பெண் அடிமைத்தனம்

“பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் நீங்கள், பெண்களின் உரிமை பற்றிப் பேசும் நீங்கள், ஏன் வீட்டிலுள்ள, அல்லது வெளியிலும் கூட பெண்களைக் கடுமையாக (அடிமை போல) நடத்துகிறீர்கள்?” என்று சிலர் (என் மகன் உள்படக்) கேட்டுள்ளனர். பெண்களை அதட்டுவதும் வேலை செய்யச் சொல்வதும் தவறுசெய்தால் திட்டுவதும் பெண்ணடிமைத்தனம் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியானால் நாம் ஆண்களைத் திட்டுவதோ, அதட்டுவதோ, வேலை செய்யச் சொல்வதோ இல்லையா? அந்தச் சமயத்தில் அவர்கள் இது ஆணடிமைத்தனம் என்று குரல் கொடுப்பார்களா? ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், சரிவரக் கொடுத்த பணியைச் செய்யவில்லையானால் (என் மாணவர்களை) நான் பலமுறை திட்டியிருக்கிறேன். அதனால் நான் அவர்களை அடிமையாக நினைத்தேன் என்பது அல்ல. அது அவர்களுக்கும் தெரியும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பது குறள்.
இதை மேற்கோள் காட்டுபவர்கள், முதற்பகுதியை மட்டும் காட்டிவிட்டு வசதியாக பிற்பகுதியை மறந்துவிடுகிறார்கள்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பினால் வருகின்ற உரிமைகள், பசி தாகம் போன்றவற்றையும் பிற அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் உரிமைகள் உண்டு, ஆனால், நாம் அதற்காக யாவருக்கும் சம அந்தஸ்து தரவேண்டியதில்லை என்பதுதான் வள்ளுவர் கருத்து. யோசித்துப் பாருங்கள், ஒரு கலெக்டர் ஆபீசிலுள்ள டவாலிக்கும் எழுத்தருக்கும் கலெக்டருக்கும் ஒரேவித மரியாதையையா நாம் தருகிறோம்? இதுதான் “சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்ற தொடருக்குப் பொருள். ஆனால் எல்லாருக்கும் நிரந்தரமான பணி வாய்ப்பு, அந்தந்த வேலைக்கான உரிமைகள், ஊதியப் பிடித்தம், படிகள் என்பது போன்றவற்றை நாம் ஏற்கிறோம், எந்தத் தொழிலாளர ஆனாலும் போராடுகிறோம் அல்லவா? அதுபோலதத்தான் சமத்துவம், என்பதற்கும் சிறப்பு (அந்தஸ்து) என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு எச்சரிக்கை–சிறப்பு என்பதைப் பார்ப்பனியம் சொல்வது போன்ற பிறப்பினால் வருகின்ற பேதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை வள்ளுவர் ஒப்பவில்லை.

சமூகம்