இயற்கை நினைவில் கொள்கிறது, பரிசளிக்கிறது

ஒரு காலத்தில் ஆரோக்கியமான மூன்று பிள்ளைகளைக் கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். முதல் இரண்டு மகன்களும் காளைகளைப் போன்ற வலிமையும், குறி தவறாமல் எய்வதற்குக் கழுகினைப் போன்ற கூரிய பார்வையும் கொண்டவர்கள். மூன்றாவது மகனோ, சற்றே ஒல்லியான தோற்றத்துடன், சிந்தனையாளன் போலக் காட்சியளித்தான்.
தானே தன் பண்ணைநிலத்தை யாருக்குக் கொடுப்பது என்று முடிவு செய்வதைவிட, அவர்கள் தாங்களே தங்கள் எதிர்காலத்தைத் தேடட்டும் என்று முதிய விவசாயி நினைத்தான்.
ஆகவே அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் பாதைக்கருகில் ஓர் எறும்புப் புற்று உயரமாக இருந்தது. சலிப்புற்ற இரண்டாவது மகன் அதை உதைக் கச் சென்றான். அதிலிருந்து பயந்தோடும் எறும்புகளைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் என்று நினைத்தான்.
“உதைக்காதே” என்றான் மூன்றாமவன். “அவைகளுக்கும் பாதுகாப்பாக வாழ உரிமை இருக்கிறது.”
கொஞ்சம் கழித்து அவர்கள் தெளிந்த நீரைக்கொண்ட ஓர் ஏரியை அடைந்தார்கள். தங்கள் மூட்டைகளைப் பிரிக்க உட்கார்ந்தார்கள். சில வாத்துகள் ஏரியில் இறங்கி நீந்தின.
“இவற்றில் ஒன்று நம் உணவுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்” என்று முணுமுணுத்தவாறு தன் வில்லைத் தேடினான் மூத்தமகன்.
“நகராதே!” வாத்துகள் அதிர்ந்து, ஏரியிலிருந்து பறந்தோடி விடுமாறு உரக்கக் கத்தி னான் இளைய மகன். “பலநாட்களுக்குத் தேவையான உணவு நம்மிடம் இருக்கிறதே!”
ஒரு முதிய காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எழுத்து மறையும் நேரம். இரவுநேரத்தில் தங்கள் கூடுகளுக்குத் தேனீக்கள் திரும்பிய சத்தம் அமைதியைக் குலைத்தது.
“ஆஹா, என் ரொட்டிக்குக் கொஞ்சம் தேன் இருந்தால் போதுமே”….ஓசையைத் தொடர்ந்து அவன் சென்றான். உள்ளீடற்ற ஒரு மரத்தின் அருகில் சென்ற போது அதன் பட்டைமீது தேன் சொட்டிக்கொண்டிருந்தது.
மற்ற இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். நடுமகன் சொன்னான், மரத்தை நாம் எரித்தால், எழும் புகையில் தேனீக்களை விரட்டிவிடலாம்.
“அப்புறம் காடு முழுவதையும் உசுப்பிவிடுவதா?” என்றான் இளையவன். “தேனீக்களை அவற்றின் வீட்டில் விடுங்கள்.”
மற்ற இரண்டு சகோதரர்களும் எரிச்சலடைந்தார்கள். இவனை விட்டுவிட்டு வந்திருந் தால் நன்றாக இருக்குமே!
களைத்தவாறு நடந்து, இருண்ட காட்டின் மத்தியில், பாழடைந்த ஒரு குடிசையை அடைந்தார்கள் அவர்கள். மூத்தவன் கதவைத் தட்டினான். நரைத்த முதியவர் ஒருவர் அவர்களை உள்ளே அனுமதித்தார்.
“எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று ஓர் இனிய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஓர் அழகிய இளம்பெண்.
“எங்கள் அதிர்ஷ்டத்தை நாடிப் புறப்பட்டிருக்கிறோம்” என்று விடையிறுத்தான் மூத்தவன்.
“இதயத்தில் துணிச்சலும் கண்களில் கூர்மையும் இருந்தால் அதை நீங்கள் அடைந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்” என்றார் முதியவர்.
“இரண்டுமே எங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று பெருமையடித்துக் கொண்டான் இரண்டாமவன்.
