின் சாதனை என்று சொல்லும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டன. மார்க்சியர்கள் அவ்வப்போது மொழி பெயர்த்து வெளியிட்ட பன்னாட்டுக் கவிதைகள் அநேகமாக நவீனத்துவப் பண்பு கொண்டவையாகவே இருந்தன. இருப்பினும் அவற்றை அவர்கள் சிரத்தையோடு உள்வாங்கிக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் பிரக்ஞை பத்திரிகையின் முயற்சிகள் முன்னோடியானவை. இலங்கையிலிருநது வெளிவந்த அலை பத்திரிகையும் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது. நாடகத்துறையில் ஆறுமுகத்தின் கருஞ்சுழி போன்ற நாடகங்களைக் குறிப்பிடலாம்.
உலக நவீனத்துவ இயக்கத்தின் ஒரு பகுதியான தமிழ் நவீனத்துவப் படைப்பாளிகளின் சில சாதனைகளை இங்கே குறிப்பிடலாம்.
நவீனத்துவ எழுத்தாளர்கள்தான் யதார்த்தவாதத்தின் சிக்கல்களை முதன் முதலாக எதிர்கொண்டவர்கள். மொழி என்னும் ஊடகமே இந்தச் சிக்கலான தன்மைகளின் ஒரு பகுதியாகவேனும் அமையக்கூடும் என்று உணர்த்திய வர்கள். இந்த உணர்த்தல்தான் அமைப்பியம், பின்நவீனத்துவம் போன்ற மொழிமையப்பட்ட இயக்கங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தினை உருவாக்கியது.
நவீனத்துவக் கலை என்பது வடிவத்திலும் மொழியமைப்பிலும் எதிர்பாராத அல்லது முன்னுதாரணமற்ற நவீனமான சூழல்களைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவது. இவ்வகையில் இன்றைய சூழல்களால் ஏற்படும் ஆளுமைச் சிதைவையும் உளவியல் சிக்கல்களையும் ஓரளவுக்கேனும் நேர்த்தியாக எடுத்துரைத்த பாங்கு நவீனத்துவக் கலைஞர்களுக்குரியது. மேலும் நவீனத்துவக் கலை உணர்ச்சியை மட்டாக வெளிப்படுத்துவதில் தனித்த பாங்கினை உடையது. மிகையுணர்ச்சியை அறவே வெறுப்பது. இத்தகைய படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்தவர்கள் நவீனத்துவப் படைப்பாளர்களே.
படைப்புகளில் காலத்தின் இயக்கம் யதார்த்தத் தன்மையில் அமைவதில்லை. காலம் மிக விசித்திரமானது. நம்மால் உள்வாங்கிக் கொள்ள இயலாததாகப் பல சந்தர்ப்பங்களில் இயங்கக்கூடியது என்பதை நவீனத்துவவாதிகள் காட்டியிருக்கிறார்கள்.
நவீனத்துவக் கலை என்பது ஒருங்கமைத்தல் இன்மை அன்று. மாறாக அகவடிவம் எனப்படும் உள்ளிருந்து எழும் ஒருங்கமைப்பைக் கொண்டது என்ற தெளிவை அளித்திருக்கிறார்கள்.
கலையின் பிரச்சினை பற்றிய பிரக்ஞை ஓர் இடைவிடாத உள்ளுணர்வு என்பதை நவீனத்துவத்தின் குறிப்பிடவேண்டிய சிறப்பியல்பாக உணரச் செய்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் நல்ல சாதனைகள். பெரிதும் பாராட்டி முனனெடுத்துச் செல்ல வேண்டியவை. ஆனால் நவீனத்துவ இயக்கம் தமிழில் தான் பெறவேண்டிய சிறப்பான இடத்தைப் பெறவில்லை. இதற்கான அடிப்படைக் காரணங்கள் வருமாறு.
கலை அல்லது இலக்கியம் எதையேனும் போதித்ததே தீரவேண்டும் என்ற ஜனரஞ்சக மனப்பான்மை.
இந்த மனப்பான்மைக்குத் தீனிபோட்டு வளர்க்கக்கூடிய கல்வித் துறை யினரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி, வலைப்பின்னல் தளங்கள் போன்ற ஊடகங்களும்.
இந்த இயக்கத்தில் ஈடுபட்ட எழுத்தாளர்கள் அனைவருமே பெருமளவு தங்களுக்கிருந்த ஆங்கிலப் பரிச்சயத்தால் ஈடுபட்டவர்கள். இவர்களின் ஆங்கில மனப்பான்மையைத் தமிழ்வழி மட்டுமே இலக்கியத்தில் ஈடுபட்ட வர்களாலும் தமிழ் வாசகர்களாலும் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.
மேற்கு நாடுகளில் ஏற்பட்டிருப்பது போன்ற குடும்பச் சிதைவு, ஆளுமைச் சிதைவு, உளவியல் சிக்கல்கள் போன்றவை இன்னும் முற்று முழுதாகத் தமிழகத்தில் ஏற்படவில்லை. இதற்கு நமது பாரம்பரியக் குடும்ப அமைப்பு முக்கியக் காரணம். மேலும் இங்குள்ள முக்கியப் பிரச்சினைகளான வறுமை, ஊழல் போன்றவை சமூகம் சார்ந்தவை.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒடுக்கப்பட்டவர்கள், போலி ஒழுக்கங்களைப் பேணும் மத்தியதர வர்க்கத்தினர், வசதி படைத்தவர்கள் என நமது சமூகம் பிளவுபட்டுக் கிடக்கின்ற தன்மை, அதன் தேவைகள்.
என்றாலும், காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளாகவே உலகமயமாக்கலின் விளைவாகவும் கேபிள் தொலைக்காட்சி, இண்டர்நெட் போன்றவற்றாலும் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இலக்கிய இயக்கங்களும் பாணிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எழுத்தை வாசிக்கும் கலாச்சாரம் மாறி, பிம்பங்களைக் காணும், வாசிக்கும் பார்வைக் கலாச்சாரம் ஒன்று வேகமாக உருவாகிவிட்டது.


