திருச்சி நாடகவிழா-முப்பதாண்டு நிறைவு

என்னுரை

சரியாக முப்பதாண்டுகளுக்கு முன்பு திருச்சியில் பாதல் சர்க்கார் நாடக விழா நடத்தப்பட்டது. பாதல் சர்க்கார் என்பவர் வங்கத்தில் மூன்றாம் நாடக அரங்கைக் கட்டமைத்த பெருமைக்குரிய, உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர், இயக்குநர். அவரிடம் முன்னமே 1981 வாக்கில் சென்னையில் நடை பெற்ற ஒரு பயிற்சி அரங்கில் திருச்சியிலிருந்து பேராசிரியர் ஆல்பர்ட், திரு. மனோகரன், திரு. கோவிந்தராஜன், திரு. சாமிநாதன் உள்ளிட்ட ஐந்து நண்பர்கள் பயிற்சி பெற்றிருந்தனர். பின்னர் பிறகொரு இந்திரஜித் உள்ளிட்ட பாதல் சர்க்கார் நாடகங்கள் சில திருச்சி நாடக அரங்கத்தில் அரங்கேற்றப் பட்டன. ஒருவகையில் இவற்றைக் கொண்டாடும் முகமாகவும், மேலும் தமிழ் நாடக அரங்கை முன்னே கொண்டு செல்லும் விதமாகவும் இந்த விழா 1989இல் நடத்தப்பட்டது. நாடகங்கள் பற்றிய கருத்தரங்குகளுடன், பாதல்சர்க்காரின் ஆறு நாடகங்கள் தமிழகத்தின் முதன்மையான நாடகக் குழுக்களால் அரங்கேற்றப்பட்டன.
இதன் நிகழ்வுகள் சரிவரப் பதிவுசெய்யப் படாமையால் கருத்தரங்க நூலாக இதனை வெளியிடும் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் ஒரு சில கட்டுரைகளையேனும் வெளியிட முடியும் என்று நம்புகிறேன்.
இவ்விழாவின் மூன்று நாட்களிலும் பங்கேற்று, இதனை மதிப்பிட்டுள்ள திரு. கோவைவாணன் (திரு. சு. துரை—கோவை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி, இப்போது ஓய்வு பெற்ற பேராசிரியர்) அவர்களின் கருத்துரையை இங்கே முன்வைக்கிறேன்.

Badal Sarkar Drama Workshop Invitation - Front

Badal Sarkar Drama Workshop Invitation - Back

 

