மோரூவின் தீவு

எச்.ஜி. வெல்ஸ் என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படைப்பாளரின் நாவல் இது. அறிவியல் எந்த எல்லைவரை செல்லும், எதுவரை எப்படி அதைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய கேள்விகளைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும் நாவல் இது. பொதுவாக எச். ஜி. வெல்ஸின் நாவல்கள் அனைத்துமே இத்தன்மையைக் கொண்டவைதான். 

எட்வர்ட் பிரெண்டிக் என்ற உயிரியலாளன் கப்பல் உடைந்து கடலில் சில நாட்களாகத் தத்தளித்தபோது, மற்றொரு சிறு கப்பலில் வந்த டாக்டர் மாண்ட்கோமரி என்பவர் அவனைக் காப்பாற்றுகிறார். தானும் அந்தக் கப்பலில் வரும் கூண்டிலடைக்கப்பட்ட மிருகங்களும் ஒரு பெயர் தெரியாத தீவுக்குச் செல்வதாகச் சொல்கிறார். ஆனால் அந்தத் தீவை அடைந்தபோது டாக்டர் அவனைத் தீவுக்குள் உடனழைத்துச் செல்வதாக இல்லை. ஆயினும் கேப்டன் அவனைக் கடலில் பிடித்துத் தள்ளிய பிறகு வேறு வழியின்றி மாண்ட்கோமரி, அவனை அழைத்துச் சென்று, அந்தத் தீவிலிருக்கும் டாக்டர் மோரூ-வை அறிமுகப்படுத்துகிறார். பிரெண்டிக்கை ஒரு வீட்டின் முன்னிடத்தில் தங்க வைக்கின்றனர்.

தீவைச் சுற்றி வரும்போது, பிரெண்டிக் விலங்குத்தன்மையும் மனிதத் தன்மையும் கலந்திருக்கும் பல விசித்திரப் பிராணிகளைக் காண்கிறான். வீட்டுக்கு வந்து மாண்ட்கோமரியை விளக்கம் கேட்டபோது அவர் தவிர்த்து விடுகிறார்.

மறுநாள் மோரூ ப்யூமா என்ற விலங்கை ஆய்வுக்குக் கொண்டு செல்கிறார். அதன் வலிநிறைந்த கதறல்கள் பிரெண்டிக்கைக் காட்டுக்குள் ஓட வைக்கின்றன. அங்கும் பாதி மனிதன்-பாதி மிருகமாகக் காணப்படுபவர்கள் அவனைத் துரத்த, ஓடிவந்து தூங்கிவிடுகிறான். மறுநாள் எழுந்து கதவைத் திறந்து பார்த்தபோது மோரூவின் மேஜையில் மனிதவிலங்காக இருக்கும் ஓர் உருவத்தைக் காண்கிறான். மனிதர்களை வைத்து மோரூ ஆய்வு செய்கிறார் என்றும் அடுத்தபடி தன்னைத்தான் மோரூ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் போகிறார் என்றும் நினைத்து பயந்து காட்டுக்குள் ஓடுகிறான். அங்கும் ஒரு குரங்குமனிதனையும் அவனைப் போன்ற விலங்கு மனிதர்கள் பலரையும் காண்கிறான். அந்த விலங்குமனிதர்கள் மந்திரம் போன்ற பாடலைப் பாடி ஒவ்வொரு பல்லவிக்கும் இறுதியில் “நாங்கள் மனிதர்கள் இல்லையா?” என்றும் மோரூவைப் பாராட்டியும் முடிக்கின்றன. பிரெண்டிக்கையும் அவை தங்களுக்குள் ஒருவனாகக் கருதுவதுபோலத் தோன்றுகிறது.

திடீரென்று மோரூ அங்கே வரவும், பிரெண்டிக் பயந்து கடலுக்குள் குதிக்கச் செல்கிறான். ஆனால் மாண்ட்கோமரியும் மோரூவும் குறுக்கிடுகின்றனர். தான் மனிதர்களை ஆய்வு செய்வதில்லை என்றும் விலங்குகளை மட்டுமே மனிதர்களாக மாற்றும் ஆய்வைப் பதினொரு ஆண்டுகளாகச் செய்துவருவதாகவும் மோரூ சொல்கிறார். ஆனால் அவர் இன்னும் முழுவதுமாகத் தன் பணியில் வெற்றி பெறவில்லை.

மாண்ட்கோமரி, ஒரு குடிகாரர். அன்பாக இருப்பினும், அவர் மனித சமூகத்துக்கு ஒவ்வாதவராகவும், மோரூவின் உதவியாளாக இருப்பதற்குப் பொருத்தமானவராகவும் தோன்றுகிறார்.

ஒருநாள் மாண்ட்கோமரியும் பிரெண்டிக்கும் காட்டுக்குள் செல்லும்போது பாதி உண்ணப்பட்ட ஒரு முயலைக் காண்கின்றனர். மாமிசம் உண்பது அந்தத் தீவில் தடை செய்யப்பட்ட ஒன்று. மோரூ ஒரு சிறுத்தை மனிதன்தான் அவ்வாறு செய்தது என்பதைக் கண்டுபிடிக்கிறார். தண்டனை, மீண்டும் மோரூவின் ஆய்வுமேஜைக்குச் செல்வதுதான். (அதை வலிவீடு என்று விலங்குமனிதர்கள் சொல்கின்றனர்.)

