மனக்கோட்டை

மௌனியின் ஒரு சிறுகதை-மனக்கோட்டை

மௌனியின் கதைகள் பிரசித்தமானவை. தங்கள் உள்ளத்துக்ள்ளேயே உணர்ச் சிகளை அழுத்திக் கொள்பவர்கள் மௌனியின் கதாபாத்திரங்கள் என்பது போன்ற குறிப்புகள் திரைப்படங்களில்கூட வரத்தொடங்கிவிட்ட காலம் இது. மொத்தம் இருபத்திரண்டு கதைகளே எழுதிய மௌனி பலவகைகளில் தம் கால எழுத்துகளை மீறி ஒருவகையான புகழைப் பெற்றுவிட்டார். இங்கு அவரது கதையான மனக்கோட்டை பற்றிச் சற்றே நோக்கலாம். இக்கதை தெரிவிக்கும் அடிப்படையான விஷயங்கள் மூன்று.

1. தமிழ் எதிர்ப்பும் திராவிட எதிர்ப்பும்
2. தடைசெய்யப்பட்ட பாலுறவு
3. அத்வைத தத்துவம்

இது மௌனியின் கதைகளில் மிகவும் பாராட்டுப் பெற்ற ஒன்று. இக்கதையின் பாலியல் தளமே இதற்கு ஒரு “பயங்கரத்தின் கவர்ச்சி”யினை அளிக்கிறது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு பெண்ணைத் தேடுகின்ற கதை. ஆனால் கதை யை மேலோட்டமாகப் பார்க்கும்போது அது வேதாந்தத் தளத்தில் இயங்குவது போலத் தோற்றம் தருகிறது. தெளிவாக உருப்பெறாத மூன்றுபேர் இக்கதையில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். சேகரன்-சுமி-சங்கர் என்னும் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவைச் சொல்லுவதாக இக்கதை அமைகிறது. சுமி என்பவள் சங்கரின் தங்கை. சேகரன் சுமியைக் காதலிக்க சங்கரே து£ண்டு கோலாக இருக்கிறான்.

கதைப்பின்னல் பின்வருமாறு அமைகிறது. சேகரன் என்பவன் தனது நண்பன் சங்கர் இறந்துவிட்டான் என்பதை அறிந்து அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலி ருந்து விடுபட ஒரு மலைக்கோட்டையைப் பார்க்கச் செல்கிறான். சங்கரின் கடைசிக் கடிதம் அவனது “தங்கை சுமியுடன் அவன் (சேகரன்) பேசி அவன் (சங்கர்) பார்க்கவேண்டும்” என்பதாக இருக்கிறது. இதுவரை சுமி இறந்துவிட்ட செய்தி சேகரனுக்குத் தெரியாது. இக்கடிதம் சங்கர் வீட்டிற்குச் செல்லும் ஆவலை அவனுக்குள் உண்டாக்குகிறது. ஆனால் சங்கர் இல்லாமல் அவன் வீட் டிற்குச் சென்றால் அங்கு தன்னை எவரும் அறியமாட்டார்கள் என்பதனாலும், தற்சமயம் சங்கர் வீடு எது என்பது தனக்குத் தெரியாது என்பதனாலும் சேகரன் சங்கர் வீட்டிற்குச் செல்லக் கிளம்பினாலும் அதைத் தவிர்க்கிறான். எனவே வழியில் ஒரு மலைக்கோட்டை தென்படும்போது அங்கே இறங்கிவிடுகிறான். மலைக்கோட்டையைச் சுற்றிவந்த பிறகு மாலையாகிவிடுகிறது. தங்குவதற்காக அருகிலுள்ள நகருக்குச் செல்கிறான். அங்குத் தற்செயலாக அவன் மழைக்காக நிற்கச் செல்லும் வீடு சங்கரின் இன்னொரு தங்கையான சசி என்பவள் வீடாக அமைந்துவிடுகிறது.

இக்கதையின் வாயிலாக ஒருசேர இரண்டு விஷயங்கள் விமரிசனம் செய்யப்படு கின்றன. மலைக்கோட்டையைக் காணும்போது தற்கால அரசியல் விமரிசனத்துக் குள்ளாகிறது. சங்கரின் வீட்டினரைச் சந்திப்பதன் வாயிலாக ஒடுக்கப்படட ஒரு பாலியல் தளம்-தகாத பாலியல் உறவைச் சித்திரிக்கும் களம் கதைக்குள் வருகி றது.
மலைக்கோட்டை, “பருவகால வித்தியாசத்திலும் பார்ப்பவர் மனநிலையோடு கலந்து வெவ்வேறுவகைக்குக் காண எண்ணிலாச் சாயை கொண்டதாக” அமைந் திருக்கிறது. இங்கு ஒரு கவித்துவமான வருணனை இடம் பெறுகிறது. மலைக் கோட்டையைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது “நடுப்பகல் சரிவுகண்டுவிட, எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்துக் கானல் சலனத்தில் தெரிந்தன”.

