பாடும் பறவையைக் கொல்லுதல்

இந்த நாவல். 1960இல் வெளியாயிற்று. இதன் ஆசிரியர் ஹார்ப்பர் லீ என்னும் அமெரிக்கப் பெண்மணி. இது நவீன அமெரிக்க இலக்கியத்தில் ஒரு முதன்மையான படைப்பு எனக் கருதப்படுகிறது.

இதன் கதை, 1933-35 காலத்தில் நிகழ்ந்தது. இதைச் சொல்பவள், ஆறுவயதுச் சிறுமி ழீன் லூயிஸா ஃபிஞ்ச் (இவளின் செல்லப் பெயர் ஸ்கவுட்). தந்தை அட்டிகஸ், ஒரு பெயர்பெற்ற வழக்கறிஞர். அண்ணன் ஜெம் (ஜெரமி). இவர்கள் நண்பன் டில். இவளது தந்தையின் அன்பும், அண்ணன் மற்றும் கோடை விடுமுறைக்கு வரும் டில்லோடு விளையாடிய விளையாட்டுகள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை விவரிக்கிறது. இந்த மூவரும் இவர்கள் கண்ணில் படாமல் தனித்து வசிக்கும் பக்கத்து வீட்டு நபர் “பூ” ரேட்லி என்பவரைப் பார்த்து பயப்படுகின்றனர். ஆனால் பலமுறை அவர்களுக்கு பூ பரிசுகளைத் தன் வீட்டின் வெளிப்புறம் விட்டுச் செல்கிறார்.

மேயெல்லா எவல் என்ற வெள்ளைப் பெண்ணை டாம் ராபின்சன் என்ற கருப்பினத்தவன் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாகச் செய்தி வெளியாகிறது. நகர ஷெரிஃபின் அறிவுரைப்படி அட்டிகஸ் அவனுக்கு ஆதரவாக வழக்காட முன்வருகிறார்.

இதற்காக ஜெம்மையும் ஸ்கவுட்டையும் பிற சிறார்கள் கேலி செய்கின்றனர். தன் தந்தையின் சார்பாக ஸ்கவுட் போரிடுகிறாள். இது பெருஞ்சண்டையாக மூள்கிறது. டாமைத் தாக்குவதற்காக ஒரு கும்பல் ஒரு நாளிரவு வருகிறது. அட்டிகஸ் அவர்களை எதிர்கொள்கிறார். அவர்களில் ஒருவனை- அவன் ஸ்கவுட்டின் வகுப்புத்தோழனின் தந்தை- கண்டுபிடித்து ஸ்கவுட் பேசி, கும்பல் மனப்பான்மையைத் தகர்க்கிறாள். அவர்கள் கலைந்து செல்கின்றனர்.

டாம் இடக்கை ஊனமுள்ளவன் ஆதலின், மேயெல்லாவின் வலப்புறம் காணப்படும் காயங்களை அவன் உண்டாக்கியிருக்க முடியாது என்றும், அவை அவளின் சொந்தத் தகப்பன் பாப் எவல் அவள் டாமின் மீது கொண்ட காதலைத் தடுக்கவேண்டி உருவாக்கினவை என்றும் அட்டிகஸ் நிறுவுகிறார். ஆயினும் வெள்ளையர்கள் ஆன ஜூரிகள் டாமுக்கு எதிராகத் தீர்ப்பளித்து சிறையிலடைக்கின்றனர். ஆனால் சிறையிலிருந்து தப்ப டாம் முயலும்போது வெள்ளைக் கும்பலில் உள்ளவர்கள் அவனைப் பதினேழுமுறை சுட்டுக் கொல்லுகின்றனர். ஜெம் நீதித்துறை மீதான நம்பிக்கையை அறவே இழக்கிறான்.

டாமின்மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் விசாரணை பாப் எவலின் மரியாதையைக் குலைத்துவிடுகிறது. அவன் பழிவாங்கப் போவதாகச் சொல்லி அட்டிகஸின் முகத்தில் காறி உமிழ்கிறான். பின்னர் ஒரு நாள் நீதிபதியின் வீட்டுக்குள் உடைத்துப் புகுகிறான். டாம் ராபின்சனின் மனைவியைத் துன்புறுத்துகிறான். ஹாலோவீன் கலைநிகழ்ச்சி ஒன்றில் ஜெம்மும் ஸ்கவுட்டும் கலந்துகொண்டு இரவில் திரும்பி வரும்போது அவர்களைத் தாக்குகிறான் பாப் எவல். ஜெம்மின் கை உடைகிறது. ஆனால் நல்லவேளையாக ஒருவர் வந்து பாப் எவலை அடித்து, சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றுகிறார். ஜெம்மை வீட்டுக்குத் தூக்கிச் செல்கிறார். அவர்தான் பூ ரேட்லி என்று கண்டுகொள்கிறாள் ஸ்கவுட்.

