பாரன்ஹீட் 451

(நமது உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்பார்கள். அதுபோல பாரன்ஹீட் 451 (ஏறத்தாழ 232.8 டிகிரி செல்சியஸ்) என்பது காகிதம் (புத்தகங்கள்) தீப்பிடித்து எரிகின்ற வெப்பநிலை ஆகும் என்று இந்நூலின் ஆசிரியர் ரே பிராட்பரி விளக்குகிறார்.)

புத்தகங்களால்தான் மனித வாழ்க்கை குழப்பமடைகிறது, கலகங்களும் புரட்சிகளும் உண்டாகின்றன, இந்நிலையைத் தடுக்க வேண்டும், ஆகவே எவரும் புத்தகங்கள் படிக்கலாகாது, எல்லாப் புத்தகங்களையும் எரித்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு ஒடுக்குமுறைச் சமுதாயத்தை இந்த நாவல் காட்டுகிறது. தங்கள் சமூக மக்கள் சிக்கல், முரண்பாடு, குழப்பம் என்பவைகளை அறியலாகாது, அவற்றின் மூலங்களை அழித்துவிட வேண்டும், குடிமக்களுக்கு எல்லாம் எவ்விதச் சிக்கலுமற்ற மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று அந்நாட்டை ஆள்வோர் நினைக்கின்றனர்.  

கை மாண்டாக் என்பவன் இந்தச் சமூகத்தில் வாழும் ஒரு மனிதன். சாதாரண மனிதனல்ல, புத்தகங்களை எரிக்கும் படைவீரர்களில் ஒருவன். அந்த நிலையிலிருந்து மாறி, புத்தகம் படிக்கும் புரட்சியாளனாக அவன் எப்படி மாறுகிறான் என்பதைத்தான் பிராட்பரியின் பாரன்ஹீட் 451 என்ற கதை விவரிக்கிறது.

ஆனால் நாவலின் போக்கில் மாண்டாக் அவனது சக-தோழர்கள், குடிமக்கள் அவ்வளவு ஒன்றும் நன்றாக வாழவில்லை என்பதையும் அவர்கள் ஆன்மிக ரீதியாக உள்ளீடற்றவர்களாக இருப்பதையும் அறிகிறான். இவ்வுலகின் மக்கள் தொடர்ந்து விளம்பரங்களாலும், ஆழமற்ற பொழுதுபோக்குகளாலும் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தங்களைப் பற்றிச் சிந்திக்க நேரம் தரப்படுவதில்லை. தங்களது உணர்வுநிலைகளைப் பற்றி ஆராயவும் அவர்களால் முடிவதில்லை. இதன் விளைவு, தொடர்ந்து சுயநலவாதிகளாகவும், இன்பத்தைத் தேடுவதாகவும், தொடர்பற்றவர் களாகவும், வெற்றுமனம் படைத்தவர்களாகவும் மட்டுமே வாழும் ஒரு சமூகம் உருவாகிறது.

நாவலின் தொடக்கத்தில் அவன் ஒளித்துவைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத் தொகுப்பை எரித்துகொண்டிருக்கிறான். தனது அனுபவத்தால் மகிழ்கிறான். எரிப்பது எவ்வளவு இன்பமானது? திரும்பி வரும்போது கிளாரிஸா மெக்லெல்லன் என்ற சுதந்திரமாகச் சிந்திக்கும் பெண்ணை முதன்முதலாக மாண்டாக் சந்திக்கிறான். முதலில் அவள் நடத்தை தன்னைக் குழப்புவதாக அவன் நினைக்கிறான். “நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்று அவள் அவனைக் கேட்கிறாள். உடனடியாக பதில் சொல்ல முடியாமல் போனாலும், அதைப் பற்றியே அவனுக்குச் சிந்தனை ஏற்படுகிறது. முதலில் தனக்குள் எதிர்மறையாகவே பதில் சொல்லிக் கொள்கிறான். நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? அவள் என்ன நினைக்கிறாள்? நான் மகிழ்ச்சியாக இல்லை என்றா? ஆனால் பின்னால் அவனுக்குள் ஒரு உணர்தல் ஏற்படுகிறது. நான் நன்றாக இல்லை. மகிழ்ச்சியை நான் ஒரு முகமூடி போல அணிந்து கொண்டிருந்தேன். அதை அவள் கொண்டு ஓடிப்போய்விட்டாள். அவள் வீட்டுக்கதவைத் தட்டி அதைத் திரும்பப்பெற எனக்கு வழியில்லை என்று நினைக்கிறான்.

மாண்டாக் தன் மனைவி மில்ட்ரட் மிகுதியாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு உணர்வற்றுக் கிடக்கிறாள் என்பதை அறிகிறான். அவளைப் பார்ப்பதற்கு முன்னரே இந்த மாற்றம் ஏற்படுகிறது என்பது முக்கியமானது. மருத்துவக் குழுவினர் வந்து அவள் வயிற்றைச் சுத்தம் செய்து இரத்தம் ஏற்றுகிறார்கள். அவர்கள் இந்த மாதிரிதான் இப்போதெல்லாம் எங்கும் நிகழ்கிறது என்று அவனுக்குச் சொல்கிறார்கள். ஏறத்தாழ மரணத்துக்கருகில் செல்லும் அனுபவம் ஏற்பட்டும் அவன் மனைவிக்குள் எந்த மாற்றமும் இல்லை. அவள் மனம் முற்றிலும் வெற்றிடமாகி அவள் எப்போதும்-விழித்துக் கொண்டிருக்கும் போதும் கூட உணர்வற்றுத் தூங்கிக் கொண்டே இருக்கிறாள் என்பது அவனுக்குப் புலனாகிறது.

இடையில் கிளாரிஸா ஒரு காரில் அடிபட்டு இறந்துபோனாள் என்று அறிகிறான்.

தனது மகிழ்ச்சியின்மைக்கும், தனது மனைவியின் வெற்று நிலைக்கும் இடையில் இப்போதிருக்கும் நிலையில் ஏதோ குளறுபடி உள்ளது என்பது அவனுக்குப் புலனாகிறது. அவன் ஓய்வெடுக்கலாம் என்று கூறும்போது அவன் மனைவி சுவர் முழுவதும் தொலைக்காட்சிகள் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்த தன் வீட்டைவிட்டு வர மறுக்கிறாள். 

அவன் புத்தகங்களை எரிக்கச் செல்லும் இடத்தில் அதைத் தடுப்பதற்காக ஒரு பெண்மணி தன்னைத் தானே தீயிட்டு எரித்துக் கொண்டு சாகிறாள். இந்நிகழ்வு அவனுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. இதனால் அவன் பிரக்ஞைக்குள் தன் சமூகத்தில் ஆழமான பிரச்சினைகள் உள்ளன என்ற எண்ணம் ஆழத் தோன்றுகிறது.        

அவன் அந்தப் பெண்மணியின் வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தைத் திருடிக் கொண்டு வருகிறான். அது தற்செயலாக ஒரு பைபிளாக அமைந்துவிடு கிறது. அதனை எடுத்துக் கொண்டு வந்ததால் அவன் மேலதிகாரி கேப்டன் பியாட்டிக்கும் அவனுக்கும் இ்டையில் மோதல் உண்டாகிறது. இவன் இப்படித்தான் திருடித் திருடிப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான் போலும் என்ற சந்தேகம் பியாட்டிக்கு எழுகிறது. உடனே அவன் வீட்டுக்கு பியாட்டி வருகிறான். அப்போது அவன் சமூகத்தில் புத்தகங்களைத் தடை செய்யவேண்டி ஏற்பட்ட சமூக, தொழில்நுட்ப மாற்றங்களின் வரலாற்றைச் சொல்லுகிறான். இந்தக் கதை மாண்டாக்-கின் உள்ளத்தில் எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. அவனை மேலும் புத்தகங்களைப் படிக்குமாறு தூண்டுகிறது. தான் செய்யும் தொழிலை அவன் வெறுக்கத் தொடங்குகிறான்.

புத்தகங்களின் மதிப்பைத் தேடும் முயற்சியில் மாண்டாக் ஈடுபடுகிறான். அவன் மனைவி மில்ட்ரட் அவன் படிப்பதை மிகக் கடுமையாக எதிர்க்கிறாள். ஒருநாள் அவன் பணிக்குச் சென்று வரும்போது மில்ட்ரடும் அவள் தோழியர் சிலரும் முற்றத்தில் உள்ள தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கிடையே சண்டை முற்றுகிறது.

அவர்களின் ஆழமின்மையைப் பொறுக்காத மாண்டாக், அவர்களைப் புத்தகத்திலிருந்து தான் படிக்கும் ஒரு பகுதியைக் கேட்குமாறு கட்டாயப் படுத்துகிறான். இதையெல்லாம் ஒரு ஜோக் போல அவன் செய்தாலும் அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக அவனை எரிக்கும் படையிடம் பிடித்துக் கொடுக்கிறார்கள்.

சிக்கல் முற்றுகிறது. அவன் தலைவனான பியாட்டி, மான்டாக்-ஐக் கூப்பிட்டு “உன் வீட்டை எரித்துவிடு” என்கிறான். அவனுக்கு மான்டாக் தன் வீட்டில் ஏதேனும் புத்தகங்களை ஒளித்து வைத்திருக்கலாம் என்று சந்தேகம். ஆனால் கட்டளையை மான்டாக் ஏற்பதற்கு பதிலாக, பியாட்டியைக் கொளுத்திவிட்டு ஓடிப்போகிறான். நகரத்தைவிட்டு வெளியே வந்து ஓர் ஆற்றில் மிதந்து சென்று நாட்டுப்புறத்திற்குள் செல்கிறான். அங்கே அவன் ஓர் கூட்டத்தைக் காண்கிறான். அவர்கள் அரிய புத்தகங்களைத் தாங்கள் மனப்பாடம் செய்துவைத்துக் காப்பாற்றுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நகரத்தின்மீது ஒரு குண்டு விழும் சத்தம் கேட்கிறது. நகரம் எரிந்து பாழாகிறது. மாண்டாக், அந்த அறிஞர்கள் குழுவை நகரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறான். மீண்டும் அந்த நகரத்தைப் புதிய முறையில் ஆக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. நாவலின் இறுதி, மாண்டாக் முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிட்டதைக் காட்டுகிறது. அவனால் புத்தகங்களைப் படித்து முற்றிலும் செரித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், தனது சமூகத்தைவிட்டு வெளியேறி, புதியதொரு சமூகத்தைக் கட்ட வேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறது. பழைய சமூகம் அறிவை மறுத்ததால் அழிந்து போன சமூகம். புதிய சமுகத்தின் அடித்தளமாக அறிவே இருக்கும்.

ரே பிராட்பரி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். 1920இல் பிறந்து 2012இல் மறைந்தார். இந்த நாவலைத் தவிர, டான்டிலியன் ஒயின், தி வெல்ட், செவ்வாய்க் கிரகக் கதைகள் எனப் பல நாவல்களை எழுதியுள்ளார். அவரது கதைகள் ஒரு உடோப்பிய வகையான சமூகத்திற்கு பதிலாக, அதற்கு நேர் எதிரான ஒரு அவலமான (டைஸ்டோபிய வகைச்) சமூக அமைப்பைக் காட்டுகின்றன.


மோரூவின் தீவு

எச்.ஜி. வெல்ஸ் என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படைப்பாளரின் நாவல் இது. அறிவியல் எந்த எல்லைவரை செல்லும், எதுவரை எப்படி அதைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய கேள்விகளைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும் நாவல் இது. பொதுவாக எச். ஜி. வெல்ஸின் நாவல்கள் அனைத்துமே இத்தன்மையைக் கொண்டவைதான். 

