ஹாபிட் (Hobbit)

ஜே.ஆர்.ஆர். டோல்கியன் என்பவர் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அற்புதக்கதை எழுத்தாளர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவரது மோதிரங்களின் தலைவன் (Lord of the Rings), ஹாபிட் (Hobbit) போன்ற நூல்கள் மிக அதிகமாக உலகெங்கும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. இவற்றில் தனித்ததோர் உலகத்தையும் (middle earth) அதற்கான நிலப்பரப்பையும் பலவேறு இனங்களையும் அவர்கள் பேசும் மொழிகளையும் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார். அதில் ஹாபிட் என்ற கதையை இப்போது காண்போம்.

ஹாபிட் என்பவர்கள் குறுமனிதர்கள் எனச் சொல்லக்கூடியதொரு இனம். நம் போன்ற மனிதர்களின் உயரத்தில் பாதிக்கும் குறைவான உயரமே உள்ளவர்கள். வளைகளில் வீடுகட்டி வாழ்பவர்கள். நமது கதாநாயகன் அவர்களில் ஒருவன்- பில்போ பேகின்ஸ் என்பது அவன் பெயர். ஹாபிடன் என்ற ஊரில் அவன் அமைதியாக வசித்துவருகிறான். ஆனால் ஒருநாள் அவனைத்தேடி காண்டால்ஃப் என்ற மந்திரவாதியும், பதின்மூன்று குள்ளர்களும் வருவதனால் அவன் வாழ்க்கையே மாறிப் போகிறது. அவர்களின் தலைவன் தாரின் ஓக்கன்ஷீல்ட் என்பவன். அவன் தாத்தா தனது செல்வத்திற்கான வரைபடத்தையும் சாவியையும் காண்டால்ஃபிடம் தந்து மறைந்துவிட்டார். ஸ்மாக் என்ற டிரேகன் அக்குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அவர்களை விரட்டிவிட்டிருக்கிறது. தங்கள் “கொள்ளையனாக” பில்போ இருக்கும்படி அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.

வழியில் மூன்று ராட்சதர்கள் (ட்ரால்கள்) அவர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள். காண்டால்ஃப் தந்திரமாக அவர்கள்மீது சூரிய ஒளி படும்படியாகச் செய்து அவர்களைக் கல்லாக்கிவிடுகிறார். பிறகு இந்தக் குழு எல்ஃபுகள் (elfs) எனப்படும் தேவதைகளின் இருப்பிடமான ரிவெண்டலில் தங்குகிறது. அவர்களின் தலைவனான எல்ராண்டின் ஆலோசனைப்படி இவர்கள் மிஸ்டி-மலைகளைக் கடக்கப் புறப்படுகிறார்கள். ஒரு பனிப்புயலின்போது ஒரு குகையில் தங்குகிறார்கள். அப்போது காப்ளின்கள் (goblins) எனப்படும் அருவருப்பான தீங்குயிரிகள் அவர்களைத் துரத்துகின்றன. தப்பியோடும்போது பில்போ பின்தங்கி வழிதவறி மலையின் சுரங்கப்பாதைகளில் மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனுக்கு வழியில் ஒரு பொன்மோதிரம் கிடைக்கிறது. அதைத் தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான். உடனே மலையடியில் ஒரு நீர்நிலையில் வசிக்கும் கோலும் (Gollum) என்ற தவளை போன்ற உயிரி அவனைப் பிடித்து உண்ண நினைக்கிறது. அந்த மோதிரமும் அது வைத்திருந்ததுதான். விடுகதை மீது அதற்கு ஆசை. விடுகதை சொன்னால் உனக்கு வழிகாட்டுகிறேன் என்று அது சொல்கிறது. மாறிமாறி விடுகதைகள் போடுகின்றனர். ஆனால் விரைவில் விடுகதை தெரியாமல் பில்போ “என் பாக்கெட்டில் என்ன இருக்கிறது?” என்று நேர்க் கேள்வி கேட்கிறான்.