நகர ஷெரிஃப் ஆன டேட் வருகிறார். கத்திக் குத்தால் பாப் எவல் இறந்துவிட்டான் என்று காண்கிறார். ஜெம் ஒருவேளை கொலைக்குக் காரணமாக இருப்பான் என்று அட்டிகஸ் கூறினாலும், ஷெரிஃப் அது பூ தான் என்று கண்டுபிடிக்கிறார். அவரைக் காப்பாற்ற வேண்டி சண்டையின் போது பாப் தன் கத்தியின்மீது தானே விழுந்து இறந்துவிட்டான் என்று அறிவிக்கிறார். பூ, ஸ்கவுட்டைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கிறார். அவர் வீட்டு வாசலில் அவள் விட்டதும், குட் பை கூறிவிட்டு அவர் வீட்டுக்குள் செல்கிறார். பிறகு அவர் ஸ்கவுட் கண்ணில் படவேயில்லை. தனித்து வாழும் அவர் கண்ணோட்டத்தில் வாழ்க்கையைக் கற்பனை செய்கிறாள் ஸ்கவுட்.

இக்கதை அமெரிக்காவில் ஒரு பேரெழுச்சியை உண்டாக்கியது. இனவெறியின் அநீதிகளும் சிறார்ப்பருவ வெகுளித்தனத்தின் முடிவும் இக்கதையின் முக்கியக் கருப்பொருட்களாக உள்ளன. ஆங்கிலம் பேசும் பல நாடுகளில் சகிப்புத்தன்மை, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பண்பு ஆகியவற்றைக் கற்போரிடம் வளர்க்கும் விதமாக இந்தக் கதை எழுதி வெளிவந்த உடனே பல பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டது. ஆனால் இனவெறி பற்றிக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களைக் காரணம் காட்டி இப்புத்தகம் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பும் எழுந்தது.

“மாக்கிங் பேர்ட்” என்பதைத் தமிழ் லெக்சிகன் “பாடும் பறவை” என்று சொல்கிறது. இது இந்த நாவலில் எளிய வெள்ளையுள்ளம் படைத்த மனிதர்களுக்கு ஒரு குறியீடாக வருகிறது.

வெள்ளையின மக்கள் இப்புதினத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் கருப்பினக் கதாபாத்திரங்கள் முழுமையாகச் சித்தரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து கருப்பின மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

மிகவும் பிரபலமான இப்புதினம்  புலிட்சர் பரிசும் பல்வேறு பரிசுகளும் பெற்றதில் வியப்பில்லை. இக்கதை 1962ல் ஆங்கிலத்தில் திரைப்படமாக்கப்பட்டு அதுவும் ஆஸ்கார் விருது பெற்றது.


ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம்

மெக்சிகோவைச் சேர்ந்த நாவலாசிரியர் கார்லோஸ் ஃபுவெண்டஸ் (Carlos Fuentes). அவரது முக்கிய நாவல் “ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம்”. 1960-70கள் இடையில் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் ஒரு பெருவளர்ச்சி, அல்ல, பெருவெடிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணமானவர்கள் கார்லோஸ் ஃபுவெண்டஸ், ஜூலியோ கோர்த்தஸார், ஜோர்ஹே லூயி போர்ஹே, காப்ரியேல் கார்சியா மார்க்விஸ் ஆகியோர். மெக்சிகோவின் 1910 புரட்சியைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த சமூக வரலாற்று நாவல் இது, நனவோடை உத்தியை முதன்முதலாகக் கையாண்ட நாவலும் இதுதான் என்பார்கள்.

ஆர்ட்டெமியோ குரூஸ் என்பவன் கதைத்தலைவன். 71 வயதாகும் அவன் மரணப் படுக்கையில் கிடக்கிறான். அவன் நினைவுகளில் இருபதாம் நூற்றாண்டு மெக்சிகோ சித்திரமாகிறது. மெக்சிகோ புரட்சியில் பங்கெடுத்த ஒரு சிப்பாய் அவன். அப்புரட்சி நிலச்சீர்திருத்தம், நில மறுபங்கீடு பற்றியது. ஏராளமாக நிலத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களிடமிருந்து நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்குத் தருவது. 1920களில் அப்புரட்சி வெற்றியடைந்தாலும் தொடர்ந்து 1942 வரை சண்டைகள் நடக்கின்றன. புரட்சி கீழ்த்தர குழுச்சண்டைகளாக மாறிப் போகிறது.

