புனைவின் அடிப்படைகள்

புனைதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் உள்ள சக்தி – எவரும் புனைய முடியும். ஆனால் புனைதலுக்கு நாம் முனைவதில்லை.

(புனைதல் – முனைதல்). முனைகின்றவர்கள் புனைகதையாளர்களாகவோ கவிஞர்களாகவோ ஆகின்றனர்.

எழுத ஆரம்பியுங்கள்!

புனைதலும் கலையே, புதிதாக இங்கு சற்றே

முனைதலும் கலையே, மழையில் சற்றே

நனைதலும் கலையே, புதிதாக எதையும்

வனைதலும் கலையே

என்று எழுதிக் கொண்டே போய்விடலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக்குணம்.

சுருக்கம்தான் கவிதைக்கு அடிப்படை. ஹைக்கூ வடிவம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். சுருக்கமாக, படிமங்களை நெஞ்சில் உருவாக்குவதாக இருக்கவேண்டும். சுஜாதாவின் ஹைக்கூ ஒன்று.   

‘விண்வெளிக்கு சென்று திரும்பினான்

வயதாகிவிட்டது  காதலிக்கு’

இதை அடிப்படையாக வைத்தே ஒரு கதை எழுதிவிடலாமே.

இருமை எதிர்வுகளைக் கையாளுதல் கவிதையின் அமைப்புக்கு அடிப்படை. உதாரணமாக அருணகிரிநாதர் எவ்வளவு இயல்பாக- இறைவனை வருணிப்பதில்- இருமைகளைக் கையாளுகிறார் பாருங்கள். (ஆனால் எல்லாமே எதிர்வுகள் அல்ல) 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே.

உடனே நீங்கள் எழுதத் தொடங்கலாம்–

தருவாய் தருவாய் என்று அரசாங்கம் எனைப் பிடுங்க

வருவாய் மொத்தமும் தந்து ஓட்டாண்டியாய் நிற்கிறேன்

குருவாய் நீ வரவேண்டாம் இடமில்லை வீட்டில்

தருவாய் வரியற்ற வருவாய் முருகா.

என்று எழுதிக் கொண்டே செல்லலாம்.

அண்மைகளை நிறுத்திக் கவிதை ஆக்குவதற்கு மற்றொரு உதாரணம்–

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி

உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாய்…

வெறுமனே எதிர்வுகள் அல்லது அண்மைகளை நிறுத்துவதை விட ஒரு சூழலுக்கேற்ப நிறுத்துவது மிக நல்ல கவிதையாகிறது. கூடவே ஒரு சந்தம் அமைந்துவிட்டால், ஆஹா, அற்புதம்தான்.

லிமரிக் என்ற கவிதை வடிவத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா பேசியிருக்கிறார்.

ஓர் ஆங்கில உதாரணம் பார்க்கலாம்.

There was a young lady named Bright
Who travelled much faster than light,
She started one day
In the relative way
And returned on the previous night

இங்கே ஒளியைவிட வேகமாகச் செல்லக்கூடிய பொருளோ அலையோ எதுவும் இல்லை என்ற பெளதிகம் தெரிந்திருந்தால் இதன் பொருள் எளிதில் தெரியும். ரிலடிவ் வே என்பது ஐன்ஸ்டீனின் ரிலடிவிடி தியரியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. சுஜாதாவுடைய லிமரிக் ஒன்று.

வள்ளுவரும் மாணவராய் ஆனார்

திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

முடிவு வெளியாச்சு

ஃபெயிலாகிப் போச்சு

பாவம் அவர் படிக்கவில்லை கோனார்.   

நமக்குக் கவிதை எழுத குறுந்தொகை நல்ல முன்மாதிரியாக அமையும். 

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்…

குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென்றது என் தூஉ நெஞ்சம்…

இம்மாதிரி ஒருமாதிரி சொற்களைத் தேர்ந்தெடுத்தல் கவிதைக்கு அடிப்படை. அத்துடன் உங்கள் உள்ளத்திலும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு நெருப்பு இருந்தால் அங்கே உயர்ந்த கவிதையே பிறந்துவிடும்.