சொற்கள்

ஜனநாயகத்தில் ஈடுபடுவதற்கு நிலவுடைமைச் சமூக மதிப்புகளிலிருந்து விடுபடும் மனப்பான்மை வேண்டும். பிரிட்டிஷ் கால சிற்றரசன் அல்லது ஜமீன்தார்போல லக்ஷ ரூபாய் கோட் அணிந்து மினுக்குபவனுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய அறிவு பூச்சியம் என்பது வெளிப்படை.
மக்களும் தங்கள் சொற்பயன்பாட்டில்கூட பழைய மதிப்புகளை விட வேண்டும். உதாரணமாக, நடுவர், நீதிபதி என்பன சரியான சொற்கள். அதை நீதியரசர் என்பது நிலக்கிழார்கால மனப்பான்மை. நீதியரசர் என்றால், அப்புறம் நீதிஅந்தப்புரம் எங்கே, நீதிதளபதி, நீதிக்காலாட்படை எங்கே என்று கேட்கத் தோன்றுகிறது.
ஜட்ஜ் என்பதற்கு நடுவர் என்று பொருள் (நமது பட்டிமன்றங்கள் இந்தச் சொல்லையும் சின்னவீடு என்ற சொல்போல மலினமாக்கிவிட்டன.) மாஜிஸ்திரேட் என்றால் குற்றநடுவர். ஜஸ்டிஸ் என்றால் நீதிபதி, நியாயாதிபதி.


இரண்டு அதிசயங்கள்!

ஸ்விட்சர்லாந்தில் (நமது நாட்டில் அல்ல!) நிகழ்ந்த இரண்டு அதிசயங்கள்!

முதல் அதிசயம்:

சில நாட்களுக்கு முன்னால் ஸ்விஸ் அரசாங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

1. ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் அடிப்படை ஊதியமாக 2500 பிராங்க் (ரூ.1,75,000) வழங்கப்படும்.

2. ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை ஊதியமாக 625 பிராங்க் (ரூ.45,000 ) வழங்கப்படும்.

ஸ்விஸ் நாட்டில் ஐந்துவருடமாக இருக்கும் வெளிநாட்டவர்க்கும் இந்தச் சட்டம் செல்லும்.

இதற்கு நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
சும்மா இருந்தாலே போதும்.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில், ஒரு கணவன், மனைவி, குழந்தை இருந்தால், 5625 பிராங்க் (ரூ.3,95,000) ஊதியமாகக் கிடைக்கும்.