புரட்சி நிறைவுற்ற பின்னர் பணத்தைக் குவிப்பது ஒன்றே குரூஸின் வாழ்க்கையாகிறது. எவ்வளவு ஊழல்மிக்க எந்தத் தீயவழியாக இருந்தாலும் தனது இலக்கினை அடைவதற்குக் கையாளுகிறான் குரூஸ்.

கதையின் பிற்பகுதியில் குரூஸ், ஒரு பண்ணை அடிமைப் பெண்ணுக்குத் தகாத வழியில் பிறந்தவன் என்பது தெரியவருகிறது. குரூஸ் பிறந்தவுடனே அவன் தாய் அடித்துத் துரத்தப்படுவதால், அவனை அவனது மாமன் லூனரோ வளர்க்கிறான். லூனரோ இறந்த பிறகு புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்கிறான் இளைஞனான குரூஸ். பின்னர் விவசாயிகளுக்குத் தேவையான நிலம் கிடைக்கிறது. ரெஜினா என்ற பெண்மீது காதல் கொள்கிறான். ஆனால் அவள் தூக்கிலிடப்படுகிறாள்.

ஒரு குழுவில் போரிடும்போது குரூஸ் கான்சாலோ பெர்னால் என்ற இளம் அதிகாரியுடன் சிறைப்படுகிறான். அவனிடமிருந்து அவன் வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை எல்லாம் அறிகிறான். பெர்னால் மரண தண்டனை அடைகிறான். குரூஸ் மன்னிக்கப் படுகிறான். பெர்னாலைக் காப்பாற்ற இவன் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

தன்னுடன் சிறையிலிருந்த பெர்னாலை ஏமாற்றி அவனிடமிருந்து பெற்ற தகவல்களை வைத்து அவன் சகோதரியை பிளாக்மெயில் செய்து திருமணம் செய்து கொள்வது குரூஸுக்குத் தவறாகத் தெரியவில்லை. காதலற்ற திருமணமாக இருந்தாலும், கேடலினா பெரிய நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதாலும் இத்திருமணத்தில் ஈடுபடுகிறான். கேடலினாவின் தந்தை டான் பெர்னால் இறக்கும்போது அவனுக்கு எல்லாச் சொத்தும் (பெரும்பாலும் அது நிலமாக இருக்கிறது) வந்து சேர்கிறது.. புரட்சிப் போராட்டத்தில் எப்படிப்பட்ட சுயநலவாத, பழிக்கு அஞ்சாத பணக்காரர்களை  எதிர்த்துப் போராடினானோ அதேபோன்ற ஒருவனாக இவனே இப்போது மாறிவிடுகிறான்.

குடும்பத்தின் சொத்துகளைத் தனது பதவி, ஏமாற்றுகள், ஊழல்களால் அதிகரிக்கிறான். பிறகு மெக்சிகோவின் செய்தித்தாள் ஒன்றை வாங்கி, அதன் வாயிலாகத் தன் அதிகாரத்தை நிறுவுகிறான். அவனுடன் ஒத்துழைக்காத அரசியல் நபர்களின் கெளரவத்தைக் கெடுத்து அவர்கள் தொழில்களைப் பாழடிக்கிறான். இயற்கை வளங்களை அமெரிக்காவுக்கு விற்கும் ஊழல் தொழிலதிபர்களுக்குக் கருவியாக இருக்கிறான்.

அவனது மகன் லாரன்ஸோ. அவன்மீது அவன் தாய் கேடலினா பாசமாக இருக்கிறாள். அவனுக்கு 12 வயதாகும்போதே தாயிடமிருந்து பிரித்து கோகுயா என்ற இடத்திலுள்ள குடும்ப நிலத்தை மேற்பார்வை செய்ய மகனை அனுப்புகிறான். 17 வயது ஆகும்போது தனது இயல்பான லட்சிய சுபாவத்தின்படி அவன் பாசிசவாதிகளை எதிர்க்க ஸ்பெயினுக்குச் செல்கிறான். அங்கு போரில் அவன் கொல்லப்படுகிறான். குரூஸுக்கு தெரஸா என்ற மகள் மட்டுமே எஞ்சுகிறாள். மரணப்படுக்கையிலும் தன் உயிலின் இருப்பிடத்தைப் பற்றித் தவறான தகவல்களை மனைவிக்குத் தருகிறான். காரணம், தன் மகளால் பயனில்லை என்று தன் பெரும்பாலான சொத்துகளை அவனது காரியதரிசி பாடிலாவுக்கு அளித்திருக்கிறான்.