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…

கவிதைக்கு யாப்பு கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது கவிதைக்கு இசைந்ததாகத் தானாக வரவேண்டும். உதாரணமாக ஞானக்கூத்தன் கவிதை ஒன்று. வழக்கமான நான்குசீர் பாணியிலிருந்து மாறி மூன்று சீர் அடி என்ற பாணியை எவ்வளவு ஜாலியாகக் கையாளுகிறார் பாருங்கள்.   

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

யாப்பு என்பதற்காக மட்டும் இதை மேற்கோள் காட்டவில்லை. இதிலுள்ள நயமான அங்கதத்தை இரசிக்க வேண்டும்.

இப்போது கவிதைக்கு மிகவும் அடிப்படையாகத் தேவையான மற்றொரு பண்பை அடைகிறோம். அங்கதம்.

அலெக்சாண்டர் போப் என்று ஒரு ஆங்கிலக் கவிஞர். The Rape of the Lock என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு சிறு விஷயத்தைக் காவிய நடையில் எழுதிய கவிதை இது. பெலிண்டா என்ற உயர்குலப் பெண்ணின் தலைமுடிச் சிறுகற்றை ஒன்றை ஒரு பிரபு வெட்டித்திருட முயற்சி செய்கிறான். அதுதான் ரேப் ஆஃப் தி லாக்.

அதனால் கவிதைகள் எல்லாமே அங்கதமாகத்தான் இ்ருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஞானக்கூத்தன் அப்படிப்பட்ட கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். பொதுவாக ஒரு நல்ல மனச்சித்திரம் இருந்தாலே ஒரு கவிதை ஆகிவிடும். உதாரணம். கிணற்றில் விழுந்த நிலவு. வைத்தீஸ்வரனுடைய கவிதை. முதல் கவிதை.

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு

நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு

மணக்கும் அவள் உடலை மணல்மீது தோயவிடு… என்று செல்கிறது அந்தக் கவிதை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், யாப்பு, எதுகை, மோனை, சந்தம் எவ்வளவு இயல்பாக அமைகின்றன என்பது.

இதைச் சொல்லும்போது கவிஞர் சி. மணி எழுதிய நரகம் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. மூன்று மூன்று அசையாக அவர் எழுதும் காட்சி சுவையானது.

உள்ளங்கைக் கோடுகள் / இருளில் மறையும் வேளை / தந்த துணிவு செங்கையை / உந்த நின்ற தையலர் / தலைவன் வரவும் சற்றே / உயரும் தலைவி விழியாக / மறைக்கும் சேலை சாண்தூக்கி / காக்கும் செருப்பை உதறிவிட்டு…

இப்படி இயல்பான யாப்புடன் எழுதுவதுதான் நமது பாரம்பரியம். ஆனால், பாவம் சி.சு. செல்லப்பா பாராட்டிய நல்ல கவிஞர்கள் பெரும் இழித்துரைப்புக்கு ஆளானார்கள். மாறாக ராஜவீணை ராஜ ராகம் இசைக்கிறது என்றெல்லாம் அடுக்கிய வெற்றுச் சொற்றொடர்கள் கவிதைகளாகக் கருதப்பட்டு அந்தப் பாரம்பரியம் வைரமுத்து வரை தொடர்கிறது.

கவிதை எழுதுவது ஈசியா, உரைநடை–சிறுகதை எழுதுவது ஈசியா? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிவம் கைவருகிறது. இந்த இரண்டுமே கைவந்தவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் கவிதைகளை அநேகமாக யாரும் கண்டுகொள்வதில்லை.

      “வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்

                சாதத்துக் காகச் சங்கரனை விற்றிடுவோம்!

                ஆத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதைபேசி

                வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்!

