கொடுங் கோடரி

காட்டுக்குள் வந்த ஒரு மனிதன், தன் கோடரிக்கு ஒரு கைப்பிடி வேண்டும் என்று மரங்களிடம் கேட்டான். மரங்களும் ஒப்புக்கொண்டு ஓர் இளைய மரத்தைக் கொடுத்தன.
அவன் தன் கைப்பிடியைச் செய்துமுடித்தானோ இல்லையோ, காட்டிலிருந்த மிகப்பெரிய மேன்மையான மரங்களை வீழ்த்தத் தொடங்கினான்.
பக்கத்திலிருந்த ஓர் ஓக் மரம், தன்னருகிலிருந்த செடார் மரத்திடம் சொல் லியது: “முதல்முதலாக நாம் காட்டிய கருணையே நமக்கு அழிவைத் தந்துவிட்டது. நாம் அந்த இளைய மரத்தை அளிக்கவில்லை என்றால், நமது உரிமைளைத் தக்கவைத்துக் காலங்காலமாக நாம் வாழ்ந்திருக்க முடியும்.”
-ஈசாப் கதைகள்

உலகின் காடுகளை நாம் என்ன செய்கிறோம் என்பது நாம் நம்மை நாமே, நமக்குள் ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்கிறோம் என்பதன் ஆடிப் பிரதிபலிப்புதான்.
-மகாத்மா காந்தி

பூமிக்கு என்ன நேர்கிறதோ, அதுதான் பூமியில் வாழும் மக்களுக்கும் நேர்கிறது.
-அமெரிக்க இந்திய இனத் தலைவர் சியாட்டில்.


என் கடவுள் கொள்கை

மதங்களும் ஆன்மிகவாதிகளும் சொல்வது போன்ற கடவுள் என்பது கிடையாது என்பதுதான் என் கடவுள் கொள்கை.

உலகில் இருப்பது பொருள்தான், அதுதான் சிந்தனை தோன்றுவதற்கு ஆதாரம். ஆகவே நான்  பொருள்முதல் வாதி. கடவுள் என்பது மனநோய் பிடித்தவர்களின் கற்பனை. Illusion. கடவுள் உண்டு என்று சொல்பவன் முட்டாள் என்று பெரியார் கூறினார். கடவுள் மனநோய் பிடித்தவர்களின் கற்பனை என்கிறேன் நான். உலகின் பெரும்பகுதி மக்கள் மனநோய் பிடித்தவர்கள் தான்.

ஹிஸ்டீரியா போன்ற இலேசான பிறழ்வுகளையும் நாம் மனநோய் என்றுதான் சொல்கிறோம். அந்த அர்த்தத்தில்தான் மனநோய் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். மனநோய் என்றால் உடனே பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்து அலைபவன் என்பது அல்ல பொருள்.

ஆனால், அதோ பார், மலைக்குமேல் மகரஜோதி ஆகாயத்தில் தெரிகிறது என்றால் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகொண்டு கும்பிடுகிறானே அவனுக்கும் பைத்தியத்துக்கும் வித்தியாசம் in degrees only. கொஞ்ச அளவில்தான். அதனால்தான் மதவெறி பிடித்தவர்கள் பிறரைக் கொல்லும் அளவுக்கும் செல்கிறார்கள், பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்கும் அளவுக்கும் செல்கிறார்கள். சிறுத்தொண்டன் யார்?    

பொருள் என்பதைவிட்டு சிந்திக்க முடியாது. கடவுள் என்பதற்கே, கடந்தும் உள்ளும் இருக்கின்ற “பொருள்” என்றுதானே “பொருள்” சொல்கிறார்கள்?

கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பதல்ல. கடவுகின்ற ஒன்று, கடவுள். நம்மை செலுத்துவது என்பது கடவுவது. நம்மை செலுத்துவது மனம். சிலசமயங்களில் புற நிகழ்வுகளும்தான் நம்மைச் செலுத்துகின்றன.. அதனால் கடவுள் என்பதை இன்னது என்று சொல்ல முடியாது.

உடனே மனம் என்றால் என்ன, எங்கிருந்து வந்தது என்று ஆரம்பித்து விடாதீர்கள். அதை இன்னொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம்.