கோலுமுக்கு விடை தெரியாமல் விழிக்கும்போது, தப்பி ஓடுகிறான் பில்போ. அவனுக்குக் கிடைத்தது ஒரு மாயமோதிரம். அதை அணிபவர்கள் யார் கண்ணுக்கும் தெரியமாட்டார்கள். அதை அணிந்துகொண்டு கோலும் இடமிருந்து தப்பி மலையிலிருந்து வெளியே ஓடி, காண்டால்ஃபையும் குள்ளர்களையும் காண்கிறான். ஆனால் குழுவினரிடம் மாயமோதிரம் பற்றிச் சொல்லவில்லை. அவர்களை வார்குகள்(wargs) எனப்படும் பெருஓநாய்கள் துரத்துகின்றன. அவை காப்ளின்களுக்கு நண்பர்கள். நல்லவேளையாக கருடன்கள் அவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்கின்றன.

பிறகு அவர்கள் பியோர்ன் எனப்படும் கரடிமனிதனைச் சந்தித்து இளைப்பாறுகிறார்கள். அவர்களின் வழி மிர்க்வுட் எனப்படும் இருட்காட்டைக் கடப்பதாக அமைகிறது. காண்டால்ஃப் இச்சமயத்தில் வேறொரு வேலையாகச் சென்றுவிடுகிறார். பியோர்ன் இவர்களைக் காட்டு எல்லை வரை வந்து விடுகிறான். ஆனால் இவர்கள் வழிதவறி, அரக்கச் சிலந்திகளின் வலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். பில்போ மட்டுமே தன் மோதிரத்தால் சிலந்திகளிடமிருந்து தப்ப முடிகிறது. ஸ்டிங் என்னும் தனது குறுவாள், மோதிரம் இவற்றால் அவர்களை வலைகளிலிருந்து தப்புவிக்கிறான்.

தப்பிய இந்தக் குழுவை எல்ஃபுகள் கைது செய்கிறார்கள். மீண்டும் பில்போ மட்டுமே தன் மாயமோதிரத்தின் உதவியால் சிறையிலிருக்கும் அவர்களை மீட்டு எல்ஃபுகளுக்கு ஒயின் வரும் பீப்பாய்களில் அவர்களை அடைத்து நதியில் மிதக்கவிடுகிறான். பீப்பாய்கள் லேக்டவுன் என்ற மனித-நகரத்தை அடைகின்றன. அதுதான் குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து வைத்திருக்கும் டிரேகனின் தனிமை-மலைக்கு (lonely mountain) அருகிலுள்ள ஒரே மானிட நகரம். அங்கு அனைவரும் இளைப்பாறி உதவி பெறுகிறார்கள்.பிறகு மலைக்குச் செல்லும் அக்குழு, மலைக்குள் டிரேகன் ஸ்மாக் வசிப்பதால் பயந்து ஒரு மலைப்பொந்தில் தங்குகிறது. அதனுள் செல்லும் பில்போ செல்வக் குவியலின்மீது படுத்திருக்கும் டிரேகனைக் காண்கிறான். தொடரும் சந்திப்புகளில் அந்த டிரேகனின் தடித்த உடலில் மார்பில் ஒரு பலவீனமான இடம் இருப்பதை அறிகிறான். அவனிடம் குரோதம் கொள்ளும் ஸ்மாக், வேகமாக மலையை விட்டு வெளியேறி, லேக்டவுன்மீது பறக்கிறது. அதன் பலவீன இடத்தை ஒரு பறவை வாயிலாக அறியும் பார்ட் (Bard) என்ற வீரன் தன் அம்பால் அதை மாய்க்கிறான். ஆனால் அதன் தீமூச்சினால் லேக்டவுன் அழிந்து போகிறது.