ஆனால் மோரூ ஆய்வுக்கு உட்படுத்த முடியாதமாதிரி, பிரெண்டிக் மனமிரங்கி, அதைக் கொன்றுவிடுகிறான். இன்னும் விலங்குகள் போலவே நடந்துகொள்ளும் அரைவிலங்குகள் அங்கு வேறுசிலவும் இருக்கின்றன.  

ஆறுவாரங்கள் கழித்து, ஆய்வுக்கு வந்த ப்யூமா தப்பிவிடுகிறது. அதைத் தொடர்ந்து செல்லும் மோரூவையும் கொன்றுவிடுகிறது. அதனால் விலங்கு மனிதர்களுக்கு மோரூவின் சக்தியில் சந்தேகம் உண்டாகிறது.

மது அருந்தித் தப்பிச்செல்லும் மாண்ட்கோமரி, விலங்கு மனிதர்களுடன் அமர்ந்து மதுவைப் பகிர்ந்துகொள்கிறார். பிரெண்டிக் தடுத்தும் அவ்வாறு பகிர்ந்துகொள்ளும்போது ஏற்படும் சண்டையில் இறந்துபோகிறார்.      

இப்போது தீவிலுள்ள ஒரே மனிதன் பிரெண்டிக் மட்டுமே. ஏறத்தாழ பத்து மாதங்கள் அவன் அத்தீவில் தனியாக இருக்க நேரிடுகிறது. வேறு வழியின்றி விலங்குமனிதர்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக வாழ நேரிடுகிறது. ஆனால் அதேசமயத்தில் அக்கூட்டத்தின் ஒழுங்கும் அமைப்பும் சிதைந்து விலங்கு மனிதர்கள் பழையபடியே விலங்குகளாக மாறத் தொடங்குகிறார்கள். நாய் மனிதன் அவனுக்கு உற்ற துணைவனாக இருக்கிறான், ஆனால், கழுதைப்புலிப் பன்றியால் கொல்லப்படுகிறான். அதை பிரெண்டிக் தன் துப்பாக்கியால் கொல்கிறான்.

அவன் ஒரு தெப்பத்தைக் கட்டி மோரூவின் தீவிலிருந்து தப்பிச் செல்ல நினைக்கிறான். ஆனால் தான் ஒரு தச்சன் அல்ல, தெப்பம் கட்ட தன்னால் முடியாது என்று உணர்கிறான். ஆனால் தக்க தருணம் வாய்க்கிறது. இரண்டு மனிதர்கள் போரிட்டு இறந்த ஒரு சிறுபடகு அத்தீவின் கரையில் ஒதுங்குகிறது. அதில் தப்பிச் செல்கிறான், மூன்று நாள் கழித்து ஒரு கப்பலினால் காப்பாற்றப் படுகிறான். அதில் தன் அனுபவங்களைக் கூறும்போது கப்பலில் உள்ளவர்கள் அவனைப் பைத்தியம் என்று நினைக்கின்றனர். அதிலிருந்து மீள்வதற்காக, கடலில் நினைவிழந்தவன் போல பிரெண்டிக் நடிக்கிறான். இறுதியாக மோரூவின் தீவுக்குச் சென்றதிலிருந்து ஓராண்டு கழித்து இங்கிலாந்தை அடைகிறான், ஆனால் மற்ற நாகரிகமடைந்த மனிதர்களுடனும் இயல்பாக அவனால் இருக்க முடியவில்லை. அவர்கள் யாவரும் விலங்குநிலைக்குத் திரும்பி விடக்கூடய பாதி-விலங்கு மனிதர்கள் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆகவே தனிமையில் இருந்து கொண்டு வேதியியல், வானியல் ஆகிய துறைகளில் ஆய்வில் ஈடுபட்டவாறு அமைதியாகத் தன் காலத்தைக் கழிக்கிறான்.  

எச். ஜி. வெல்ஸ் (1866-1946) மிகச் சிறந்த ஆங்கில எழுத்தாளர். அறிவியல் புதினத்தின் தந்தை என்று புகழப்படுபவர். நாவல்கள் மட்டுமின்றி வேறுபல துறைகளிலும் எழுதியவர். கண்ணுக்குப் புலப்படாத மனிதன், டாக்டர் மோரூவின் தீவு, கால யந்திரம், உலகங்களின் போர், டோனோ பங்கே எனப் பலப்பல நாவல்களை எழுதியவர். ஏறத்தாழ ஜூல்ஸ் வெர்னுடன் அறிவியல் நாவல்கள் எழுதியதிலும் முன்னோடித் தன்மையிலும் ஒப்பிடத் தகுந்தவர் என்றாலும், ஜூல்ஸ் வெர்னைவிட இவர் படைப்புகளில் மனித இனம் குறித்த அக்கறை சிறப்பாக அமைந்திருக்கிறது.

இலக்கியம்