இரண்டாம் அதிசயம்:

இந்தச் சட்டத்தை அமல்படுத்த ஒரு பொது வாக்களிப்பை அந்த அரசாங்கம் நடத்தியது.

எழுபத்தெட்டு சதவீதம் பேர், இந்தச் சட்டம் வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.
அவர்கள் கூறிய காரணங்கள்.

1. இச்சட்டம் எங்களையும் எங்கள் சந்ததியினரையும் சோம்பேறிகளாக மாற்றும்.
2. இம்மாதிரி இலவச ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.
3. இதனால் அயல்நாட்டவர்கள் நமது நாட்டுக்குள் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் நுழைவார்கள்.

“ஆகவே இலவச ஊதியம் வேண்டாம்.”

ஆயிரம் ரூபாய் இலவசத்துக்காகத் தங்கள் வாக்குரிமையை விற்கும்  ‘முன்தோன்றி மூத்த குடியினர்’ கற்க வேண்டிய முதல் பாடம் இது.

நன்றி-நண்பர் மனோகர் ராஜன்


மொழி மாற்றங்கள்

தமிழில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் நான் அகர ஓரினமாதல் நிகழ்வதைப் பார்க்கிறேன். சாதாரணமாகத் தமிழில் உயிரெழுத்துகள் ஓரினமாக முடியாது. உடம்படுமெய் இடையில் வரும். (சமஸ்கிருதத்தில்தான் இம்மாதிரி ஓரினமாதல் உண்டு. அ + அ என்றால் ஆகாரமாக்கிவிடுவார்கள். ராம + அயந = ராமாயந என்பதுபோல. இம்மாதிரி ஓரினமாக்கலைத் தெலுங்கும் கன்னடமும் ஏற்றுக் கொண்டுவிட்டன.)

எனக்கு நினைவுவரும் சொற்களைச் சொல்கிறேன். ஊடகங்களில் இந்தாண்டு, அந்தாண்டு என்பதுபோன்ற சொற்களைக் கையாள்கிறார்கள். இந்த + ஆண்டு என்றால் தமிழ்முறைப்படி இந்தவாண்டு. (இடையில் வ் உடம்படுமெய்). இந்த-வாண்டு எனப் பொருள்படுகிறதே என்றோ, எதனாலோ இந்தாண்டு என்றாகிவிட்டது. அதேபோலப் பலகடைகளிலும் காணும் சொல் பாதணி. பாத + அணி, பாதவணி ஆகவேண்டும். காலணி என்ற சொல்லோடு ஒப்புமை கருதியோ என்னவோ, அது பாதணி ஆகிவிட்டது. (பாதம் என்பது வடசொல்லாக இருப்பினும்). காலணி, காதணி என்பவை சரியான சேர்க்கைகள், ஒற்று அல்லது குற்றியலுகரம் வருவதனால். பாதணி அப்படி அல்ல. இம்மாதிரித் தமிழில் புதிதாக வந்துள்ளவைகளில் முக்கியமாக மொழியியலாளர்கள்தான் கவனம் செலுத்தவேண்டும்.


என்ன செய்யலாம்?

என் மனத்தில ஏறத்தாழ 2011 முதல் அரித்துவரும் விஷயம் இது. அப்போது நான் சென்னை-கிண்டியில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தேன். காலையில் சுமார் ஏழுஏழரை மணிபோல ஏறத்தாழ ஆயிரம் பேர் பத்துப்பேர் இருபது பேராகச் செல்வார்கள். கையில் சாப்பாட்டு டப்பா. அநேகமாகக் கருப்பு உடை. அழுக்கு. வேலைக்குப் போகிறார்கள் என்பது வெளிப்படை. எந்தத் தொழிலகத்தில் அல்லது கட்டுமானப் பணியில் என்று தெரியாது. தமிழ் தெரியாது. சிலபேர் நல்ல இந்தி, பலபேர் உடைந்த இந்தி பேசுவார்கள். உத்தராஞ்சல் முதல் ஒரிசா, சத்தீஸ்கட் வரை பல மாநிலங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கும்.