கோவைவாணன் கருத்துரை 27-09-1989 

எல்லாக் கலைகளிலும் இரண்டுவிதமான போக்கு என்றும் இருந்து வருகிறது. ஒன்று மனிதனை வெறுமனே மகிழ்விப்பதையும், இருக்கும் சமுதாய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை நியாயப்டுத்துவதையும், வியாபாரத்தையும் நோக்க மாகக் கொண்டது. மனிதனைத் தற்போது உள்ள தளத்திலிருந்த அடுத்த தளத்திற்கு உந்திச் செல்வதாயும், சமூகத்தை உன்னதமான உயர்தளத்திற்கு எடுத்துச்செல்வதாயும் பெருமைகளையும் இலாபத்தையும் எதிர்பார்க்காததாயும் சிரமங்களும் தியாகங்களும் நிறைந்ததாயும் அமைந்திருப்பது இரண்டாம் வகைக் கலைகள். இது சிறுபான்மையோரால் சிறுபான்மையோர் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் இவ்வகைக் கலைஞர்கள்தான் மனித மேன்மையையும் கலை யையும் காப்பாற்ற சிலுவை து£க்கியவர்கள்.
1989 செப்டம்பர் 22, 23, 24 மூன்று தினங்கள் திருச்சி து£ய வளனார் கல்லு£ரி யில் மேற்குறித்த இரண்டாம் வகை அற்புதம் நிகழ்ந்தது. இந்திய நாடக ஆசிரியர்களில் கவனத்திற்குரியவரான வங்காள நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் நாடக விழாதான் அது. சுமார் 350 பேர் கலந்துகொண்டார்கள் என்பது தமிழனின்மீது அவநம்பிக்கை கொண்டவர்களை யோசிக்கச் செய்தது.
இவ்விழா இரண்டு தன்மைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பொருத்தமே. ஒன்று, நாடகங்களை நிகழ்த்துவது. பின்னர் அது பற்றி விவாதிப்பது. இரண்டு, நாடகத்தளம் பற்றிய கட்டுரைகளைப் படிப்பது. பின்னர் அதை விவாதிப்பது. ஒருவழிப் பாதையாய் இல்லாமல் விவாதமும் நாடகமும் நிகழ்த்தப்பட்டு அது பற்றி விவாதிப்பதும் மிகச் சரியான நிகழ்முறை. அது இவ்விழாவில் சரியாகவே கையாளப்பட்டது. விவாதங்கள் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சிந்தனைகள் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத் துவதாக அமைந்திருந்தது. விவாதங்களில் பங்கு கொண்டோரில் பரீட்சா ஞானி, அஸ்வ கோஷ், கோ. ராஜாராம், அம்ஷன் குமார், எம். டி. முத்துக்குமாரசாமி ஆகி யோர் குறிப்பிடத்தகுந்த கருத்துகளை முன்வைத்தனர். எஸ். ஆல்பர்ட், கோ. ராஜாராம், எம். டி. முத்துக்குமாரசாமி, வீ. அரசு, மு. ராமசாமி ஆகியோர் கட்டுரை வாசித்தனர். வீ. அரசு, எம். டி. எம். ஆகியோரின் கட்டுரைகள் கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளாயின. இதுபோன்ற விமரிசனங்கள் உண்மையை நோக்கி, சரியான திசைவழியை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. சண்டைகள், உணர்ச்சிக் கொட்டல்கள், ஆவேசம், கட்சித் துதிபாடல் முதலியவற்றை விடுத்து விவாதங்கள் இன்னும் ஆரோகியமாக நடைபெறுவது தமழனுக்கு நலம் பயக்கும் என்பது கருத்தரங்க அனுபவமாயிருந்தது. ஆனாலும் சில கடுமையான விமரிசனங்களைக் கட்டுரையாளர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இது நிகழ்ந்தே தீரும். இதுபற்றிக் கட்டுரையாளர்களோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ வருத்தமோ கோபமோ கொள்ள வேண்டியதில்லை.
இவ்விழாவில் முக்கியமான பகுதி, நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதுதான். பாதல் சர்க்காரின் ஆறு நாடகங்கள் ஆறு குழுக்களால் நிகழ்த்தப்பட்டன. ஆறு நாடகங்களை யும் தமிழாக்கம் செய்திருப்பவர் கோ. ராஜாராம்.
1. ஊர்வலம்
சென்னை பரீட்சா குழுவினர் இதை வட்டமான அரங்கில் நிகழ்த்தினர். வீட்டையும் தன்னையும் தன் பையனையும் தொலைத்துவிட்டு இவைகளைத் தேடி அலைபவனுக் குக் குறுக்கே நாளரு வரிசையும் பொழுதொரு கூட்டமுமாய் ஊர்வலங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊர்வலங்கள் யாருக்காகவோ எதற்காகவோ நடத்தப்படு கின்றன. தனக்கான ஊர்வலம் எப்போது வரும் என்று காத்திருக்கிறான் எல்லாவற் றையும் தொலைத்துவிட்டுத் தேடுபவன். சொல்லப்பட்ட விஷயத்திலும் நிகழ்த்தப்பட்ட விதத்திலும் வெகுதீவிரத்தன்மையும் உண்மையும் வெளிப்பட்டன. பரீட்சா குழுவின் உழைப்புக்கு வெற்றியே கிட்டியது.
