மனத்தைக் காணார் எதையும் காணார்

கந்தர் அனுபூதி என்று ஒரு நூல் உண்டு. அருணகிரிநாதர் எழுதியது. பலரும் அவர் தம் வாழ்நாளில் இறுதியாக எழுதியது என்பர். சிலர், சம்பந்தாண்டானின் தீச்செயலால் உடலை இழந்து கிளியுருப் பெற்ற அருணகிரிநாதர் ஒவ்வொரு பாடலாகத் தம் வாழ்நாள் இறுதியில் சொல்லியது என்றும் கூறுவர்.

அது ஒரு அற்புதமான நூல். சைவத்தின் பழைய தத்துவத்தில் ஊறியது. சைவத் தத்துவத்தில் ‘சும்மா இருத்தல்’ என்பது வேண்டப்படும் அடிப்படையான பண்பு. அருணகிரிநாதர் சொல்கிறார்:

சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.

வள்ளலாரோ, “சும்மா இருக்கும் சுகம் இன்றைக்கு வருமோ, நாளைக்கே வருமோ, என்றைக்கு வருமோ அறியேன் எம் கோவே” என்று அதை அடையாதவர் போலப் பாடுகிறார். சரி, இதெல்லாம் ஒருபுறம்.

நான் இங்கு அதே கந்தர் பெயரால் திருஷ்டிப் புள்ளி போல கன்னங் கருப்பாய் ஏற்பட்டுள்ள ஒரு நூலைப் பற்றிப் பேச வேண்டும். அதன் முதல் பாதி உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாய்க் காப்பாற்று என்று மிக மிக பயந்த ஓர் ஆளாகப் பட்டியலிடுவது, மறுபாதி பிசாசு, பேய், பில்லி, சூனியம் போன்றவற்றைக் கொல்லு, அடி, குத்து, விரட்டு என்று கதறுவது. முதலில் கொஞ்சம், இறுதியில் கொஞ்சம் ஊறுகாய் போல முருகனின் வருணனை. ஒருபுறம் அடிபட்டுவிடுவோமோ என்ற பெரும்பயமும் மறுபுறம் அடுத்தவரை அடித்தலும் ஆகிய இதுவே பெரிய உளவியல் ஆய்வுக்கு உரியது. ஆனால் இந்துத்துவ வாதிகளின் தறுதலைத் தனத்தினால் யாரும் சமய நூல்களில் உளவியல் ஆராய்ச்சி செய்வதற்கே பயப்படுகின்ற நிலை உள்ளது. இப்படித்தான் முனைவர் நலங்கிள்ளி என்பவர் கீழ் (புதுவைப் பல்கலைக்கழகம்) சேக்கிழார் பற்றி நல்லதொரு ஆய்வேடு உருவாகி வெளிவராமல் நின்றுவிட்டது.

ஆய்வுத் துறையை சமயவாதிகள் வளரவிட மாட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் அதே மத நம்பிக்கை மற்ற எல்லாருக்கும் கட்டாயம் இருந்தே தீர வேண்டும் என்ற ‘பரந்த மனப்பான்மை’ உள்ளவர்கள். எதையும் கேள்வி கேட்கலாகாது என்ற கொள்கை உடையவர்கள். ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்று கூறிய வள்ளுவன் இன்றிருந்தால் அவனை அடித்தே கொன்றிருப்பார்கள் இந்தப் பெரியோர்கள்.

இங்கே நான் அதன் முன்பாதியையோ பின்பாதியையோ எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யவில்லை. அது வேறொரு சமயம். ஒரே ஒரு கருத்து மட்டும் இங்கே.

எல்லா மதங்களிலும் மனத்தைத் தீமை புகாமல் காப்பாற்று என்று தான் வேண்டுவார்கள். நல்லதைச் சிந்திக்க வேண்டும் என்பார்கள். அன்பு வேண்டும், அகிம்சை வேண்டும் என்பார்கள். நம் பெரியோர்களும் அப்படித்தான் கூறியிருக்கிறார்கள். ‘வழிபாட்டில் மனம்தான் முக்கியம். மனம் அமைதியானால் எல்லாமும் அமைதியாகும்’ என்போர் உண்டு. மேற்சொன்ன சும்மா இருத்தல் என்பதும் மனத்தைப் பற்றியதே.