செயல்களுக்கு மனிதர்களைத் தூண்டுகின்ற இலட்சியவாதத்தின் சக்தி போகப்போக மங்குவதைப் பற்றி இந்த நாவல் சொல்கிறது. அந்த ஒளியில் மெக்சிகோ புரட்சியின் வரலாற்றை வைத்துப் பார்க்கிறது. இலட்சியவாத மதிப்புகளை இளமையில் கொண்டிருந்த குரூஸ், தனிப்பட்ட ஆதாயத்துக்காக எதையும் செய்யும் ஒரு தீய முதியவனாக மாறுகிறான். மரணப் படுக்கையில் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, அவன் “சாதனைகள்” யாவும் பயனற்றவை என்ற உண்மைக்கு அவன் கண்கள் திறக்கின்றன. அவனது வாழ்க்கைக்கு அர்த்தமளித்தவை என்று அவன் நினைத்த அதிகாரம், ஆதிக்கம், பணம், பெண்கள் யாவும் இறுதியில் அவன் ஆன்மாவைக் களங்கப்படுத்தவே உதவியிருக்கின்றன.

அவன் வாழ்க்கை முழுவதுமே மரணப்படுக்கையில் அவன் கண் முன்னால் வந்து போவதாகக் கதை அமைகிறது. பலவேறு நடைகளைக் கலந்து ஃபுவெண்டஸ் கையாளுகிறார். தன்மைக் கூற்றாகவும், படர்க்கைக் கூற்றாகவும் பல பகுதிகள் மாறி மாறி அமைகின்றன. அவை திரும்பத்திரும்ப நனவோடையாக மாறுகின்றன. அவனது சிதைந்த ஞாபகங்கள் வாயிலாக ஒரு தனிமனிதனின் சிதைவை மட்டும் ஃபுவெண்டஸ் காட்டவில்லை, ஒரு புரட்சிக்காரனின் இலட்சியங்கள் சிதைவதைக் காட்டுகிறார், ஒரு தேசத்தின் இலட்சியக் கனவுகள் கருமையடைவதைக் காட்டுகிறார்.
ஒன்றிய அரசு முதலாக நம் நாடு நெடுகிலும் பல்வேறு மாநிலங்களிலும் நிறைந்திருக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நல்ல பாடமாக அமையக் கூடிய நாவல் இது. தங்கள் தனிப்பட்ட செயல்கள் என்று அவர்கள் நினைப்பவை உண்மையில் நம் நாட்டின் சமூக வரலாறும்தான். மரணப் படுக்கை வரை செல்லாமல் சற்று வழியிலேயே தங்கள் உண்மையான சாதனை என்ன என்பதை அவர்கள் நிதானமாக நினைத்துப் பார்த்தால் தங்கள் இருப்பின் அர்த்தத்தை அவர்கள் உணர முடியும்.


மால்கம் எக்ஸின் சுயசரிதை

சென்ற வாரம் அம்பேத்கரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் சில பகுதிகளை பீமாயணம் என்ற நூல் வாயிலாகப் பார்த்தோம். இவ்வாரம் கருப்பினப் போராளியான மால்கம் எக்ஸ் என்பவரின் வாழ்க்கை பற்றி அவரது சுயசரிதை வாயிலாகக் காணலாம். அது The Autobiography of Malcolm X என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

மால்கம் எக்ஸ் (மே 19, 1925 – பிப்ரவரி 21, 1965) ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்க முஸ்லிம் மறை பரப்புனரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுத்தவர். வெள்ளை அமெரிக்காவை கருப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காகக் கடுமையான சொற்களால் சாடியவர். ஆனால் அவரது எதிர்ப்பாளர்கள் நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவர் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்கள். ஆயினும் அவர் செல்வாக்கு மிக்க ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

இந்தத் தன்வரலாற்று நூல், மால்கம் எக்ஸின் கோபம், போராட்டம், நம்பிக்கைகளை மட்டுமல்லாமல், 1960களில் வாழ்ந்த பெரும்பான்மை ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் படைப்பு, இந்தத் தலைவர் மால்கம் லிட்டில் என்ற குழந்தையாக ஒமாஹா, நெப்ராஸ்காவில் 1925இல் பிறந்ததிலிருந்து 1965இல் நியூயார்க்கில் அவர் கொல்லப்பட்டது வரை அவர் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. முழு சமூகச் சமத்துவத்தை அமெரிக்காவின் ஆப்பிரிக்க இனத்தவர்கள் அடையவேண்டுமானால் புரட்சி ஒன்றுதான் வழி என்பதை வலியுறுத்த மிகக் கோபமான நடையை அவர் கையாளுகிறார்.