இடையில் ஸ்மாக் போய்விட்டதால், குள்ளர்கள் மலையைக் கைப்பற்றித் தங்கள் சொந்தச் செல்வத்தைப் பெறுகிறார்கள். லேக்டவுனைச் சேர்ந்த மனிதர்களும் எல்ஃபுகளும் அச்செல்வத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று மலையின் மீது படையெடுக்கிறார்கள். பில்போ அம்மலைச் செல்வத்தில் முக்கியமான ஒரு பெரிய மாணிக்கத்தை-ஆர்க்கன்ஸ்டோன் என்பதைத் திருடிக் கொள்கிறான். அவன் குள்ளர்களுக்குத் தெரியாமல் வெளிவந்து மனிதர்களுக்கு அதை அளித்து போரைக் கைவிட்டுச் சமரசம் செய்து கொள்ளுமாறு சொல்கிறான்.

இச்சமயத்தில் காப்ளின்கள், வார்குகள் உள்ளிட்ட பெரும்படை அவர்களைத் தாக்குகிறது. மனிதர்கள், எல்ஃபுகள், குள்ளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவற்றை எதிர்க்கிறார்கள். ஐந்து சேனைப் போர் எனப்படும் பெரும்போர் நிகழ்கிறது. ஆனால் மனிதர்கள் தோல்வியுறும் நிலை வருகிறது. அப்போது பியோர்னும், கருடன்களும் வந்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். பில்போ மோதிரத்தைத் திருடியதைக் குள்ளர்கள் தலைவனான தாரின் மன்னித்துவிடுகிறான், ஆனால் போரில் இறந்து விடுகிறான். போருக்குப் பின் பில்போ ஹாபிடனுக்குத் திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ முனைகிறான்.

அசாதாரண சம்பவங்கள் நிகழும்போது எப்படிச் சாதாரண மனிதர்களும் நினைக்க முடியாத அளவு பண்பு மாற்றம் அடைகிறார்கள் என்பதை இந்தக் கதை அற்புதமாக எடுத்துச் சொல்கிறது. தனது ஊரில் பில்போ ஒரு வீரம் தேவையற்ற, சாதாரண ஹாபிட், அவ்வளவுதான். ஆனால் கதையிறுதியில் அவன் வீரனாவது மட்டுமல்ல, நற்பண்புகளிலும் வளர்கிறான். பலமுறைகள் குள்ளர்களை அபாயங்களிலிருந்து காப்பாற்றுவதோடு குள்ளர்களுக்கு உயிரான ஒரு பெரிய மாணிக்கத்தையே போர் நிறுத்தத்துக்காக எதிரிகளுக்கு அளிக்கிறான். இறுதியாக அவனுக்குக் கிடைக்கும் பரிசு ஒரு மாயமோதிரம். இதுதான் டோல்கியனின் அடுத்த பெரும்புத்தகமான “மோதிரங்களின் தலைவன்” கதைக்குக் காரணமாக அமைகிறது.


ஐந்தாம் உலகம்

பூமியின் மீதுள்ள எல்லா உயிர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முக்கியப் பொருளாகச் சூரியனின் முக்கியத்துவத்தை உலகின் பல பழங்காலக் கலாச்சாரங்கள் அறிந்திருந்தன. மனிதர்களைக் காப்பவனாகவும் சூரியன் நோக்கப்பட்டது.

அமெரிக்க இந்தியப் பழங்குடியினரில் ஒன்றான ஹோப்பி இன நாட்டுப்புறக் கதையில், சூரியன் மனிதனுக்குத் தந்தையாக ஏற்கப்பட்டது. பிற பழங்குடிக் கலாச்சாரங்களிலும் இதை ஒத்த நம்பிக்கைகள் உள்ளன.


