என் கடவுள் கொள்கை

மதங்களும் ஆன்மிகவாதிகளும் சொல்வது போன்ற கடவுள் என்பது கிடையாது என்பதுதான் என் கடவுள் கொள்கை.

உலகில் இருப்பது பொருள்தான், அதுதான் சிந்தனை தோன்றுவதற்கு ஆதாரம். ஆகவே நான்  பொருள்முதல் வாதி. கடவுள் என்பது மனநோய் பிடித்தவர்களின் கற்பனை. Illusion. கடவுள் உண்டு என்று சொல்பவன் முட்டாள் என்று பெரியார் கூறினார். கடவுள் மனநோய் பிடித்தவர்களின் கற்பனை என்கிறேன் நான். உலகின் பெரும்பகுதி மக்கள் மனநோய் பிடித்தவர்கள் தான்.

ஹிஸ்டீரியா போன்ற இலேசான பிறழ்வுகளையும் நாம் மனநோய் என்றுதான் சொல்கிறோம். அந்த அர்த்தத்தில்தான் மனநோய் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். மனநோய் என்றால் உடனே பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்து அலைபவன் என்பது அல்ல பொருள்.

ஆனால், அதோ பார், மலைக்குமேல் மகரஜோதி ஆகாயத்தில் தெரிகிறது என்றால் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகொண்டு கும்பிடுகிறானே அவனுக்கும் பைத்தியத்துக்கும் வித்தியாசம் in degrees only. கொஞ்ச அளவில்தான். அதனால்தான் மதவெறி பிடித்தவர்கள் பிறரைக் கொல்லும் அளவுக்கும் செல்கிறார்கள், பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்கும் அளவுக்கும் செல்கிறார்கள். சிறுத்தொண்டன் யார்?    

பொருள் என்பதைவிட்டு சிந்திக்க முடியாது. கடவுள் என்பதற்கே, கடந்தும் உள்ளும் இருக்கின்ற “பொருள்” என்றுதானே “பொருள்” சொல்கிறார்கள்?

கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பதல்ல. கடவுகின்ற ஒன்று, கடவுள். நம்மை செலுத்துவது என்பது கடவுவது. நம்மை செலுத்துவது மனம். சிலசமயங்களில் புற நிகழ்வுகளும்தான் நம்மைச் செலுத்துகின்றன.. அதனால் கடவுள் என்பதை இன்னது என்று சொல்ல முடியாது.

உடனே மனம் என்றால் என்ன, எங்கிருந்து வந்தது என்று ஆரம்பித்து விடாதீர்கள். அதை இன்னொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம்.

கடவுள் இல்லை என்பதால் நான் இந்துவோ, கிறித்துவனோ, முஸ்லிமோ அல்ல. எல்லா மதங்களுமே மனநோய்கள் என்றால், இந்து மதம் என்பது வெறும்/பெரும் பைத்தியக்காரர்களின் உலகம். அதனால்தான் “எல்லா மக்களும் சமம் அல்ல, ஒருவன் பிரம்மனின் தலையில் பிறக்கிறான், மற்றொருவன் பாதத்தில் பிறக்கிறான் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். சாதிகள் உண்டு” என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை உலகில் ஒரே சாதிதான். அது இறப்பவர்களின் சாதி. இறக்காதவன் உலகில் எவனாவது இருந்தால் சொல்லுங்கள்.

உடனே பலர் அந்த சாமியார் இருந்தான், இந்தச் சித்தன் இருந்தான், அவர்கள் இறக்கவில்லை, வானத்தில் மிதக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் காட்டு என்றால் காட்ட மாட்டார்கள். நீ உன் மனத்துக்குள் பார் என்றெல்லாம் கப்சா விடுவார்கள். எல்லாருக்கும் ஒரே கதிதான், அது இறப்பு. சிலர் மனத்துக்குள் பார் என்றால் ஒரே ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்ந்து மரக்கட்டை போல் உட்கார்ந்திருப்பார்கள். (Self-hipnotism) அதற்குப் பெயர் தியானம் என்பார்கள்.