என்று அந்தக் காலத்திலேயே பாடியவர் புதுமைப்பித்தன். வேளூர் கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது மகாகாவியம், ஓடாதீர், இருட்டு போன்ற கவிதைகளைப் படித்தால் ஏளனமும் கிண்டலும் எப்படி யாப்புடன் வந்து அணி செய்கின்றன என்பதைக் காணலாம். உதாரணமாக, ஓடாதீர் என்ற கவிதை.

சொல்லுக்குச் சோர்வேது, சோகக் கதை என்றால் சோடி இரண்டு ரூபாய் காதல் கதை என்றால் கைநிறையத் தரவேணும் ஆசாரக் கதை என்றால் ஆளுக்கு ஏற்றது போல், பேரம் குறையாது–பேச்சுக்கு மாற்றில்லை…

என்று வளர்த்துக் கொண்டுபோய், “காசை வையும் கீழே, பின் கனவுதனை வாங்கும்” என்று கொண்டுசெல்கிறார்.

அது என்னவோ, சிறுகதையாசிரியர்கள் பலருக்கும் கவிதைமீது ஒரு காதல். ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் போல சிறு கவிதைகளை முயன்றுள்ளார். உதாரணமாக, ஒரு சிறிய கவிதை இது.

கைகேயி கெட்டவள் அல்ல, கூனிகூடக் கெட்டவள் அல்ல,

காடுவரை போனவனைப் பாதிவழிபோய் மறித்து

பாதுகையைப் பறித்துவந்தான் பரதனே பாவி…

கடைசியாக, கதை எழுதுவதைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா? அதைப் பற்றியும் ஒரு சிறு மேற்கோளோடு முடித்துக்கொள்கிறேன்.        

சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப் பற்றி சுஜாதா சொன்னார்.    

முதல் வரியிலேயே  வாசகனை கவருங்கள். தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள். அடுத்தவரியில் தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லைஎன்று மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு…’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.

எதிர்ப்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.

கடைசியாக, இதோ சிறுகதை எழுதுவதைப் பற்றி–எதை எழுத வேண்டும் என்பதைப் பற்றிப் புதுமைப்பித்தன் சொல்கிறார் கேளுங்கள்.

“இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”  ஆகவே நேராக மனத்தில் பட்ட உங்கள் அனுபவங்களை அப்படியே எழுதுங்கள். செயற்கையாகக் கதையையோ கவிதையையோ செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு முடித்துவிடுகிறேன்.


