தாலாட்டு

நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு என்பதும் ஒருவகை. இந்தக் காலப் பெண்களுக்குத் தாலாட்டு வருவதில்லை. சென்ற தலைமுறை வரை பெண்கள் தாலாட்டுப் பாடுவதில் வல்லுநர்களாக இருந்தார்கள். தால் என்றால் நாக்கு. நாக்கை அசைத்து ‘உளஉளாயி’ என்று  (நம் பார்வையில்) ஒரு பொருளற்ற சத்தத்தை எழுப்பி, ஆராரோ ஆரிரரோ என்று தொடங்கிக் குழந்தைக்கென ஒரு ராகத்தில் பெண்கள் பாடுவார்கள். திரைப்படப் பாடல்கள் வந்த காலம் முதலாகப் பெண்கள் தாலாட்டுப் பாடுவதை விட்டுவிட் டார்கள். எங்கள் வீட்டிலும் எங்கம்மா காலம் வரை தாலாட்டு இருந்தது. என் சகோதரிகள் யாரும் தாலாட்டுப் பாடியதில்லை. இப்போது என் மகளும் மருமகளும்கூட அதே நிலைதான். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால் ரேடியோவையோ தொலைக்காட்சியையோ டேப் ரிகார்டரையோ சற்றே சத்தமாக வைத்துச் சில பாட்டுகளைக் குழந்தைக்காக வைப்பார்கள். இந்தக் காலத்தில்தான் செல்ஃபோன் வரை வந்து விட்டதே.

ஆராரோ ஆராரோ
ஆரிவரோ (ஆரிரரோ) ஆராரோ
யார் அடித்து நீ அழுதாய்
அடித்தாரைச் சொல்லியழு
பிடித்துவைத்து தண்டிப்பேன்
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
தாத்தா அடித்தாரோ
தாங்கி வரும் கையாலே
மாமா அடித்தாரோ
மாலையிடும் கையாலே
யாரும் அடிக்கவில்லை
யார்விரலும் தீண்டவில்லை
பசிக்குத்தான் அழுதாயோ
பாசமுள்ள என் குழந்தாய்.

இலக்கியம்