பிறப்பென்றால் என்ன, அது எப்படி நேர்ந்தது, இறப்பு என்றால் என்ன, அதற்குப் பின் என்ன என்றெல்லாம் நான் ஆராய்வதில்லை. நம்மால் ஆராய முடியாத விஷயங்கள் உலகத்தில் பல உள்ளன. இங்கிருந்து ஒரு 500 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் பொருளை–அப்படி ஒரு நட்சத்திர மண்டலம் இருக்கிறதென்றால்–காட்டு என்றால் காட்ட முடியுமா? பார் என்றால் பார்க்க முடியுமா? இவை எல்லாம் எப்படி புலன்களுக்கு புலப்படுவதில்லையோ அப்படித்தான் உலகில் பல விஷயங்களும். அதனால் புலப்படாத விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில்லை.

சரி, “உனக்கு புலப்படாவிட்டால் என்ன, எனக்கு புலப்படுகிறது” என்றால் வைத்துக்கொள். ஆனால் அதை நிரூபிக்க முடியாது. அது உன் மனக்காட்சி. Hallucination. அவ்வளவுதான். அதனால்தான் மனநோய் என்றேன். கஞ்சா அடித்துவிட்டு கடவுள் தோன்றுவதாகச் சொல்வது போலத்தான் அது. நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை.

கடவுள் இல்லை என்பதால், மதமும் இல்லை, சடங்குகளும் இல்லை, சாதியும் இல்லை, பண்டிகைகளும் இல்லை, திருவிழாக்களும் இல்லை. இவையெல்லாம் மக்கள் தங்கள் சந்தோஷத்துக்காகக் கொண்டாடும் பொது விஷயங்கள், கூடுகைகள்.

இன்றைக்கு அவ்வளவுதான், பார்ப்போமா? இது பற்றி இன்னும் நிறையப் பேச இருக்கிறேன்


உழைப்பாளர் தினம்!

எல்லா முதலாளிகளும் கையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினாலு மணி நேரம் (ஐடி தொழிலாளர்கள் உள்பட) வேலை வாங்கும்போது, எட்டு மணிநேர உழைப்பைக் கொண்டுவந்த தினம் என்று எல்லா மடத் தலைவன்களும் பாராட்டுகிறார்கள். போங்கடா நீங்களும் உங்கள் மே தினமும். பொய், பொய், எங்கும் கலப்படமற்ற பொய். அம்பானிகளிடமும் எலான் மஸ்குகளிடமும் உலகத்தை விற்றுவிட்டு உழைப்பாளர் தினம் பற்றிப் பேசக் கேவலமாக இல்லை?

என்னதான் தீர்வு? யோசியுங்கள் உழைக்கும் பெருமக்களே. முதலாளிகள் நீங்கள் யோசிக்க அவகாசம் தர மாட்டார்கள். இருந்தாலும் உண்ணும்போது, சிலவேளை ஓய்வுகளின் போதாவது உங்கள் நிலை பற்றி யோசியுங்கள்.

(இங்கு எட்டுமணி நேர உழைப்புக்குக் கூலி வாங்கி இரண்டுமணி நேர உழைப்பை அளிக்கவும் மேல்கூலி வாங்கும் அரசு கைக்கூலிகளைப் பற்றிப் பேசவில்லை!)