தேங்காயின் வளம்

பலகாலத்துக்கு முன்னால், தேங்காய்களை நேசித்த பையன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பினாவோன். தேங்காயின் ஓட்டிலிருக்கும் மூன்று கண்களை (ஓட்டைகளை)ப் பார்த்ததும் அவனுக்கு இரண்டு கண்கள், ஒரு வாய் கொண்ட ஒரு மனித முகத்தைப் பார்ப்பதுபோல் தோன்றியது. “ஒரு நண்பன்” என்று அவன் முணுமுணுத்தான்.
அன்றுமுதல் தேங்காய்களும் பினாவோனும் ஒன்றாகவே இருந்தனர். அவன் கற்களைப் போட்டு விளையாடுவதற்கு பதிலாகத் தேங்காய்களுடன் விளையாடினான். அவற்றை நீரில் மிதக்கவிட்டான். தன் படுக்கையிலேயே அவற்றை வைத்துக் கொண்டு அவற்றிடம் தன் இரகசியங்களை இரவில் கூறினான்.
காலப்போக்கில் அந்த கிராமத்து மக்களும் தேங்காய்களை உண்ண ஆரம்பித்தார்கள். இளநீரையும் வழுக்கையையும் சாப்பிட்டார்கள். நன்கு முற்றிய பழுப்புநிறத் தேங்காய்களின் உள்ளிருக்கும் பருப்பை அவர்கள் கறுக்கு மொறுக்கென்று தின்றார்கள்.
ஆனால் தேங்காய் மேலும் உதவக்கூடியது என்று பினாவோனுக்குத் தெரியும்.
அவன் தேங்காயைத் துருவினான். அதை வெந்நீரிலிட்டுப் பால் ஆக்கினான். தேங்காய்ப் பாலிலிருந்து இனிப்புகளும் அரிசிமாவு சேர்ந்த ரொட்டிகளும், அதில் கிழங்குகள், வாழைப்பழங்கள் இட்ட சூப்புகளும் தயாரித்தான்.
அவன் தயாரித்த உணவுகளை உண்ட மக்கள் அவற்றை இரசித்தனர், விரும்பினர். ஆனால் பினாவோனுக்கு மேலும் செய்ய ஆசை.
ஒருநாள் தேங்காய்ச் சிறட்டையை வைத்துக் கிண்ணம் செய்தான். அதிலிருந்து சிறு பறைகளைச் செய்தான். அதிலிருந்து மணிகளைச் செய்தான்.
மக்கள் பேசத்தொடங்கினார்கள். “தேங்காய்கள் எவ்வளவு விதங்களில் உதவுமாறு நீ செய்கிறாய்! வியப்பாக இருக்கிறது!” என்றார்கள்.
பினாவோனுக்கு மேலும் செய்யத் தெரியும். ஒரு நாள் நாரை உற்றுப் பார்த்தான். “நல்ல பிரஷ்” என்றான். பிறகு நாரைப் பதமாகப் பின்னினான். “படுத்து உறங்க நல்ல விரிப்பு” என்றான். தேங்காய் நார்களை நன்கு பின்னி படுக்கை மெத்தைகள், கயிறுகள், மீன்பிடி வலைகள் முதலியன தயாரித்தான்.
ஆனால் இப்போதெல்லாம் பினாவோன் நாள் முழுவதும் தேங்காய்களை வைத்துச் செய்வதை கிராம மக்கள் பார்த்துத் தலையை ஆட்டியவாறு, “இவன் ரொம்பத்தான் தேங்காய்களில் ஆர்வம் காட்டுகிறான்” என்று கேலியாகப் பேசினார்கள்.
இதை பினாவோன் கேட்டான். தேங்காய்கள் சிறப்பானவை என்று நான் நினைத்தது தவறு என்று நினைத்தான். “நான் இனிமேல் அவற்றைப் பற்றி நினைக்கப் போவதில்லை” என்றான்.
ஒருநாள் கடுமையான புயல் வீசியது. மரங்களெல்லாம் காற்றினால் மிகவும் வளைந் தாடின. வானிலிருந்து ஜெல்லிமீன்கள் விழுவதைப்போலக் கடுந்தூறல் விழுந்தது. கனமழை பெய்தது. அலைகள் உயர்ந்து பெரிய நகரும் சுவர்களைப் போலத் தரைக்கு வந்தன.
கிராமத்தின் வீடுகள் எல்லாம் தரைமட்டமாயின. தென்னை மரங்கள் மட்டுமே உயர்ந்து நின்றன. “நம் கிராமம் பாழாகிவிட்டது. நாம் வேறு எங்காவது செல்ல வேண்டியதுதான்” என்று கிராம மக்கள் தயாராயினர். “நாம் இங்கே வாழமுடியாது.”
பினாவோன் ஒரு தென்னைமரத்தின்மீது சாய்ந்து நின்றான். அதன் உறுதியான அடி மரம் நல்ல ஆதரவாக இருந்தது. தள்ளும் காற்றில் தென்னைகள் எவ்வளவு உறுதியாக நிற்கின்றன என்பதை யோசித்தான்.
திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. “நில்லுங்கள்” என்றான். “தென்னை மரங்களை நாம் வீடு கட்டப் பயன்படுத்தலாம். அதன் அடிமரங்களைச் சுவர்களாகப் பயன்படுத்துங்கள். தென்னை ஓலைகளைக் கீற்றாக்கிக் கூரைக்குப் பயன்படுத்துங்கள்” என்றான்.
கிராமத்தினர் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். “ஒருவேளை அவன் சொல்வது சரியாக இருக்கலாம். முயன்று பார்க்கலாம்” என்றான் ஒருவன். மற்றவர்கள் தலையசைத்தனர்.
இப்போது அவர்கள் தென்னையை வைத்துப் புதிய வீடுகள் கட்டினர். உத்தரங்களுக்கும் மூலைவிட்டங்களுக்கும் தென்னை அடிமரங்களைப் பயன்படுத்தினர். மரங்களைக் குறுக்கில் அரிந்து சுவர்களுக்குத் தடுப்பாக்கினர். ஓலைகளால் கூரைகளை நெய்தனர்.
“இவ்வளவு வலுவான, வசதியான வீடுகளில் நாம் இதுவரை வாழ்ந்ததில்லை” என்றனர் யாவரும்.

-ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நாட்டுப்புறக்கதை,

ஸ்கிப்பிங் ஸ்டோன்ஸ் இதழில் (நவம்பர்-டிசம்பர் 2002, ஆண்டு 14, எண் 5) வெளிவந்தது.


பொம்மை வீடு

நார்வே நாட்டு எழுத்தாளர் இப்சன் (1828-1906) எழுதிய உலகப் புகழ் பெற்ற நாடகம் இது (1879). ஐரோப்பியக் கற்பனாவாத நாடகத்தை யதார்த்த உலகிற்குக் கொண்டுவந்தவர் இவர். இந்த நாடகமன்றி, மக்களின் பகைவன், ஹெட்டா கேப்ளர், பேய்கள், காட்டுவாத்து என மேலும் பல புகழ் பெற்ற நாடகங்களை எழுதியவர். இந்த நாடகம் பெரும் வெற்றி பெற்றது என்பதோடு கடுமையான விமரிசனத் திற்கும் உள்ளாயிற்று. பெண்கள் (ஐரோப்பியப் பெண்களும்கூட!) கடுமையான அடிமைத் தனத்திற்கு ஆளாகியிருந்த அக்காலத்தில் இந்நாடகத்தின் கதாநாயகி நோரா, பெண்களின் விடுதலைப் படிமமாகக் கருதப்பட்டாள். இந்நாடகக் கதையை இங்கு நோக்குவோம்.

நாடகம் கிறிஸ்துமஸுக்கு முன்னாள் மாலையில் தொடங்குகிறது. கடைக்குப் போய்விட்டு நோரா ஹெல்மர் வீடு திரும்புகிறாள். அவள் கணவன் டோர்வால்ட், ஒரு வங்கி மேலாளர். ஒரு பிசிநாறியும் கூட. என் வானம்பாடியே, என் செல்லக்குருவியே, என் இனிய பொம்மையே என்றெல்லாம் கொஞ்சும் அவன், எவ்வளவு பணம் செலவிட்டாய் என்றும் கேட்கிறான். அவன் பதவி உயர்வு பெற்றிருப்பதால் கொஞ்சம் தாராளமாகச் செலவிடலாமே என்று அவள் சொல்கிறாள்.

இச்சமயத்தில் இரண்டு விருந்தினர் – அவள் தோழி லிண்டாவும் மருந்தற்ற ஒரு நோயினால் செத்துக் கொண்டிருக்கும் டாக்டர் ரேங்க் என்பவனும் வருகின்றனர்.

டோர்வால்ட் வாயிலாகத் தனக்கு வேலை கிடைக்கும் என லிண்டா எதிர்பார்க்கிறாள். அவள் ஒரு விதவை. ஆதரிப்பார் இன்றி இருப்பதால் நோராவிடம் தனக்குக் கணவனிடம் சொல்லி, வேலை வாங்கித் தருமாறு வேண்டுகிறாள். நோராவும் ஒப்புக் கொள்கிறாள்.

தன் இல்வாழ்க்கை முதலாண்டு அனுபவங்களை லிண்டாவை நம்பி நோரா சொல்கிறாள். அப்போது டோர்வால்டு அதிகப் பணிச்சுமை யால் நோய்வாய்ப் பட்டிருந்தான். அவனுக்கு உடல்நலம் கிடைக்க நோரா அவனை இத்தாலிக்கு அழைத்துச் செல்கிறாள். அதற்கான பணத்தை நோரா கிராக்ஸ்டெட் என்பவனிடம் கடன் வாங்குகிறாள்.