காலப்போக்கில் இவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டுவருகிறது. இப்போது மேடவாக்கம் முதல்  இன்னும் தெற்குப்பகுதி வரை இவர்கள் நிறையப்பேர் வேலைசெய்வதைக் காணமுடிகிறது.   எனக்குத் தெரிந்த ஒரு (தமிழரின்) பெரிய கட்டுமானக் குழுமத்தில் தமிழன் ஒருவன்கூட வேலையில் இல்லை. இம்மாதிரி வேற்று மாநிலத்தவர்கள் தான்.

பெரும்பாலோர் தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச்செல்வதும் இல்லை. ஆங்காங்குள்ள ஏழ்மையான, சேரிப் பகுதிகளில் இணைந்து கொள்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இவர்கள் நல்ல தமிழ்பேசக்கூடும், கவுன்சிலர்கூட ஆகலாம், அதற்கடுத்த தலைமுறையில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி.யாகக்கூட ஆகலாம்.

ஏற்கெனவே தமிழகத்தில் தெலுங்கர்களும், கன்னடர்களும், அடுத்த நிலையில் அடகுக்கடை வைத்திருக்கும் சேட்டு முதலான வடநாட்டவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள் என்ற பிரச்சினை இருக்கிறது. வடக்குச் சென்னையில் சில பகுதிகளில், பல தெருக்களில் நடந்துபோகக்கூட எனக்கு பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு வேற்று மாநிலத்தவர் கள் நிரம்பி வழிகிறார்கள். தமிழகத்தில் தமிழன் ஆட்சி பல காலமாக இல்லை என்பது பிரச்சினையாகி உள்ளது.

இந்தக் கூலிக்காரர்கள் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது? இவர்களுக்கு நியாயமான கூலி, வாழ்க்கை வசதி கிடைக்கிறதா என்பதெல்லாம் சந்தேகம்தான். இன்னும் மாநிலத்தின் உள்பகுதிகளில் சென்று வேலை செய்பவர்களும் அதிகம். போனவருஷம் இராணிப்பேட்டை அருகில் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் மாண்ட பத்துப்பேர் இப்படிப்பட்டவர்களே. பெரிய கட்டுமானப் பணிகளில் இறப்பவர்களும் உண்டு.

தங்கள் மாநிலங்களில் இங்கு கிடைக்கும் வசதிகூட இல்லாததனால்தான் இங்கே வருகிறார்கள். பெரும்பாலோர் தலித்துகள் என்பதும் வெளிப்படை. நம் தொழிலாளர்கள், நமது சந்ததியினர் வாழ்க்கையைப் பறிக்கும் வந்தேறிகள் என்று இவர்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமுடியுமா? அல்லது எல்லாரும் இந்தியர்கள், பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா? இம்மாதிரி ஒரு மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள், வேற்றுமொழியினர் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதா? இதைச் சமாளிப்பது யார் கையில் இருக்கிறது?

எனக்குத் தெரிந்தவரை தமிழக அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை.

அண்மையில் அஞ்சல்துறையில் வேண்டுமென்றே பல வட இந்தியர்கள் தமிழில் அதிக மதிப்பெண் போட்டுச் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் பத்திரி கைகளில் வந்தது. எல்லாருக்கும் நம்பமுடியாத வகையில் 99, 98 என்று மார்க்குகள்.  ஆனால் உண்மையில் ஒருவனுக்கும் தமிழ் தெரியாது.

இந்தியர்கள் என்று இல்லை, தமிழகம் முழுவதும் நேபாளிகளும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். ஒரு குடியிருப்பு ஏற்பட்டால் சில நாட்களில் அங்கு ஒரு கூர்க்கா வந்து குடியேறிவிடுவான். தமிழ்கூடத் தெரியாது. “கியா சாப், குச் ருப்யே இஸ் பேட் கேலியே தேனா சாப்” என்று கையேந்துவான். ஆனால் அடுத்த தலைமுறையில் அவன் மகன் இட ஒதுக்கீட்டு வசதியோடு இங்கே கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பான். என் கல்லூரியில் பணிசெய்த கூர்க்காக்கள் தங்கள் பிள்ளைகளை வசதியாக எங்கள் கல்லூரியிலேயே படிக்க வைத்தார்கள்.

