யாரும் யானும்

தமிழ்மொழியின் தனித்தன்மை, தனது சாதாரணச் சொல்லமைப்பு முறையிலேயே அற்புதமான கருத்துகளை உணர்த்துவதாகும்.
தமிழில் ரகர மெய் பன்மையையும் னகர மெய் ஒருமையையும் உணர்த்துவது. சான்றாக,
கணவர் (பன்மை) – கணவன் (ஒருமை)
மன்னர் (பன்மை) – மன்னன் (ஒருமை)
திருடர் (பன்மை) – திருடன் (ஒருமை)
தமிழ் தெரிந்தவர்களுக்கு இதற்கு மேலும் உதாரணங்கள் தேவையில்லை. இதேபோல,
யார் (பன்மை) – யான் (ஒருமை) (இக்காலத் தமிழில் இது ‘நான்’ என்று ஆகிவிட்டது)
எந்தக் கேள்வி ‘யார்’ என்பதைக் கொண்டு கேட்டாலும் அதற்கு ஒருமை வடிவம் ‘யான்’. அதுவே பதிலாகவும் அமைகிறது.

உதவி செய்தது எவர் என்று பன்மையிலோ, உதவி செய்தது எவன் என்று ஒருமையிலோ கேட்க முடியும். ஆனால், “உதவி செய்தது யான்?” என்று ஒருமையில் அமைக்க முடியுமா? பன்மையில்தான் கேட்டாக வேண்டும். “உதவி செய்தது யார்?” அதற்கு விடை அந்தக் கேள்வியேதான், அதன் ஒருமை வடிவம், “யான்”.
ஆட்சி அமைத்தது யார்? (ஒருமை வடிவத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டால், “ஆட்சி அமைத்தது யான்?” விடை கேள்வியிலேயே இருக்கிறது–“யான்”.)
தவறு செய்தது யார்? யான்
குற்றமிழைத்தது யார்? யான்
நல்லது செய்தது யார்? யான்.
இதுபோலவே எல்லாக் கேள்விகளுக்கும் யான் என்று அமைக்க முடியும். யார் என்று பன்மையில் முடியும் எல்லாக் கேள்விகளுக்கும் அதன் ஒருமை வடிவமே பதிலாக (யான்) உள்ளடங்கி நிற்கிறது. அதாவது உலகில், நன்மையோ, தீமையோ எல்லாவற்றுக்கும் மூல காரணம் “யான்” (நான்).

பழங்காலத்தில் மனச் செயல்களை சித்தம்–புத்தி–அகங்காரம் எனப் பகுத்தார்கள். (சித்தம் என்பது முடிவெடுத்தல் சார்ந்த மனச்செயல், புத்தி என்பது பகுத்தாராய்கின்ற, காரண-காரிய ஆய்வைச் செய்கின்ற மனச்செயல். அகங்காரம், இவை எல்லாவற்றுக்கும் காரணம் நான் என உணர்கின்ற செயல்.)
யான் என்பது சித்தம்-புத்தி-அகங்காரம் என்ற மனச் செயல்கள் மூன்றில் அகங்காரத்தின் இருப்பிடம். அந்த ஆணவமலம் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் (எவன் என்பது போல் அன்றி, யான் என்ற வகையில் கேள்வி அமைப்பதைவிட்டுத்) தமிழில் பன்மையில் “யார்” என அமைத்தார்கள் போலும்.