சாதாரணமாக சாமி கும்பிடுகின்ற எளியவர்கள் கூட “என்னைக் காப்பாற்று, என் குடும்பத்தைக் காப்பாற்று, என் நண்பர்களைக் காப்பாற்று, எனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்று” என்றெல்லாம் வேண்டுவார்கள். அவர்களின் உள்ளம்கூட தன்னிலிருந்து புறப்பட்டு பிறரையும் இணைத்துக் கொண்டு அவர்களும் வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறது. மேலும் எதிரிகளை அழித்துவிடு என்றுகூடப் பல பேர் வேண்ட மாட்டார்கள். “அதெல்லாம் முருகன் பாத்துக்குவாம்பா” என்று விட்டுவிடுவார்கள்.

கோயில்களில் கூட ‘என்னைக் காப்பாத்தணும் சாமி’ என்று வேண்டுவதைப் பார்த்திருக்கிறேன். அதைவிட, நகைநட்டை, செல்வத்தை, நிலத்தை, மாட்டை, வீட்டைக் காப்பாற்று என்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகத்தையும் மூக்கையும் வாயையும் பல்லையும் கழுத்தையும் மார்பையும் மார்புக் காம்பையும் தொப்புளையும் காப்பாத்து என்ற பிதற்றலை எங்கும், எந்த மதத்திலும், எந்த தேசத்திலும், எந்தக் கோயிலிலும், எந்த வீட்டிலும் கேட்க முடியாது. ஆனால் அப்படித்தான் கேட்கிறது இந்தப் பாட்டு. இப்படி விஸ்தாரமாக ஒவ்வொரு உறுப்பையும் காக்க காக்க என்று வேண்டும் என்று புலம்பும் இந்த நூலில், “என் மனத்தைத் தீய சக்திகள் புகாமல் காப்பாற்று”, “தீய எண்ணங்கள் என்னை அணுகாமல் காப்பாற்று” என்று ஒரு சொல்லும் கிடையாது.

வேறு எவரோ தொடக்கத்தில் எழுதிய காப்புச் செய்யுளில் மட்டும் “குமரன் அடி நெஞ்சே குறி” என்று வருகிறது. அது நூலுக்குப் புறத்தில். நூலின் அகத்தில் எதுவும் இல்லை.

தமிழில் உள்ள இப்படிப்பட்ட முழுநூல் இதுதான். மனத்தை விட்டுவிட்டு உடலை மட்டுமே பாடுகின்ற, அல்ல, தேடுகின்ற ஒரு நூல் இது. உடலை உறுப்பு உறுப்பாக முருகப் பெருமான் காப்பாற்றிவிட்டால், பிறகு உடலை அடிக்கின்ற, அதற்குத் தீங்கு செய்கின்ற பேய்பிசாசுகள், பில்லி சூனியங்கள் ஒழிய அவன் உதவ வேண்டும்.
நல்லது எதையுமே கேட்காத, மோசமான விஷயங்களை மட்டுமே கொண்ட நூல் ஒன்று உலகில் உண்டானால் அது இதுதான்.

இதையும் தமிழர்களில் இலட்சக்கணக்கான பேர் தினம் பாராயணம் செய்கிறார்கள், தினமும் ஒரு முறையோ இருமுறையோ தொலைக் காட்சிச் சேனல்கள் பலவற்றில் ஒலி பரப்புகிறார்கள் என்றால் என்ன‍ சொல்வது?

மனம் உண்டேல் மார்க்கம் உண்டு. மனம் திருந்தினால் எல்லாம் திருந்தும் என்று பொதுவாக யாவரும் நினைப்பர். மனத்தையே நினைக்காத இந்த நூல் எப்படி “ஆத்திகர்களால்(!)” போற்றப் படுகிறது?

மனத்தைக் காணாதவர் உடலையே காண்பர்.

மனத்தைக் கட்டுப்படுத்தாதவர் எதையுமே கட்டுப்படுத்தார்.

உன் மனத்தை ஆளாமல் உலகையே ஆண்டாலும் பயனென்ன? என்ன, தேவராய ஐயரே, நீரே சொல்லும்.