தனது நம்பிக்கைகளின் பின்னணியாக அவர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த, தான் இழிவுபடுத்தப்பட்ட சம்பவங்களை அவர் தொடர்புறுத்துகிறார். அவரது தந்தை மார்க்கஸ் கிரேவி என்பவரின் பிரிவினை வாதத் தத்துவத்தில் ஈடுபட்டவர். அவரது சூடான பிரச்சாரத்தினால், மால்கமும் அவரது ஏழு உடன்பிறந்தோரும் நிறைய பயமுறுத்தல்ளைச் சந்திக்கவும்  சகிக்கவும் வேண்டி வந்தது.

இந்தப் படைப்பு இதன் ஆசிரியரின் வாழ்க்கையைக் காலவரிசைப்படி காட்டுவது மட்டுமல்லாமல், நாற்பதாண்டுக் காலமாக அமெரிக்காவில் வாழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மாறிவந்த பங்களிப்புகள், அவர்களிடையே வளர்ந்து வந்த சமூக-அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றைப் பற்றிய சமூகவியல் ஆய்வாகவும் அமைந்துள்ளது.

முக்கியமாக அன்றிருந்த, வெள்ளையர்கள் பணிபுரிந்த கருப்பர்களின் நலவாழ்வுத் திடடத்தை மிகுந்த கசப்புடன் அவர் சாடுகிறார்.

அவர் தந்தை நிறவெறியர்களால் கொல்லப்பட்டார். அவர் தாய் எட்டுக் குழந்தைகளைப் பராமரிக்க மிகுந்த கஷ்டப்பட்டு உழைக்கவேண்டி யிருந்தது. ஆயினும் நலவாழ்வுத் திட்டம் என்ற பெயரால் எட்டுக் குழந்தைகளையும் அநாதை விடுதியில் பணியாளர்கள் விட்டனர். அதனால் அவர்கள் தாய் மனமுடைந்து போனார். அவரை அவர்கள் மிச்சிகன் மாகாண கலமாஜூ என்ற ஊரில் ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவங்கள் ஆசிரியரின் மனத்தில் நிலையாக நின்றுவிட்டன. இருப்பினும் சிறுவயதில் அவர் தன்னைப் போன்ற பல கருப்பினத்தவர்கள் செய்தது போல, வெள்ளைச் சமூகம் தன்னிடம் எதிர்பார்த்த பங்கினை நிறைவேற்றி, ஒரு நல்ல நீக்ரோவாக வாழவே முயற்சி செய்தார். அதற்காகத் தனது முடியைச் சுருள் அமைப்பிலிருந்து நேராக்கியும், ஜூட் சூட் எனப்படும் ஆடையணிந்தும், தன்னை அவர்கள் மூளைச் சலவை செய்ய விட்டார்.

ஆனால் காலம் செல்லச்செல்ல, அவர் சட்டத்துக்குப் புறம்பான பல செயல்களில் ஈடுபட்டார். ‘மாமா’ வேலை செய்தல், போதை மருந்துகள் விற்றல், கொள்ளையடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். ஆனால் கைது செய்யப்பட்டபோது, அவர் ஒரு வெள்ளைப் பெண்மணியுடன் தொடர்பிலிருந்தார் என்று கூறி அவருக்குப் பிறரை விட மிக அதிகமான ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டது.

21 வயதான போது ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தார். அப்போது சிறையிலேயே அவருக்கு நேஷன் ஆஃப் இஸ்லாம் (இஸ்லாமிய தேசிய இயக்கம்) என்பதன் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவர் கருப்பின-முஸ்லிம் மதத்தின் உறுப்பினரானார். விடுதலைக்குப் பிறகு, தனது மால்கம் லிட்டில் என்ற பெயரின் லிட்டில் என்ற சொல்லை விடுத்து, எக்ஸ் என்பதைச் சேர்த்துக் கொண்டார். (கணிதத்தில் எக்ஸ் என்பது அறியாத எண்/நிலை ஒன்றைக் குறிப்பதாகும்.)