தாலாட்டு

நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு என்பதும் ஒருவகை. இந்தக் காலப் பெண்களுக்குத் தாலாட்டு வருவதில்லை. சென்ற தலைமுறை வரை பெண்கள் தாலாட்டுப் பாடுவதில் வல்லுநர்களாக இருந்தார்கள். தால் என்றால் நாக்கு. நாக்கை அசைத்து ‘உளஉளாயி’ என்று  (நம் பார்வையில்) ஒரு பொருளற்ற சத்தத்தை எழுப்பி, ஆராரோ ஆரிரரோ என்று தொடங்கிக் குழந்தைக்கென ஒரு ராகத்தில் பெண்கள் பாடுவார்கள். திரைப்படப் பாடல்கள் வந்த காலம் முதலாகப் பெண்கள் தாலாட்டுப் பாடுவதை விட்டுவிட் டார்கள். எங்கள் வீட்டிலும் எங்கம்மா காலம் வரை தாலாட்டு இருந்தது. என் சகோதரிகள் யாரும் தாலாட்டுப் பாடியதில்லை. இப்போது என் மகளும் மருமகளும்கூட அதே நிலைதான். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால் ரேடியோவையோ தொலைக்காட்சியையோ டேப் ரிகார்டரையோ சற்றே சத்தமாக வைத்துச் சில பாட்டுகளைக் குழந்தைக்காக வைப்பார்கள். இந்தக் காலத்தில்தான் செல்ஃபோன் வரை வந்து விட்டதே.

ஆராரோ ஆராரோ
ஆரிவரோ (ஆரிரரோ) ஆராரோ
யார் அடித்து நீ அழுதாய்
அடித்தாரைச் சொல்லியழு
பிடித்துவைத்து தண்டிப்பேன்
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
தாத்தா அடித்தாரோ
தாங்கி வரும் கையாலே
மாமா அடித்தாரோ
மாலையிடும் கையாலே
யாரும் அடிக்கவில்லை
யார்விரலும் தீண்டவில்லை
பசிக்குத்தான் அழுதாயோ
பாசமுள்ள என் குழந்தாய்.


காக்காப் பாட்டு

காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி
கொண்டைக்குப் பூக் கொண்டு வா
கொக்கு கொக்கு
குழந்‍தைக்குத் தேன் கொண்டு வா
கிளியே கிளியே
கிண்ணத்தில் பால் கொண்டு வா


நிலாப்பாட்டு

நிலா நிலா எங்கே போறாய்?
நீல மலைக்கு நில்லாமல் போறேன்
நீல மலைக்கு நீயேன் போறாய்?
நிறைய நிறைய கல் எடுத்துவர
கல் எடுத்து என்ன செய்யப் போற?
கட்டடம் ஒண்ணு கட்டப் போறேன்
கட்டடம் கட்டி என்ன பண்ணுவாய்?
கல்யாணம் பண்ணிக் குடித்தனம் செய்வேன்
குடித்தனம் எதுக்கு செய்ய வேணும்?
குழந்தை ஒன்று பெற்றுக் கொள்ள.
குழந்தை எதற்கு? குழந்தை எதற்கு?
கூடி விளையாட உன்னைப் போல.


அம்புலியும் நிலாவும்

தினம் ஒன்றிரண்டு சிறுவர்ப் பாடல்கள் – சில நாட்களுக்கு

அம்புலி

அம்புலி அம்புலி வா வா
ஆகாயத்துல வா வா
அம்புலி அம்புலி போ போ
அப்பன் அழறான் போ போ (அப்பன் என்பது இங்கே குழந்தையைக் குறிக்கும் சொல்)
அம்புலி அம்புலி வா வா
ஆகாசத்தில வா வா
அப்பன் சிரிக்கிறான் வா வா
அம்புலி அம்புலி தா தா
அழகா வெளிச்சம் தா தா

நிலா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டுவா
நடு வீட்டில் வையே
நல்ல துதி செய்யே

இது அசலான பாடம் (வெர்ஷன்).இப்போது யூட்யூபில் இந்த அடிகளோடு பம்பரம் போல சுற்றி வா என்றெல்லாம் வேறு சில அடிகளைச் சேர்த்துப் பாடுகிறார்கள்.