எட்வர்ட் பிரெண்டிக் என்ற உயிரியலாளன் கப்பல் உடைந்து கடலில் சில நாட்களாகத் தத்தளித்தபோது, மற்றொரு சிறு கப்பலில் வந்த டாக்டர் மாண்ட்கோமரி என்பவர் அவனைக் காப்பாற்றுகிறார். தானும் அந்தக் கப்பலில் வரும் கூண்டிலடைக்கப்பட்ட மிருகங்களும் ஒரு பெயர் தெரியாத தீவுக்குச் செல்வதாகச் சொல்கிறார். ஆனால் அந்தத் தீவை அடைந்தபோது டாக்டர் அவனைத் தீவுக்குள் உடனழைத்துச் செல்வதாக இல்லை. ஆயினும் கேப்டன் அவனைக் கடலில் பிடித்துத் தள்ளிய பிறகு வேறு வழியின்றி மாண்ட்கோமரி, அவனை அழைத்துச் சென்று, அந்தத் தீவிலிருக்கும் டாக்டர் மோரூ-வை அறிமுகப்படுத்துகிறார். பிரெண்டிக்கை ஒரு வீட்டின் முன்னிடத்தில் தங்க வைக்கின்றனர்.

தீவைச் சுற்றி வரும்போது, பிரெண்டிக் விலங்குத்தன்மையும் மனிதத் தன்மையும் கலந்திருக்கும் பல விசித்திரப் பிராணிகளைக் காண்கிறான். வீட்டுக்கு வந்து மாண்ட்கோமரியை விளக்கம் கேட்டபோது அவர் தவிர்த்து விடுகிறார்.

மறுநாள் மோரூ ப்யூமா என்ற விலங்கை ஆய்வுக்குக் கொண்டு செல்கிறார். அதன் வலிநிறைந்த கதறல்கள் பிரெண்டிக்கைக் காட்டுக்குள் ஓட வைக்கின்றன. அங்கும் பாதி மனிதன்-பாதி மிருகமாகக் காணப்படுபவர்கள் அவனைத் துரத்த, ஓடிவந்து தூங்கிவிடுகிறான். மறுநாள் எழுந்து கதவைத் திறந்து பார்த்தபோது மோரூவின் மேஜையில் மனிதவிலங்காக இருக்கும் ஓர் உருவத்தைக் காண்கிறான். மனிதர்களை வைத்து மோரூ ஆய்வு செய்கிறார் என்றும் அடுத்தபடி தன்னைத்தான் மோரூ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் போகிறார் என்றும் நினைத்து பயந்து காட்டுக்குள் ஓடுகிறான். அங்கும் ஒரு குரங்குமனிதனையும் அவனைப் போன்ற விலங்கு மனிதர்கள் பலரையும் காண்கிறான். அந்த விலங்குமனிதர்கள் மந்திரம் போன்ற பாடலைப் பாடி ஒவ்வொரு பல்லவிக்கும் இறுதியில் “நாங்கள் மனிதர்கள் இல்லையா?” என்றும் மோரூவைப் பாராட்டியும் முடிக்கின்றன. பிரெண்டிக்கையும் அவை தங்களுக்குள் ஒருவனாகக் கருதுவதுபோலத் தோன்றுகிறது.

திடீரென்று மோரூ அங்கே வரவும், பிரெண்டிக் பயந்து கடலுக்குள் குதிக்கச் செல்கிறான். ஆனால் மாண்ட்கோமரியும் மோரூவும் குறுக்கிடுகின்றனர். தான் மனிதர்களை ஆய்வு செய்வதில்லை என்றும் விலங்குகளை மட்டுமே மனிதர்களாக மாற்றும் ஆய்வைப் பதினொரு ஆண்டுகளாகச் செய்துவருவதாகவும் மோரூ சொல்கிறார். ஆனால் அவர் இன்னும் முழுவதுமாகத் தன் பணியில் வெற்றி பெறவில்லை.

மாண்ட்கோமரி, ஒரு குடிகாரர். அன்பாக இருப்பினும், அவர் மனித சமூகத்துக்கு ஒவ்வாதவராகவும், மோரூவின் உதவியாளாக இருப்பதற்குப் பொருத்தமானவராகவும் தோன்றுகிறார்.

ஒருநாள் மாண்ட்கோமரியும் பிரெண்டிக்கும் காட்டுக்குள் செல்லும்போது பாதி உண்ணப்பட்ட ஒரு முயலைக் காண்கின்றனர். மாமிசம் உண்பது அந்தத் தீவில் தடை செய்யப்பட்ட ஒன்று. மோரூ ஒரு சிறுத்தை மனிதன்தான் அவ்வாறு செய்தது என்பதைக் கண்டுபிடிக்கிறார். தண்டனை, மீண்டும் மோரூவின் ஆய்வுமேஜைக்குச் செல்வதுதான். (அதை வலிவீடு என்று விலங்குமனிதர்கள் சொல்கின்றனர்.)

ஆனால் மோரூ ஆய்வுக்கு உட்படுத்த முடியாதமாதிரி, பிரெண்டிக் மனமிரங்கி, அதைக் கொன்றுவிடுகிறான். இன்னும் விலங்குகள் போலவே நடந்துகொள்ளும் அரைவிலங்குகள் அங்கு வேறுசிலவும் இருக்கின்றன.  

ஆறுவாரங்கள் கழித்து, ஆய்வுக்கு வந்த ப்யூமா தப்பிவிடுகிறது. அதைத் தொடர்ந்து செல்லும் மோரூவையும் கொன்றுவிடுகிறது. அதனால் விலங்கு மனிதர்களுக்கு மோரூவின் சக்தியில் சந்தேகம் உண்டாகிறது.

மது அருந்தித் தப்பிச்செல்லும் மாண்ட்கோமரி, விலங்கு மனிதர்களுடன் அமர்ந்து மதுவைப் பகிர்ந்துகொள்கிறார். பிரெண்டிக் தடுத்தும் அவ்வாறு பகிர்ந்துகொள்ளும்போது ஏற்படும் சண்டையில் இறந்துபோகிறார்.      

இப்போது தீவிலுள்ள ஒரே மனிதன் பிரெண்டிக் மட்டுமே. ஏறத்தாழ பத்து மாதங்கள் அவன் அத்தீவில் தனியாக இருக்க நேரிடுகிறது. வேறு வழியின்றி விலங்குமனிதர்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக வாழ நேரிடுகிறது. ஆனால் அதேசமயத்தில் அக்கூட்டத்தின் ஒழுங்கும் அமைப்பும் சிதைந்து விலங்கு மனிதர்கள் பழையபடியே விலங்குகளாக மாறத் தொடங்குகிறார்கள். நாய் மனிதன் அவனுக்கு உற்ற துணைவனாக இருக்கிறான், ஆனால், கழுதைப்புலிப் பன்றியால் கொல்லப்படுகிறான். அதை பிரெண்டிக் தன் துப்பாக்கியால் கொல்கிறான்.

அவன் ஒரு தெப்பத்தைக் கட்டி மோரூவின் தீவிலிருந்து தப்பிச் செல்ல நினைக்கிறான். ஆனால் தான் ஒரு தச்சன் அல்ல, தெப்பம் கட்ட தன்னால் முடியாது என்று உணர்கிறான். ஆனால் தக்க தருணம் வாய்க்கிறது. இரண்டு மனிதர்கள் போரிட்டு இறந்த ஒரு சிறுபடகு அத்தீவின் கரையில் ஒதுங்குகிறது. அதில் தப்பிச் செல்கிறான், மூன்று நாள் கழித்து ஒரு கப்பலினால் காப்பாற்றப் படுகிறான். அதில் தன் அனுபவங்களைக் கூறும்போது கப்பலில் உள்ளவர்கள் அவனைப் பைத்தியம் என்று நினைக்கின்றனர். அதிலிருந்து மீள்வதற்காக, கடலில் நினைவிழந்தவன் போல பிரெண்டிக் நடிக்கிறான். இறுதியாக மோரூவின் தீவுக்குச் சென்றதிலிருந்து ஓராண்டு கழித்து இங்கிலாந்தை அடைகிறான், ஆனால் மற்ற நாகரிகமடைந்த மனிதர்களுடனும் இயல்பாக அவனால் இருக்க முடியவில்லை. அவர்கள் யாவரும் விலங்குநிலைக்குத் திரும்பி விடக்கூடய பாதி-விலங்கு மனிதர்கள் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆகவே தனிமையில் இருந்து கொண்டு வேதியியல், வானியல் ஆகிய துறைகளில் ஆய்வில் ஈடுபட்டவாறு அமைதியாகத் தன் காலத்தைக் கழிக்கிறான்.  

எச். ஜி. வெல்ஸ் (1866-1946) மிகச் சிறந்த ஆங்கில எழுத்தாளர். அறிவியல் புதினத்தின் தந்தை என்று புகழப்படுபவர். நாவல்கள் மட்டுமின்றி வேறுபல துறைகளிலும் எழுதியவர். கண்ணுக்குப் புலப்படாத மனிதன், டாக்டர் மோரூவின் தீவு, கால யந்திரம், உலகங்களின் போர், டோனோ பங்கே எனப் பலப்பல நாவல்களை எழுதியவர். ஏறத்தாழ ஜூல்ஸ் வெர்னுடன் அறிவியல் நாவல்கள் எழுதியதிலும் முன்னோடித் தன்மையிலும் ஒப்பிடத் தகுந்தவர் என்றாலும், ஜூல்ஸ் வெர்னைவிட இவர் படைப்புகளில் மனித இனம் குறித்த அக்கறை சிறப்பாக அமைந்திருக்கிறது.


ஆங்கிலேய நோயாளி

(“ஆங்கில நோயாளி “அல்ல)
ஆங்கிலேய நோயாளி என்பது மைக்கேல் ஓன்டாட்ஜீ என்ற நாவலாசிரியர் 1992இல் எழுதிய நாவல். இவர் இலங்கையில் பிறந்த கனடா நாட்டவர். உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர்.

கதையின் பின்னணி, வட ஆப்பிரிக்காவிலும் இத்தாலியிலும் நடக்கும் உலகப் போர். கதை தொடர்ச்சியாகச் சொல்லப்படாமல் முன்னும் பின்னும் மாறிமாறி நான்-லீனியராகச் சொல்லப்படுகிறது. நாவல் முழுவதும் பல வேறு ஞாபகங்களின் கொலாஜாக (ஒட்டிணைப்புகளாக) அமைந்து போர், தேசியத்தன்மை, அடையாளம், இழப்பு, காதல் போன்ற பல விஷயங்களைப் பேசுகிறது.  

கதையின் பாத்திரங்கள் ஒருவர்க்கொருவர் தொடர்பற்ற நான்கு பேர். 1945இல் ஓர் இத்தாலிய நாட்டு வில்லாவில் (கன்னிமாடம்-வில்லா சான்கிராலாமோ) வசிப்பவள் இளம் கனடா நாட்டு நர்ஸ் ஹானா. ஜெர்மானியர்கள் பின்வாங்கும்போது எல்லா இடங்களிலும் வெடிகளைப் புதைத்துச் சென்றிருக்கிறார்கள். மற்ற நர்ஸுகள் ஓடிவிட்டாலும் அவள் மட்டும் தன் நோயாளியுடன் தங்கியிருக்கிறாள். அந்த நோயாளி விமானம் எரிந்து விழுந்தபோது உடல்முழுவதும் கரிந்து உருத்தெரியாமல் போனவன். அவனுடன் அவள் ஒரு கேரவானில் வந்தாலும், அவனை இடம்பெயர்க்க முடியாமையால் கன்னிமாடத்தில் தங்குகிறாள். அவன் ஆங்கிலேயன் என்று நினைக்கிறாள். அவனுடைய ஒரே சொத்தான ஹெரோடோடஸின் வரலாற்றுக் கதைகளைப் படித்துக் காட்டுகிறாள். அவன் அவ்வப்போது நினைவுவந்து தன் பழைய கதைகளைச் சொன்னாலும் அவனுக்குத் தன் பெயர் மறந்து போய்விட்டது. 

ஒருநாள் ஹானாவின் தந்தையின் பழைய நண்பன் கேரவாகியோ (இத்தாலிய-கனடியன்) அவளைத் தேடி வருகிறான். வட ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ்காரர்களுக்காகப் பணிபுரிந்தவன். ஜெர்மானியர்களிடம் அவன் பிடிபட்டபோது அவன் கட்டைவிரல்களை வெட்டிவிடுகிறார்கள். நான்குமாதம் ஒரு மருத்துவமனையில் குணம் பெற்று வந்தபோது ஹானாவைப் பற்றி கேள்விப்பட்டு அவளை வந்து அடைகிறான்.  