முக்தி பவன்

இந்த இந்திப் படத்தின் தலைப்பிலேயே அதன் அர்த்தம் இ்ருக்கிறது. மிக எளிய  கதை. ‘மோட்சத்துக்கான விடுதி’. தயானந்த குமார், ஒரு எழுத்தாளர்-கவிஞர், 77 வயது(தான்). ஒரு நாள் இரவு தனது அந்திம நாள் வந்துவிட்டதாகக் கனவு காண்கிறார். தன் மகன் ராஜீவிடம் தான் காசியில் (வாராணசி) தான் இறக்க வேண்டும் என்று கூறி தன்னை அழைத்துச் செல்ல வேண்டுகிறார். ராஜீவின் ஆபீஸ் வேலை அதிகம். பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பல வேலைகள் இருந்தாலும் தந்தையின் சொல்லைத் தட்டமுடியாமல் காசிக்குப் போகிறார். இருவரும் கங்கைக் கரையிலுள்ள முக்தி பவன் என்ற தங்கும்விடுதியில் சென்று ஓர் இருண்ட சிறிய அறையில் தங்குகிறார்கள். அங்கே 15 நாள்தான் தங்க முடியும். அதற்குள் உயிர் போனால் சரி, இல்லை என்றால் திரும்பிப் போய்விட வேண்டும். (வேடிக்கை என்னவெனில், காசிக்குச் சாக வேண்டும் என்று வருபவர்கள் யாரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது. எங்கேயாவது அநாதையாகத்தான் போக வேண்டும், இல்லை தற்கொலைதான். இதுதான் பழைய மரபு.) 15 நாட்கள் கழிகிறது. தயாவுக்கு ஒருமுறை காய்ச்சல் வந்து அவர் போய்விடுவார் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். மருமகளும் பேத்தியும்கூட வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர் வாழ்க்கையின்மீது மிகப்பெரிய அளவு பற்றுக் கொண்டவர். பிழைத்துக் கொள்கிறார். விடுதி உரிமையாளர் அவர் பெயரை மாற்றி(!) மீண்டும் தங்குவதற்கு அனுமதி தருகிறார். தயாவுக்கு அங்கே வாழ்க்கைமீது பெரும் பற்று வருவதற்குக் காரணம் அங்கே 18 ஆண்டுகளாகத் தங்கி சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் விமல் என்ற பெண்மணி. ராஜீவினால் இருபது நாட்களுக்கு மேல் தங்க முடியாத நிலை. அலுவலகம் அழைக்கிறது. மிகுந்த மனவருத்தத் துடன் தந்தையை விட்டுச் செல்கிறார். அவர் சென்ற சில நாட்களில் தயா இறந்து விடுகிறார். அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள்.

குடும்பத்தில் ஒருவராக இல்லாமல் இருந்தாலும், வந்தவுடனே தயாவுக்கு ருசியான உணவளிக்கும் விமல் முதிர்ச்சி உடையவராகக் காண்கிறார். தயாவை விட நன்கு சிந்திக்கிறார். தயாவின் பேத்தி யாரோ ஒருவனைக் காதலிக்கிறாள். ராஜீவ் தான் பார்க்கும் மாப்பிள்ளைக்கு மணமுடிப்பதாக இருக்கிறார். விமல் சொல்கிறார்-“அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் வாழவேண்டும்.” தந்தை இறக்குமுன் வீட்டில் அவரது நோட்டிலும் இதே குறிப்பைத்தான் ராஜீவ் காண்கிறார். “அவரவர் தங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அதன்படி நடங்கள்”.

