யாரும் யானும்

தமிழ்மொழியின் தனித்தன்மை, தனது சாதாரணச் சொல்லமைப்பு முறையிலேயே அற்புதமான கருத்துகளை உணர்த்துவதாகும்.
தமிழில் ரகர மெய் பன்மையையும் னகர மெய் ஒருமையையும் உணர்த்துவது. சான்றாக,
கணவர் (பன்மை) – கணவன் (ஒருமை)
மன்னர் (பன்மை) – மன்னன் (ஒருமை)
திருடர் (பன்மை) – திருடன் (ஒருமை)
தமிழ் தெரிந்தவர்களுக்கு இதற்கு மேலும் உதாரணங்கள் தேவையில்லை. இதேபோல,
யார் (பன்மை) – யான் (ஒருமை) (இக்காலத் தமிழில் இது ‘நான்’ என்று ஆகிவிட்டது)
எந்தக் கேள்வி ‘யார்’ என்பதைக் கொண்டு கேட்டாலும் அதற்கு ஒருமை வடிவம் ‘யான்’. அதுவே பதிலாகவும் அமைகிறது.

உதவி செய்தது எவர் என்று பன்மையிலோ, உதவி செய்தது எவன் என்று ஒருமையிலோ கேட்க முடியும். ஆனால், “உதவி செய்தது யான்?” என்று ஒருமையில் அமைக்க முடியுமா? பன்மையில்தான் கேட்டாக வேண்டும். “உதவி செய்தது யார்?” அதற்கு விடை அந்தக் கேள்வியேதான், அதன் ஒருமை வடிவம், “யான்”.
ஆட்சி அமைத்தது யார்? (ஒருமை வடிவத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டால், “ஆட்சி அமைத்தது யான்?” விடை கேள்வியிலேயே இருக்கிறது–“யான்”.)
தவறு செய்தது யார்? யான்
குற்றமிழைத்தது யார்? யான்
நல்லது செய்தது யார்? யான்.
இதுபோலவே எல்லாக் கேள்விகளுக்கும் யான் என்று அமைக்க முடியும். யார் என்று பன்மையில் முடியும் எல்லாக் கேள்விகளுக்கும் அதன் ஒருமை வடிவமே பதிலாக (யான்) உள்ளடங்கி நிற்கிறது. அதாவது உலகில், நன்மையோ, தீமையோ எல்லாவற்றுக்கும் மூல காரணம் “யான்” (நான்).

பழங்காலத்தில் மனச் செயல்களை சித்தம்–புத்தி–அகங்காரம் எனப் பகுத்தார்கள். (சித்தம் என்பது முடிவெடுத்தல் சார்ந்த மனச்செயல், புத்தி என்பது பகுத்தாராய்கின்ற, காரண-காரிய ஆய்வைச் செய்கின்ற மனச்செயல். அகங்காரம், இவை எல்லாவற்றுக்கும் காரணம் நான் என உணர்கின்ற செயல்.)
யான் என்பது சித்தம்-புத்தி-அகங்காரம் என்ற மனச் செயல்கள் மூன்றில் அகங்காரத்தின் இருப்பிடம். அந்த ஆணவமலம் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் (எவன் என்பது போல் அன்றி, யான் என்ற வகையில் கேள்வி அமைப்பதைவிட்டுத்) தமிழில் பன்மையில் “யார்” என அமைத்தார்கள் போலும்.

தினம்-ஒரு-செய்தி