ஒருநாள் அந்த வில்லாவின் பழைய பியானோ ஒன்றை ஹானா வாசிக்கிறாள். இசைக்கருவிகளிலும் வெடிகுண்டுகளை மறைத்துவைப்பது ஜெர்மானியர் வழக்கம். அதனால் அதைச் சோதிப்பதற்காக இரண்டு பிரிட்டிஷ் படைவீரர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் சீக்கியன் (கிர்பால் சிங், சுருக்கமாக கிப்). கிப் வில்லாவின் குண்டுகளை நீக்க அங்கேயே தங்குகிறான். 

ஆங்கிலேய நோயாளிக்கு நினைவு வந்து தன் பழைய கதையைச் சொல்கிறான். பிரிட்டிஷ்காரர்களுக்காக வட ஆப்பிரிக்கப் பாலைவனத்தை ஆராய்ந்து நிலப்படம் வரைந்து கொண்டிருந்தவன். பெயர் (லாஜ்லோ டி) அல்மாசி. ஹங்கேரி நாட்டுப் பிரபு. ஒருசமயம் ஜெஃப்ரி கிளிப்டன், அவன் மனைவி கேதரீன் என்பவர்கள் அவனோடு இணைகிறார்கள். கேதரீனோடு அவனுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்படுகிறது. விரைவில் கேதரீன் விலகிவிட்டாலும், அவள் கணவன் கண்டுபிடித்து விடுகிறான். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெஃப்ரி அல்மாசிமீது விமானத்தை மோதிக் கொல்ல நினைக்கிறான். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவனே இறந்துபோகிறான். கேதரீன் படுகாயமடைகிறாள். அல்மாசிக்கு காயமில்லை. காதரீனைக் காப்பாற்ற எண்ணி ஸ்விம்மர்ஸ் குகையில் அவளை ஒளித்து வைக்கிறான். நான்கு நாட்கள் பாலைவனத்தில் நடந்து அடுத்த நகரத்தை (எல் தாஜ்) அடைந்தபோது தன் பெயர் காரணமாக ஆங்கிலேயர்களாலேயே ஒற்றன் எனக் கைதுசெய்யப் படுகிறான். கேதரீன் இறந்துபோகிறாள். அல்மாசி பிறகு விடுதலை செய்யப்படுகிறான். 

கேதரீனைத் தேடிவந்த அல்மாசி, மணலில் புதைந்திருந்த ஒரு விமானத்தில் அவள் உடலை ஏற்றிச் செல்ல நினைக்கிறான். பறக்கும்போது விமானம் எரிந்து போகிறது. அல்மாசியின் உடல் முழுவதும் கரிந்துபோகிறது. அப்போது பெடூயின் இனத்தவர் அவனைக் காப்பாற்றுகிறார்கள். 

அல்மாசியைப் பற்றி கேரவாகியோவுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அவன்மீது சந்தேகம். ஆனால் உடல்கரிந்த நிலையில் அவன் இன்னான் என நிரூபிக்க முடியவில்லை.

கிப், பிரிட்டிஷ் படையில் வெடிகுண்டு நீக்கும் ஏவலாளனாகப் பணிபுரிகிறான். சஃபோக் பிரபு என்பவரின்கீழ் பயிற்சி பெற்றவன் அவன். அவர்கள் குடும்பம் இறந்துபோன பிறகு அவன் இத்தாலிக்கு வருகிறான். கருப்பனாகவும் இந்தியனாகவும் வெடிகுண்டு நீக்குபவனாகவும் இருந்ததால் அவனை வெள்ளையர் அவமதிக்கின்றனர். முதலில் ஹானாவும் வெறுத்தாலும் பிறகு அவனும் ஹானாவும் காதலர்கள் ஆகின்றனர்.

விரைவில் ஹானாவின் இருபத்தோராம் பிறந்த நாள் வருகிறது. எல்லாரும் கொண்டாடுகின்றனர். 

இந்த நான்கு பேரும் தங்கள் தங்கள் ஊரிலிருந்து போரினால் இடம் பெயர்ந்து மிகத் தொலைவில் இருப்பவர்கள். அந்தக் கைவிடப்பட்ட வில்லாவில் தங்கள் வாழ்க்கையை மீட்டமைக்கலாம் என்று நினைக்கின்றனர்.  

கிப்பும் ஓரளவு சுகமாகவே நாட்களைக் கழித்து வருகிறான். அந்தச் சமயத்தில் திடீரென வானொலி வாயிலாக அமெரிக்கர்கள் ஜப்பானில் அணுகுண்டு போட்ட செய்தி வருகிறது. வெள்ளையர்கள்மீது நன்னம்பிக்கை வைத்திருந்த கிப்புக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அணுகுண்டு வீச்சு ஒரு மிகப்பெரிய இனப்படுகொலை எனக் கருதுகிறான். கேரவாகியோவும் அமெரிக்கர்கள் ஒரு வெள்ளையர் நாட்டின்மீது நிச்சயமாக குண்டு போட்டிருக்க மாட்டார்கள் என்கிறான். குண்டுபோட்ட வெள்ளையர்களின் பிரதிநிதியாக ஆங்கிலேய நோயாளியைக் கருதி தனது துப்பாக்கியால் அவனைச் சுடுவதற்குத் தயாராகிறான். ஆனால் மனமின்றி, தனது மோட்டார் சைக்கிலில் அங்கிருந்து ஓடிமறைகிறான். பிறகு அந்த வில்லாவுக்கு அவன் திரும்பி வரவேயில்லை. (பிறகு அல்மாசி இறந்து போகிறான், ஹானா மருத்துவக் கேரவானில் தன் பணிக்குத் திரும்பிவிடுகிறாள்.)

பல ஆண்டுகள் கழித்து, காட்சி மாறுகிறது. கிப் இந்தியாவில் இருக்கிறான். அவன் இப்போது ஒரு டாக்டர். சொந்தமாகக் குடும்பம். சிரிக்கும் அழகான மனைவி. அவன் வாழ்க்கை நிறைவுபெற்று விட்டது. ஆனால் அவ்வப்போது ஹானாவுக்கு என்ன நேர்ந்தது என்று நினைத்துக் கொண்டே இருக்கிறான்.

ஓன்டாட்ஜீ ஒரு கவிஞர், நம் சமகால நாவலாசிரியர். கொழும்பில் 1943இல் பிறந்தவர். இந்த நாவலுக்கு புக்கர் பரிசு, கவர்னர் ஜெனரல் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் கிடைத்துள்ளன. இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.


வளையாபதியும் நீலகேசியும்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்தை நீக்கிப் பிற காப்பியங்கள் பற்றி காணத் தொடங்கினோம். அப்படி இதுவரை மணிமேகலை, சீவகன் கதை, குண்டலகேசி என்னும் மூன்று தமிழ்க் காப்பியக் கதைகளைக் கண்டுள்ளோம். நியாயமாக இந்த வரிசையில் இறுதியாக வரவேண்டியது வளையாபதி என்ற கதை.

வளையாபதி

நவகோடி நாராயணன் என்ற பெருவணிகனுக்கு இரு மனைவியர். ஒருத்தி அவன் குலத்தைச் சேர்ந்தவள், மற்றொருத்தி வேறொரு குலத்தினள். அதனால் அவளைத் தன் குலத்தினர் வற்புறுத்தலின்படி தள்ளிவைத்தான் கணவன். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனே வளையாபதி. அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டுத் தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று ஏளனம் செய்யவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்.

உண்மையில் ஐந்தாவது காப்பியமாக பெருங்கதை, நீலகேசி போன்ற பிற முழுமையாகக் கிடைக்கும் கதைகளில் ஒன்றையே நாம் ஏற்க முடியும். நீலகேசி என்பதும் சமணத் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று. தமிழ்க் காப்பிய மரபின்படி பெண்ணின் பெருமை பேசும் நூலாகையால் இதுவே ஐந்தாவது காப்பியமாக ஏற்கத்தக்கது. நீலகேசி என்ற பெண் தத்துவ தரிசனங்களில் அறிவாற்றல் பெற்று பிற மதத்தினரின் தத்துவங்களை வென்று புகழ் பெற்றவள்.

ஆனால் நீலகேசியின் கதையும் அக்காப்பியத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கவில்லை. நீலகேசியின் கதைகளாக இன்று கிடைப்பவை யாவும் பிற புராணங்களில் காணப்படுபவையே. அவற்றில் மூன்றை மட்டும் இங்கே காண்போம்.

நீலகேசி

கதை 1. இரத்தின கரண்டகம் என்ற வடமொழி நூலில் நீலி என்ற சமணப் பெண் கதை காணப்படுகிறது. அவள் ஜினதத்தன் என்ற வணிகன் மகள். பிருகுகச்சம் என்ற ஊரைச் சேர்ந்தவன் அவன். அதே ஊரைச் சேர்ந்த சாகர தத்தன் அவளை மணக்க விரும்பினான். ஆனால் அவன் பவுத்தன். எனவே பெற்றோருடன் சமணராக வேடமிட்டு இந்தப் பெண்ணை மணந்து கொண்டான். அவளும் வேறு வழியின்றித் தன் சமணசமயத்தில் இருந்து கொண்டே இல்லறக் கடமையாற்றிவந்தாள். ஒருநாள் பிட்சு ஒருவனுக்கு உணவு ஆக்கி அளிக்குமாறு வீட்டினர் கட்டளையிட்டனர். அவன் ஊன் உண்பவன். அவளோ ஊன் சமைக்காத சமணத்தி. எனவே புத்தத் துறவி அணிந்திருந்த தோல் மிதியடியில் ஒன்றை எடுத்து திறம்படச் சமைத்து கறியாக்கி உணவிட்டாள். துறவி விடைபெற்றுப் போகும்போது மிதியடி ஒன்றைக் காணாமல் தேடினான். நீலி அவன் உண்டது மிதியடியைத் தான் என்று கூறினாள்.

எனவே அவள்மீது பழிக்குப் பழி வாங்கும் போக்கில் நீலியின் கற்பின் மீது பழி சுமத்தினர். ஆனால் நல்ல வேளையாக ஒரு தெய்வத்தின் செயலால் அவள் கற்புத் திறம் புலனாயிற்று. நகரின் கோட்டைவாயில் அடைபட்டுப் போயிற்று. கற்புடைய பெண்கள் மட்டுமே அதைத் திறக்க முடியும் என்று மரபு. யாராலும் அசைக்க முடியாத அக்கதவை நீலி சென்று எளிதாகத் திறந்தாள். அவள் மீது இருந்த பழி நீங்கி கற்பின் கனலி என்று பெயர் பெற்று வாழ்ந்தாள்.

கதை 2. வடக்கில் பாஞ்சால நாட்டில் பலாலயம் என்ற இடத்தில் கோயில் கொண்டிருந்த காளிக்கு அவ்வூர் மக்கள் பலி கொடுத்து வழிபட்டனர். இதனைக் கண்ணுற்ற முனிசந்திரர் என்ற சமண முனிவர் பலி கொடுத்தலைத் தடுத்தார். பலாலயத்தின் காளிக்கு உயிர்ப்பலி கிடைக்காததால் தமிழ்நாட்டுப் பழையனூர் நீலி என்ற நீலகேசியிடம் முறையிட்டாள். நீலகேசி முனிசந்திரரைப் பலவிதமாகத் துன்புறுத்தியும் செல்லாதது கண்டு அவருக்கு அடங்கிச் சமணத் துறவியாக மாறினாள். பிறகு அவள் பெளத்த மதத்தைச் சேர்ந்த குண்டலகேசியிடம் வாதிட்டு வென்றாள்.

இந்நீலி வாழ்ந்த ஊர் பழையனூர். இது சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் இரயில் பாதையில் திருவாலங்காடு என்ற இரயில் நிலையச் சிற்றூரின் அருகில் உள்ளது. திருவாலங்காடு நால்வர் பாடல் பெற்ற திருத்தலம். இங்கு நீலி வடிவம் எடுத்த காளியுடன் சிவபெருமான் நடனப் போட்டியில் ஈடுபட்டு அவளை வென்றதாகக் கதை உள்ளது. இக்கதை தேவார ஆசிரியர்களாலும் சேக்கிழாராலும் சொல்லப்பட்டுள்ளது.