அழகிய தோட்டம்

ஒரு புகழ்பெற்ற கோயிலில் இருந்த தோட்டத்திற்குப் பொறுப்பாக ஒரு பூசாரி இருந்தார். பூக்கள், செடிகள், மரங்களையெல்லாம் அவர் நேசித்ததால் அவருக்கு அந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு அருகிலேயே இன்னொரு சிறிய கோயில். அங்கு வயதான மதபோதகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். 
ஒருநாள், பூசாரியைத் தேடிச் சில விருந்தினர் வருவதாக இருந்தது. அதனால் இன்னும் கவனத்துடன் தன் தோட்டத்தை அவர் அழகுசெய்தார். களைகளைப் பிடுங்கி எறிந்தார், செடிகளை வெட்டி ஒழுங்காக்கினார், பாசிகளையெல்லாம் நீவி விட்டார், மிக எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இலையுதிர்காலத்து உலர்ந்த இலைகளைத் தேடிச் சேகரித்து ஒதுக்கிவைத்தார். 
அவர் வேலைசெய்யும்போது, இரண்டு கோயில்களையும் பிரித்த குறுக்குச் சுவருக்கு அப்பாலிருந்து மதபோதகர் பார்த்துக்கொண்டேயிருந்தார். 
தன் வேலையை முடித்ததும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பூசாரி அழகு பார்த்தார். மதபோதகரைப் பார்த்து, "அழகாக இருக்கிறதா, தோட்டம்?" என்று கேட்டார். 
"ஆமாமாம், ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது. இந்தச் சுவரில் நான் ஏறிவர உதவுங்கள், சரிசெய்கிறேன்" என்றார் கிழவரான மதபோதகர்.
கொஞ்சம் தயங்கிவிட்டு, பூசாரி கிழவர் சுவரின்மீது ஏறிவர உதவினார். அவரை இறக்கிவிட்டார். 
மெதுவாக, தோட்டத்தின் நடுவிலிருந்த மரத்திடம் மதபோதகர் நடந்துசென்றார். அதன் நடுமரத்தைப் பற்றிக் குலுக்கினார். தோட்டம் முழுவதும் இலைகள் விழுந்தன. 
"இப்போது சரியாகிவிட்டது" என்றார் அந்தக் கிழவர். "என்னை அனுப்பி விடுங்கள்."

-ஜென் கதை.
கதையின் நீதி: மனிதன் உருவாக்கும் எதையும்விட இயற்கை மேலும் முழுமையானது. நமது பார்வையில் அதை அழகாக்குவது என்பது அதன் இயல்பான தன்மையைக் குலைத்து இயற்கையை அழகற்றுப்போகச் செய்வதாகும்.


வள்ளலார்

சிதம்பரம் இராமலிங்கம் என்று எளிமையாகத் தன்னை அழைத்துக் கொண்ட திருவருட்பிரகாச வள்ளலார் சித்தி பெற்று 148 ஆண்டுகள் ஆகின்றன. அவரது நினைவைப் போற்றும் வகையான் அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும், அவற்றிற்கு உறுதுணையான அவர் இயற்றிய பாடல்கள் சிலவற்றையும் காண்போம்.

வள்ளல் இராமலிங்க அடிகளார் ஒரு தலைசிறந்த ஞானி. இந்த உலகம் உய்வதற்காக சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியையும், அந்நெறி தழைக்க சமரச சன்மார்க்க சங்கம் என்கிற அமைப்பையும், அற்றார் அழிபசி தீர்க்க சத்திய தருமச்சாலை என்ற உணவுச்சாலையையும், மன இருளை அகற்றி நித்திய ஜோதியை நினைவில் இருத்த சத்திய ஞான சபை என்கின்ற அருள் நிலையத்தையும் சிதம்பரம் அருகிலுள்ள வடலூரில் அமைத்து, இம்மானுடம் மரணமிலாப் பெருவாழ்வு காண விழைந்த அவர் ‘திரு அருட்பா’ என்னும் ஞான நூலையும் அருளிச் சென்றுள்ளார்.

அவரது வாழ்க்கைக் குறிப்புகள்:
இயற்பெயர்: இராமலிங்கம்
தந்தை: இராமையா பிள்ளை
தாயார்: சின்னம்மாள்
சமயம்: சைவம்
குலம்: வேளாண்குலம்
மரபு: கருணீகர் மரபு
தோற்றம்: 5-10-1823
(சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள், 21-ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை, மாலை 5:30 மணியளவில்)
பிறப்பிடம்: மருதூர் (சிதம்பரம் அருகே)
உடன் பிறந்தோர்:
தமையன்கள்:
சபாபதி
பரசுராமன்
தமக்கைகள்:
உண்ணாமுலை
சுந்தரம்.
ஆசிரியர்கள்:
தமையனார் சபாபதி பிள்ளை
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
ஞானாசிரியர்: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இதை வள்ளலாரின் கீழ்வரும் பாடல்கள் கூறும்:

நாதா பொன்னம்பலத்தே
அறிவானந்த நாடகஞ் செய்
பாதா துரும்பினும் பற்றாத
என்னைப்பணி கொண்டெல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே
நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்தென்
நினைக்கேன் இந்த நீணிலத்தே!
(நான்காம் திருமுறை பாடல் 2775)
**
………..
கற்றது நின்னிடத்தே
பின் கேட்டது நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே
உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே
இன்புற்றது நின்னிடத்தே
பெரிய தவம் புரிந்தேன்
என் பெற்றி அதிசயமே!
(ஐந்தாம் திருமுறை பாடல் 3044)
**
ஏதுமறியாது இருளில் இருந்த
சிறியேனை எடுத்து விடுத்து
அறிவு சிறிது ஏய்ந்திடவும்
புரிந்து ஓதுமறை முதற்
கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந்து உணர்த்தி
அருள் உண்மை நிலை காட்டி….
(ஐந்தாம் திருமுறை பாடல் 3053)
**
…………..
ஓதி உணர்ந்தவர் எல்லாம்
எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம்
உருவுறச் செய் உணர்வே….
(ஆறாம் திருமுறை பாடல் 4112)
**
ஒன்றென இரண்டென
ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய
அருட் பெருஞ் ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி
அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்
பெரும் ஜோதி…!
(ஆறாம் திருமுறை பாடல் 4615 வரிகள் 21-24)
**
…………………
முன்னைப் பள்ளி பயிற்றாத
என்தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர்வித்து உடல்
பழுதெலாம் தவிர்த்தே
எனைப் பள்ளி எழுப்பிய
அருட்பெருஞ் சோதி
என்னப்பனே பள்ளி
எழுந்தருள்வாயே!
(ஆறாம் திருமுறை பாடல் 4891)
**
சோதி மலையில் கண்டேன்
நின்னைக் கண் களிக்கவே
துய்த்தேன் அமுதம் அகத்தும்
புறத்தும் பரிமளிக்கவே
ஓதி உணர்தற்கு அரிய
பெரிய உணர்வை நண்ணியே
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன்
நின் அருளை எண்ணியே!
(ஆறாம் திருமுறை பாடல் 5004)

ஞான வாழ்க்கை:
வள்ளலார் தமது பன்னிரண்டாம் வயதிலேயே
ஞான வாழ்க்கை வாழத்தலைப்பட்டார். கீழ்வரும் அவரது பாடல்களால் இதை அறியலாம்.

பன்னிரண்டாண்டு தொடங்கி நான்
இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது
அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுள்ளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும்
இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த
வண்ணமே வகுப்பதென் நினக்கே!
(ஆறாம் திருமுறை பாடல் 3535)
**
பன்னிரண்டாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை
நினைக்கில் மலையும் கரையுமே
துனியாது அந்தப்பாடு முழுதும்
சுகமது ஆயிற்றே
துரையே நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5041)
**
ஈராறாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை
நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு
முழுதும் இன்பமாயிற்றே
இறைவா நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5042)

திருமணம்:
1850-ல் உற்றார் மனம் நோகாது, தன்னுடைய தமக்கை உண்ணாமுலை அம்மையின் மகள் தனம்மாளை மணம் முடித்தாலும் அவர் இல்லறத்தை ஏற்கவில்லை. இதனையும் அவருடைய பாடல்களால் அறியலாம்:

முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன், மோகம் மேலின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பினேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்ததோறும் உள்
உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்
(ஆறாம் திருமுறை பாடல் 3452)
**
முன்னொரு பின்னும் நீ தரு மடவார்
முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்தரசு
உன் புணர்ப்பலால் என் புணர்ப்பலவே
என்னொடும் இருந்திங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவதென்னோ
சொன்னெடு வானத்து அரம்பையர் எனினும்
துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே!
(ஆறாம் திருமுறை பாடல் 3391)

வள்ளலாரின் மாணாக்கர்கள்:
தொழுவூர் வேலாயுத முதலியார்,இறுக்கம் இரத்தின முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர ஐயர், பண்டார ஆறுமுகம் அய்யா,
வீராசாமி முதலியார் ஆகியோர்