இரவு நேரத்தில் ஆங்காங்கே தெரியும் குன்றுகளைப் பார்க்கின்ற அவனுக்கு அது தேவ அசுர யுத்தத்தினை நினைவூட்டுகிறது. தேவர்கள் என மௌனி இங்குச் சொல்வது ஆரியர்களையும் அசுரர்கள் என்று அவர் குறிப்பிடுவது திரா விடர்களையும் என்பது ஓரளவு வெளிப்படையாகவே தெரிகிறது. அங்குள்ள கோயிலைப் பார்க்கும்போது “பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்து விட்டு எதிரிகளை முறியடிக்க விநோதமான குறுக்குப் பாதைகளை வெகு யுக்தி யுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீரச் சக்ரவர்த்தி” என்னும் நையாண்டியில் தமிழ்நாட்டுக் கோயில்களைக் கட்டிய சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இச்சக்ரவர்த்தி, தோற்றுப்போன பிறகு தனது நிலை மறந்து மக்களுடன் மக்களாக ஜேஜே கோஷம் போட்டுக்கொண்டு வந்து கோட்டையை அடைந்து அந்த மக்களால் மீண்டும் தலைவனாக்கப்படுகிறான். மீண்டும் நையாண்டி தொடர்கிறது. அந்த அரசன், அவன் தகப்பன், அவன்-அவன் மகன் இவன் எனக் கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்தது, இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது, அது இது எல்லாமும் மனப்பிராந்தி யில் சரித்திரமாகிவிட, கற்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும் விட்டது. இதில் குறிப்பாகச் சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கேலி இருப்பது தெளிவு. தமிழ்நாட்டு வரலாற்றையே மூன்று வரிகளில் அடக்கி அதுவும் மறந்துவிட்டதாகவும் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார் மௌனி. தமிழின் எழுச்சியையே ஒரு மனப்பிராந்தி என்கிறார். தமிழர்கள் கடல்வாணிகம் செய்ததையும் தமிழ் வளர்த்ததையும் நீலகண்ட சாஸ்திரி, ராமச்சந்திர தீட்சிதர் போன்ற பார்ப்பன ஆசிரியர்களே விதந்து எழுதியிருக்க, அதை ஏற்றுக்கொள்ள வும் இந்த மௌனியின் பார்ப்பன மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தமிழ் மக்களின்மீது எவ்விதக் காழ்ப்புணர்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்ப தைத் தெரிவிக்க மௌனியின் இந்த ஒரு பகுதி போதும்.
தேவ அசுர யுத்தம் பற்றிய நினைவு வரும்போதுதான் இந்த அரசனுடைய தோல் வியும் நினைவுக்கு வருகிறது. தேவ அசுர யுத்தத்தில் தேவர்கள் வெற்றி பெற்றது போலவே ஆரியர்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதையும் இந்தக் கோயில்கட்டிய திராவிட அரசனின் தோல்வி தெரிவிக்கிறது. (ஒருவகை யில் நாம் இந்தத் தொன்மத்தை நீட்டிக்கொள்ளலாம். தேவ அசுர யுத்தத்தில் அசுரர்களை ஏமாற்றித் தாங்கள் மட்டுமே அமுதம் உண்ட தேவர்களைப் போலவே தமிழகத்திலும் பிறரை ஏமாற்றித் தாங்களே வெற்றி பெற்றுவிட்டார் கள் ஆரியர்கள் என்பதையும், அவர்களது சூழ்ச்சிகள் இன்றுவரை வென்று வருகின்றன என்பதாகவும் நாம் பொருள்கொள்ளலாம்.) கதைக்கிடையில் “ஆர்ப்பாட்டமாக, தமுக்கடி தமாஷாவாக, அபத்தமாக, அல்பசித்தியாக” திராவிட இயக்க முயற்சிகள் நோக்கப்படுகின்றன. வெளிப்படையாகவே கேட்கிறார் மௌனி: “இரவின் அந்தகார இருளைக் காண ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்?” என்று.