“அப்படியானால்,” தொடர்ந்தார் முதியவர், “உங்களில் யார் இந்தக் கற்பலகையைப் பார்த்து முயற்சி செய்யத் தயார்?”
மூத்தவன் தைரியமாக எழுந்து கற்பலகையிலிருந்த செய்தியைப் படித்தான். “காட்டில் இருக்கும் முத்துகளைக் கண்டுபிடிக்கவேண்டும். சூரியன் மறையும்போது ஒரு முத்து கூட விடுபட்டிருக்கக்கூடாது. இல்லையென்றால் நீ கல்லாகிவிட நேரும்.”
கிழவரைப் பார்த்து மூத்தவன் கேட்டான்: “எத்தனை முத்துகள் விடுபட்டிருக்கின்றன?”
“ஆயிரம்.”
விடியலில் அவன் புறப்பட்டான். இலைகளும் கொடிகளும் மூடியிருந்த காட்டின் தரையைப் பார்த்து ஏறத்தாழப் புலம்பிவிட்டான்.
குன்றுகளின் பின்னால் சூரியன் மறைவதற்குள் பத்து முத்துகளை மட்டுமே பொறுக்கமுடிந்தது. குந்திய நிலையிலேயே சிலையாகிவிட்டான்.
இரண்டாம் சகோதரன் மறுநாள் காலையில் போனான். சூரியாஸ்தமனத்திற்கு முன் இருபது முத்துகளை மட்டுமே சேகரித்தான். அவனும் சிலையாகிவிட்டான்.
மூன்றாமவனின் முறை வந்தது. புறப்பட்டவுடன் அவன் காதில் ஒரு சன்னமான குரல் கேட்டது. “சஞ்சலப்படாதே.”
திகைத்துப்போய் காலடியைப் பார்த்தான். பாதை முழுவதும் எறும்புகளின் கூட்டம். மெல்லிய குரல் ஒன்று சொல்லியது: “நான்தான் நீ காப்பாற்றிய எறும்புக்கூட்டத்தின் அரசன். நாங்கள் உன்னைக் காப்பாற்றுவோம்.”
சூரியன் மறையும் நேரத்தில் அவன் ஆயிரம் முத்துகளைக் கொண்ட இரண்டு பெரிய பைகளுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தான்.
இரண்டாவது பணிக்கு அவனை முதியவர் அனுப்பினார். ஒரு பெண்ணின் மோதிரம். ஓர் ஆழமான கருத்த ஏரியில் விழுந்துவிட்ட அதைத் தேடி எடுக்கவேண்டும். சற்றேறக் குறைய அழுதேவிட்டான் இளைஞன்.
“பயப்படாதே” என்று ஒரு வாத்தின் ஒலி கேட்டது. “நீ ஏன் கூட்டத்தைக் காப்பாற் றினாய். உன்னை நாங்கள் காப்பாற்றுவோம்” என்றது தாய் வாத்து.
சூரியாஸ்தமன நேரத்தில் கையில் பொன் மோதிரத்தோடு திரும்பினான் இளைஞன்.
மூன்றாவது ஒரு பணிக்கு அவன் மீண்டும் அனுப்பப் பட்டான். ஒரு உயர்ந்த மாளிகையின் மேல்மாடிக்குச் செல்லவேண்டும். சென்றான். அங்கே மூன்று பட்டாடை அணிந்த பெண்கள்-அச்சாக ஒரே மாதிரி இருந்தார்கள்-உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் இளவரசி. தன் இளவரசனுக்காகக் காத்திருப்பவள்.
“ஐயோ” விசனித்தான் இளைஞன். “எப்படி நான் இவர்களில் என் இளவரசியைக் கண்டுபிடிப்பேன்?”
கவலைப் படாதே என விர்ரென்று ஒரு குரல் கேட்டது. அது இராணித் தேனியின் குரல். அது ஒவ்வொரு பெண்ணாக முகர்ந்துகொண்டே சென்றது. மூன்றாவது பெண் ணின் உதட்டில் போய் அமர்ந்தது.
அந்த அழகிய இளவரசிக்கு ஒரு தகுதியான கணவன் கிடைத்தான் என்று காட்டின் ஜந்துக்கள் யாவும் குதூகலித்தன.
-ஜெர்மானிய நாட்டுப்புறக் கதை.

சமூகம்