தமிழ்க் குழந்தைப் பாடல்கள்

ஆங்கிலவழிக்கல்வி வந்ததால் ஏற்பட்ட கேடுகள் பல. அவற்றில் ஒன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் வழங்கிவந்த குழநதைப் பாடல்கள் (பலபேருக்கு நர்சரி ரைம்ஸ் என்று சொன்னால்தான் புரியும்) மறைந்து போயினமை. எனக்குத் தோன்றியவரை சில நாட்களுக்குத் தமிழ்க் குழநதைப் பாடல்களை இந்தத் தளத்தில் பிரசுரிக்க எண்ணம்.
இன்றைக்கு ஒரு பாட்டு.

நிலா நிலா எங்கே போற?
மலைக்குப் போறேன், மலைக்குப் போறேன்
மலைக்கு எதுக்கு?
மரம் வெட்ட.
மரம் எதுக்கு?
சொப்புச் செய்ய.
சொப்பு எதுக்கு?
காசு போட
காசு எதுக்கு?
மாடு வாங்க
மாடு எதுக்கு?
பால் கறக்க
பால் எதுக்கு?
நீ குடிக்க, நீ குடிக்க.


பெண் அடிமைத்தனம்

“பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் நீங்கள், பெண்களின் உரிமை பற்றிப் பேசும் நீங்கள், ஏன் வீட்டிலுள்ள, அல்லது வெளியிலும் கூட பெண்களைக் கடுமையாக (அடிமை போல) நடத்துகிறீர்கள்?” என்று சிலர் (என் மகன் உள்படக்) கேட்டுள்ளனர். பெண்களை அதட்டுவதும் வேலை செய்யச் சொல்வதும் தவறுசெய்தால் திட்டுவதும் பெண்ணடிமைத்தனம் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியானால் நாம் ஆண்களைத் திட்டுவதோ, அதட்டுவதோ, வேலை செய்யச் சொல்வதோ இல்லையா? அந்தச் சமயத்தில் அவர்கள் இது ஆணடிமைத்தனம் என்று குரல் கொடுப்பார்களா? ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், சரிவரக் கொடுத்த பணியைச் செய்யவில்லையானால் (என் மாணவர்களை) நான் பலமுறை திட்டியிருக்கிறேன். அதனால் நான் அவர்களை அடிமையாக நினைத்தேன் என்பது அல்ல. அது அவர்களுக்கும் தெரியும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பது குறள்.
இதை மேற்கோள் காட்டுபவர்கள், முதற்பகுதியை மட்டும் காட்டிவிட்டு வசதியாக பிற்பகுதியை மறந்துவிடுகிறார்கள்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பினால் வருகின்ற உரிமைகள், பசி தாகம் போன்றவற்றையும் பிற அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் உரிமைகள் உண்டு, ஆனால், நாம் அதற்காக யாவருக்கும் சம அந்தஸ்து தரவேண்டியதில்லை என்பதுதான் வள்ளுவர் கருத்து. யோசித்துப் பாருங்கள், ஒரு கலெக்டர் ஆபீசிலுள்ள டவாலிக்கும் எழுத்தருக்கும் கலெக்டருக்கும் ஒரேவித மரியாதையையா நாம் தருகிறோம்? இதுதான் “சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்ற தொடருக்குப் பொருள். ஆனால் எல்லாருக்கும் நிரந்தரமான பணி வாய்ப்பு, அந்தந்த வேலைக்கான உரிமைகள், ஊதியப் பிடித்தம், படிகள் என்பது போன்றவற்றை நாம் ஏற்கிறோம், எந்தத் தொழிலாளர ஆனாலும் போராடுகிறோம் அல்லவா? அதுபோலதத்தான் சமத்துவம், என்பதற்கும் சிறப்பு (அந்தஸ்து) என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு எச்சரிக்கை–சிறப்பு என்பதைப் பார்ப்பனியம் சொல்வது போன்ற பிறப்பினால் வருகின்ற பேதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை வள்ளுவர் ஒப்பவில்லை.


