சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்

2022 புத்தாண்டை மகிழ்ச்சியான சிறுவர் கதை ஒன்றுடன் தொடங்குவோம். கள்ளமற்ற சிறார்களைக் கொண்டாடுவதும், கிறித்துவின் தியாகவடிவமாக ஒரு பெருஞ்சிங்கத்தைப் படைத்திருப்பதும் ஆகிய கதை ஒன்றைக் காண்போம்.

“நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) என்பது சி. எஸ். லூயிஸ் (1898 – 1963) என்ற பேராசிரியரால் எழுதப்பட்டு சிறார்கள் (சிறுவர் சிறுமியர்) இடையிலே) புகழ்பெற்றது. ஏழு கதைகள் கொண்ட தொடர் இது. அதில் முதல் கதை ‘சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்’. இது 1950இல் வெளியாயிற்று.

இந்தக் கதை 2005இல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. புகழ்பெற்ற அதன் மொழிமாற்ற வடிவத்தைத் தமிழ்ச் சிறார்களும் கண்டு களித்திருப்பார்கள். தமிழ்த் தொலைக்காட்சிகளில் அடிக்கடி திரையிடப்படும் படம் இது.

கதை 1940இல் நிகழ்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூசி என்ற நான்கு சிறார்களும் உலகப் போரின் காரணமாக லண்டனிலிருந்து வெளியேற்றப் பட்டு பேராசிரியர் டிகோரி கிர்க்கே என்பவருடன் ஒரு கிராமப்புற வீட்டில் தங்கியிருக்குமாறு அனுப்பப் படுகிறார்கள். பாவம், அவர்களுக்குத் தாங்கள் ஒரு மாய உலகிற்குள் பயணிக்கப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.

அந்த இருண்ட வீட்டைச் சுற்றி ஆராயும்போது லூசி ஒரு பெரிய ஆடையலமாரியைக் கண்டு அதற்குள் புகுந்தவள், அப்படியே நார்னியா என்ற மாய உலகிற்குள் சென்றுவிடுகிறாள். அங்கு மிருகங்கள் பேசுகின்றன. டம்னஸ் என்ற ஆட்டுமனிதனைச் சந்திக்கிறாள். தான் வெள்ளை விட்சின் (சூனியக்காரியின்) பணியாள் என்றும் லூசியை அவளிடம் அறிமுகப்படுத்த இருந்ததாகவும் டம்னஸ் சொல்கிறான். அந்தமாயயக்காரி, நார்னியா நாட்டின் அரசியாக வேடமிட்டு, அதைக் கிறிஸ்துமஸ் அற்ற நிரந்தரப் பனிக்காலத்தில் ஆழ்த்தியிருக்கிறாள்.

டம்னஸ் மனம் வருந்தி லூசியைத் திரும்பவும் அவள் வீட்டுக்கே அனுப்பிவிடுகிறான். மற்ற மூவரும் இவள் கதையை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் எட்மண்ட் ஆடையலமாரிக்குள் புகுந்து நார்னியாவில் வேறொரு இடத்துக்குச் சென்று விடுகிறான். வெள்ளை மாயக்காரியைச் சந்திக்கிறான். அவள் எட்மண்டுக்கு ஒரு கேக்கைக் கொடுத்து குஷிப்படுத்தி அவனது மற்ற உடன்பிறப்புகளைக் கொண்டுவந்தால் அவனை இளவரசன் ஆக்குவதாகச் சொல்கிறாள். எட்மண்டும் லூசியும் வீட்டுக்குத் திரும்புகின்றனர்.

சிலநாள் கழித்து நான்கு பேருமே நார்னியாவுக்குச் செல்கின்றனர். சதி செய்ததற்காக டம்னஸ் கைது செய்யப்பட்டுவிட்டான். நான்குபேரும் பீவர் தம்பதிகளுடன் நட்புக் கொள்கிறார்கள். “ஆதாமின் மகன்கள் இருவரும் ஏவாளின் மகள்கள் இருவரும் பாரவல் கோட்டையின் சிம்மாசனங்களில் அமரும்போது வெள்ளை மாயக்காரியின் ஆட்சி முடியும் என்றும் நார்னியாவின் உண்மையான அரசனாகிய அஸ்லான் என்னும் சிங்கம் கல்மேஜைக்குத் திரும்பும்போது இது நிகழும் என்றும் பீவர் தம்பதியர், சொல்கிறார்கள்.