கதையில் பிரச்சாரம் வந்துவிட்டால் அது இலக்கியமாகாது என்று குரைக்கும் பல விமரிசகர்கள் கதைக்குத் தொடர்பே இல்லாத இந்தப் பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்து மௌனியை எப்படிப் பாராட்டுகிறார்கள்? ஒருவேளை மார்க்சியத்தையும் திராவிட இயக்கத்தையும் பெரியாரியத்தையும் அம்பேத் கார்இயத்தையும் மறுப்பது, கேவலமாக எழுதுவது பிரச்சாரம் ஆகாது போலும்!

உண்மையில் மௌனியின் கதைகள் அனைத்தும் பிரச்சாரங்களாக-அப்பட்ட மான வைதிக நோக்கின் ஆதரவுகளாக வெளிப்படுபவைதான்.

மௌனியின் கதைகளில் மழை ஒரு முக்கியமான நிகழ்வு. மழை பாலியல் உறவின் குறியீடாகவே மௌனியின் கதைகளில் இடம்பெறுவதைப் பல ஆண்டு களுக்கு முன்பே விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நனையாமலிருக்க ஒரு பங்களா வாசலில் ஒதுங்குகிறான் சேகரன். அப்போது இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி அவனைக் கூர்ந்து நோக்குகிறாள். தன்னை யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத நிலையை மனவேதனையாகக் கண்ட அவன், “அப்பெண்ணின் கணவருக்குப் பின்னால் தன் பார்வையில் பட அவள் எப்போது வந்தாள் என்பதை கவனிக்கவில்லை.” அதேசமயம் அவள் கணவரும் “நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் என்பது புரியவில்லை” என்று தொடங்குகிறார். “உங்களுக்கு உங்கள் நண்பர் சங்கரை நினைவிருக்கிறது” என்று எப்படி அவர் இவனை அடையாளம் கண்டார் என்பதே புரியவில்லை நமக்கு. இதுவரை கதையில் அவன் என்றே சொல்லப்பட்டு வந்த அவன் இப்போது சேகரனாக மாறுகிறான். அவனது தன் வரலாற்றில் சங்கர் அவன் தங்கை சுமி ஆகியவர்களுடனான அவனது உறவு இப்போது முன்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் முன்பே சங்கரின் கடித வாயிலாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. “என் கற்பனையில் பிறந்து அவர்கள் மனத்தில் நீ வாழ்வது எவ்விதமோ தெரியவில்லை” என்று அவன் எழுதியிருக்கிறான். சங்கரின் கற்பனையில் பிறந்தவன் சேகரன் என்றால் அவன் இதுவரை எப்படி வாழ்ந்தான், எப்படி மலைக்கோட்டையைப் பார்வையிட்டான், எப்படி மழையில் நனையாமலிருக்க வீட்டிற்குள் வந்தான்? இதுதான் மௌனியின் அற்புதமான “உன்னதமான பாஷை.”
சங்கரின் இறப்பைச் சேகரனுக்கு அவன் தங்கை கணவர் சொல்கிறார். தெற்கிலி ருந்து வடக்கே ஏதோ ஒரு படிப்புக்குச் சென்றவன், ஒரு சுரங்கக் கம்பெனியில் உயர்பதவி வகித்து பூமிக்கு இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தைப் பார்வை யிடும்போது ஏதோ விஷம்தீண்டி இறந்துவிடுகிறான் சங்கர். ஆனால் உண்மையில் கதையை நடத்திச் செல்லும் சேகரனுக்கு சங்கர் இறக்கவில்லை. சங்கர், அவனது தங்கை சுமி ஆகியோர் நினைவாகவே அவன் வாழ்ந்து கொண் டிருக்கிறான். சங்கர் தனக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அனுமானிக் கும் அவன் பிறகு வாயிலைத் தாண்டி படிகளைத் தாண்டி கதவையும் தாண்டி-எல்லாவற்றையும் “தாண்டிக்” கடந்து சென்றுவிடுகிறான். இவ்வளவுதான் கதை.

கதையின் இந்த இறுதிப்பகுதி முக்கியமானது. சங்கரும் அவன் தங்கை சுமியும் பிரிக்க இயலாமல் சங்கரின் நினைவில் வாழ்பவர்கள். ஆனால் சங்கரோ அவர் கள் நினைவில் தான் வாழ்வதாக நினைக்கிறான். இதுதான் கதையின் முக்கியச் செய்தி. அதாவது உயிரோடிருப்பவனாகிய இவன் நினைவில் அவர்கள் வாழ, இறந்துவிட்ட அவர்கள் நினைவில் இவன் வாழ்வதாக ஒரு சுழற்சியில்-விஷச் சுழலில் சிக்குகிறது கதை. இச்சுழற்சி, இக்கதா பாத்திரங்களின் உடனிருப்பை முற்றிலுமாக மறுக்கிறது. மேலும் சங்கரின் கனவாகத் தன்னைக் கருதிக்கொள் ளும் சேகரன், சுமி நாடிச் செல்லும் கனவும் தானே என்பதாக முன்னாலே வருகிறது.