கதை 3. மேல் இரண்டு கதைகளையும் விட சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறும் பழையனூர் நீலி கதையே பிரபலமானது. ஒரு வணிகன் தன் மனைவியைப் புறக்கணித்து வேசியரிடம் தன் செல்வத்தை எல்லாம் தொலைத்தான். ஆதரவற்ற அவன் மனைவி தன் பெற்றோரிடம் சென்று இருந்துவந்தாள். பொருளிழந்த வணிகன், தன் மனைவியைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தான். வழியில் அவள் அணிகலன்களைப் பறித்துக் கொண்டு அவளையும் குழந்தையையும் பாழும் கிணறு ஒன்றில் தள்ளிக் கொன்றான். பாழும் கிணற்றில் விழுந்து இறந்த அந்தப் பெண் அது முதல் பேயாகத் திரிந்தாள். அவளே நீலி.

பின்னொரு சமயம் மேலும் பொருளீட்டுவதற்காக அந்த வணிகன், அந்தப் பேய் இருந்த இடத்தின் வழியாகச் சென்றான் அவனுக்கு ஒரு முனிவர் துணையாக இருந்து ஒரு வாளைப் பரிசளித்திருந்தார். இப்போது அந்தப் பேய் மனித உருவில் கைக்குழந்தையுடன் அவனைப் பின்தொடரலாயிற்று. முனிவரின் வாள் காரணமாக அவள் அவனை நெருங்க முடியவில்லை. அது பேய் என்பதை அறிந்த வணிகன் விரைந்து பக்கத்திலுள்ள பழையனூருக்குள் ஓடினான். அந்தப் பேய்ப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக அவ்வூர்ப் பெருமக்களான வேளாளர் எழுபதின்மரிடம் அவனை இட்டுச் சென்றாள். மனைவியாகிய தன்னையும் தன் குழந்தையையும் அவன் கைவிட்டு வேசியிடம் செல்கிறான் என்றும், தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனை ஊரார் தூண்ட வேண்டும் என்று அவள் முறையிட்டாள்.

வணிகன் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறினான். அவர்கள் முன் வாதாடுவது பெண் அல்ல, பெண் உருவம் கொண்ட மாயப் பேயே என்றும் விடாமல் எடுத்துரைத்தான். வேளாளர்கள் அவன் கூறிய கதையை நம்பவில்லை. அவனுக்குத் தீங்குவராமல் காப்பதாக உறுதி அளித்தனர். நீலி பிள்ளையுடன் வணிகனோடு தங்கினாள். அப்போதும் அவள் பழிவாங்கும் செயலுக்கு முனிவர் தந்த மந்திர வாள் தடையாக இருந்தது. அந்த வாளால் அவன் தன்னைக் கொன்று விடுவான் என்று வேளாளரிடம் முறையிட்டு அந்த வாளை அவனிடமிருந்து அகற்றினாள் நீலி. இரவில் வணிகனுடைய உடலைப் பிளந்து இரத்தத்தைக் குடித்துவிட்டு பழையபடியே பேயாக மாறிச் சென்றுவிட்டாள். இச் செய்தி கண்ட வேளாளர் தங்கள் தவற்றை உணர்ந்து வருந்தி தங்கள் உறுதிமொழி தவறாது தீக்குளித்து இறந்தனர்.

எவ்வாறாயினும் நீலகேசி என்னும் தருக்க நூலைப் படிக்க நீலகேசி பற்றிய இக்கதைகள் தேவையே இல்லை. நண்பர்கள் யாவரும் நமது பழைய தத்துவங்களையும் தர்க்க முறைமையையும் அறிய இந்த நூலைப் பயில வேண்டியது அவசியம்.

இதன் ஆசிரியர் சமய திவாகர வாமன முனிவர் என்பர். இது தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம் அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்த வாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கிய வாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேத வாதச் சருக்கம், பூத வாதச் சருக்கம் எனப் பத்துப் பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு சருக்கமும் ஒரு மதக் கொள்கையை நீலகேசி வாதிட்டு வெல்வதை எடுத்துரைக்கிறது. வடமொழிப் பயிற்சி இல்லாத தமிழர்கள் பல மத தத்துவங்களையும் தமிழ் மொழியில் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமய திவாகரமாக (சூரியனாக)த் திகழ்கிறது.


உடோபியா

இதை ஒரு நாவல் என்று சொல்வது கடினம். அமெரிக்கா என்ற புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய கற்பனை நாட்டை–அதன் பெயர் உடோபியா–அறிமுகப்படுத்தி பெரும்பாலும் அதன் சிறப்பான பண்புகளை விளக்குவது இந்த எடுத்துரைப்பு. இது 1551ஆம் ஆண்டு வெளியானது. இதைப் பின்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் மட்டுமல்ல, ஆங்கிலத்திலுமே நியூ அட்லாண்டிஸ் போன்ற பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மு. வரதராசனார், கி.பி.2000 என்ற பெயரில் இப்படிப்பட்ட நாவல் ஒன்றை வரைந்தார்.

தாமஸ் மூர் என்பவர் ஓர் ஆங்கிலேயேப் பணியாளர். பெல்ஜியத்தில் தன் நண்பர் பீட்டர் கைல்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் தன் நண்பர் ரஃபேல் ஹைத்லோடே-வுக்கு மூரை அறிமுகப் படுத்துகிறார். ரஃபேல், ஒரு போர்ச்சுகீசியர். அமெரிக்காவுக்குப் பெயரளித்த அமெரிகோ வெஸ்பூச்சி யுடன் உலகம் சுற்றியவர். அவர் தான் கண்டதாக உடோபியா என்ற நாட்டைப் பற்றிச் சொல்கிறார். (உடோபியா என்பதற்கு “இல்லாத இடம்” என்று பொருள்)

ரஃபேலை ஏன் அரசாங்க வேலை ஏற்கக்கூடாது என்று கேட்கிறார் மூர். அதற்கு அவர் தெரிவிக்கும் கருத்துகள் புரட்சிகரமாக உள்ளன. அரசாங்க வேலை என்பது அடிமை வேலை. எந்த ஆட்சியாளனுக்கும் மக்களின் நன்மையில் ஆர்வம் கிடையாது… என்று பல விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார். உதாரணமாக, மரண தண்டனை கூடாது என்பது அவர் கருத்து. ஏனெனில் மனிதனை மனிதன் கொல்லக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பாரசீகத்தில் தான் கண்டதுபோல, யாராவது திருடினால் திருடிய பொருளைத் திரும்ப அவன் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை திரும்பத் தர எதுவும் இல்லை என்றால், அவன் பொதுப்பணித் துறையில் வேலை செய்ய வேண்டும். மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் அரசனுக்குச் சிறப்பு. அவர்கள் பொருளின்றித் திருடுவதும் சாவதும் ஆட்சியாளனை ஜெயிலராகவும் கொலைகாரனாகவும் மாற்றுகிறது.

பிறகு உடோபியா பற்றி உரையாடல் தொடர்கிறது. உடோபியர்கள் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் நல்லவர்கள், நேர்மையானவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும். தனிமனிதச் சொத்து, பொருள்குவிப்பு அற்ற நிலையில்தான் மகிழ்ச்சி இருக்க முடியும். பணக்காரர்கள் எல்லாரும் வில்லன்கள், குற்றவாளிகள், சோம்பேறிகள் என்று உடோபியர்கள் கருதுகிறார்கள். ரஃபேலும் அதை ஆதரிக்கிறார்.  

உடோபியாவில் தங்கத்துக்கு மதிப்பு கிடையாது. யாரும் ஆபரணத்தைப் பயன்படுத்துவதில்லை. எல்லாப் பொருள்களுமே இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே நாளைக்கு என்று சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடோபியா ஒரு தீவு. அதை உருவாக்கியவர் உடோபஸ் என்ற பிரயாணி. ஆளற்ற ஒரு தீபகற்பத்தை அவர் கண்டவுடன் அதைச் சொந்தமாக்கித் தீவாக மாற்றுகிறார், மக்களைக் குடியேற்றுகிறார்.

உடோபியாவில் 54 நகரங்கள் உள்ளன. அவை யாவும் ஒரே மாதிரியான அமைப்புள்ளவை. ஒரு நகரத்தில் 6000 பேர் மட்டுமே இருக்கலாம். அமாரூட் என்பது தலைநகரம். ஒவ்வொரு நகரத்திற்கும் சொந்தமாக நிலம் உண்டு. அதைக் குடும்பங்கள் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் 40 ஆடவர் பெண்டிர் இருக்கலாம். 2 அடிமைகள் இருக்கலாம். உழவுக்கான கருவிகளை மேஜிஸ்டிரேட் அளிப்பார்.

சுழற்சி முறையில் இருபது இருபது குடும்பங்களாக நகரத்திலிருந்து கிராமப்புறம் சென்று விவசாயம் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கலாம்.

எல்லாரும் மிக அழகான, ஆனால் ஒரே மாதிரியான அலங்காரமற்ற, நடைமுறைப் பயனுடைய உடையை மட்டுமே உடுத்துகின்றனர். கட்டடங் களும் எளிமையானவை. தேவையற்ற உழைப்பை அவை குறைக்கின்றன. எல்லாரும் 6 மணிநேரம் மட்டுமே உழைத்தாலும் மிகையாக உற்பத்தி செய்கிறார்கள். குருமார்கள், சாமியார்கள், பூசாரிகள் போன்றோர் உழைப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் என்பதால் நாட்டில் அவர்கள் இல்லை.   

நகரத்திற்கு ஃபைலார்க் எனப்படும் மாஜிஸ்திரேட் (தலைவர்) உண்டு. ஒவ்வோராண்டும் அவர் முப்பது குடும்பங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் விட்டு ஊர் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை. அதை அரசனிடமிருந்து பெறலாம். ஃபைலார்க்குகள் அரசனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிகமாகக் குழந்தை பெற்றால் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும். அதேபோல ஒரு நகரத்தில் மக்கள் தொகை அதிகமானால் சிறு நகரங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.  

நாட்டில் அடிமைகள் உண்டு. போரில் தோற்றவர்கள் அடிமைகளாகக் கொள்ளப்படுவார்கள். தேவையான விவசாய நிலம் இல்லாமல் போனால் மட்டுமே போர் தேவைப்படும், நிகழும்.

தனக்குத் தேவையானதற்கு மேல் எவரும் எந்தப் பொருளையும் எடுப்பதில்லை. ஏனெனில் திருடுதல், பறித்துக் கொள்ளுதல் என்பவை எல்லாம் அங்கு கிடையாது.

“உடோபியாவில் எல்லாருக்கும் எல்லாவற்றின்மீதும் உரிமை உண்டு. பொதுக் கடைகளை எப்போதும் நிரப்பி வைத்திருந்தால், எவரும் தேவையின்றி எடுக்கமாட்டார்கள். ஏனெனில் சமமற்ற விநியோகம் கிடையாது. அதனால் யாரும் ஏழைகளும் இல்லை, யாரிடமும் எதுவும் கிடையாது என்றாலும் எல்லாரும் செல்வமுள்ளவர்களே.”   

பெண்கள் 18 வயதுக்கு முன், ஆடவர் 22 வயதுக்கு முன் திருமணம் செய்யலாகாது. திருமணத்துக்கு முன்னால் பாலியல் உறவு கொள்ளக் கூடாது. பலதார மணம், விபசாரம் என்பவையும் தடுக்கப் பட்டவை. உடோபியாவில் வழக்கறிஞர்கள் கிடையாது. யாவரும் தங்களுக்குத் தாங்களே வழக்காட வேண்டும்.

தாங்களே இராணுவத்தை வைத்துக் கொள்வதைவிட இராணுவங்களை வாடகைக்கு அமர்த்துவதையே உடோபியர்கள் விரும்பினார்கள். ஆனால் கணவன் போருக்குச் சென்றால் மனைவியும் உடன் சென்று போரிடலாம்.