ஒரு காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து உலகங்களும் ஐந்து சூரியன்களும் படைக்கப்பட்டன. முதல் உலகத்தின் மக்கள் தவறாக நடந்துகொண்டதால் அது அழிக்கப்பட்டது. அத்துடன் முதல் சூரியனும் அழிந்தது.
இரண்டாவது சூரியன், தன் மக்கள் விவேகமற்றுக் குரங்குகளாவதைக் கண்டது.
மூன்றாவது உலகின் மக்கள் தெய்வங்களுக்கு பலியிடாமையால், தீ, பூகம்பம், எரிமலை ஆகியவற்றால் அழிந்துபோவதை அதன் சூரியன் கண்டது.
நான்காம் உலகம் வெள்ளத்தில் சூரியனையும் இழுத்துக்கொண்டு அழிந்தது.
நமது உலகான ஐந்தாம் உலகைப் படைக்கும் முன்பாக, ஐந்தாம் சூரியனைக் கொளுத்தப்போகும் பாக்கியசாலி யார் எனக் கண்டறிய இருளில் கடவுளர்கள் கூடினார்கள்.
ஒரு மனிதன் முன்வந்தான். ஒரு பிரமிடின் உச்சியில் கடவுளர்கள் பெரிய தீயை உண்டாக்கினார்கள். அதில் அந்த மனிதன் குதிக்க வேண்டும்.
அவன் மிகப் பிரகாசமான உடையணிந்திருந்தான். நான்கு முறை தீயில் குதிக்க முயற்சி செய்தான். ஆனால் பயத்தினால் முடியவில்லை.
எல்லாக் கடவுளர்களிலும் கீழான கடவுள் ஒருவர், நாணல்குச்சிகளால் மிக எளிய உடையை அணிந்திருந்தவர், தீயில் குதித்துவிட்டார். மனிதனும் வெட்கமடைந்து, தானும் தீயில் விழுந்துவிட்டான்.
ஐந்தாம் உலகிற்கு ஒளியூட்டியவாறு சூரியன் வானத்தில் எழலாயிற்று.


-அமெரிக்க இந்தியப் பழங்குடியினமான டோல்டெக் நாட்டுப்புறக் கதை.


இரகசியத் தோட்டம்

ஃபிரான்சிஸ் ஹாட்ஜ்சன் பர்னெட் என்ற நாவலாசிரியை எழுதிய ஒரு சிறந்த சிறுவர் நாவல் இரகசியத் தோட்டம் (The Secret Garden) ஆகும். அமெரிக்கன் மேகசின் பத்திரிகையில் தொடராக வெளிவந்த அது, பிறகு நூலாக வெளியிடப் பட்டது (1911). ருட்யாட் கிப்லிங், கென்னத் கிரஹாம் போன்றோர் இவரது சமகால ஆசிரியர்கள்.

எவ்விதத் திருப்பங்களும் அற்ற மிக நேரான கதை இது. ஒரு சிறுமி பெற்றோரை இழக்கிறாள்–நண்பர்களைப் பெறுகிறாள்–ஒரு தோட்டத்தைக் காண்கிறாள்–ஒரு பையன் அங்கு அவளோடு இணைந்துகொள்கிறான்–தன் நோயிலிருந்து விடுபடுகிறான்–அவ்வளவுதான்.

இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயப் பெற்றோருக்குப் பிறந்தவள் மேரி  லெனாக்ஸ். அவள் தந்தை பிரிட்டிஷ் படையில் ஓர் அதிகாரி. தாய், அழகானவள், செல்வச் செழிப்பினால் விருந்துகள் தந்தும் தோழிகளுடன் நேரத்தைக் கழித்தும் வந்தவள்.இக்குழந்தை பிறந்தவுடனே ஓர் “ஆயா”விடம் வளர்ந்துவருமாறு அளிக்கப் படுகிறாள். அதனால் இச்சிறுமி ஒரு செருக்குள்ள பெண்ணாக வளர்கிறாள். அவள் விரும்பியதை எல்லாரும் செய்தாக வேண்டும்.

