மாற்று-நெகிழி

பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போதிலும் நுகர்வோர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கவே செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் நச்சுத்தன்மையுள்ள 40000 டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. சுற்றுச்சூழலுக்கிசைந்த ஒரு பொருளை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகத் தயாரிக்க வேண்டும் என அஷ்வத் ஹெக்டே என்ற மங்களூரைச் சேர்ந்த முதலீட்டாளர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு அஷ்வத் ஒரு பசுமைத் தொழில்நுட்ப மாற்றினைக் கண்டுபிடித்தார். அவரும் அவரோடு சேர்ந்த 11 அறிவியலாளர்கள், சூழலியலாளர்களும் இந்தப் பொருளை உற்பத்தி செய்வதற்காக என்விகிரீன் பயோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் 100 சதம் இயற்கையான, மக்கக்கூடிய, பைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கிறது. பார்ப்பதற்கு அவை பிளாஸ்டிக் பைகளைப் போன்றே இருக்கின்றன.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத இந்தப் பைகள் உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்குகளிலிருந்து கிடைக்கும் இயற்கையான மாவுப்பொருள், தாவர எண்ணெயிலிருந்து கிடைக்கும் பொருட்கள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. 180 நாட்களில் இந்தப் பைகள் மக்கிவிடும். தண்ணீரில் முக்கினால் ஒரு நாளில் கரைந்துவிடும். நாம் வழக்கமாக கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் எவ்வளவு எடையைத் தாங்குமோ அவ்வளவு எடையை இந்தப் பைகளும் தாங்கும். 8-லிருந்து 10 கிலோகிராம் வரை தாங்கக் கூடிய பெரிய பைகளும் உண்டு. இவற்றை உட்கொள்ளும் விலங்குகளுக்கு பிளாஸ்டிக் பைகளைப் போல் இவை தீங்கு செய்வதில்லை.

“என்விகிரீன் ( EG) பைகள் 100 சதம் இயற்கையானவை, உட்கொள்ளத்தக்கவை, மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. தொடர்ந்து நாம் பயன்படுத்தினால் ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக்கையே நம் நாட்டிலிருந்து ஒழித்துவிடலாம்” என்கிறார் ஹெக்டே.

ஒரு பசுமைப் பையின் விலை பிளாஸ்டிக் பையின் விலையைவிட அதிகம்தான். ஆனால் ஒரு துணிப்பையின் விலையைவிடக் குறைவானது என்கிறார் அஷ்வத்தின் குழுவில் உள்ள ஓர் உறுப்பினர். “பசுமைப் பைகளில் ஒரு சதம் கூட பிளாஸ்டிக்கோ வேறு வேதியியல் பொருட்களோ கிடையாது. பைகளில் அச்சிடப் பயன்படுத்தும் பெயிண்ட் கூட பசுமைப் பொருட்களால் ஆனது” என்கிறது என்விகிரீன் நிறுவனம். கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட், தொழில் ஆராய்ச்சிக்கான ஸ்ரீராம் இன்ஸ்டிட்யூட் ஆகிய நிறுவனங்கள் பல சோதனைகளை நடத்தி இயற்கைப் பைகளில் சிறிதளவு கூட பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதி செய்திருக்கின்றன.

கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் போக, குப்பை போடும் பைகள், எண்ணெய் அடங்கிய சிறு பைகள் (sachets)), குப்பைத் தொட்டிகள், பிலிம் பாக்கெட்டுகள், மேலங்கிகள், உறைகளுக்கான கவர்கள், சலவைப் பைகள் போன்ற பல்வேறு பொருட்களையும் என்விகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயிகளிடமிருந்து காய்கறிக் கழிவுகளை நல்ல விலை கொடுத்து வாங்கி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் நிறுவனம் உதவுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படூம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் சுற்றுச்சூலுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்கவும் என்விகிரீன் நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளை வரவேற்போம்.. வாழ்த்துவோம் !


மேனிலையாக்கத் தமிழர்கள்

தமிழர்கள் உயர்ந்த நிலை பெறும்போது தங்களைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்வதில்லை, வேறு மாநிலத்தவர்களாகக் காட்டிக் கொள்வது அடிக்கடி நடக்கும் விஷயம். ஏ.கே. இராமாநுஜன், ஆர்.கே. நாராயணன் போன்றவர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழகத்தில் அவர்களின் தந்தை/தாய்/பெற்றோர் இருவரும் பிறந்திருப்பர், அல்லது தாங்களே பிறந்திருக்கலாம், இருப்பினும் புகழ்வரும்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தவர் ஆகிவிடுகின்றனர். இவர்களின் முன்னோடி மாஸ்தி வேங்கடேச ஐயங்காரும் அப்படியே. சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்படியே. சர்வபள்ளி திருத்தணிக்கு மிக அருகிலுள்ள சிற்றூர். ஆனால் இப்போதெல்லாம் அவரை ஆந்திரர் என்றே அடையாளப் படுத்துகிறார்கள்.
இந்த வரிசையில் அண்மையில் என் மருமகனும் சேர்ந்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. திரு. டாக்டர் அருண் (அருணாசலம்) எம்.டி., ஐ.ஏ.எஸ்., என் தங்கை மகன். அவர் தந்தை சோளிங்கர் அருகில் ஆயல் கிராமத்தில் பிறந்தவர். தாய் ஆர்க்காடு. மைசூரில் தந்தை இரயில்வே வேலையிலிருந்த காலத்தில் பிறந்ததனால் அவர் மைசூர்க்காரர் ஆகிவிட்டார். ஐஏஎஸ் முடித்து இப்போது மிசோரம் பகுதியில் ஒரு கலெக்டராக இருக்கும் நிலையில் அவர் சிறந்த நற்பணிகள் ஆற்றிவருகிறார். அவரது சேவை மனப்பான்மை மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. ஆனால் தன்னைப் பற்றி பேட்டி எடுத்த ஆங்கிலப் பத்திரிகையில் அவர் மைசூர்ப்பகுதியைச் சேர்ந்தவராக (கன்னடராக)த் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்பது வருத்தத்தை தருகிறது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்தது போல தமிழ்நாட்டு அறிவுஜீவிகளையும் அடுத்த மாநிலத்துக்கே தருகின்ற தமிழகத்தின் அவப்பேற்றினை என்ன சொல்ல?