மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்துவருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடக அரசு முயற்சித்தும் தமிழக அரசின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டும் வந்தது. 1996ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. மேகதாதுவில் 2 நீர்மின் திட்டங்களையும் ஓகேனக்கல்லில் தேசிய நீர்மின் கழகம் அமைக்கும் என்கிற திட்டத்தையும் வைத்தது. தமிழ்நாடும் கர்நாடகாவுக்கு இதுகுறித்து பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்நாடகா தாங்களாகவே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்துபோது அந்த பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்நாடு விலகிக்கொண்டது. ஒன்றியத்தில் பாஜக வந்தபிறகு அணை கட்டுவதற்கான முயற்சிகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது . காவிரி நடுவர் ஆணைய உத்தரவை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் தெரிவித்து அரசிதழில் வெளியான பிறகு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அணை கட்டுவதற்கான வேகம் அதிகரித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் எழும் எதிர்ப்பை சமாளிக்க ஒன்றிய அரசு யோசித்து உருவாக்கிய திட்டம்தான் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். மேகதாதுவில் அணை காட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கர்நாடக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

மேகதாது அணை, கிருஷ்ணராஜ சாகர்-கபினி மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடையே கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மொழியில் “balancing reservoir” என்று அழைக்கப்படும் மேகதாது அணை கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நீரை தேக்கி குடிநீர் மற்றும் மின்னுற்பத்திக்கு பயன்படுத்துவதுதான் நோக்கம் என கர்நாடக அரசு சொல்கிறது.

தமிழ்நாட்டின் பார்வையில் மேகதாது அணையின் அடிப்படையே சிக்கல்தான். கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்தேக்கத்திலிருந்து வெளிவரும் “நீர்வழிப் பாதையில்” 67 டிஎம்சி கொள்ளளவில்  மேகதாது அணை அமைய இருப்பதால் கர்நாடகாவிற்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும்.

கடந்த 25 ஆண்டுகளில்,குறிப்பாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீர் இந்த இரு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீர்தான். கர்நாடகா திறந்துவிடும் நீர் கிடையாது. கிருஷ்ணராஜ சாகர் – மேட்டூர் அணைகளுக்கு இடையே உள்ளநீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து ஓடிவரும் நீரால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது.

இதுதான் கர்நாடகாவை உறுத்துகிறது.இதை குறிவைத்துதான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் துடியாய்த் துடிக்கிறது.

கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு தருவதற்கு நதியின் வடிகால் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் தண்ணீர் வருமா என்பது பெரிய கேள்விதான். இந்தியாவின் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளதை நாம் நினைவில் கொண்டால் எந்த கோதாவரி தண்ணீரை திருப்புவீர்கள் என கேள்வி கேட்கலாம்.

ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு நடத்தும் இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு குறித்த எந்த கோரிக்கையையும் வைக்க தேவையில்லை.

தமிழ்நாடு அரசு கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் என்கிற அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தபோது ஓடிச்சென்று வரவேற்றார் அன்றைய முதல்வர்  எடப்பாடி.

நதிகளை இணைக்கிற அறிவிப்பே காவிரியில் நமக்கு உள்ள உரிமையை மறுக்கச் செய்வதற்கான வேலை என அப்போதேபூவுலகு  உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்திருந்தனர். கடந்த வாரத்தில் மேகதாது அணை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்விதமாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.

எந்த நதிநீரும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இப்போது கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குக் கிடைப்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். எல்லா நதிகளும் ஆந்திரத்தின் மையத்தில் உள்ளன. அங்கிருந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் நீரைக் கொண்டுவருவது அரிது, வர முடிந்தாலும், 90 சதவீத நதிநீர் இணைப்புப் பகுதி ஆந்திரத்தின் எல்லைக்குள் இருப்பதால் அவர்களே பயன்பெறுவார்கள் (திருடிக் கொள்வார்கள் என்பது சற்றே வன்மையான தொடர்).

இனிமேலும் கர்நாடகா எந்த அணையும் கட்டாமல் தடுப்பதும் நீரைச் சிக்கனமாகக் கையாள்வதும் மட்டுமே தமிழகத்தின் டெல்டாப் பகுதியின் நீர்த்தேவையை நிறைவு செய்யும். கோதாவரி இணைப்பே சாத்தியமில்லை என்கிறபோது கங்கை-காவிரி இணைப்பு முதலிய திட்டங்கள் பற்றிப் பேசவே வேண்டாம். ஏறத்தாழ கடல்மட்ட அளவில் உள்ள கங்கைச் சமவெளியிலிருந்து 1000 மீட்டருக்குமேல் தக்கணப் பீடபூமியில் நீரை ஏற்றி, பிறகு கோதாவரிச் சமவெளியில் இறக்கி, கிருஷ்ணா, பெண்ணை சமவெளியைத் தாண்டி, மீண்டும் 500 மீட்டருக்கு மேல் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தாண்டி, அப்புறம் தமிழ்நாட்டுப் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாற்றாங்கரைப் பகுதிகளைத் தாண்டி காவிரியில் கொண்டு வந்து இணைப்பார்களாம். எந்த முட்டாள் பொறியியலாளன் சொன்ன ஐடியாவோ இது?

General