அருட்பெருஞ்சோதி

“அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை” என்பது வள்ளலாரின் தாரக முழக்கம்.
அவர் குறிப்பிடும் அருட்பெருஞ்சோதி எது என்று யோசித்தேன்.
“பசியநீலக் கடலின்மீது எழுகின்ற ஞாயிறு போல பச்சையும் நீலமும் கலநத் நிறத்தினை உடைய மயிலின் மீது அமர்ந்துள்ள முருகப் பெருமானின் தோற்றம் அமைந்துள்ளது” என்று திருமுருகாற்றுப்படையின் தொடக்க அடிகளில் நக்கீரர் உரைக்கின்றார்.
“போல” என்று உவம உருபு சேர்த்து உவமையாகச் சொன்னாலும், முருகனின் உருவமும் ஞாயிற்றின் உருவமும் ஒன்றுதான். முருகன் என்றால் ஞாயிறு. முருகன் என்ற சொல்லுக்கு அழகு, அறிவு, கூர்மை, இயற்கை எனப் பல அர்த்தங்கள் உண்டு. இயற்கையின் ஒரு கூறாக இருக்கும் ஞாயிறு என்ற அர்த்தமும் உண்டு. முருகனை எண்ணி “ஒருமையுடன் நினதுதிரு” என்று பாடிய வள்ளலார் அந்த முருகனை இயற்கையாகவே காண்பவராக வளர்ச்சிபெற்றமைதான் அருட்பெருஞ்சோதி என்ற சொல்லில் தெளிவுபடுகிறது.
ஆம், அருட்பெருஞ்சோதி என்பது இயற்கை ஒளிகளுக்கும், குறிப்பாக நமக்கு வெயிலை அளிக்கும் ஞாயிற்றுக்கும்தான் பொருந்தும்.

அவ்வாறானால், தனிப்பெருங்கருணை என்பது?
ஞாயிற்றின் கருணைதான் தனிப்பெருங்கருணை. ஒளியில்லாமல் பூமியில் உயிர் வாழ்க்கை ஏது? அதனால்தான் பொங்கலின் முதல்நாளாக ஞாயிற்றை வழிபடுகிறோம்.
ஞாயிற்றின் ஒளி வாயிலாக நிகழும் ஒளிச்சேர்க்கை இல்லையேல் தாவரங்களும் மரங்களும் பயிர்களும் விளைச்சலும் விவசாயமும் ஏது?
மனிதன் ஆட்டைத் தின்றாலும், அந்த ஆடும் பசிய இலைகளை அல்லவா தின்கிறது? அசைவ உணவுக்கும் சைவ உணவுதான் அடிப்படை. அதனால்தான் ஜீவகாருண்யத்தையும் போற்றினார் வள்ளலார். தனிப்பெருங்கருணை என்பது உயிர்களை ஒளிச்சேர்க்கை போன்ற செயல்கள் வாயிலாக வாழவைக்கும் ஆதவனின் கருணைதான்.
எனவே நாம் உருவங்களை வழிபடுவதை விட்டு, அவற்றிற்காக அடித்துக் கொள்வதை விட்டு, மதச் சண்டைகள் இடுவதை விட்டு அருட்பெருஞ்சோதியான ஞாயிற்றையும் அதன் தனிப்பெருங்கருணையையும் வழிபடுவோம்.

தினம்-ஒரு-செய்தி