கதையில் சேகரன் சுமியைத் திருமணம் செய்துகொண்டதற்கான குறிப்பு எதுவும் இல்லை. என்றாலும் இருவருக்குமிடையிலான ஈர்ப்பு, மிக நுட்பமாகச் சொல்லப் படுகிறது. சேகரனை அவள் கதவிடுக்கில் நின்று பார்த்ததையும், அவனைக் குறித்து அழகாகப் புரிந்துகொண்டவளாக இருந்ததையும் சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறான். சுமிக்கும் சேகரனுக்கும் சங்கருக்கும் இடையிலிருந்த உள்ளார்ந்த பாலியல் ஈர்ப்பைச் சொல்ல முனையும் ஆசிரியர், தம்மையறியாமலேயே தடை செய்யப்பட்ட பாலியல் உறவுக்குள் சென்றுவிடுவதால் அதைத் தவிர்கக்வேண்டி மூவரையும் உடலற்றவர்கள் ஆக்கிவிடுகிறார். சங்கரின் இறப்போடு தன் இருப்பும் கூடச் சந்தேகம் கொள்வது சரி என்று நினைக்கிறான் சேகரன். மேலும் சங்கரின் பேச்சில் தன்னைத் தான் பார்ப்பதாகவும் கருதுகிறான். இம்மா திரிப் பல்வேறு குறிப்புகள் சஙகரையும் சேகரனையும் ஓர் உடலின் இருவேறு உருக்களாகவே காட்டுகின்றன. அதாவது அவன் ஒரு பிளவுபட்ட ஆளுமை (ஸ்ப் ளிட் பெர்சனாலிட்டி) கொண்டவன். பிறருடன் அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது இன்னொரு சுயம் கனவுகாணத் தொடங்கிவிடுகிறது. “அநேக மாணவர் மத்தியில் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது அவனை (சங்கர்) அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூடப் படமுடியாத வகையில் அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம். அவசியமானால் பார்வை கொள்ளக் கூடிய விதத்தில் அவன் எங்காவது பகற்கனவு கண்டுகொண்டிருப் பான்”. ஒரே உடல், ஆனால் ஓர் உரு அண்ணனாக இயக்கம் கொள்கிறது, மற்றொரு உரு காதலனாக, சங்கராக இயக்கம் கொள்கிறது.
சேகரன் என்னும் இவனது பெயரே, முதன்முதலில் இவன் மழைக்கு ஒதுங்கும் வீட்டின் சொந்தக்காரர், சங்கரின் தங்கை கணவர் சொல்வதாகத்தான் வருகிறது. கதையில் இவன்தான் உண்மையிலேயே சங்கரின் நண்பன் சேகரன் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. மௌனியின் எழுத்து இந்தத் தகாத பாலியல் உறவுச் சிக்கலை உருவெளித் தளத்திற்கு மாற்றி மறைக்கவே கோட்டை யைப் பார்க்கும் நிகழ்ச்சி நுழைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணன் தங்கை இடையிலான பாலியல் தொடர்பு சமூகத்தடைகளில் முக்கிய மான ஒன்று. இதனைத் தாங்கமுடியாமல்தான் சங்கர் இறந்துவிடுகிறான். அவனுக்குப்பின் அவன் தங்கையான சுமியும் இறந்துவிடுகிறாள். இதைச் சொல்வதே ‘மனக்கோட்டை’ கதை. மௌனியின் நினைவுச்சுழல் என்னும் கதையும் இதேபோன்ற தடுக்கப்பட்ட பாலுறவு அடிப்படையிலேயே அமைந்திருப் பதையும் விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தடைசெய்யப்பட்ட பாலுறவுக் கதை, வெளிப்படையாகத் தோன்றாமலிருக் கவே
சேகரன் மலைக்கோட்டையைக் காண்பதையும் பிறகு வெளிப்படையான அரசியல் விமரிசனத்தையும் வைக்கிறார் மௌனி. அதுமட்டுமின்றி மூன்று பேரையும் மன வுருக்களாகவே மாற்றிவிடுகிறார். அதாவது தடைசெய்யப்பட்ட பாலியல் உறவுக் கதையை மறைப்பதற்காக அரசியல் விமரிசனமும் வேதாந்தமும்! இது மௌனியின் முக்கியமான ஒரு முகம்.