என்னதான் தன் கணவனால் கொஞ்சப்படும் “பொம்மை”யாக (doll) (இப்படியிருக்குமாறுதான் அக்காலத்தில் நடுத்தர வர்க்கப் பெண்கள் வளர்க்கப்பட்டார்கள்) நோரா இருந்தாலும், தன் வீட்டுச்செலவுப் பணத்திலிருந்து தவறாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து கடனை அடைத்து வருகிறாள்.

இந்தச் சமயத்தில் கிராக்ஸ்டெடும் அங்கு வருகிறான். டோர்வால்டுக்கு யார் பொய் சொன்னாலும், கள்ளக் கையெழுத்து போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டாலும் பிடிக்காது. கிராக்ஸ்டெட் அப்படிப்பட்ட தவறான மனிதன் என்பதால் அவனை வேலையிலிருந்து டோர்வால்ட் நீக்குவதாக இருக்கிறான். கிராக்ஸ்டெட் அவனிடம் கெஞ்சுகிறான்.

அக்காலத்தில் பெண்கள் பொதுக்களத்தில் வரலாகாது, வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது, கடன் வாங்கக்கூடாது. ஆகவே நோரா தன் தந்தையின் கையெழுத்தைத் தானே போட்டுக் கடன் வாங்கியிருக்கிறாள். அதைக் கணவனுக்குச் சொல்லவில்லை. இது நோராவின் “குற்றம்”. இது கிராக்ஸ்டெடுக்குத் தெரியும்.

தன்னைப் பணியிலிருந்து நீக்கினால் நோராவின் ரகசியத்தை அவள் கணவனுக்குச் சொல்வதாக கிராக்ஸ்டெட் பிளாக்மெயில் செய்கிறான். ஆகவே அவனை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என்று நோரா வாதாடுகிறாள். அதை டோர்வால்ட் ஏற்கவில்லை. மேலும் குடும்பத்தில் இரகசியங்களை மறைக்கும் பெண்கள் குடும்பத்தைக் கெடுப்பவர்கள் என்கிறான்.

கிராக்ஸ்டெடின் பணிநீக்க உத்தரவு அவனுக்குப் போய்விடுகிறது. இடையில் டாக்டர் ரேங்க் வருகிறான். அவனிடம் நோரா உதவி கேட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே கிராக்ஸ்டெட் வந்து விடுகிறான். லிண்டா அவனிடம் தன் இரகசியத்தைச் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகிறாள். மாறாக கிராக்ஸ்டெட் நோரா செய்த “குற்றத்தை” ஒரு கடிதம் வாயிலாக டோர்வால்டுக்கு எழுதுகிறான். அதை டோர்வால்டுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லிச் செல்கிறான். அடுத்த நாள் நோரா கிராக்ஸ்டெடின் கடிதம் தன் கணவனுக்கு வரும் என்று எதிர்பார்த்திருக்கிறாள்.

இடையில் லிண்டாவுக்கு கிராக்ஸ்டெட் பற்றிய உண்மைகளை கூற, அவள் கிராக்ஸ்டெட் உடன் உறவு வைத்திருப்பதாகச் சொல்கிறாள். தான் உதவுவதாகவும் சொல்கிறாள். அப்போது டோர்வால்ட் வந்துவிட, அவனிடம் கடிதம் சேர்க்கப்படுகிறது. அக்கடிதத்தைக் கணவன் உடனே படிக்காமல் தடுப்பதற்காக நோரா அடுத்த நாள் பார்ட்டியில் நடனமாட இருப்பதால் அதற்கான ஒத்திகை பார்ப்பதாகச் சொல்கிறாள்.