மதத்தைப் பற்றி இறுதியாகத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் ரஃபேல். ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதால் அங்கே எண்ணற்ற மதங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தெய்வம் உண்டு. உடலுடன் ஆன்மா இறந்துபோகிறது என்று கருதக் கூடாது. அதனால் நோயுற்றால் வருந்துவார்களே ஒழிய இறப்புக்கு யாரும் வருந்துவதில்லை.

ரஃபேல் தனது வருணனைகளை முடிக்கும்போது, மூரின் மனத்தில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றியுள்ளன. ஆனால் ரஃபேல் களைத் திருந்ததால் மூர் அவற்றைக் கேட்காமல் அடக்கிக் கொள்கிறார். தங்கள் அரசாங்கங்களும் உடோபியாவின் சில விதிகளைக் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே இறுதியில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட எளிய, ஆனால் ஏழ்மையற்ற வாழ்க்கையைத்தான் நமது தமிழ் முன்னோர் வாழ்ந்துவந்தனர். பொங்கல் என்ற தன்னிறைவுக் கொண்டாட்டம் இந்தமாதிரி வாழ்க்கையின் அடையாளம். இப்போதும் நாகரிகம்(!) பரவாத காட்டுப் பகுதிகளில் பல பழங்குடியினர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

ஆனால் மேலும் மேலும் பொருளையும் பணத்தையும் குவிப்பதைத்தான் சிறந்த வாழ்க்கை என்று நமக்குக் கற்பிக்கிறது இந்த உலகம். எதற்காக ஒருவனுக்கு பதினைந்து லட்ச ரூபாய் கோட்டு? எதற்காக ஒருவன் இரண்டு கோடிக்குக் கார் வாங்கி, வரி கட்டாமல், கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்? எதற்காக கோடிக்கணக்கான பேர் வயிற்றுக்குச் சோறின்றி சாலையோரங்களில் வாழ்ந்து இறக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

தன்னளவில் நிறைவாக எளிமையாக வாழ்பவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது இவ்வுலகம். “வளர்ச்சி வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும் உலகத்தையும் அழிக்க வேண்டும். பிறகு எல்லாவற்றுக்குமாக உட்கார்ந்து என்ன செய்வது என்று ஐ.நா.வில் பன்னாட்டுக் கூட்டங்கள் போட்டுப் போலியாக அழ வேண்டும்!”       


சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்

2022 புத்தாண்டை மகிழ்ச்சியான சிறுவர் கதை ஒன்றுடன் தொடங்குவோம். கள்ளமற்ற சிறார்களைக் கொண்டாடுவதும், கிறித்துவின் தியாகவடிவமாக ஒரு பெருஞ்சிங்கத்தைப் படைத்திருப்பதும் ஆகிய கதை ஒன்றைக் காண்போம்.

“நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) என்பது சி. எஸ். லூயிஸ் (1898 – 1963) என்ற பேராசிரியரால் எழுதப்பட்டு சிறார்கள் (சிறுவர் சிறுமியர்) இடையிலே) புகழ்பெற்றது. ஏழு கதைகள் கொண்ட தொடர் இது. அதில் முதல் கதை ‘சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்’. இது 1950இல் வெளியாயிற்று.

இந்தக் கதை 2005இல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. புகழ்பெற்ற அதன் மொழிமாற்ற வடிவத்தைத் தமிழ்ச் சிறார்களும் கண்டு களித்திருப்பார்கள். தமிழ்த் தொலைக்காட்சிகளில் அடிக்கடி திரையிடப்படும் படம் இது.

கதை 1940இல் நிகழ்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூசி என்ற நான்கு சிறார்களும் உலகப் போரின் காரணமாக லண்டனிலிருந்து வெளியேற்றப் பட்டு பேராசிரியர் டிகோரி கிர்க்கே என்பவருடன் ஒரு கிராமப்புற வீட்டில் தங்கியிருக்குமாறு அனுப்பப் படுகிறார்கள். பாவம், அவர்களுக்குத் தாங்கள் ஒரு மாய உலகிற்குள் பயணிக்கப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.

அந்த இருண்ட வீட்டைச் சுற்றி ஆராயும்போது லூசி ஒரு பெரிய ஆடையலமாரியைக் கண்டு அதற்குள் புகுந்தவள், அப்படியே நார்னியா என்ற மாய உலகிற்குள் சென்றுவிடுகிறாள். அங்கு மிருகங்கள் பேசுகின்றன. டம்னஸ் என்ற ஆட்டுமனிதனைச் சந்திக்கிறாள். தான் வெள்ளை விட்சின் (சூனியக்காரியின்) பணியாள் என்றும் லூசியை அவளிடம் அறிமுகப்படுத்த இருந்ததாகவும் டம்னஸ் சொல்கிறான். அந்தமாயயக்காரி, நார்னியா நாட்டின் அரசியாக வேடமிட்டு, அதைக் கிறிஸ்துமஸ் அற்ற நிரந்தரப் பனிக்காலத்தில் ஆழ்த்தியிருக்கிறாள்.

டம்னஸ் மனம் வருந்தி லூசியைத் திரும்பவும் அவள் வீட்டுக்கே அனுப்பிவிடுகிறான். மற்ற மூவரும் இவள் கதையை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் எட்மண்ட் ஆடையலமாரிக்குள் புகுந்து நார்னியாவில் வேறொரு இடத்துக்குச் சென்று விடுகிறான். வெள்ளை மாயக்காரியைச் சந்திக்கிறான். அவள் எட்மண்டுக்கு ஒரு கேக்கைக் கொடுத்து குஷிப்படுத்தி அவனது மற்ற உடன்பிறப்புகளைக் கொண்டுவந்தால் அவனை இளவரசன் ஆக்குவதாகச் சொல்கிறாள். எட்மண்டும் லூசியும் வீட்டுக்குத் திரும்புகின்றனர்.

சிலநாள் கழித்து நான்கு பேருமே நார்னியாவுக்குச் செல்கின்றனர். சதி செய்ததற்காக டம்னஸ் கைது செய்யப்பட்டுவிட்டான். நான்குபேரும் பீவர் தம்பதிகளுடன் நட்புக் கொள்கிறார்கள். “ஆதாமின் மகன்கள் இருவரும் ஏவாளின் மகள்கள் இருவரும் பாரவல் கோட்டையின் சிம்மாசனங்களில் அமரும்போது வெள்ளை மாயக்காரியின் ஆட்சி முடியும் என்றும் நார்னியாவின் உண்மையான அரசனாகிய அஸ்லான் என்னும் சிங்கம் கல்மேஜைக்குத் திரும்பும்போது இது நிகழும் என்றும் பீவர் தம்பதியர், சொல்கிறார்கள்.

எட்மண்ட் தனியே வெள்ளை மாயக்காரியின் அரண்மனைக்குச் சென்று அவள் பகைவர்கள் அனைவரும் கற்சிலைகளாக மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறான். அவனிடமிருந்து சிங்கம் திரும்பவரப் போகிறது என்று அறிந்த மாயக்காரி, கல்மேஜையை நோக்கிப் படையெடுக்கிறாள். பிற சிறார்களையும் பீவர் ஜோடியையும் கொல்ல உத்திரவிடுகிறாள். ஆனால் அவர்கள் தப்பி கல்மேஜையை நோக்கிச் செல்கின்றனர். வழியில் பனி உருகுவதை நம்பிக்கைச் சின்னமாகக் கொள்கின்றனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தாவும் தோன்றிப் பரிசுகளும் ஆயுதங்களும் வழங்கி நம்பிக்கை அளித்துச் செல்கிறார்.

அதற்குள் மாயக்காரியின் சேனைத்தலைவனாகிய மோக்ரிம் என்ற ஓநாய் சேனையுடன் வந்துவிடுகிறது. அதைப் பீட்டர் கொல்கிறான். மாயக்காரி தோன்றி, “காலவிடியலின் ஆழ்ந்த மாயத்தால்” எட்மண்டைக் கொல்வதாகச் சொல்கிறாள். அஸ்லான் மாயக்காரியிடம் தனியாகப் பேசி எட்மண்டைக் காப்பாற்றுகிறது. அனைவரும் தங்கள் படைவீட்டுக்குச் செல்கிறார்கள்.

அஸ்லானைப் பின்தொடரும் சூசனும் லூசியும் அது மாயக்காரியால் எட்மண்டுக்கு பதிலாகக் கொலைசெய்யப்படுவதைக் காண்கின்றனர். ஆனால் அடுத்தநாள் காலை, “காலவிடியலின் மிகஆழ்ந்த மாயத்தால்” உயிர் பெறுகிறது அஸ்லான். அது அனைவரையும் மாயக்காரியின் அரண்மனைக்குக் கொண்டுசென்று, அங்கு கல்லாகியிருந்தவர்களையும் உயிர்பெறச் செய்கிறது. அவர்கள் அனைவரும் அஸ்லானின் சேனையில் சேர்கிறார்கள். போரில் அஸ்லான் மாயக்காரியைக் கொல்கிறது. நான்கு சிறார்களும் நார்னியாவின் ராஜா-ராணிகளாக பாரவல் கோட்டையில் முடிசூடுகிறார்கள்.

காலம் பறக்கிறது. இப்போது நான்கு சிறார்களும் இளைஞராகி விட்டனர். தன்னைப் பிடிப்பவர்களுக்கு வேண்டிய வரம் கொடுக்கும் வெள்ளைக் கலைமானைத் தேடி அவர்கள் ஒருநாள் நார்னியாவின் எல்லைக்குச் சென்று விடுகின்றனர். தாங்கள் வந்த ஆடையலமாரியை அவர்கள் மறந்து விட்டனர். இப்போது அதன்வழியே விருப்பமே இன்றி நுழைந்து தங்கள் பழைய வீட்டுக்குத் திரும்புகிறார்கள். ஆ! அவர்கள் இப்போது மீண்டும் பழையபடியே சிறார்களாக மாறிவிட்டனர்! இந்த உலகில் கால மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தங்கள் கதையைக் கிர்க்கேயிடம் சொல்கின்றனர். அவர் “எதிர்பாராத ஓர் நாளில் நீங்கள் மீண்டும் நார்னியாவுக்குச் செல்வீர்கள்” என ஆசி வழங்குகிறார்.

இது ஒரு தொடர் உருவகக் கதை. கொல்லப் பட்டு, உயிர்த்தெழுகின்ற அஸ்லான் என்ற சிங்கம் கிறித்துவின் வடிவம். இதுபோல் பிற பாத்திரங்களும் உருவகங்களே.

நார்னியா கதைகள் அனைத்தும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. மேலும் தொலைக்காட்சித் தொடர், நாடகம், கணினி விளையாட்டு, வானொலி போன்ற அனைத்து ஊடகங்களும் இக்கதையைப் பயன்படுத்தி யுள்ளன. மாயக் கதை உருவாக்கத்தில் டோல்கியனுக்கு இணையாகப் பேசப்படும் ஆசிரியர் சி.எஸ். லூயிஸ்.


வள்ளலார்

சிதம்பரம் இராமலிங்கம் என்று எளிமையாகத் தன்னை அழைத்துக் கொண்ட திருவருட்பிரகாச வள்ளலார் சித்தி பெற்று 148 ஆண்டுகள் ஆகின்றன. அவரது நினைவைப் போற்றும் வகையான் அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும், அவற்றிற்கு உறுதுணையான அவர் இயற்றிய பாடல்கள் சிலவற்றையும் காண்போம்.

வள்ளல் இராமலிங்க அடிகளார் ஒரு தலைசிறந்த ஞானி. இந்த உலகம் உய்வதற்காக சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியையும், அந்நெறி தழைக்க சமரச சன்மார்க்க சங்கம் என்கிற அமைப்பையும், அற்றார் அழிபசி தீர்க்க சத்திய தருமச்சாலை என்ற உணவுச்சாலையையும், மன இருளை அகற்றி நித்திய ஜோதியை நினைவில் இருத்த சத்திய ஞான சபை என்கின்ற அருள் நிலையத்தையும் சிதம்பரம் அருகிலுள்ள வடலூரில் அமைத்து, இம்மானுடம் மரணமிலாப் பெருவாழ்வு காண விழைந்த அவர் ‘திரு அருட்பா’ என்னும் ஞான நூலையும் அருளிச் சென்றுள்ளார்.

