அறப்பளீசுர சதகம்

சதகம் என்பது ஒரு சிற்றிலக்கிய வகை. சதகம் என்றால் நூறு பாக்கள் கொண்ட இலக்கிய வகை என்று பொருள். சதக நூல்கள் நல்ல நீதிகளை எளிய நடையில் இனிமையாக எடுத்துரைப்பனவாக உள்ளன. தமிழில் பல சதக நூல்கள் உண்டு. அதில் அறப்பளீசுர சதகம் என்பதும் ஒன்று.
அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. நூற்பெயர் பாட்டுடைத் தலைவனால் வருவது. அறப்பளீசுவரர் கோயில் (சிவன் கோயில்) கொல்லி மலையில் உள்ளது. இதில் நூறு பாக்கள் இல்லை, 51 பாக்களே உள்ளன. சான்றுக்கு ஒரு பாவினைக் காணலாம். இது 14ஆம் பாட்டு.

வாலிபம் தனில் வித்தை கற்க வேண்டும் கற்ற வழியிலே நிற்க வேண்டும்
வளைகடல் திரிந்து பொருள் தேட வேண்டும் தேடி வளர்அறம் செய்ய
வேண்டும்
சீலமுடையோர்களைச் சேர வேண்டும் பிரிதல் செய்யாதிருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல் பல கொள்ள வேண்டும் கொண்டு தியாகம் கொடுக்க
வேண்டும்
ஞாலமிசை பல தருமம் நாட்ட வேண்டும் நாட்டி நன்றாய் நடத்த வேண்டும்
நம்பன் இணையடி பூசை பண்ண வேண்டும் பண்ணினாலும் மிகு பக்தி
வேண்டும்
ஆலம் அமர் கண்டனே, பூதியணி முண்டனே, அனக எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

எனக்காகவே எழுதப்பட்டது போன்ற ஒரு பாடல் இது.

கோபமே பாவங்களுக்கெலாம் தாய் தந்தை கோபமே குடிகெடுக்கும்
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது கோபமே துயர் கொடுக்கும்
கோபமே பொல்லாது கோபமே சீர்கேடு கோபமே உறவு அறுக்கும்
கோபமே பழிசெயும் கோபமே பகையாளி கோபமே கருணை போக்கும்
கோபமே ஈனமாம் கோபமே எவரையும் கூடாமல் ஒருவனாக்கும்
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீநரகு குழியினில் தள்ளிவிடுமால்
ஆபத்தெலாம் தவிர்த் தென்னை ஆட்கொண்டருளும் அண்ணலே அருமை
மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

அருமையான எளிய இந்த நூலைப் படித்துப் பயனடைவோம்.

இலக்கியம்