அருட்பெருஞ்சோதி

“அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை” என்பது வள்ளலாரின் தாரக முழக்கம்.
அவர் குறிப்பிடும் அருட்பெருஞ்சோதி எது என்று யோசித்தேன்.
“பசியநீலக் கடலின்மீது எழுகின்ற ஞாயிறு போல பச்சையும் நீலமும் கலநத் நிறத்தினை உடைய மயிலின் மீது அமர்ந்துள்ள முருகப் பெருமானின் தோற்றம் அமைந்துள்ளது” என்று திருமுருகாற்றுப்படையின் தொடக்க அடிகளில் நக்கீரர் உரைக்கின்றார்.
“போல” என்று உவம உருபு சேர்த்து உவமையாகச் சொன்னாலும், முருகனின் உருவமும் ஞாயிற்றின் உருவமும் ஒன்றுதான். முருகன் என்றால் ஞாயிறு. முருகன் என்ற சொல்லுக்கு அழகு, அறிவு, கூர்மை, இயற்கை எனப் பல அர்த்தங்கள் உண்டு. இயற்கையின் ஒரு கூறாக இருக்கும் ஞாயிறு என்ற அர்த்தமும் உண்டு. முருகனை எண்ணி “ஒருமையுடன் நினதுதிரு” என்று பாடிய வள்ளலார் அந்த முருகனை இயற்கையாகவே காண்பவராக வளர்ச்சிபெற்றமைதான் அருட்பெருஞ்சோதி என்ற சொல்லில் தெளிவுபடுகிறது.
ஆம், அருட்பெருஞ்சோதி என்பது இயற்கை ஒளிகளுக்கும், குறிப்பாக நமக்கு வெயிலை அளிக்கும் ஞாயிற்றுக்கும்தான் பொருந்தும்.

அவ்வாறானால், தனிப்பெருங்கருணை என்பது?
ஞாயிற்றின் கருணைதான் தனிப்பெருங்கருணை. ஒளியில்லாமல் பூமியில் உயிர் வாழ்க்கை ஏது? அதனால்தான் பொங்கலின் முதல்நாளாக ஞாயிற்றை வழிபடுகிறோம்.
ஞாயிற்றின் ஒளி வாயிலாக நிகழும் ஒளிச்சேர்க்கை இல்லையேல் தாவரங்களும் மரங்களும் பயிர்களும் விளைச்சலும் விவசாயமும் ஏது?
மனிதன் ஆட்டைத் தின்றாலும், அந்த ஆடும் பசிய இலைகளை அல்லவா தின்கிறது? அசைவ உணவுக்கும் சைவ உணவுதான் அடிப்படை. அதனால்தான் ஜீவகாருண்யத்தையும் போற்றினார் வள்ளலார். தனிப்பெருங்கருணை என்பது உயிர்களை ஒளிச்சேர்க்கை போன்ற செயல்கள் வாயிலாக வாழவைக்கும் ஆதவனின் கருணைதான்.
எனவே நாம் உருவங்களை வழிபடுவதை விட்டு, அவற்றிற்காக அடித்துக் கொள்வதை விட்டு, மதச் சண்டைகள் இடுவதை விட்டு அருட்பெருஞ்சோதியான ஞாயிற்றையும் அதன் தனிப்பெருங்கருணையையும் வழிபடுவோம்.


மதம்

உங்கள் கருத்தில் மதம் என்றால் என்ன?