Symbolism in "A Doll's House" by Henrik Ibsen

மறுநாள் மாலை கணவன்-மனைவி பார்ட்டிக்குச் செல்கின்றனர். அவர்கள் வீட்டில் கிராக்ஸ்டெடும் லிண்டாவும் சந்திக்கின்றனர். இருவரும் ஒருவர் ஏழ்மை நிலையை மற்றவர் புரிந்து கொள்வதால் காதலர்கள் ஆகின்றனர். டோர்வால்ட் கிராக்ஸ்டெடின் வேலையை லிண்டாவுக்கு அளித்திருக்கிறான். ஆனால் இப்போது லிண்டா மாறிவிடுகிறாள். நோரா தன் கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும், அதனால் கிராக்ஸ்டெடின் கடிதம் டோர்வால்டைச் சேரட்டும் என்கிறாள்.

கணவன்-மனைவி பார்ட்டியில் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டு திரும்புகின்றனர். இடையில் டாக்டர் ரேங்க் வந்து தான் இறக்கும் நிலையில் இருப்பதால் தொலைவில் தன்னைப் பூட்டிக் கொண்டு தூங்கப் போவதாகச் சொல்கிறான். நோரா “நன்றாகத் தூங்கு, நானும் தூங்கப் போகிறேன்” என்கிறாள்.

நோரா வீட்டை விட்டுச் சென்று தற்கொலை செய்துகொள்ள ஆயத்தம் செய்கிறாள். டோர்வால்ட் கிராக்ஸ்டெடின் கடிதத்தைப் படிக்கிறான். தன் மனைவிமீது குற்றம் சுமத்துகிறான். தான் அவனைக் காப்பாற்றிய செயலுக்காகத் தன்னைக் கணவன் பாராட்டுவான் என்று நோரா நினைத்திருந்தாள். ஆனால் அவனோ அவளைக் கீழ்த்தரமானவள் என்று ஏசுகிறான். அவள் தன் குழந்தைகளைக் கெடுத்துவிடுவாள், ஆகவே தன் குழந்தைகளை அவள் பார்க்கக்கூடாது என்கிறான். அவன் இவ்வாறு பேசப்பேச நோரா இதயம் வெந்து போகிறாள். தான் நினைத்த மனிதன் அல்ல அவன் என்ற உண்மையை அவள் புரிந்துகொள்கிறாள்.

அடுத்து ஒரு கடிதம் கிராக்ஸ்டெடிடமிருந்து வருகிறது. அதில் நோராவின் கடனை அவன் ரத்து செய்துவிட்டதாக உள்ளது. அவளது பத்திரத்தையும் அவன் திருப்பி அனுப்பியிருக்கிறான். அதைப் படித்தவுடன் தான் கவலைப்படும் படியான குற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்று கூறி டோர்வால்ட் நோராவை மன்னித்து விடுகிறான்.

ஆனால் நோராவின் மனம் முறிந்துவிடுகிறது. அவள் தன் கணவனை விட்டுச் செல்வதாக அறிவிக்கிறாள். கணவனும் தன் தந்தையும் தன்னைக் குழந்தையாகவும் பொம்மையாகவுமே பாவித்து நடத்தினார்கள் என்றும் தான் ஒரு பொம்மை மனைவியாக இருப்பதை அவள் விரும்பவில்லை என்றும் கூறுகிறாள். பெண்கள் கடன் வாங்குவதைத் தடுக்கும் சட்டம் தவறு என்கிறாள். தான் அவனை இத்தாலிக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால் அவன் இறந்திருப்பான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். தன் மண மோதிரத்தை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவனது மண மோதிரத்தை அவனிடம் தந்துவிடுகிறாள். கதவை அடித்துச் சாத்திக் கொண்டு புறப்படுகிறாள்.

ஏறத்தாழ 1900களின் தொடக்கத்தில், இது மிகவும் புரட்சிகரமான ஒரு கதை. தன் கணவனை விட்டு மனைவி பிரிவது என்பது அக்காலத்தில் நிகழக்கூடியதல்ல. பிரான்ஸில் இந்நாடகத்தை முதன் முதலாக நிகழ்த்தியபோது, நோரா தன் கணவனைப் பிரியாமல் வீட்டுக்குள் செல்வதாக மாற்றி அமைத்திருந்தார்கள். ஆனால் இந்த மாற்றத்தை இப்சன் ஏற்கவில்லை.