பாத்திரப் படைப்புகள் அற்புதம். ஓரிரண்டு காட்சிகளிலேயே பேத்திக்கும் தாத்தாவுக்குமான பிணைப்பு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்போ, அற்புதமோ அற்புதம். மிகச் சாதாரணமான சந்தர்ப்பங்களில் மிக இயல்பான நடிப்பில் (நம் தமிழ்ப்படங்களை நினைக்கும்  போது எரிச்சல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை). யாரும் நடிப்பதாகவே தோன்றவில்லை. அவ்வளவாக ஒட்டாத கேரக்டர் லதா (ராஜீவின் மனைவி, மாமனாரின் இறப்பைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருக்கிறார்! அதைப் பற்றி கணவன் மனைவிக்குள் வரும் சிறுசண்டை பிரமாதம்). இறப்பைப் பற்றி இருந்தாலும் வாழ்க்கையை மிக இயல்பாக ரசிக்கும் படம். தயாகூட, முக்தி பவனுக்குச் சென்றவுடனே அங்கிருப்போரோடு ராம பஜன் செய்கிறார், டிவி பார்க்கிறார். ஆனால் வேலைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கும் ராஜீவ்தான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தத்தளிக்கிறார்.

இவ்வளவெல்லாம் சிறப்புகள் இருந்தாலும், தயாவின் வாழ்க்கைப் பார்வை சுத்தமான இந்துத்துவப் பார்வை. ஒரு கவிஞரால் எப்படி ஓர் இருண்ட அறையில் தங்கி கங்கையில் போவதற்கான நாளை எதிர்பார்க்க முடிகிறது? ஒரு சுதந்திரமான ஆத்மாவைக் கொண்ட எழுத்தாளன், “என்னைக் கொண்டுபோய் ஒரு காட்டில், இயற்கைக் கிடையில், பசுந்தரையில், பறவைகளுக்கிடையில், மான்களுக் கிடையில் விட்டுவிடு” என்று கேட்பானே ஒழிய குகை போன்றதொரு அறையில் ராம்ராம் பஜனையோடு அந்திம நாளை எதிர்பார்த்துக் கிடக்க மாட்டான். இந்தப் பார்வை ஒன்றுதான் கதையோடு நான் ஒட்டவிடாமல் இடித்தது. இன்னும் படிமங்கள் குறியீடுகள்… போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசலாம். உதாரணமாக, தனது சொந்தப் பெயருடன்கூட தயாவால் இறக்கமுடியவில்லை என்ற உண்மை. பிறகு, சாகச் செல்லும் தயா, போகும் வழியில் குட்டையில் நீந்தும் வாத்துகளுக்கு உணவு போடுவது. காசியில் நுழைந்தவுடனே (சாவியின் பாணியில் “அங்கே போயிருக்கிறீர்களா?” எனக் கேட்கலாம். ) அதன் புகழ்பெற்ற சந்துகள், இடித்துக் கொண்டுசெல்லும் மக்கள் (நல்லவேளை, எங்கும் வியாபித்திருக்கும் பசுக்களைக் காட்டவில்லை)–இவர்களைத் தாண்டி முக்தி பவனுக்குச் செல்லும் இவர்கள் வந்த ரிகஷா ஒரு சந்துக்குள் செல்லமுடியாமல் (தண்டவாள அ‍ரைக் கம்ப அடைப்பு) நிற்கும் முன்பாக ஒரு இறங்கு பாதையில் செல்கிறது. அதிலிருந்து வெளியேறுபவர்கள் ரிகஷாவைத் தள்ளிக் கொண்டு மேலே சென்றுதான் ஏற வேண்டும். இந்த மோசமான இறக்கம் தான் முக்தி–பாதையின் ஏற்றம்தான் வாழ்க்கை என்கிறமாதிரி ஒரு பிம்பம் கிடைக்கிறது. காசியின் அரிச்சந்திர காட், எரிக்கும் மயானம். அதன் கரையிலேயே பசுக்களை நிறுத்திவைக்கும் இடம், எரிக்கும் விறகுகள் குவித்துவைக்கப் பட்டிருப்பது…இப்படிப் பல.

படம் ஏறத்தாழ 1 மணி 40 நிமிடம். தயாவின் கேரக்டரைவிட மனத்தில் நிலைத்து நிற்பது மகன் ராஜீவின் (அதில் ஹுசேன்) கேரக்டர் தான். இயக்குநர் யாரோ ஒரு சிந்தி நபர். பெயர் பூட்டியானி. இசை இடறவில்லை. காட்சிப்படுத்தலும் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளன.
இந்தப் படத்தை நான் பார்க்க அனுப்பிவைத்த நண்பர் திரு.மனோகரன் (மனோ) அவர்களுக்கும், செவ்வேளுக்கும் நன்றி.