கடவுள் இல்லை என்பதால் நான் இந்துவோ, கிறித்துவனோ, முஸ்லிமோ அல்ல. எல்லா மதங்களுமே மனநோய்கள் என்றால், இந்து மதம் என்பது வெறும்/பெரும் பைத்தியக்காரர்களின் உலகம். அதனால்தான் “எல்லா மக்களும் சமம் அல்ல, ஒருவன் பிரம்மனின் தலையில் பிறக்கிறான், மற்றொருவன் பாதத்தில் பிறக்கிறான் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். சாதிகள் உண்டு” என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை உலகில் ஒரே சாதிதான். அது இறப்பவர்களின் சாதி. இறக்காதவன் உலகில் எவனாவது இருந்தால் சொல்லுங்கள்.

உடனே பலர் அந்த சாமியார் இருந்தான், இந்தச் சித்தன் இருந்தான், அவர்கள் இறக்கவில்லை, வானத்தில் மிதக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் காட்டு என்றால் காட்ட மாட்டார்கள். நீ உன் மனத்துக்குள் பார் என்றெல்லாம் கப்சா விடுவார்கள். எல்லாருக்கும் ஒரே கதிதான், அது இறப்பு. சிலர் மனத்துக்குள் பார் என்றால் ஒரே ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்ந்து மரக்கட்டை போல் உட்கார்ந்திருப்பார்கள். (Self-hipnotism) அதற்குப் பெயர் தியானம் என்பார்கள்.

பிறப்பென்றால் என்ன, அது எப்படி நேர்ந்தது, இறப்பு என்றால் என்ன, அதற்குப் பின் என்ன என்றெல்லாம் நான் ஆராய்வதில்லை. நம்மால் ஆராய முடியாத விஷயங்கள் உலகத்தில் பல உள்ளன. இங்கிருந்து ஒரு 500 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் பொருளை–அப்படி ஒரு நட்சத்திர மண்டலம் இருக்கிறதென்றால்–காட்டு என்றால் காட்ட முடியுமா? பார் என்றால் பார்க்க முடியுமா? இவை எல்லாம் எப்படி புலன்களுக்கு புலப்படுவதில்லையோ அப்படித்தான் உலகில் பல விஷயங்களும். அதனால் புலப்படாத விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில்லை.

சரி, “உனக்கு புலப்படாவிட்டால் என்ன, எனக்கு புலப்படுகிறது” என்றால் வைத்துக்கொள். ஆனால் அதை நிரூபிக்க முடியாது. அது உன் மனக்காட்சி. Hallucination. அவ்வளவுதான். அதனால்தான் மனநோய் என்றேன். கஞ்சா அடித்துவிட்டு கடவுள் தோன்றுவதாகச் சொல்வது போலத்தான் அது. நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை.

கடவுள் இல்லை என்பதால், மதமும் இல்லை, சடங்குகளும் இல்லை, சாதியும் இல்லை, பண்டிகைகளும் இல்லை, திருவிழாக்களும் இல்லை. இவையெல்லாம் மக்கள் தங்கள் சந்தோஷத்துக்காகக் கொண்டாடும் பொது விஷயங்கள், கூடுகைகள்.

இன்றைக்கு அவ்வளவுதான், பார்ப்போமா? இது பற்றி இன்னும் நிறையப் பேச இருக்கிறேன்


உழைப்பாளர் தினம்!

எல்லா முதலாளிகளும் கையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினாலு மணி நேரம் (ஐடி தொழிலாளர்கள் உள்பட) வேலை வாங்கும்போது, எட்டு மணிநேர உழைப்பைக் கொண்டுவந்த தினம் என்று எல்லா மடத் தலைவன்களும் பாராட்டுகிறார்கள். போங்கடா நீங்களும் உங்கள் மே தினமும். பொய், பொய், எங்கும் கலப்படமற்ற பொய். அம்பானிகளிடமும் எலான் மஸ்குகளிடமும் உலகத்தை விற்றுவிட்டு உழைப்பாளர் தினம் பற்றிப் பேசக் கேவலமாக இல்லை?

என்னதான் தீர்வு? யோசியுங்கள் உழைக்கும் பெருமக்களே. முதலாளிகள் நீங்கள் யோசிக்க அவகாசம் தர மாட்டார்கள். இருந்தாலும் உண்ணும்போது, சிலவேளை ஓய்வுகளின் போதாவது உங்கள் நிலை பற்றி யோசியுங்கள்.

(இங்கு எட்டுமணி நேர உழைப்புக்குக் கூலி வாங்கி இரண்டுமணி நேர உழைப்பை அளிக்கவும் மேல்கூலி வாங்கும் அரசு கைக்கூலிகளைப் பற்றிப் பேசவில்லை!)