எட்மண்ட் தனியே வெள்ளை மாயக்காரியின் அரண்மனைக்குச் சென்று அவள் பகைவர்கள் அனைவரும் கற்சிலைகளாக மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறான். அவனிடமிருந்து சிங்கம் திரும்பவரப் போகிறது என்று அறிந்த மாயக்காரி, கல்மேஜையை நோக்கிப் படையெடுக்கிறாள். பிற சிறார்களையும் பீவர் ஜோடியையும் கொல்ல உத்திரவிடுகிறாள். ஆனால் அவர்கள் தப்பி கல்மேஜையை நோக்கிச் செல்கின்றனர். வழியில் பனி உருகுவதை நம்பிக்கைச் சின்னமாகக் கொள்கின்றனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தாவும் தோன்றிப் பரிசுகளும் ஆயுதங்களும் வழங்கி நம்பிக்கை அளித்துச் செல்கிறார்.

அதற்குள் மாயக்காரியின் சேனைத்தலைவனாகிய மோக்ரிம் என்ற ஓநாய் சேனையுடன் வந்துவிடுகிறது. அதைப் பீட்டர் கொல்கிறான். மாயக்காரி தோன்றி, “காலவிடியலின் ஆழ்ந்த மாயத்தால்” எட்மண்டைக் கொல்வதாகச் சொல்கிறாள். அஸ்லான் மாயக்காரியிடம் தனியாகப் பேசி எட்மண்டைக் காப்பாற்றுகிறது. அனைவரும் தங்கள் படைவீட்டுக்குச் செல்கிறார்கள்.

அஸ்லானைப் பின்தொடரும் சூசனும் லூசியும் அது மாயக்காரியால் எட்மண்டுக்கு பதிலாகக் கொலைசெய்யப்படுவதைக் காண்கின்றனர். ஆனால் அடுத்தநாள் காலை, “காலவிடியலின் மிகஆழ்ந்த மாயத்தால்” உயிர் பெறுகிறது அஸ்லான். அது அனைவரையும் மாயக்காரியின் அரண்மனைக்குக் கொண்டுசென்று, அங்கு கல்லாகியிருந்தவர்களையும் உயிர்பெறச் செய்கிறது. அவர்கள் அனைவரும் அஸ்லானின் சேனையில் சேர்கிறார்கள். போரில் அஸ்லான் மாயக்காரியைக் கொல்கிறது. நான்கு சிறார்களும் நார்னியாவின் ராஜா-ராணிகளாக பாரவல் கோட்டையில் முடிசூடுகிறார்கள்.

காலம் பறக்கிறது. இப்போது நான்கு சிறார்களும் இளைஞராகி விட்டனர். தன்னைப் பிடிப்பவர்களுக்கு வேண்டிய வரம் கொடுக்கும் வெள்ளைக் கலைமானைத் தேடி அவர்கள் ஒருநாள் நார்னியாவின் எல்லைக்குச் சென்று விடுகின்றனர். தாங்கள் வந்த ஆடையலமாரியை அவர்கள் மறந்து விட்டனர். இப்போது அதன்வழியே விருப்பமே இன்றி நுழைந்து தங்கள் பழைய வீட்டுக்குத் திரும்புகிறார்கள். ஆ! அவர்கள் இப்போது மீண்டும் பழையபடியே சிறார்களாக மாறிவிட்டனர்! இந்த உலகில் கால மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தங்கள் கதையைக் கிர்க்கேயிடம் சொல்கின்றனர். அவர் “எதிர்பாராத ஓர் நாளில் நீங்கள் மீண்டும் நார்னியாவுக்குச் செல்வீர்கள்” என ஆசி வழங்குகிறார்.

இது ஒரு தொடர் உருவகக் கதை. கொல்லப் பட்டு, உயிர்த்தெழுகின்ற அஸ்லான் என்ற சிங்கம் கிறித்துவின் வடிவம். இதுபோல் பிற பாத்திரங்களும் உருவகங்களே.

நார்னியா கதைகள் அனைத்தும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. மேலும் தொலைக்காட்சித் தொடர், நாடகம், கணினி விளையாட்டு, வானொலி போன்ற அனைத்து ஊடகங்களும் இக்கதையைப் பயன்படுத்தி யுள்ளன. மாயக் கதை உருவாக்கத்தில் டோல்கியனுக்கு இணையாகப் பேசப்படும் ஆசிரியர் சி.எஸ். லூயிஸ்.

இலக்கியம்