அறப்பளீசுர சதகம்

சதகம் என்பது ஒரு சிற்றிலக்கிய வகை. சதகம் என்றால் நூறு பாக்கள் கொண்ட இலக்கிய வகை என்று பொருள். சதக நூல்கள் நல்ல நீதிகளை எளிய நடையில் இனிமையாக எடுத்துரைப்பனவாக உள்ளன. தமிழில் பல சதக நூல்கள் உண்டு. அதில் அறப்பளீசுர சதகம் என்பதும் ஒன்று.
அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. நூற்பெயர் பாட்டுடைத் தலைவனால் வருவது. அறப்பளீசுவரர் கோயில் (சிவன் கோயில்) கொல்லி மலையில் உள்ளது. இதில் நூறு பாக்கள் இல்லை, 51 பாக்களே உள்ளன. சான்றுக்கு ஒரு பாவினைக் காணலாம். இது 14ஆம் பாட்டு.

வாலிபம் தனில் வித்தை கற்க வேண்டும் கற்ற வழியிலே நிற்க வேண்டும்
வளைகடல் திரிந்து பொருள் தேட வேண்டும் தேடி வளர்அறம் செய்ய
வேண்டும்
சீலமுடையோர்களைச் சேர வேண்டும் பிரிதல் செய்யாதிருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல் பல கொள்ள வேண்டும் கொண்டு தியாகம் கொடுக்க
வேண்டும்
ஞாலமிசை பல தருமம் நாட்ட வேண்டும் நாட்டி நன்றாய் நடத்த வேண்டும்
நம்பன் இணையடி பூசை பண்ண வேண்டும் பண்ணினாலும் மிகு பக்தி
வேண்டும்
ஆலம் அமர் கண்டனே, பூதியணி முண்டனே, அனக எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

எனக்காகவே எழுதப்பட்டது போன்ற ஒரு பாடல் இது.

கோபமே பாவங்களுக்கெலாம் தாய் தந்தை கோபமே குடிகெடுக்கும்
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது கோபமே துயர் கொடுக்கும்
கோபமே பொல்லாது கோபமே சீர்கேடு கோபமே உறவு அறுக்கும்
கோபமே பழிசெயும் கோபமே பகையாளி கோபமே கருணை போக்கும்
கோபமே ஈனமாம் கோபமே எவரையும் கூடாமல் ஒருவனாக்கும்
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீநரகு குழியினில் தள்ளிவிடுமால்
ஆபத்தெலாம் தவிர்த் தென்னை ஆட்கொண்டருளும் அண்ணலே அருமை
மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

அருமையான எளிய இந்த நூலைப் படித்துப் பயனடைவோம்.


ஆத்திசூடி

இன்றைய சிறார்கள் பழந்தமிழ் நீதிநூல்கள் சிலவற்றையேனும் படிப்பதும் மனப்பாடம் செய்வதும் அவசியம். ஆனால் அவை கிடைப்பதில்லை. புத்தகச் சந்தைகளில்கூட ஆங்கிலம் கற்கும், பேசும் நூல்கள் மண்டிக்கிடக்கின்றனவே ஒழிய தமிழ் அறநெறி நூல்களைக் காண முடிவதில்லை.
இந்தப் பதிவில் ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி நூலைப் படைக்கிறேன். ஆத்திச் சூடி அல்ல. ஆத்தி சூடிதான். ஆத்தி சூடி என்றால் ஆத்தியைச் சூடுபவன், அதாவது ஆத்தி மாலையைச் சூடுகின்ற சிவபெருமான். மொத்தம் நூற்றெட்டு அடிகளை உடையது இந்நூல். இதைக் கற்பதும் மனப்பாடம் செய்வதும் மிக எளிது.
ஆத்திசூடி–நூல்

அறஞ்செய விரும்பு 1
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கம் அது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புர ஒழுகு
ஓதுவது ஒழியேல் 11
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
கண்டொன்று சொல்லேல்
ஙப்போல் வளை
சனிநீராடு
ஞயம்பட உரை
இடம்பட வீடு எடேல்
இணக்கமறிந்து இணங்கு
தந்தைதாய் பேண்
நன்றி மறவேல் 21
பருவத்தே பயிர்செய்
மண்பறித்து உண்ணேல்
இயல்பலாதன செயேல்
அரவம் ஆட்டேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகலாதன செயேல்
இளமையிற் கல்
அறனை மறவேல்
அனந்தல் ஆடேல் 31
கடிவது மற
காப்பது விரதம்
கிழமைப்பட வாழ்
கீழ்மை அகற்று
குணமது கைவிடேல்
கூடிப் பிரியேல்
கெடுப்பது ஒழி
கேள்வி முயல்
கைவினை கரவேல்
கொள்ளை விரும்பேல் 41
கோதாட்டு ஒழி
சக்கர நெறிநில்
சான்றோர் இனத்திரு
சித்திரம் பேசேல்
சீர்மை மறவேல்
சுளிக்கச் சொல்லேல்
சூது விரும்பேல்
செய்வன திருந்தச்செய்
சேரிடம் அறிந்துசேர்
சை எனத் திரியேல் 51
சொற் சோர்வு படேல்
சோம்பித் திரியேல்
தக்கோன் எனத்திரி
தானமது விரும்பு
திருமாலுக்கடிமை செய்
தீவினை அகற்று
துன்பத்திற்கிடங் கொடேல்
தூக்கி வினைசெய்
தெய்வம் இகழேல்
தேசத்தோடு ஒத்துவாழ் 61
தையல்சொல் கேளேல்
தொன்மை மறவேல்
தோற்பன தொடரேல்
நன்மை கடைப்பிடி
நாடு ஒப்பன செய்
நிலையில் பிரியேல்
நீர் விளையாடேல்
நுண்மை நுகரேல்
நூல் பல கல்
நெற்பயிர் விளை 71
நேர்பட ஒழுகு
நைவினை நணுகேல்
நொய்ய உரையேல்
நோய்க்கு இடங்கொடேல்
பழிப்பன பகரேல்
பாம்பொடு பழகேல்
பிழைபடச் சொல்லேல்
பீடு பெற நில்
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
பூமி திருத்தி உண் 81
பெரியாரைத் துணைக் கொள்
பேதமை யகற்று
பையலோடு இணங்கேல்
பொருள்தனைப் போற்றிவாழ்
போர்த்தொழில் புரியேல்
மனம் தடுமாறேல்
மாற்றானுக்கு இடம்கொடேல்
மிகைபடச் சொல்லேல்
மீதூண் விரும்பேல்
முனைமுகத்து நில்லேல் 91
மூர்க்கரோ டிணங்கேல்
மெல்லிநல்லாள் தோள்சேர்
மேன்மக்கள் சொற்கேள்
மைவிழியார் மனையகல்
மொழிவது அற மொழி
மோகத்தை முனி
வல்லமை பேசேல்
வாது முற்கூறேல்
வித்தை விரும்பு
வீடுபெற நில் 101
உத்தமனாய் இரு
ஊருடன் கூடிவாழ்
வெட்டெனப் பேசேல்
வேண்டி வினைசெயேல்
வைகறைத் துயிலெழு
ஒன்னாரைத் தேறேல்
ஓரஞ்சொல்லேல் 108