2. பிறகொரு இந்திரஜித்
சென்னை கூத்துப்பட்டறையினர் இதை மேடைநாடகமாக நிகழ்த்தினர். அமல், விமல், கமல் என்று சராசரி வாழ்க்கையின் முகமற்று உழன்று கொண்டிருக்கும் கூட்டத்தில் நிர்மல் சுயமுகத்தோடு இந்திரஜித்தாக வாழப் போராடித் தோற்றுப்போய் அமல், விமல், கமல், பிறகு ஒரு இந்திரஜித்தாக சராசரித்தனத்திற்கு வந்து சேர்வதுதான் கதை. இந்திரஜித் தன் சுயமுகத்தைக் காப்பாற்றிக்கொள்ள நிகழ்த்தும் போராட்டம் நம் ஒவ் வொருவருக்குள்ளும் நிகழ்கிறது. நாடகம் பிசிறு இல்லாமல் சுத்தமாகக் கலைவடிவம் ஆக்கப்பட்டிருந்தது.
3. இந்திய வரலாறு
ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் இந்தியா விடுதலை பெற்ற வரலாற்றையும் அதிகாரம் தரகர்கள் கையில் மாறியதையும் அரசியல், பொருளாதாரப் பார்வையில் மிகச் சரியாகவே நாடகம் சொல்கிறது. நாடக வடிவாக்கம் செய்வதில் கடினம் நிறையவே உள்ளது. இருபபினும் கடின முயற்சியில் நாடக உருவாக்கம் தந்திருந்தார்கள், மதுரை சுதேசிகள் குழுவினர். தொடர்ந்து நீளமான வசனங்கள், கூட்டமாகச் சேர்ந்து பல உரையாடல்கள் ஒலித்தமை நாடகத்தோடு நம்மை ஒட்டாமல் செய்துவிடுகிற அபாயம் ஏற்பட்டது. வசனங்கள், உடல் அசைவுகள் முதலியவை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட தாக இல்லாமல் போனதால் கலையாக்கத்தில் குறைபட்டுப் போனது. நிதானம் தேவை. ஒரே மூச்சில் நாடகத்தைக் கொட்டிவிட வேண்டும் என்பதுபோல் பட்டது. இருப்பினும் பரீட்சா ஞானி கூறியதுபோல், தன்னளவில் இது ஒரு வெற்றிப் படைப்பு தான்.
4. போமா
சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்களால், பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. கிராமத்தைச் சுரண்டிக் கொழுக்கும் நகரத்திற்கே மேலும் மேலும் அரசு கோடிகோடியாய்ச் செலவிடுவதையும் அதன் அபாயத்தையும் மனசில் பதட்டத்தையும் எதிர்காலம் பற்றிய அச்சத்தையும் வெளிப்படுத்தியது இந்நாடகம். வட்டமான அரங்கில் நிகழ்ந்தது. காடு, மரம், கிராமம், விவசாய அழிப்பு என்பது மனிதன் தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் பிணக்குழி என்பதை எவ்வளவு அற்புதமாக உணர்த்திவிடுகிறது இந்நாடகம். பின்னணியில் கொடுக்கப்பட்ட மிருதங்க இசை இந்நாடகத்திற்கு மேலும் ஆழத்தையும் உணர்ச்சியையும் பரிமாணத்தையும் கூட்டியது.
5. மீதி சரித்திரம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியினரால் மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்டது. சமகால மனிதனின் வாழ்க்கை யதார்த்தத்தை மேடையில் நிறுத்துகிறது. தற்கொலை செய்துகொள்வதற்கான சகல காரணங்களும் நம்மிடம் உண்டு. ஆனால் அதேசமயம் உயிரோடு வாழ்ந்தே தீரவேண்டிய உயர்காரணங்களும் கூடவே உண்டு. தற்கொலை செய்துகொண்ட ஒருவனிடம் “நீ ஏன் தற்கொலை செய்துகொண்டாய்?” என்று ஒருவன் கேட்பதும், அதற்கு அவன் நீ ஏன் இன்னும் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கிறாய்? என்று கேட்பதுமாக வாழ்வின் இருப்பு பற்றிய வினாத் தொடுக்கிறது இந்நாடகம். நிகழ்த்தப்பட்ட விதத்தில் இந்நாடகம் தோல்வி கண்டது. இந்நாடகத்தில் நடித்த நடிகர்கள் இத்தோல்விக்க இம்மி யளவும் காரணமாக மாட்டார்கள். ஒலிபெருக்கி ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்பட வில்லை என்று ஏற்பாட்டாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட்டு நிம்மதி அடையமுடியாது. நீளமான, குறுகிய வசனங்களைக் கதாபாத்திரங்களிடம் பேசாமல், பார்வையாளர்களை நோக்கியே பேசிக்கொண்டிருப்பது பழைய சபா நாடகங்களில் பயன்படுத்தப்படும் தேய்ந்துபோன உத்தி. அதை இன்னும் பிடித்துத் தொங்கி நிகழ்வு களில் உயிரோட்டம் இல்லாமல் கேலிக்கூத்தாகப் போய்விட்ட அவலம் நிகழ்ந்தது. இதை சுயவிமரிசனத்தோடும் அடக்கத்தோடும் ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்த இந்நாடக இயக்குநர் அ. ராமசாமியின் மீது மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. இப்பள்ளியின் இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