அவரது வாழ்க்கைக் குறிப்புகள்:
இயற்பெயர்: இராமலிங்கம்
தந்தை: இராமையா பிள்ளை
தாயார்: சின்னம்மாள்
சமயம்: சைவம்
குலம்: வேளாண்குலம்
மரபு: கருணீகர் மரபு
தோற்றம்: 5-10-1823
(சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள், 21-ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை, மாலை 5:30 மணியளவில்)
பிறப்பிடம்: மருதூர் (சிதம்பரம் அருகே)
உடன் பிறந்தோர்:
தமையன்கள்:
சபாபதி
பரசுராமன்
தமக்கைகள்:
உண்ணாமுலை
சுந்தரம்.
ஆசிரியர்கள்:
தமையனார் சபாபதி பிள்ளை
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
ஞானாசிரியர்: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இதை வள்ளலாரின் கீழ்வரும் பாடல்கள் கூறும்:

நாதா பொன்னம்பலத்தே
அறிவானந்த நாடகஞ் செய்
பாதா துரும்பினும் பற்றாத
என்னைப்பணி கொண்டெல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே
நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்தென்
நினைக்கேன் இந்த நீணிலத்தே!
(நான்காம் திருமுறை பாடல் 2775)
**
………..
கற்றது நின்னிடத்தே
பின் கேட்டது நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே
உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே
இன்புற்றது நின்னிடத்தே
பெரிய தவம் புரிந்தேன்
என் பெற்றி அதிசயமே!
(ஐந்தாம் திருமுறை பாடல் 3044)
**
ஏதுமறியாது இருளில் இருந்த
சிறியேனை எடுத்து விடுத்து
அறிவு சிறிது ஏய்ந்திடவும்
புரிந்து ஓதுமறை முதற்
கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந்து உணர்த்தி
அருள் உண்மை நிலை காட்டி….
(ஐந்தாம் திருமுறை பாடல் 3053)
**
…………..
ஓதி உணர்ந்தவர் எல்லாம்
எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம்
உருவுறச் செய் உணர்வே….
(ஆறாம் திருமுறை பாடல் 4112)
**
ஒன்றென இரண்டென
ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய
அருட் பெருஞ் ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி
அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்
பெரும் ஜோதி…!
(ஆறாம் திருமுறை பாடல் 4615 வரிகள் 21-24)
**
…………………
முன்னைப் பள்ளி பயிற்றாத
என்தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர்வித்து உடல்
பழுதெலாம் தவிர்த்தே
எனைப் பள்ளி எழுப்பிய
அருட்பெருஞ் சோதி
என்னப்பனே பள்ளி
எழுந்தருள்வாயே!
(ஆறாம் திருமுறை பாடல் 4891)
**
சோதி மலையில் கண்டேன்
நின்னைக் கண் களிக்கவே
துய்த்தேன் அமுதம் அகத்தும்
புறத்தும் பரிமளிக்கவே
ஓதி உணர்தற்கு அரிய
பெரிய உணர்வை நண்ணியே
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன்
நின் அருளை எண்ணியே!
(ஆறாம் திருமுறை பாடல் 5004)

ஞான வாழ்க்கை:
வள்ளலார் தமது பன்னிரண்டாம் வயதிலேயே
ஞான வாழ்க்கை வாழத்தலைப்பட்டார். கீழ்வரும் அவரது பாடல்களால் இதை அறியலாம்.

பன்னிரண்டாண்டு தொடங்கி நான்
இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது
அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுள்ளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும்
இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த
வண்ணமே வகுப்பதென் நினக்கே!
(ஆறாம் திருமுறை பாடல் 3535)
**
பன்னிரண்டாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை
நினைக்கில் மலையும் கரையுமே
துனியாது அந்தப்பாடு முழுதும்
சுகமது ஆயிற்றே
துரையே நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5041)
**
ஈராறாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை
நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு
முழுதும் இன்பமாயிற்றே
இறைவா நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5042)

திருமணம்:
1850-ல் உற்றார் மனம் நோகாது, தன்னுடைய தமக்கை உண்ணாமுலை அம்மையின் மகள் தனம்மாளை மணம் முடித்தாலும் அவர் இல்லறத்தை ஏற்கவில்லை. இதனையும் அவருடைய பாடல்களால் அறியலாம்:

முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன், மோகம் மேலின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பினேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்ததோறும் உள்
உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்
(ஆறாம் திருமுறை பாடல் 3452)
**
முன்னொரு பின்னும் நீ தரு மடவார்
முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்தரசு
உன் புணர்ப்பலால் என் புணர்ப்பலவே
என்னொடும் இருந்திங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவதென்னோ
சொன்னெடு வானத்து அரம்பையர் எனினும்
துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே!
(ஆறாம் திருமுறை பாடல் 3391)

வள்ளலாரின் மாணாக்கர்கள்:
தொழுவூர் வேலாயுத முதலியார்,இறுக்கம் இரத்தின முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர ஐயர், பண்டார ஆறுமுகம் அய்யா,
வீராசாமி முதலியார் ஆகியோர்

உறைவிட மாற்றம்:
சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் வாழ்ந்து வந்த வள்ளலார் ஆரவாரம் மிகுந்த அவ்விடத்தைத் தவிர்த்து 1857-ல்
சிதம்பரம் அருகேயுள்ள கருங்குழி என்னும் கிராமத்தில் மணியக்காரர் வேங்கட ரெட்டியார் இல்லத்தில் 1867 வரை வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் அவர் நாள்தோறும் சிதம்பரம்
சென்று வழிபடுவது வழக்கம்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்:

வள்ளல் இராமலிங்கம் கடவுள் ஒருவரே என்றும், அவரை அன்புடன் ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்றும், சிறு தெய்வ வழிபாடு கூடாது, உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வேண்டும், ஏழைகளின் பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா, இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது,
கருமாதி; திதி முதலிய சடங்குகள் தேவை இல்லை, போன்ற நெறிகளை வலியுறுத்திய
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

சத்திய தருமச்சாலை:

வள்ளல் பெருமானின் தலையாய கொள்கை
ஜீவகாருண்யம். புலால் மறுத்தலும், அற்றார் அழிபசி தீர்த்தலும் ஜீவகாருண்யத்தில் அடங்கும்.
எனவே அற்றார் அழிபசி தீர்க்கும் பொருட்டு, வடலூரில் சத்திய தருமச்சாலையை 1867-ல்
நிறுவினார். தமது உறைவிடமாக அதனையே ஏற்று
1870 வரை அங்கேயே உறைந்திருந்தார்.

சித்திவளாகம்: (மேட்டுக்குப்பம்)

தனிமையை நாடிய வள்ளலார் 1870-ல் வடலூருக்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்தில் வாழத் தொடங்கினார். தாம் உறைந்த அத்திருமாளிகைக்கு சித்திவளாகம் என்ற பெயரை அவரே இட்டார். அவர் சித்தி அடைந்த வளாகமும் அதுவே.

சத்திய ஞானசபை:
இறைவனை ஒளிவடிவில் கண்ட பெருமானார்
ஒளி வழிபாட்டிற்கென சத்திய ஞான சபை என்னும் வழிபாட்டு சபை ஒன்றை நிறுவ எண்ணினார்.
அன்பர்கள் உதவியுடன் வடலூரில் 1871-ல் பணிகள் தொடங்கப் பெற்று, 1872-ல் தைப்பூசம்
நன்னாளில் தொடங்கிய சத்தியஞான சபையில் தினமும் ஜோதி வழிபாடு நடைபெறுகின்றது.

சன்மார்க்கக் கொடி:
ஞானிகள் தம் கொள்கைளுக்காக கொடி ஏதும் கண்டதில்லை. வள்ளலார் ஒருவரே தமது மார்க்கத்திற்கு தனிக்கொடி கண்டவர். 1873-ல் தாம் உறைந்து வந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்
திருமாளிகையில் சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருரை ஒன்றையும் ஆற்றினார்.

சித்தி
ஶ்ரீமுக ஆண்டு தைத் திங்கள் 19-ஆம் நாள் 30-1-1874, வெள்ளிக்கிழமை இரவு 12 மணி.
சித்திவளாகத்தின் திருமாளிகையில் தமது அறைக்குள் நுழைந்து, கதவைத் திருக்காப்பு
இட்டுக்கொண்டு, இரண்டரை நாழிகையில்
இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி
பெற்றார். வள்ளலார் சுத்த தேகம், பிரணவ தேகம்,
ஞான தேகம், என்னும் மூவகை தேகசித்தியையும்
பெற்றவர். அத்தகைய தேகசித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது. இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி பெற்ற அவருக்கு மறுபிறவியும் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு காண அவர் காட்டிய வழி சுத்த சன்மார்க்கம் என்பதாம். அதை வள்ளலார் கூற்றாலேயே காண்போம்:

இறப்பொழிக்கும் சன்மார்க்கம்:

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச்
சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேது செய் மரணத்துக் கெது செய்வோம் என்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து
ஆடேடி..
(ஆறாம் திருமுறை பாடல் 4959)
**
உற்றமொழி உரைக்கின்றேன்
ஒருமையினால் உமக்கே
உற்றவன் அன்றிப் பகைவன்
என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும்
அழிந்திடக் காண்கின்றீர்
காரணம் எலாம் கலங்க வரும்
மரணமும் சம்மதமோ
சற்றும்இதைச் சம்மதியாது
என் மனந்தான் உமது
தன் மனம்தான் கன்மனமோ
வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம்
என்னொடும் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே!
(ஆறாம் திருமுறை பாடல் 5601)

திரு அருட்பா:
சென்னை கந்தகோட்டத்துள் வளர் முருகனையும், திருவொற்றியூர் ஈசனையும் சமயக் குரவர்களையும் சிதம்பரம் நடத்தரசையும், திருத்தங்களையும் தன்னுடைய ஞானத்தின் ஒளியை உலக மக்கள் உணரும் வண்ணம் சமரச சுத்த சன்மார்க்க நெறியமைந்த பாடல்களையும் பாடினார். எளிமையும் இனிமையும் கொண்ட அவரது அருட் பாக்களின் உருக்கம் கல்லும் கரைய வைக்கும் தன்மையது. மனிதன் உயரிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு வேண்டிய அத்துணை வழிகளையும் அவரது ‘திருஅருட்பா’ பாடல்களில் காணலாம். அவர் பாடிய 5818 பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

அன்பு, தயவு இவைகளை இரு கண்களைப்போல் கருதிய வள்ளலார், ஞானத்தின் பழுத்த நிலையில் சமய நெறி மேவாது சன்மார்க்க நெறியைக் கண்ட பெருமான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்ற வள்ளல். வாழ்க அவரது புகழ்!
**
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே!
**
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
**

இக்கட்டுரையைத் தயாரித்து அளித்தவர் திரு. கோ. சுப்பிரமணியன் அவர்கள் (மேப்பத்துரை). புத்தாண்டுக்கு நல்ல தொடக்கமாக அமைய வேண்டி இது வெளியிடப் பெறுகிறது.


பாடும் பறவையைக் கொல்லுதல்

இந்த நாவல். 1960இல் வெளியாயிற்று. இதன் ஆசிரியர் ஹார்ப்பர் லீ என்னும் அமெரிக்கப் பெண்மணி. இது நவீன அமெரிக்க இலக்கியத்தில் ஒரு முதன்மையான படைப்பு எனக் கருதப்படுகிறது.