அவள் ஆறு வயதாக இருக்கும் போது, காலரா பரவுகிறது. அதில் அவள் பெற்றோர் இறந்துபோகிறார்கள். முதலில் ஒரு மதபோதகரிடம் வளருமாறு அவள் விடப்படுகிறாள். அந்த ஏற்பாடு ஒத்து வராததால் தன் தாய்மாமனான ஆர்ச்சிபால்ட் கிரேவன் என்பவரிடம் வளருமாறு வடக்கு இங்கிலாந்தில் மிசல்வைத் மேனர் என்ற பெரிய வீட்டுக்கு அவள் அனுப்பப்படுகிறாள்.

அவள் வந்து சேர்ந்தபோது கடுங்குளிர் காலம். அவள் மாமன் அவளைப் பார்க்க விரும்பவில்லை. அவர் ஒரு கூனன் எனத் தெரிகிறது. தன் மனைவி லிலியாஸ் இறந்தபிறகு அந்த வீட்டுக்கு அவர் வருவதைத் தவிர்த்து, ஐரோப்பாவில் பல ஊர்களையும் சுற்றி வருகிறார்.

அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது. அது அவள் மாமி லிலியாஸ் என்பவளுக்கு விருப்பமான இடம். அவளுக்கு ஓர் ஆண் குழந்தை–காலின். அவன் பிறந்த போது அந்தத் தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து லிலியாஸ் விழுந்து அவன் பிறந்த கையோடு இறந்து விடுகிறாள். அவளை மிகுதியாக நேசித்த கிரேவன், அந்தத் தோட்டம் துரதிருஷ்டத்தின் அடையாளம் எனக் கருதி, அதைப் பூட்டிவைத்து, ஒருவருக்கும் தெரியாதவாறு செய்துவிடுகிறார். அங்கு ஒருவரும் செல்லலாகாது என்றும் கூறிவிடுகிறார். அதனால் அது ஓர் இரகசியத் தோட்டமாகவே இருந்துவருகிறது.

மேரிக்கு அதிர்ஷ்டப் பறவையாகக் கருதப்படும் ராபின் என்ற குருவியின் தொடர்பு கிடைக்கிறது. அதன் உதவியால் தோட்டத்திற்குள் செல்லும் சாவி அவளுக்குக் கிடைக்கிறது. தோட்டத்திற்குள் செல்லும் மேரி, அதைக் களையெடுத்துச் சுத்தம் செய்கிறாள். அவள் பணிப்பெண் மார்த்தா, தன் தம்பி டிக்கனை அறிமுகப் படுத்துகிறாள். அவன் செடிவளர்ப்பில் ஆர்வம் கொண்டவன். அந்த இரகசியத் தோட்டத்தின் செடிகொடிகளை அறிமுகப்படுத்தி அவற்றை வளர்க்கும் முறை பற்றிச் சொல்கிறான். தொடர்ந்து தோட்டத்தைப் பண்படுத்தும் வேலையில் மேரி ஈடுபடுகிறாள். உண்மையில் அந்த வேலை அவளைப் பண்படுத்துகிறது. அதன் வாயிலாக, அவளது சுயநலச் செருக்கு குறைந்து, நற்பண்பு ஏற்படுகிறது.

