கைவீசம்மா கைவீசு

குழந்தைப் பாடல்கள் (Nursery Rhymes)

குழந்தைப் பாடல்கள் நடக்கத் தொடங்கும் பருவம் முதலாக பள்ளிக்குச் செல்லும் பருவம் வரையில் பாடுவதற்கு உரியவை. மகிழ்ச்சியோடு பாடி துள்ளிக்குதித்து ஆடுவதற்கான பாடல்கள் இவை.

குழந்தைப் பாடல்கள் பழங்காலத்திலேயே தமிழில் இருந்தவைதான். எழுதப்பட்ட குழந்தைப் பாக்கள் அறநெறியை மையமாகக் கொண்டவை. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை. வாய்மொழி மரபில் வந்த,

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடிவா

போன்ற குழந்தைப் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

குழந்தைப் பாடல்களில் நல்ல எதுகை மோனை அமைந்திருக்க வேண்டும். ஒரே மாதிரியான அசைகள் திரும்பத் திரும்ப வரவேண்டும். எளிய சொற்கள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

பாடற்பொருள் குழந்தைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். தர்க்கரீதியான பொருளே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான். கருத்துகளைத் திணிக்கலாகாது. பொருளற்ற ஒலிகளும் ஒலித்தொடர்களும் சுவை கூட்டுவனவாக அமையும். எதிர்மறைக் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

அண்மைக்காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம், அழ. வள்ளியப்பா போன்றோர் சிறந்த குழந்தைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இங்கே இரண்டு பழைய கால குழந்தைப் பாடல்களைத் தருகிறேன்.

சாஞ்சாடம்மா சாஞ்சாடு (சாய்ந்தாடம்மா என்பதன் கொச்சை)
சாயங் கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு.

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு

சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

‍பொம்மை வாங்கலாம் கைவீசு
தங்கைக்குத் தரலாம் கைவீசு

வேடிக்கை பார்க்கலாம் கைவீசு
வேண்டியது வாங்கலாம் கைவீசு

கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு

இலக்கியம்