இதன் கதை, 1933-35 காலத்தில் நிகழ்ந்தது. இதைச் சொல்பவள், ஆறுவயதுச் சிறுமி ழீன் லூயிஸா ஃபிஞ்ச் (இவளின் செல்லப் பெயர் ஸ்கவுட்). தந்தை அட்டிகஸ், ஒரு பெயர்பெற்ற வழக்கறிஞர். அண்ணன் ஜெம் (ஜெரமி). இவர்கள் நண்பன் டில். இவளது தந்தையின் அன்பும், அண்ணன் மற்றும் கோடை விடுமுறைக்கு வரும் டில்லோடு விளையாடிய விளையாட்டுகள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை விவரிக்கிறது. இந்த மூவரும் இவர்கள் கண்ணில் படாமல் தனித்து வசிக்கும் பக்கத்து வீட்டு நபர் “பூ” ரேட்லி என்பவரைப் பார்த்து பயப்படுகின்றனர். ஆனால் பலமுறை அவர்களுக்கு பூ பரிசுகளைத் தன் வீட்டின் வெளிப்புறம் விட்டுச் செல்கிறார்.

மேயெல்லா எவல் என்ற வெள்ளைப் பெண்ணை டாம் ராபின்சன் என்ற கருப்பினத்தவன் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாகச் செய்தி வெளியாகிறது. நகர ஷெரிஃபின் அறிவுரைப்படி அட்டிகஸ் அவனுக்கு ஆதரவாக வழக்காட முன்வருகிறார்.

இதற்காக ஜெம்மையும் ஸ்கவுட்டையும் பிற சிறார்கள் கேலி செய்கின்றனர். தன் தந்தையின் சார்பாக ஸ்கவுட் போரிடுகிறாள். இது பெருஞ்சண்டையாக மூள்கிறது. டாமைத் தாக்குவதற்காக ஒரு கும்பல் ஒரு நாளிரவு வருகிறது. அட்டிகஸ் அவர்களை எதிர்கொள்கிறார். அவர்களில் ஒருவனை- அவன் ஸ்கவுட்டின் வகுப்புத்தோழனின் தந்தை- கண்டுபிடித்து ஸ்கவுட் பேசி, கும்பல் மனப்பான்மையைத் தகர்க்கிறாள். அவர்கள் கலைந்து செல்கின்றனர்.

டாம் இடக்கை ஊனமுள்ளவன் ஆதலின், மேயெல்லாவின் வலப்புறம் காணப்படும் காயங்களை அவன் உண்டாக்கியிருக்க முடியாது என்றும், அவை அவளின் சொந்தத் தகப்பன் பாப் எவல் அவள் டாமின் மீது கொண்ட காதலைத் தடுக்கவேண்டி உருவாக்கினவை என்றும் அட்டிகஸ் நிறுவுகிறார். ஆயினும் வெள்ளையர்கள் ஆன ஜூரிகள் டாமுக்கு எதிராகத் தீர்ப்பளித்து சிறையிலடைக்கின்றனர். ஆனால் சிறையிலிருந்து தப்ப டாம் முயலும்போது வெள்ளைக் கும்பலில் உள்ளவர்கள் அவனைப் பதினேழுமுறை சுட்டுக் கொல்லுகின்றனர். ஜெம் நீதித்துறை மீதான நம்பிக்கையை அறவே இழக்கிறான்.

டாமின்மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் விசாரணை பாப் எவலின் மரியாதையைக் குலைத்துவிடுகிறது. அவன் பழிவாங்கப் போவதாகச் சொல்லி அட்டிகஸின் முகத்தில் காறி உமிழ்கிறான். பின்னர் ஒரு நாள் நீதிபதியின் வீட்டுக்குள் உடைத்துப் புகுகிறான். டாம் ராபின்சனின் மனைவியைத் துன்புறுத்துகிறான். ஹாலோவீன் கலைநிகழ்ச்சி ஒன்றில் ஜெம்மும் ஸ்கவுட்டும் கலந்துகொண்டு இரவில் திரும்பி வரும்போது அவர்களைத் தாக்குகிறான் பாப் எவல். ஜெம்மின் கை உடைகிறது. ஆனால் நல்லவேளையாக ஒருவர் வந்து பாப் எவலை அடித்து, சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றுகிறார். ஜெம்மை வீட்டுக்குத் தூக்கிச் செல்கிறார். அவர்தான் பூ ரேட்லி என்று கண்டுகொள்கிறாள் ஸ்கவுட்.

நகர ஷெரிஃப் ஆன டேட் வருகிறார். கத்திக் குத்தால் பாப் எவல் இறந்துவிட்டான் என்று காண்கிறார். ஜெம் ஒருவேளை கொலைக்குக் காரணமாக இருப்பான் என்று அட்டிகஸ் கூறினாலும், ஷெரிஃப் அது பூ தான் என்று கண்டுபிடிக்கிறார். அவரைக் காப்பாற்ற வேண்டி சண்டையின் போது பாப் தன் கத்தியின்மீது தானே விழுந்து இறந்துவிட்டான் என்று அறிவிக்கிறார். பூ, ஸ்கவுட்டைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கிறார். அவர் வீட்டு வாசலில் அவள் விட்டதும், குட் பை கூறிவிட்டு அவர் வீட்டுக்குள் செல்கிறார். பிறகு அவர் ஸ்கவுட் கண்ணில் படவேயில்லை. தனித்து வாழும் அவர் கண்ணோட்டத்தில் வாழ்க்கையைக் கற்பனை செய்கிறாள் ஸ்கவுட்.

இக்கதை அமெரிக்காவில் ஒரு பேரெழுச்சியை உண்டாக்கியது. இனவெறியின் அநீதிகளும் சிறார்ப்பருவ வெகுளித்தனத்தின் முடிவும் இக்கதையின் முக்கியக் கருப்பொருட்களாக உள்ளன. ஆங்கிலம் பேசும் பல நாடுகளில் சகிப்புத்தன்மை, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பண்பு ஆகியவற்றைக் கற்போரிடம் வளர்க்கும் விதமாக இந்தக் கதை எழுதி வெளிவந்த உடனே பல பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டது. ஆனால் இனவெறி பற்றிக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களைக் காரணம் காட்டி இப்புத்தகம் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பும் எழுந்தது.

“மாக்கிங் பேர்ட்” என்பதைத் தமிழ் லெக்சிகன் “பாடும் பறவை” என்று சொல்கிறது. இது இந்த நாவலில் எளிய வெள்ளையுள்ளம் படைத்த மனிதர்களுக்கு ஒரு குறியீடாக வருகிறது.

வெள்ளையின மக்கள் இப்புதினத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் கருப்பினக் கதாபாத்திரங்கள் முழுமையாகச் சித்தரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து கருப்பின மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

மிகவும் பிரபலமான இப்புதினம்  புலிட்சர் பரிசும் பல்வேறு பரிசுகளும் பெற்றதில் வியப்பில்லை. இக்கதை 1962ல் ஆங்கிலத்தில் திரைப்படமாக்கப்பட்டு அதுவும் ஆஸ்கார் விருது பெற்றது.


ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம்

மெக்சிகோவைச் சேர்ந்த நாவலாசிரியர் கார்லோஸ் ஃபுவெண்டஸ் (Carlos Fuentes). அவரது முக்கிய நாவல் “ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம்”. 1960-70கள் இடையில் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் ஒரு பெருவளர்ச்சி, அல்ல, பெருவெடிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணமானவர்கள் கார்லோஸ் ஃபுவெண்டஸ், ஜூலியோ கோர்த்தஸார், ஜோர்ஹே லூயி போர்ஹே, காப்ரியேல் கார்சியா மார்க்விஸ் ஆகியோர். மெக்சிகோவின் 1910 புரட்சியைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த சமூக வரலாற்று நாவல் இது, நனவோடை உத்தியை முதன்முதலாகக் கையாண்ட நாவலும் இதுதான் என்பார்கள்.

ஆர்ட்டெமியோ குரூஸ் என்பவன் கதைத்தலைவன். 71 வயதாகும் அவன் மரணப் படுக்கையில் கிடக்கிறான். அவன் நினைவுகளில் இருபதாம் நூற்றாண்டு மெக்சிகோ சித்திரமாகிறது. மெக்சிகோ புரட்சியில் பங்கெடுத்த ஒரு சிப்பாய் அவன். அப்புரட்சி நிலச்சீர்திருத்தம், நில மறுபங்கீடு பற்றியது. ஏராளமாக நிலத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களிடமிருந்து நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்குத் தருவது. 1920களில் அப்புரட்சி வெற்றியடைந்தாலும் தொடர்ந்து 1942 வரை சண்டைகள் நடக்கின்றன. புரட்சி கீழ்த்தர குழுச்சண்டைகளாக மாறிப் போகிறது.

புரட்சி நிறைவுற்ற பின்னர் பணத்தைக் குவிப்பது ஒன்றே குரூஸின் வாழ்க்கையாகிறது. எவ்வளவு ஊழல்மிக்க எந்தத் தீயவழியாக இருந்தாலும் தனது இலக்கினை அடைவதற்குக் கையாளுகிறான் குரூஸ்.

கதையின் பிற்பகுதியில் குரூஸ், ஒரு பண்ணை அடிமைப் பெண்ணுக்குத் தகாத வழியில் பிறந்தவன் என்பது தெரியவருகிறது. குரூஸ் பிறந்தவுடனே அவன் தாய் அடித்துத் துரத்தப்படுவதால், அவனை அவனது மாமன் லூனரோ வளர்க்கிறான். லூனரோ இறந்த பிறகு புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்கிறான் இளைஞனான குரூஸ். பின்னர் விவசாயிகளுக்குத் தேவையான நிலம் கிடைக்கிறது. ரெஜினா என்ற பெண்மீது காதல் கொள்கிறான். ஆனால் அவள் தூக்கிலிடப்படுகிறாள்.

ஒரு குழுவில் போரிடும்போது குரூஸ் கான்சாலோ பெர்னால் என்ற இளம் அதிகாரியுடன் சிறைப்படுகிறான். அவனிடமிருந்து அவன் வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை எல்லாம் அறிகிறான். பெர்னால் மரண தண்டனை அடைகிறான். குரூஸ் மன்னிக்கப் படுகிறான். பெர்னாலைக் காப்பாற்ற இவன் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

தன்னுடன் சிறையிலிருந்த பெர்னாலை ஏமாற்றி அவனிடமிருந்து பெற்ற தகவல்களை வைத்து அவன் சகோதரியை பிளாக்மெயில் செய்து திருமணம் செய்து கொள்வது குரூஸுக்குத் தவறாகத் தெரியவில்லை. காதலற்ற திருமணமாக இருந்தாலும், கேடலினா பெரிய நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதாலும் இத்திருமணத்தில் ஈடுபடுகிறான். கேடலினாவின் தந்தை டான் பெர்னால் இறக்கும்போது அவனுக்கு எல்லாச் சொத்தும் (பெரும்பாலும் அது நிலமாக இருக்கிறது) வந்து சேர்கிறது.. புரட்சிப் போராட்டத்தில் எப்படிப்பட்ட சுயநலவாத, பழிக்கு அஞ்சாத பணக்காரர்களை  எதிர்த்துப் போராடினானோ அதேபோன்ற ஒருவனாக இவனே இப்போது மாறிவிடுகிறான்.

குடும்பத்தின் சொத்துகளைத் தனது பதவி, ஏமாற்றுகள், ஊழல்களால் அதிகரிக்கிறான். பிறகு மெக்சிகோவின் செய்தித்தாள் ஒன்றை வாங்கி, அதன் வாயிலாகத் தன் அதிகாரத்தை நிறுவுகிறான். அவனுடன் ஒத்துழைக்காத அரசியல் நபர்களின் கெளரவத்தைக் கெடுத்து அவர்கள் தொழில்களைப் பாழடிக்கிறான். இயற்கை வளங்களை அமெரிக்காவுக்கு விற்கும் ஊழல் தொழிலதிபர்களுக்குக் கருவியாக இருக்கிறான்.