6. ஸ்பார்ட்டகஸ்
மதுரை நிஜ நாடக இயக்கம் புல்வெளியில் வட்டமான அரங்கில் நிகழ்த்தியது. இந்த மூன்று நாள் நாடகத்தின் பெரிய சாதனை, கொடை இந்த நாடகம் எனலாம். உடல் மொழியை மிக ஆற்றலோடு பயன்படுத்திக் காண்போரைத் திகைக்கச் செய்துவிட்ட கலைத்தரமான படைப்பு. கி.மு. 71இல் ரோமப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த திராசிய கிளேடியேட்டர் ஸ்பார்ட்டகஸ் என்பவனைவைத்து உருவாக்கப்பட்ட நாடகம் இது. இன்னும் அடிமைகளாக இருந்துகொண்டிருக்கும் நமக்கும் இந்த அடிமைகளின் போராட்ட வரலாறு உத்வேகத்தை அளிக்கிறது. “இந்த மண்ணிலிருந்துதான் ஸ்பார்ட்ட கஸ் தோன்றினான். ஸ்பார்ட்டகஸ் அழிந்துவிட்டான். ஆனால் இந்த மண் இன்னும் இருக்கிறது” என்று நாடகமுடிவில் ஒலிக்கப்படுட்ம குரல்தான் எத்தனை அர்த்தமுள்ளது? இந்த நாடகத்திற்கு ஸ்பார்ட்டகஸ் கதாநாயகன் இல்லை. அடிமைகள் தான் கதாநாயகர்கள். ஸ்பார்ட்டகஸ் என்பது ஒரு கருத்தாக்கம், குறியீடு. ஒரு கருத்தியல் என்று கோ. ராஜாராம், அம்ஷன்குமார் ஆகியோர் சொன்ன கருத்துரைகள் மேலும் இந்த நாடகத்தை விளங்கிக்கொள்வதற்கு உதவியாய் இருந்தன. பார்த்தவர்க ளைப் பரவசப்படுத்திய ஸ்பார்ட்டகஸ் நாடகத்தின் இயக்குநர் மு. ராமசாமி நாடக முடிவில் கருத்துரை வழங்க வந்தபோது உணர்ச்சிவசப்பட்டதில் நியாயம் இருக்கிறது.
இந்த நாடகங்களில் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்முறைக் கலைஞர்கள் அல்லர். மாணவர்கள், ஆசிரியர்கள். இன்னும் பலவேறு துறைகளில் பணியாற்றி வருபவர்கள். அலுவல் நேரம் போக தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் பயிற்சி செய்து இந்த நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை முக்கியமாய் கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் வேலை நேரத்தையும் வேலை நாட்களையும் வேலை பளுவையும் அரசாங்கங்கள் அதிகமாக்கிக்கொண்டே வருவதன் உள்நோக்கம் என்ன என்பதைத் தற்போது நாம் நன்றாக விளங்கிக் கொள்கிறோம். ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து திருச்சியை நோக்கி இதற்குப் புனித யாத்திரை செய்த நான், எங்கள் பங்குத் தந்தை குழந்தை ராஜன், நண்பர் லயம் சுப்பிரமணியம் ஆகிய மூவருக்கும் இந்த மூன்று நாள் கவனிப்பு ஓர் இனிய அனுபவம்.
இந்த நாடக விழாவில் படிக்கப்பட்ட கட்டுரைகள், நிகழ்த்தப்பட்ட விவாதங்கள், பாதல் சர்க்கார் நாடகங்களை நிகழ்த்திய நாடகக்குழுக்கள் பற்றிய செயல்பாடுகள், பாதல் சர்க்கார் நாடகங்கள் பற்றிய குறிப்புகள் அனைத்¬த்யும் தொகுத்து நு£லாகக் கொண்டுவர விழா ஏற்பாட்டாளர்கள் எண்ணியிருப்பதாக அறிகிறேன். அப்படி வெளிவருமானால் தமிழ்நாடகம் பற்றிய புதிய ஒளிகளை அது வழங்கும். தமிழ் மூளையில் நூற்றாண்டுக் கணக்கில் ஏறியுள்ள களிம்பைக் கொஞ்சம் கழுவும்.
திருச்சி நாடகச் சங்கமும் பண்பாடு மக்கள் தொடர்பகமும் இந்த விழாவை மிகவும் ஒழுங்கான வடிவத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ்நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையையும் தமிழ் மூளைக்குள் நாடக உணர்வைச் செழுமைப் படுத்தலை யும் செய்த இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களின் கடுமையான உழைப்பு மரியாதைக்கும் பாராட்டுதலுக்கும் வெகுகாலம் நினைவுக்கும் உரியது. குறிப்பாக திரு. க. பூரணச்சந்திரன், திரு. எஸ். ஆல்பர்ட், தந்தை அகுஸ்தீன் முதலியோர் இந்நிகழ்ச்சி யின் சூத்திரதாரிகள்.
27-09-1989