நான் யாரையும் குற்றம் கூறவில்லை, பழிக்கவில்லை. “தமிழர்கள், வட இந்தியாவுக்குப் போகாவிட்டாலும் வெளிநாட் டுக்குச் சென்று சம்பாதிக்க வில்லையா” என்று சிலர் கேட்பார்கள்.இது மோசமான ஒப்பீடு. முதலில் எண்ணிக்கைப் பிரச்சினை. வெளிநாடு செல்லும் தமிழர்கள் சில ஆயிரம் பேர் என்றால் இம்மாதிரி வருபவர்கள் எண்ணிக்கை பல லட்சம். அடுத்ததாக வெளிநாட்டுக்குச் செல்பவர்களால் அந்நாட்டுப் பணம் தமிழ்நாட்டுக்கு வருகிறது, இவர்களால் தமிழ்நாட்டுப் பணம் வடக்கிற்குச் செல்கிறது.

இதில் நம்மைப் போன்ற தமிழர்கள் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? சமூகவியலாளர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள்? நாம் என்ன தான் செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது? தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.


காப்பாற்றியது யார், எது?

ஒருவர் மிகுந்த கடனில் மூழ்கி என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தார். நாலுபக்கமும் கடன்காரர்கள் வருத்தினர். வீட்டில் தொலைபேசி இடைவிடாமல் அடித்துக் கடனை நினைவூட்டியவாறே இருந்தது. தற்கொலை செய்து கொள்ளலாம், இல்லையென்றால் திவால் என அறிவித்து ஓடிப்போகலாம் என்று முடிவு செய்தார். வெளியிலே செல்லும் வழியில் ஒரு பெஞ்ச். அதன்மீது உட்கார்ந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவர் ஒருவர், “என்ன ரொம்ப சோகமாக  இருக்கிறீர்களே” என்று அன்போடு கேட்டார். இவருக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது. தன் நிலைமையை விவரித்தார். “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றார் கிழவர். ஒரு செக்புத்தகத்தை எடுத்தார். ஏதோ எழுதிக் கையெழுத்துப் போட்டு, “இதை வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த ஆண்டு இதே நாளில் இதே  நேரத்தில் இங்கே வாருங்கள்” என்று சொல்லிப் போய் விட்டார்.

கடனாளி கையிலிருந்த செக்கைப் பார்த்தார். 10 லட்சம் ரூபாய் என்று எழுதி, டி. ராக்ஃபெல்லர் என்று கையெழுத்துப் போட்டிருந்தது. எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார். ‘இப்போது எளிதாக இந்தச் செக்கை மாற்றி என் கடனைத் தீர்த்து விட முடியுமே’ என்று நினைத்தார். ஆனால் செக்கை மாற்ற மனம் வரவில்லை. ‘நானே எப்படியாவது சமாளித்து விடுவேன், சமாளிக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது செக்’ என்று மனத்தைத் தேற்றிக் கொண்டார். தன் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு மிகுதியாக உழைக்கலானார்.  கொஞ்சம் கொஞ்சமாகக் கடன் அடைந்தது. ஏறத்தாழ பதினொரு மாதம் முடியும் நிலையில் எல்லாக் கடனும் தீர்ந்துவிட்டது.

ஓராண்டு கழித்து, அதே நாள், அதே நேரத்துக்கு அந்த இடத்துக்குப் போனார். செக் கொடுத்த முதியவரும் மிகச் சரியாக வந்து சேர்ந்தார். அவரிடம் கடன் தீர்ந்துவிட்டதைச் சொல்லி, செக்கைத் திரும்பத் தரப் போகும் நேரத்தில் ஒரு நர்ஸ் பெண்மணி ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டாள். இவரிடம் திரும்பிச் சொன்னாள்: “உங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்து விட்டாரா? பக்கத்தில்தான் பைத்தியக்கார ஆஸ்பத்திரி இருக்கிறது. அங்கிருந்து ஓடிவந்து விடுகிறார், இந்த ஆள்! தன்னை ராக்ஃபெல்லர் என்று கற்பனை செய்து கொண்டு எல்லார் உயிரையும் வாங்கிவிடுவார்!”

இவரைக் காப்பாற்றியது யார்/எது?


பஞ்சப்பாட்டு

அறமிலா உலகில் எவ்விதம் வாழ்வது?

அதோ ஓர் கருந்தலை நச்சுப்பாம்பு

என்னையும் மனிதனாக்கு

அற்றது ஊர்தி உற்றது வீடு

இல்லாமலிருக்கின்ற இறைவனிடம்

வேண்டிக் கொண்டது போதும் போ.