அவனது மகன் லாரன்ஸோ. அவன்மீது அவன் தாய் கேடலினா பாசமாக இருக்கிறாள். அவனுக்கு 12 வயதாகும்போதே தாயிடமிருந்து பிரித்து கோகுயா என்ற இடத்திலுள்ள குடும்ப நிலத்தை மேற்பார்வை செய்ய மகனை அனுப்புகிறான். 17 வயது ஆகும்போது தனது இயல்பான லட்சிய சுபாவத்தின்படி அவன் பாசிசவாதிகளை எதிர்க்க ஸ்பெயினுக்குச் செல்கிறான். அங்கு போரில் அவன் கொல்லப்படுகிறான். குரூஸுக்கு தெரஸா என்ற மகள் மட்டுமே எஞ்சுகிறாள். மரணப்படுக்கையிலும் தன் உயிலின் இருப்பிடத்தைப் பற்றித் தவறான தகவல்களை மனைவிக்குத் தருகிறான். காரணம், தன் மகளால் பயனில்லை என்று தன் பெரும்பாலான சொத்துகளை அவனது காரியதரிசி பாடிலாவுக்கு அளித்திருக்கிறான்.

செயல்களுக்கு மனிதர்களைத் தூண்டுகின்ற இலட்சியவாதத்தின் சக்தி போகப்போக மங்குவதைப் பற்றி இந்த நாவல் சொல்கிறது. அந்த ஒளியில் மெக்சிகோ புரட்சியின் வரலாற்றை வைத்துப் பார்க்கிறது. இலட்சியவாத மதிப்புகளை இளமையில் கொண்டிருந்த குரூஸ், தனிப்பட்ட ஆதாயத்துக்காக எதையும் செய்யும் ஒரு தீய முதியவனாக மாறுகிறான். மரணப் படுக்கையில் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, அவன் “சாதனைகள்” யாவும் பயனற்றவை என்ற உண்மைக்கு அவன் கண்கள் திறக்கின்றன. அவனது வாழ்க்கைக்கு அர்த்தமளித்தவை என்று அவன் நினைத்த அதிகாரம், ஆதிக்கம், பணம், பெண்கள் யாவும் இறுதியில் அவன் ஆன்மாவைக் களங்கப்படுத்தவே உதவியிருக்கின்றன.

அவன் வாழ்க்கை முழுவதுமே மரணப்படுக்கையில் அவன் கண் முன்னால் வந்து போவதாகக் கதை அமைகிறது. பலவேறு நடைகளைக் கலந்து ஃபுவெண்டஸ் கையாளுகிறார். தன்மைக் கூற்றாகவும், படர்க்கைக் கூற்றாகவும் பல பகுதிகள் மாறி மாறி அமைகின்றன. அவை திரும்பத்திரும்ப நனவோடையாக மாறுகின்றன. அவனது சிதைந்த ஞாபகங்கள் வாயிலாக ஒரு தனிமனிதனின் சிதைவை மட்டும் ஃபுவெண்டஸ் காட்டவில்லை, ஒரு புரட்சிக்காரனின் இலட்சியங்கள் சிதைவதைக் காட்டுகிறார், ஒரு தேசத்தின் இலட்சியக் கனவுகள் கருமையடைவதைக் காட்டுகிறார்.
ஒன்றிய அரசு முதலாக நம் நாடு நெடுகிலும் பல்வேறு மாநிலங்களிலும் நிறைந்திருக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நல்ல பாடமாக அமையக் கூடிய நாவல் இது. தங்கள் தனிப்பட்ட செயல்கள் என்று அவர்கள் நினைப்பவை உண்மையில் நம் நாட்டின் சமூக வரலாறும்தான். மரணப் படுக்கை வரை செல்லாமல் சற்று வழியிலேயே தங்கள் உண்மையான சாதனை என்ன என்பதை அவர்கள் நிதானமாக நினைத்துப் பார்த்தால் தங்கள் இருப்பின் அர்த்தத்தை அவர்கள் உணர முடியும்.


மால்கம் எக்ஸின் சுயசரிதை

சென்ற வாரம் அம்பேத்கரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் சில பகுதிகளை பீமாயணம் என்ற நூல் வாயிலாகப் பார்த்தோம். இவ்வாரம் கருப்பினப் போராளியான மால்கம் எக்ஸ் என்பவரின் வாழ்க்கை பற்றி அவரது சுயசரிதை வாயிலாகக் காணலாம். அது The Autobiography of Malcolm X என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

மால்கம் எக்ஸ் (மே 19, 1925 – பிப்ரவரி 21, 1965) ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்க முஸ்லிம் மறை பரப்புனரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுத்தவர். வெள்ளை அமெரிக்காவை கருப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காகக் கடுமையான சொற்களால் சாடியவர். ஆனால் அவரது எதிர்ப்பாளர்கள் நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவர் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்கள். ஆயினும் அவர் செல்வாக்கு மிக்க ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

இந்தத் தன்வரலாற்று நூல், மால்கம் எக்ஸின் கோபம், போராட்டம், நம்பிக்கைகளை மட்டுமல்லாமல், 1960களில் வாழ்ந்த பெரும்பான்மை ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் படைப்பு, இந்தத் தலைவர் மால்கம் லிட்டில் என்ற குழந்தையாக ஒமாஹா, நெப்ராஸ்காவில் 1925இல் பிறந்ததிலிருந்து 1965இல் நியூயார்க்கில் அவர் கொல்லப்பட்டது வரை அவர் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. முழு சமூகச் சமத்துவத்தை அமெரிக்காவின் ஆப்பிரிக்க இனத்தவர்கள் அடையவேண்டுமானால் புரட்சி ஒன்றுதான் வழி என்பதை வலியுறுத்த மிகக் கோபமான நடையை அவர் கையாளுகிறார்.

தனது நம்பிக்கைகளின் பின்னணியாக அவர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த, தான் இழிவுபடுத்தப்பட்ட சம்பவங்களை அவர் தொடர்புறுத்துகிறார். அவரது தந்தை மார்க்கஸ் கிரேவி என்பவரின் பிரிவினை வாதத் தத்துவத்தில் ஈடுபட்டவர். அவரது சூடான பிரச்சாரத்தினால், மால்கமும் அவரது ஏழு உடன்பிறந்தோரும் நிறைய பயமுறுத்தல்ளைச் சந்திக்கவும்  சகிக்கவும் வேண்டி வந்தது.

இந்தப் படைப்பு இதன் ஆசிரியரின் வாழ்க்கையைக் காலவரிசைப்படி காட்டுவது மட்டுமல்லாமல், நாற்பதாண்டுக் காலமாக அமெரிக்காவில் வாழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மாறிவந்த பங்களிப்புகள், அவர்களிடையே வளர்ந்து வந்த சமூக-அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றைப் பற்றிய சமூகவியல் ஆய்வாகவும் அமைந்துள்ளது.

முக்கியமாக அன்றிருந்த, வெள்ளையர்கள் பணிபுரிந்த கருப்பர்களின் நலவாழ்வுத் திடடத்தை மிகுந்த கசப்புடன் அவர் சாடுகிறார்.

அவர் தந்தை நிறவெறியர்களால் கொல்லப்பட்டார். அவர் தாய் எட்டுக் குழந்தைகளைப் பராமரிக்க மிகுந்த கஷ்டப்பட்டு உழைக்கவேண்டி யிருந்தது. ஆயினும் நலவாழ்வுத் திட்டம் என்ற பெயரால் எட்டுக் குழந்தைகளையும் அநாதை விடுதியில் பணியாளர்கள் விட்டனர். அதனால் அவர்கள் தாய் மனமுடைந்து போனார். அவரை அவர்கள் மிச்சிகன் மாகாண கலமாஜூ என்ற ஊரில் ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவங்கள் ஆசிரியரின் மனத்தில் நிலையாக நின்றுவிட்டன. இருப்பினும் சிறுவயதில் அவர் தன்னைப் போன்ற பல கருப்பினத்தவர்கள் செய்தது போல, வெள்ளைச் சமூகம் தன்னிடம் எதிர்பார்த்த பங்கினை நிறைவேற்றி, ஒரு நல்ல நீக்ரோவாக வாழவே முயற்சி செய்தார். அதற்காகத் தனது முடியைச் சுருள் அமைப்பிலிருந்து நேராக்கியும், ஜூட் சூட் எனப்படும் ஆடையணிந்தும், தன்னை அவர்கள் மூளைச் சலவை செய்ய விட்டார்.

ஆனால் காலம் செல்லச்செல்ல, அவர் சட்டத்துக்குப் புறம்பான பல செயல்களில் ஈடுபட்டார். ‘மாமா’ வேலை செய்தல், போதை மருந்துகள் விற்றல், கொள்ளையடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். ஆனால் கைது செய்யப்பட்டபோது, அவர் ஒரு வெள்ளைப் பெண்மணியுடன் தொடர்பிலிருந்தார் என்று கூறி அவருக்குப் பிறரை விட மிக அதிகமான ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டது.

21 வயதான போது ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தார். அப்போது சிறையிலேயே அவருக்கு நேஷன் ஆஃப் இஸ்லாம் (இஸ்லாமிய தேசிய இயக்கம்) என்பதன் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவர் கருப்பின-முஸ்லிம் மதத்தின் உறுப்பினரானார். விடுதலைக்குப் பிறகு, தனது மால்கம் லிட்டில் என்ற பெயரின் லிட்டில் என்ற சொல்லை விடுத்து, எக்ஸ் என்பதைச் சேர்த்துக் கொண்டார். (கணிதத்தில் எக்ஸ் என்பது அறியாத எண்/நிலை ஒன்றைக் குறிப்பதாகும்.)

தன் வரலாற்றின் இரண்டாம் பாதி கருப்பின முஸ்லிம்களின் கொள்கைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களை எடுத்துக் காட்டுகிறது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவின் பல இடங்களிலும் அடிக்கடி கல்லூரி வளாகங்களிலும் உரைநிகழ்த்தி, புதிதாக இளைஞர்கள் பலபேரை மதமாற்றமும் செய்தார்.

1964 மார்ச் அளவில், இஸ்லாமிய தேசிய இன அமைப்பின் மீதும், அதன் தலைவா் எலையா முஹமது மீதும் மால்கம் எக்ஸுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவா்களோடு இருந்து தன் நேரம் விரயமானதாக அவா் நினைத்தார், அதற்காக வருந்தி பின்னா் சன்னி மதப்பிரிவில் இணைந்தார். ஆப்ரிக்காவிலும். மத்திய கிழக்கிலும் பயணம் மேற்கொண்டு ஹஜ் பயணமும் செய்தார். தன் பெயரையும் அல்ஹஜ் மாலிக் அல் சபாஸ் என மாற்றிக்கொண்டார்.

இஸ்லாமிய தேசிய இயக்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தவாறே இருந்தன. தான் அடியோடு கைவிடப்பட்டதாக உணர்ந்தார்.

இறுதி இயல்கள் மூன்றும், மால்கம் எக்ஸ் ஏன் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை விட்டு நீங்கினார் என்பதையும் நிறவெறியை நிராகரித்து முஸ்லிம் மசூதி என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பு பின்னர் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பு எனப்பட்டது. தீவிர கருப்பின தேசியவாதம் என்பது அதன் கொள்கை. தனக்கு வந்த பலவேறு கொலை மிரட்டல்கள் நேஷன் ஆஃப் இஸ்லாமிலிருந்தே வருகின்றன என்பதை அவர் உணர்ந்தார்.

பின்னுரையில் அலெக்ஸ் ஹேலி என்ற அவரது நண்பர் மால்கம் எக்ஸ் நிச்சயமாகக் கொல்லப்படுவார் என்பதை உணர்ந்ததாகவும், கருப்பினச் சகோதரத்துவக்கான தியாகியாக அவர் ஆவார் என்று கருதியதாகவும் குறிப்பிடுகிறார்.

1965 பிப்ரவரி 21 அன்று. அவா் இஸ்லாமிய தேசிய அமைப்பைச் சார்ந்த மூன்று உறுப்பினா்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை எழுதும் ஹேலி, இந்த சுயசரிதையை எழுதியதில் மால்கம் எக்ஸின் நம்பிக்கை சமூகச் செயல்பாட்டினைத் தூண்டுவதாக இந்த நூல் அமையும் என்று குறிப்பிடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பலரும் மால்கம் எக்ஸ் பற்றிப் பேசினார்கள். இப்போது அவ்வளவாக இல்லை. மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் 1992இல் வெளியானது.

தமிழக எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.இரவிக்குமார் மால்கம் எக்ஸ் எனும் நூலைப் பதிப்பித்துள்ளார்.