இந்த மாளிகைக்கு அவள் வந்து சேர்ந்த நாள் முதலாக தினமும் இரவுகளில் அவளுக்கு ஓர் அழுகுரல் கேட்கிறது. தேடும்போது, அது ஏறத்தாழ அவள் வயதுள்ள காலினிடமிருந்து வருவது தெரிகிறது. அவன் தனது மாமன் கிரேவனின் மகன் என்பதை அறிகிறாள். அவன் பிறந்தவுடன் அவனும் தன்னைப் போல அங்கஹீனம் உள்ளவன், நன்கு வாழ இயலாதவன் என்று கருதி அவன் தந்தை அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறார். அவனும் நோய்பிடித்த, பலவீனமான, செருக்குள்ள, சக்கர நாற்காலியில் இயங்கும் பையனாக இருக்கிறான். அவனுக்கு அங்க ஹீனம் எதுவும் இல்லாவிட்டாலும் தன்னால் நடக்கமுடியாது என்று நினைத்த அவன் சக்கர நாற்காலியில் இயங்குகிறான். தன்னால் வாழமுடியாது, இறந்து போகப் போகிறோம் என நினைத்து அனைவருக்கும் தொல்லை கொடுத்து வருகிறான். அவனைத் தேற்றி, ஆறுதல் கூறி, தான் கண்டுபிடித்த தோட்டத்தைப் பற்றி மேரி கூறுகிறாள்.

அவர்கள் தோட்டத்தில் நுழையும்போது தோட்டக்காரன் பென் என்பவன் கோபித்துக் கொள்கிறான். வாயில் பூட்டப்பட்டிருந்ததால், அவன் எப்போதாவது சுவரேறிக் குதித்து அங்குள்ள சில ரோஜாச் செடிகளை மட்டும் வளர்த்து வருகிறான். அவன் லிலியாஸுக்கு வேண்டப்பட்டவன். காலினைப் பார்த்து அவன் ஆச்சரியமடைகிறான். “வளைந்த முதுகும் கால்களும் கொண்ட நீ எப்படி இங்கே வந்தாய்” என்று கேட்கிறான். அதைக் கேட்ட காலின் கோபமடைந்து தன் கால்களால் எழுந்து நிற்கிறான். அதன் பிறகு அவனுக்கே ஒரு பெரும் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தான் பிறரைப் போன்று சுயமாக வாழ முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பிறகு பென், அந்த மூன்று சிறார்களுக்கும் தோட்டத்தைப் பண்படுத்தச் சொல்லித் தருகிறான். காலினும் தன்னைச் செம்மைப் படுத்திக் கொள்ளவும் நோயிலிருந்து விடுபடவும் முனைகிறான். தான் உடல்நலம் பெற்றுவிட்டால் தன் தந்தை தன்னை நேசிப்பார் என்று கருதுகிறான். இந்தச் சிறார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் தோட்டத்தைப் பண்படுத்துகிறார்கள். அதன் உரிமையாளரான கிரேவனோ, தன் மனைவியின் ஞாபகங்களின் இருப்பிடமான அந்த வீட்டைத் தவிர்த்துவந்ததோடு, தன் பலவீனமான மகன் இறந்துவிடுவான் என்றும் நினைத்திருக்கிறார்.

ஒரு நாளிரவு தனது தோட்டத்திற்கு வருமாறு மனைவி அழைப்பதாக அவர் கனவு காண்கிறார். அதனால் ஐரோப்பாவிலிருந்து தன் இங்கிலாந்து வீட்டுக்கு ஓடிவந்து தோட்டத்திற்கு வருகிறார். அது முன்போல் மூடியிராமல் திறந்திருப்பதைப் பார்த்து வியப்படைந்து உள்ளே நுழைகிறார். அங்கு அவர் தன் சகோதரி மகளையும், பிற சிறாரையும் காண்கிறார். அவர் மகன் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதையும் கண்டு ஆச்சரியம் அடைகிறார். தந்தையும் மகனும் ஒன்று சேர்கின்றனர். அவர் உள்பட அனைவரையும் அந்தத் தோட்டம் செம்மைப்படுத்தி, நலமுறச் செய்து விட்டது. படிக்கும் சிறார்களுக்கு நம்பிக்கையை ஊட்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நினைத்ததைச் சாதிக்கும் பண்பை அளிக்கின்ற நாவலாக இது இருப்பதால் தொடர்ந்து சிறார்களால் உலகம் முழுவதும் படிக்கப்பட்டு வரும் நூலாக இது உள்ளது.