தன் வரலாற்றின் இரண்டாம் பாதி கருப்பின முஸ்லிம்களின் கொள்கைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களை எடுத்துக் காட்டுகிறது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவின் பல இடங்களிலும் அடிக்கடி கல்லூரி வளாகங்களிலும் உரைநிகழ்த்தி, புதிதாக இளைஞர்கள் பலபேரை மதமாற்றமும் செய்தார்.

1964 மார்ச் அளவில், இஸ்லாமிய தேசிய இன அமைப்பின் மீதும், அதன் தலைவா் எலையா முஹமது மீதும் மால்கம் எக்ஸுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவா்களோடு இருந்து தன் நேரம் விரயமானதாக அவா் நினைத்தார், அதற்காக வருந்தி பின்னா் சன்னி மதப்பிரிவில் இணைந்தார். ஆப்ரிக்காவிலும். மத்திய கிழக்கிலும் பயணம் மேற்கொண்டு ஹஜ் பயணமும் செய்தார். தன் பெயரையும் அல்ஹஜ் மாலிக் அல் சபாஸ் என மாற்றிக்கொண்டார்.

இஸ்லாமிய தேசிய இயக்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தவாறே இருந்தன. தான் அடியோடு கைவிடப்பட்டதாக உணர்ந்தார்.

இறுதி இயல்கள் மூன்றும், மால்கம் எக்ஸ் ஏன் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை விட்டு நீங்கினார் என்பதையும் நிறவெறியை நிராகரித்து முஸ்லிம் மசூதி என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பு பின்னர் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பு எனப்பட்டது. தீவிர கருப்பின தேசியவாதம் என்பது அதன் கொள்கை. தனக்கு வந்த பலவேறு கொலை மிரட்டல்கள் நேஷன் ஆஃப் இஸ்லாமிலிருந்தே வருகின்றன என்பதை அவர் உணர்ந்தார்.

பின்னுரையில் அலெக்ஸ் ஹேலி என்ற அவரது நண்பர் மால்கம் எக்ஸ் நிச்சயமாகக் கொல்லப்படுவார் என்பதை உணர்ந்ததாகவும், கருப்பினச் சகோதரத்துவக்கான தியாகியாக அவர் ஆவார் என்று கருதியதாகவும் குறிப்பிடுகிறார்.

1965 பிப்ரவரி 21 அன்று. அவா் இஸ்லாமிய தேசிய அமைப்பைச் சார்ந்த மூன்று உறுப்பினா்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை எழுதும் ஹேலி, இந்த சுயசரிதையை எழுதியதில் மால்கம் எக்ஸின் நம்பிக்கை சமூகச் செயல்பாட்டினைத் தூண்டுவதாக இந்த நூல் அமையும் என்று குறிப்பிடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பலரும் மால்கம் எக்ஸ் பற்றிப் பேசினார்கள். இப்போது அவ்வளவாக இல்லை. மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் 1992இல் வெளியானது.

தமிழக எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.இரவிக்குமார் மால்கம் எக்ஸ் எனும் நூலைப் பதிப்பித்துள்ளார்.


பீமாயணம்

இராமாயணம் பற்றி அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். பீமாயணம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இராமாயணம் இராமனின் கதை என்றால், பீமாயணம் பீம் (பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்) என அழைக்கப்படும் பீமனின் கதை.

புனைவுகள் எதுவுமின்றி ஒரு யதார்த்தக் கதையையும் உருவாக்க இயலாது என்பது எழுத்தின், படைப்பின் அடிப்படை விதி. ஒரு வாக்கியத்தை அமைத்த உடனே புனைவு வந்து அதற்குள் புகுந்து கொள்கிறது. எழுத்தின் இயல்பு அப்படி. சித்திரக் கலையும் அதனுடன் சேர்ந்தால்…? சொல்லவே வேண்டியதில்லை. (நிழற்படம், திரைப்படமாயின், கேமிராவைக் கையாளத் தொடங்கிய கணத்திலிருந்தே அது புனைவுதான்.) அந்த விதத்தில் அம்பேத்கரின் “சரித்திரத்தைச்” சொல்லும் இதையும் புனைவாகவே கருத வேண்டும் என்பதை முக்கியமாக எழுத்தை வைத்துப் பிரச்சினை செய்யும் சில பேருக்காகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு கிராஃபிக் நாவல். அதாவது சிறார்களுக்குச் சொல்வது போல, காமிக் வடிவத்தில், படங்களைக் கொண்டு, குமிழி வடிவ அடைப்புகளுக்குள் கதையைச் சொல்லுகின்ற அமைப்பு. இதன் கிராஃபிக் பகுதிகளை உருவாக்கியவர்கள் துர்காபாய் வியம், சுபாஷ் வியம் ஆகியோர். இதனை எழுதியவர்கள் ஸ்ரீவித்யா நடராஜன், எஸ். ஆனந்த் ஆவர். (ஸ்ரீவித்யா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.) இது 2011இல் வெளியிடப்பட்டு உடனே அனைத்துலகப் புகழ் பெற்றது.