கைவீசம்மா கைவீசு

குழந்தைப் பாடல்கள் (Nursery Rhymes)

குழந்தைப் பாடல்கள் நடக்கத் தொடங்கும் பருவம் முதலாக பள்ளிக்குச் செல்லும் பருவம் வரையில் பாடுவதற்கு உரியவை. மகிழ்ச்சியோடு பாடி துள்ளிக்குதித்து ஆடுவதற்கான பாடல்கள் இவை.

குழந்தைப் பாடல்கள் பழங்காலத்திலேயே தமிழில் இருந்தவைதான். எழுதப்பட்ட குழந்தைப் பாக்கள் அறநெறியை மையமாகக் கொண்டவை. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை. வாய்மொழி மரபில் வந்த,

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடிவா

போன்ற குழந்தைப் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

குழந்தைப் பாடல்களில் நல்ல எதுகை மோனை அமைந்திருக்க வேண்டும். ஒரே மாதிரியான அசைகள் திரும்பத் திரும்ப வரவேண்டும். எளிய சொற்கள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

பாடற்பொருள் குழந்தைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். தர்க்கரீதியான பொருளே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான். கருத்துகளைத் திணிக்கலாகாது. பொருளற்ற ஒலிகளும் ஒலித்தொடர்களும் சுவை கூட்டுவனவாக அமையும். எதிர்மறைக் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

அண்மைக்காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம், அழ. வள்ளியப்பா போன்றோர் சிறந்த குழந்தைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இங்கே இரண்டு பழைய கால குழந்தைப் பாடல்களைத் தருகிறேன்.

சாஞ்சாடம்மா சாஞ்சாடு (சாய்ந்தாடம்மா என்பதன் கொச்சை)
சாயங் கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு.

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு

சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

‍பொம்மை வாங்கலாம் கைவீசு
தங்கைக்குத் தரலாம் கைவீசு

வேடிக்கை பார்க்கலாம் கைவீசு
வேண்டியது வாங்கலாம் கைவீசு

கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு