வெள்ளாட்டின் பலி

நம் நாட்டில் கிராமத் திருவிழாக்களில் வெள்ளாட்டை பலி கொடுப்பது ஒரு முக்கியச் சடங்கு. திருச்சியில் உறையூரில் நடக்கும் ஒரு அம்மன் திருவிழாவில் (இதைக் குட்டி-குடி திருவிழா என்பார்கள்) ஓர் ஆட்டின் தலையை வெட்டி அப்படியே பூசாரி இரத்தத்தைக் குடித்துவிடுவான். இதுபோல இலத்தீன் அமெரிக்க நாடாகிய பெரூவிலும் ஒரு வெள்ளாடு பலி தரப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு வெள்ளாடு என்பது குறியீடாக அந்நாட்டுச் சர்வாதிகாரி ஒருவனைக் குறிக்கிறது.

வெள்ளாட்டின் விருந்து (The Feast of the Goat) என்பது பெரூ நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் மராயோ வார்காஸ் லோஸா என்பவரால் எழுதப்பட்டது. இது ஓர் அரசியல் வரலாற்று யதார்த்த நாவல். இப்படிப்பட்ட நாவல் தமிழில் இதுவரை கிடையாது. இது ஸ்பானிய மொழியில்  2000ஆம் ஆண்டில் வெளியானது. ரஃபேல் ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலனின் நீண்ட ஆட்சியின் (1930-61) இறுதிப்பகுதி பற்றியது. லத்தீன் அமெரிக்க நாவல்களின் ஓர் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது இந்த நாவல். பெரு நாவலாசிரியர்களில்

அகஸ்டோ ரோவா பாஸ்டோஸின் I the Supreme,

அலெஜோ கார்பெண்டியரின் Reasons of State.

காப்ரியேல் கார்சியா மார்க்விஸின் Autumn of the Patriarch

ஆகிய அரசியல் நாவல்களின் வரிசையில் வருகிறது வார்காஸ் லோஸாவின் இந்த நாவல்.

இந்த நாவலின் கதை மூன்று பகுதிகளாக உள்ளது. ஒன்று யுரேனியா சாப்ரால் என்ற டொமினிகன் பெண் சம்பந்தப்பட்டது. மற்றொன்று பெரு நாட்டின் சர்வாதிகாரி ட்ரூஜில்லோவின் கொலை தொடர்பானது. இன்னொன்று ட்ரூஜில்லோவின் இறுதி நாளில் நிகழ்ந்த அவனது சொந்த நிகழ்வுகள். 1961 முதல் 1996 வரை நடந்த கதையை இந்த மூன்று பகுதிகளும் மாறி மாறிச் சொல்கின்றன.

கதையின் தொடக்கத்தில் யுரேனியா தன் சொந்த நகரமான சாண்டோ டொமினிகோவுக்கு 1996இல் திரும்புகிறாள். 1961இல் 35 ஆண்டுகளுக்கு முன் தன் 14 வயதில் அதை விட்டுச் சென்றவள் அவள். பிறகு ஹார்வர்டு சட்டப்புலத்தில் பயின்று இப்போது அவள் நியூ யார்க்கில் உலக வங்கிக்கான ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருக்கிறாள். சாகக் கிடக்கும் தன் தந்தை அகஸ்டீன் சாப்ராலைக் காண வருகிறாள். அவள் தன் குடும்பத்தைப் பிரிந்து சென்றதிலிருந்து இதுவரை எந்தவிதத் தொடர்பையும் அவர்களுடன் வைத்துக் கொண்டதில்லை. ஒருவேளை தன் தந்தையின் மரணத்தில் தன் வெற்றியைக் காண வந்திருக்கிறாள் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது பகுதி 1961 மே 30இல் பெருவின் சர்வாதிகாரி ட்ருஜில்லோ வின் கொலை நடந்த நிகழ்வுக்குத் திரும்புகிறது. (இவன்தான் “ஆடு” எனப்படுகிறான்.) முதலில் அமெரிக்காவின் அன்புக்குப் பாத்திரமாக அவன் இருக்கிறான். ஓர் அமெரிக்கத் தலைவன் கூறியது போல, ‘he was a son of a bitch, but he was our son of a bitch.’ இப்போது அவன் அமெரிக்க ஆதரவை இழந்துவிட்டான். அவனால் பாதிக்கப்பட்ட சிலர் பிற அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மூன்றாவது பகுதி மே 30 அன்று ட்ருஜில்லோவின் சிந்தனைகள், செயல்கள் பற்றியதாக அமைகிறது. அவன் சிந்தனையில் 1937இல் பல ஆயிரக்கணக்கான ஹைட்டியர்களைக் கொன்றது போன்றவை வந்து செல்கின்றன. கென்னடி, ஃபிடல் கேஸ்ட்ரோ ஆகியவர்களின் சமகாலத்தொடர்பும் கொண்டிருந்தான். அவன் உடல்நலம் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் அதை ஏற்காமல் வழக்கம்போல் மாலை நேரத்தில் பெண்களைச் சந்திக்க விழைகிறான். அப்படிப்பட்ட சந்திப்பு ஒன்றிற்குச் செல்லும்போதுதான் அவன் கொலை செய்யப் படுகிறான். கொலைகாரர்கள் முதலில் போட்டிருந்த திட்டப்படி அவர்களின் காரியங்கள் நடக்கவில்லை. அவன் வரக் காத்திருந்த நேரத்தில் அவர்களில் ஒவ்வொருவனும் அந்தச் சர்வாதிகாரியால் தாங்கள். அடைந்த பாதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்றாலும் எதிர்பாராத விதமாக தனியாக அவன் சிக்கியதால் உடனே கொன்றுவிடுகிறார்கள்.

இந்த மூன்று பகுதிகளும் கதையில் கடிகார நிகழ்வுகள் போல மாறி மாறி வருகின்றன. கதையின் பெரும்பகுதி ட்ருஜில்லோ தன் மக்களை எவ்வாறு வதைத்தான் என்பதைச் சொல்கிறது.

சதிகாரர்களில் மிக முக்கியமானவன் ப்யூபோ ரோமன் என்பவன். அந்நாட்டின் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவன். மற்றொருவன் பலாகேர் என்ற, அதுவரை பொம்மை ஜனாதிபதியாக இருந்த ஆள். ஆனால் கொலை நடந்த பிறகு சதிகாரர்கள் இருவரையும் தேடினாலும், அவர்களைக் காணவில்லை. கதை இந்த இருவரின் செயல்களையும் உணர்வுகளையும் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ட்ருஜில்லோவின் மகன் பாரிஸிலிருந்து வந்ததும், பலாகேர் அவனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கலகக்காரர்கள் அத்தனை பேரையும் அழித்து விடுகிறான். பிறகு கத்தோலிக்கத் திருச்சபையுடன் சமரசம் செய்து கொண்டு அவனே ஜனாதிபதியும் ஆகிவிடுகிறான்.

யுரேனியாவின் தந்தை முன்பு, 1960கள் காலத்தில் அரசாங்கத்தில் ட்ருஜில்லோவின் நெருக்கமான ஆளாக இருந்தவன். அவனுக்கு தலைவனின் ஆதரவு குறைந்ததால் அதனைச் சரிக்கட்ட ஒரு நண்பனின் ஆலோசனைப்படி தன் 14 வயது மகளை ட்ருஜில்லோவுக்கு “பலியாடாக” அனுப்புகிறான். ட்ருஜில்லோவின் பாலியல் வன்முறைக்கு ஆளான அவள் தான் படித்த கான்வென்ட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள். பிறகு அங்கிருந்த சகோதரியர் அவளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இப்போது மரணப்படுக்கையில் அவள் தந்தை இருக்கிறான். அவனைக் காணவந்தவள் இயக்கமிழந்த தன் தந்தையிடம் தானறிந்த வகையில் ட்ருஜில்லோவின் அரசாங்கத்தின் பயங்கரங்களைச் சொல்கிறாள். அவற்றில் எவ்வளவு சாப்ராலுக்குத் தெரியும், எந்த அளவுக்கு அவற்றில் அவனுக்குப் பங்கு இருக்கிறது என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் அவன் புரிந்துகொண்டானா என்பது கூடத் தெரியவில்லை. அவள் குடும்ப உறுப்பினர்கள் அவள் ஏன் தொடர்பை அறுத்துக் கொண்டாள் என்று வசைபாடுகிறார்கள். ட்ருஜில்லோவின் கொலைக்குப் பிறகு யுரேனியா தன் குடும்பத்து உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறி வெளியேறுகிறாள்.

இலக்கியம்