நூல் நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. புத்தகம் 1 – நீர்புத்தகம் 2 – உறைவிடம்புத்தகம் 3 – பயணம்புத்தகம் 4 – பீமாயணத்தின் கலை என்பன அவை. “என்னடா இந்த இட ஒதுக்கீடும் கோட்டாவும்” என்று சலித்துக் கொள்ளும் ஒருவரிடம் விவாதத்தில் ஈடுபடுகிறார் மற்றொருவர் என்று கதை தொடங்குகிறது. “நீ போய் அம்பேத்கரைப் பற்றிப் படி, கயர்லாஞ்சியில் நடந்ததைப் பற்றி அறிந்துகொள்” என்கிறார் அடுத்தவர்.

புத்தகம் 1 – நீர்

1901இல் நிகழ்ந்தது. மஹர் இனத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் அம்பேத்கருக்கு பள்ளியில் பொதுக்குழாயில் நீர் அருந்துவது மறுக்கப் படுகிறது. இத்தனைக்கும் மற்றொரு ஊரின் குடிநீர்த் தேவைக்காக அம்பேத்கரின் தந்தை குடிநீர்த்தொட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்!

தந்தையிடம் குடும்பம் இடம்பெயர்ந்து செல்கிறது. இரயிலிலிருந்து இறங்கிய அம்பேத்கருக்கு ஸ்டேஷன் மாஸ்டர் இருமடங்கு கட்டணம் வாங்கிக் கொண்டு அவர் தந்தை இருக்குமிடத்திற்கு வண்டி தருகிறார். பின்னர் அவ்வூர் நீர்த்தொட்டியில் தீண்டப்படாதவர்களுக்கு நீரில்லை என்று மறுத்ததற்காக மஹர் சத்யாக்கிரகத்தில் ஈடுபடுகிறார், அம்பேத்கர்.

புத்தகம் 2 – உறைவிடம்

இந்தப் பகுதி 1917இல் நிகழ்கிறது. வெளிநாட்டில் படித்த அம்பேத்கர் பரோடா மகாராஜாவுக்காகப் பணிபுரிய பம்பாய் வருகிறார். இந்து ஹோட்டல்களில் அவருக்கு உணவு மறுக்கப்படுகிறது. தங்குமிடம் மறுக்கப்படுகிறது. பாழடைந்த ஒரு பார்சி சத்திரத்தில் தங்குகிறார், அங்கிருந்தும் ஓரிரு நாட்களில் துரத்தப்படுகிறார். அவர் தோழர்களும் அவரைத் தங்கவைக்கத் தயாராக இல்லை. சாக்குப்போக்குச் சொல்கின்றனர். தலித் மக்களுக்குத் தங்க இடம் கொடுக்கலாகாது என நகர்ப்புறங்களிலும் நிலவும் தீண்டாமை!

புத்தகம் 3 – பயணம்

இப்போது காட்சி 1934க்கு அவுரங்காபாதிற்கு மாறுகிறது. மஹர்களுடனும் பிற தீண்டப்படாதவர்களுடனும் அம்பேத்கர் ஒரு போராட்டத்திற்கென தவுலதாபாதிற்குச் செல்கிறார். அப்போது ஐந்தாண்டுகளுக்கு முன் தான் பம்பாய்க்கு சாலீஸ்காவ் என்ற கிராமத்தில் உறவினர்கள் வீட்டிலிருந்து சென்ற பயணத்தை நினைவுகூர்கிறார். மஹர்களுக்குக் குதிரைவண்டி ஓட்டமாட்டோம் என்று வண்டிக்காரர்கள் மறுப்பதால் ஒரு மஹர் ஆளே வண்டி ஒன்றை ஓட்ட, அது விபத்துக்குள்ளாகிறது. உயர்கல்வி பெற்றபுகழ்பெற்ற மனிதர் ஒருவருக்குக்கூடஅவர் தலித்தாக இருந்தால் பயணம் செய்வதும்மருத்துவ உதவி பெறுவதும் எளிதல்ல என்ற கசப்பான உண்மை அவருக்குள் உறைக்கிறது. தவுலதாபாத் வந்தவுடன், அங்கு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் பொது நீர்த்தொட்டியின் நீரை அருந்தலாகாது என்று அங்குள்ள முஸ்லிம்கள் தடுக்கின்றனர். (தீண்டாமை விஷயத்தில் முஸ்லிம்களும் இந்துக்கள் போலத்தான் நடக்கின்றனர்.)