இக்கேள்வியை நிறையப் பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதனால்தான் கேள்வி-பதில் முறையில் இதைச் சொல்ல முனைந்தேன்.
மதம் என்பதற்குப் பிடிவாதமான, அசைக்கமுடியாத நம்பிக்கை அல்லது கருத்து என்று அர்த்தம். ஆங்கிலத்தில் Dogma என்று சொல்வதற்கு ஒப்பானது இது. அதனால்தான் வள்ளலார் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றார். பல இடங்களிலும் இவ்வாறு மதத்தைச் சாடியிருக்கிறார்.
இன்றுள்ள எல்லா மதங்களும் வெறும் Faith என்று சொல்லக்கூடிய விசுவாசமாக மட்டும் இல்லை. அவை ‘டாக்மா’க்களாகத்தான் இருக்கின்றன. இதற்கு இந்து மதம் பற்றி வடமாநிலங்களில் நிலவும் மனப்பான்மையே நல்ல உதாரணம்.
வடமொழியிலும் இந்தியிலும் மதம் என்பதைக் குறிக்க ‘தர்மம்’ என்ற சொல்லைக் கையாள்கிறார்கள். தர்மம் என்பதற்குத் தமிழில் நாம் கொள்ளும் அர்த்தப்படி நோக்கினால் இந்து தர்மம் என்று சொல்வது தவறு. மதத்துக்கும் அறத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
என் சான்றிதழில் என் மதம் இந்து என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும், நான் இந்து அல்ல. எனக்கு மதம் கிடையாது, சமயம் என்ற ஒன்று கிடையாது என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். இன்றைய இந்து மதம் செல்லும் போக்கில் எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை. கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் ஆகியவை ‘டாக்மேடிக்’ மதங்கள். அதாவது பிடிவாதமான மதங்கள். திருமணம் செய்தாலும் கூட நீங்கள் தான் கிறித்துவராகவோ முஸ்லிமாகவோ ஆகவேண்டுமே தவிர அவர்கள் இந்துவாக மாட்டார்கள். அதனால்தான் ‘டாக்மேடிக்’ என்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதம் தளர்ச்சியான, ‘எந்தச் சாமியையும் நீ கும்பிடலாம்’, ‘கும்பிடாமல் நாத்திகனாகவும் இருக்கலாம்’ என்று சொல்கின்ற மதமாகத்தான் அது இருந்திருக்கிறது. இப்போது வடநாட்டு ‘டாக்மேடிக்’ தன்மையை இங்கு புகுத்தப் பார்க்கிறார்கள். கூடவே சமஸ்கிருதத்தையும், இந்தியையும். இதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.
நான் கோயிலுக்குச் செல்வதில்லை. கடவுளைக் கும்பிடுவது என்ற செயல் ஒருபக்கம் பிடிக்காதிருந்தாலும், அங்கு நிகழும் சுரண்டலும், பார்ப்பனிய மேலாண்மையும், பணத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும் தன்மையும் எனக்குச் சற்றும் ஒவ்வாதவை. மிக இளமையிலிருந்தே இந்த மனப்பான்மை எனக்கு வருவதற்கு என் தந்தையும் என் சித்தப்பாக்களும்தான் காரணம்.


அதோ அந்தப் பறவை போல…

மகாத்மா காந்தி மிக வேகமாக நடப்பாராம். தாகூர் அவரது நடையைப் பற்றி ஒருமுறை சொன்னாராம்: “அவர் நடப்பதில்லை, பறவை போலப் பறக்கிறார்.” ஒரு காலத்தில் என் தந்தையின் நடையும் அப்படித்தான் இருந்தது. இளம்வயதில் என் நடையும் கூட வேகமானதுதான். ஆனால் கால்முறிவு ஏற்பட்டுக் கண்ணும் ஒன்று போனபின்பு நடப்பதே இல்லை, நடந்தாலும் பிறர் துணையோடுதான் என்று ஆகிவிட்டது.
இனி மீண்டும் நடக்கப் பழகவேண்டும். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமேனும். பறவை போல, அதன் இறகு போல மனமும் உடலும் இலேசாகி நடக்க வேண்டும். பழங்காலத்தில் சொல்வார்கள்: “பெண்கள் பாதம் பூமியில் படிவதே தெரியக்கூடாது. ஒலி எழக்கூடாது. தம தம் என்று நடக்கக்கூடாது”. உண்மை. உழைப்பாளிப் பெண்களுக்கு இது பொருந்தாவிட்டாலும், நடுத்தர வர்க்க, மேல்தட்டுப் பெண்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியதுதான். அப்படியே, ஆண்களுக்கும்.