அம்பேத்கரின் போராட்டங்கள், சமூகப்பணி, அரசியலமைப்பை உருவாக்கியதில் அவரது பங்கு இவற்றை எடுத்துரைத்து இந்தப்பகுதி முடிகிறது.

புத்தகம் 4 – பீமாயணத்தின் கலை

கோண்டு என்ற பழங்குடி மக்களின் சித்திரக்கலை இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது. துர்காபாய், சுபாஷ் வியம் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் அம்பேத்கரின் முக்கியத்துவம் பற்றியும், முன் இயல்களில் பயன்படுத்திய கோண்டு கலைவடிவம் பற்றியும் சொல்கின்றனர்.

கோண்டு இன மக்களின் கலை சமுதாயம் சார்ந்தது என்பதையும் அதனை நம் போன்ற பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் விளக்குகிறார் ஆனந்த். இக்கதையின் உருவாக்கத்தில் இதன் திறன்மிக்க வெளிப்பாட்டுக்காக துர்காபாயும், சுபாஷும் எடுத்துக் கொண்ட சிறுசிறு உரிமைகளையும் மீறல்களையும் எடுத்துச் சொல்கிறார். (திரு. ஞானவேல் அவர்களுக்கு!). இறுதியாக இன்னமும் சாதிப்பாகுபாடு கோலோச்சுகின்ற, மனிதர்கள் மாற மறுக்கின்ற நம் நாட்டில் சாதிசார்ந்த எடுத்துரைப்புகளின் தேவையையும் எடுத்துக்கூறி, இறுதியாக ஜெய்பீம்!” என முழங்கி முடிக்கிறார்.

இந்நூலின் படிமஆக்கம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. நீர் உரிமை பற்றிய முதல் இயலில், நீர் அடிப்படையிலான படிமங்களே பெருமளவு இடம்பெற்றுள்ளன. தனித்த டிக்னா (கோண்டு கலையின் ஒரு பகுதி) வகைச் சித்திரங்கள் ஆளப்பட்டுள்ளன. கதையைச் சொல்லும் குமிழி வடிவ அமைப்புகள் கூட கதைத்தன்மைக்கேற்ப உள்ளன. உதாரணமாக, இளம் பீம் பேசும் பகுதி மயில் தோகை வடிவக் குமிழிக்குள் அமைந்துள்ளது. காவலாளின் வசைப்பகுதி வரும்போது தேளின் கொடுக்கு வடிவத்தில் அது அமைகிறது. இப்படி இதன் படிமக் கலை, எடுத்துரைப்பில் இருந்து பிரிக்கவே முடியாத விதத்தில் அமைந்துள்ளது. பார்த்து, வியந்து பயன் பெறுங்கள் என்றுதான் கூற முடியும்.

இதனைப் புத்தகம் என்று சொல்வது குறுக்குவதாக முடியும், இது விதிவிலக்கான தலைவர் ஒருவரைப் பற்றிய, திகைக்கச் செய்யும் கலையினால் ஆன்மாவைத் தூண்டும் தன்மையுடைய வரலாறு” என்று தி இந்து ஆங்கில நாளிதழ் மதிப்பிட்டுள்ளது. “இறப்பதற்குமுன் படிக்க வேண்டிய 1001 காமிக்குகளில் இது ஒன்றாகும்” எனப் பாராட்டியுள்ளார், பால் கிரவெட் என்னும் இதழியலாளர், கலைஞர். பல பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் படிப்புக்குப் பாடமாகவும் இது உள்ளது. இணையதளத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இலவசமாகக் கிடைக்கிறது. வேண்டுபவர் இறக்கம் செய்துகொள்ளலாம். ஜெய் பீம்!