உறைவிட மாற்றம்:
சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் வாழ்ந்து வந்த வள்ளலார் ஆரவாரம் மிகுந்த அவ்விடத்தைத் தவிர்த்து 1857-ல்
சிதம்பரம் அருகேயுள்ள கருங்குழி என்னும் கிராமத்தில் மணியக்காரர் வேங்கட ரெட்டியார் இல்லத்தில் 1867 வரை வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் அவர் நாள்தோறும் சிதம்பரம்
சென்று வழிபடுவது வழக்கம்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்:

வள்ளல் இராமலிங்கம் கடவுள் ஒருவரே என்றும், அவரை அன்புடன் ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்றும், சிறு தெய்வ வழிபாடு கூடாது, உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வேண்டும், ஏழைகளின் பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா, இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது,
கருமாதி; திதி முதலிய சடங்குகள் தேவை இல்லை, போன்ற நெறிகளை வலியுறுத்திய
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

சத்திய தருமச்சாலை:

வள்ளல் பெருமானின் தலையாய கொள்கை
ஜீவகாருண்யம். புலால் மறுத்தலும், அற்றார் அழிபசி தீர்த்தலும் ஜீவகாருண்யத்தில் அடங்கும்.
எனவே அற்றார் அழிபசி தீர்க்கும் பொருட்டு, வடலூரில் சத்திய தருமச்சாலையை 1867-ல்
நிறுவினார். தமது உறைவிடமாக அதனையே ஏற்று
1870 வரை அங்கேயே உறைந்திருந்தார்.

சித்திவளாகம்: (மேட்டுக்குப்பம்)

தனிமையை நாடிய வள்ளலார் 1870-ல் வடலூருக்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்தில் வாழத் தொடங்கினார். தாம் உறைந்த அத்திருமாளிகைக்கு சித்திவளாகம் என்ற பெயரை அவரே இட்டார். அவர் சித்தி அடைந்த வளாகமும் அதுவே.

சத்திய ஞானசபை:
இறைவனை ஒளிவடிவில் கண்ட பெருமானார்
ஒளி வழிபாட்டிற்கென சத்திய ஞான சபை என்னும் வழிபாட்டு சபை ஒன்றை நிறுவ எண்ணினார்.
அன்பர்கள் உதவியுடன் வடலூரில் 1871-ல் பணிகள் தொடங்கப் பெற்று, 1872-ல் தைப்பூசம்
நன்னாளில் தொடங்கிய சத்தியஞான சபையில் தினமும் ஜோதி வழிபாடு நடைபெறுகின்றது.

சன்மார்க்கக் கொடி:
ஞானிகள் தம் கொள்கைளுக்காக கொடி ஏதும் கண்டதில்லை. வள்ளலார் ஒருவரே தமது மார்க்கத்திற்கு தனிக்கொடி கண்டவர். 1873-ல் தாம் உறைந்து வந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்
திருமாளிகையில் சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருரை ஒன்றையும் ஆற்றினார்.

சித்தி
ஶ்ரீமுக ஆண்டு தைத் திங்கள் 19-ஆம் நாள் 30-1-1874, வெள்ளிக்கிழமை இரவு 12 மணி.
சித்திவளாகத்தின் திருமாளிகையில் தமது அறைக்குள் நுழைந்து, கதவைத் திருக்காப்பு
இட்டுக்கொண்டு, இரண்டரை நாழிகையில்
இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி
பெற்றார். வள்ளலார் சுத்த தேகம், பிரணவ தேகம்,
ஞான தேகம், என்னும் மூவகை தேகசித்தியையும்
பெற்றவர். அத்தகைய தேகசித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது. இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி பெற்ற அவருக்கு மறுபிறவியும் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு காண அவர் காட்டிய வழி சுத்த சன்மார்க்கம் என்பதாம். அதை வள்ளலார் கூற்றாலேயே காண்போம்:

இறப்பொழிக்கும் சன்மார்க்கம்:

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச்
சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேது செய் மரணத்துக் கெது செய்வோம் என்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து
ஆடேடி..
(ஆறாம் திருமுறை பாடல் 4959)
**
உற்றமொழி உரைக்கின்றேன்
ஒருமையினால் உமக்கே
உற்றவன் அன்றிப் பகைவன்
என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும்
அழிந்திடக் காண்கின்றீர்
காரணம் எலாம் கலங்க வரும்
மரணமும் சம்மதமோ
சற்றும்இதைச் சம்மதியாது
என் மனந்தான் உமது
தன் மனம்தான் கன்மனமோ
வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம்
என்னொடும் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே!
(ஆறாம் திருமுறை பாடல் 5601)

திரு அருட்பா:
சென்னை கந்தகோட்டத்துள் வளர் முருகனையும், திருவொற்றியூர் ஈசனையும் சமயக் குரவர்களையும் சிதம்பரம் நடத்தரசையும், திருத்தங்களையும் தன்னுடைய ஞானத்தின் ஒளியை உலக மக்கள் உணரும் வண்ணம் சமரச சுத்த சன்மார்க்க நெறியமைந்த பாடல்களையும் பாடினார். எளிமையும் இனிமையும் கொண்ட அவரது அருட் பாக்களின் உருக்கம் கல்லும் கரைய வைக்கும் தன்மையது. மனிதன் உயரிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு வேண்டிய அத்துணை வழிகளையும் அவரது ‘திருஅருட்பா’ பாடல்களில் காணலாம். அவர் பாடிய 5818 பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

அன்பு, தயவு இவைகளை இரு கண்களைப்போல் கருதிய வள்ளலார், ஞானத்தின் பழுத்த நிலையில் சமய நெறி மேவாது சன்மார்க்க நெறியைக் கண்ட பெருமான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்ற வள்ளல். வாழ்க அவரது புகழ்!
**
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே!
**
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
**

இக்கட்டுரையைத் தயாரித்து அளித்தவர் திரு. கோ. சுப்பிரமணியன் அவர்கள் (மேப்பத்துரை). புத்தாண்டுக்கு நல்ல தொடக்கமாக அமைய வேண்டி இது வெளியிடப் பெறுகிறது.


கடவுளின் அழுகை

கடவுள் ஒரு நாள், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் தன்னைச் சந்திக்க அனுமதித்தார்; அவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் தன்னிடம் எழுப்பலாம் என்றும் சொன்னார்.

“இந்த பூமிப் பந்தில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றும் உன்னதமான நாடாக அமெரிக்கா எப்போது ஆகும்?” என்று கேட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

“இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா அந்த மாதிரியான நிலைமையைப் பெறும்” என்று சொன்னார் கடவுள். அந்த பதிலைக் கேட்டதும், பைடன், “ஐந்து ஆண்டுகளா ? அதைக் காண நான் அதிபராக இருக்க மாட்டேனே!” என்று கதறிக் கண்ணீர்விட்டார்.

அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், “அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பிரிட்டன் எப்போது அதிவேகமாக வளர்ந்து மெச்சத் தகுந்த நிலையினை அடையும்” என வினவினார். “இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்” என்றார் கடவுள். “இன்னும் 25 ஆண்டுகளா? அதைப் பார்க்க நான் இருக்கமாட்டேனே!” என்று அரற்றி அழ ஆரம்பித்துவிட்டார் போரிஸ் ஜான்சன்.

அடுத்து நரேந்திர மோடிக்கான வாய்ப்பு. அவர் நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தார். தூய இந்தியில் கடவுளிடம் கேட்டார்; “இந்தியா எல்லோரும் போற்றும் எழிலார்ந்த நாடாக இன்னும் எத்தனை காலம் ஆகும்?” என்று. இதைக் கேட்டதும் கடவுள், தேம்பி அழத் தொடங்கினார். “அதைக் காண நானே இருக்க மாட்டேன்” என்றார் தேம்பிக்கொண்டே கடவுள்!

(கலைஞர் செய்திகளில் இருந்து)


புதுநெறி ஆத்திசூடி

பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய புதுநெறி ஆத்திசூடி

  1. அனைவரும் உறவினர்
  2. ஆட்சியைப் பொதுமைசெய்
  3. இசைமொழி மேலதே
  4. ஈதல் இன்பம்
  5. உடைமை பொதுவே
  6. ஊன்றுளம் ஊறும்
  7. எழுது புதியநூல்
  8. ஏடு பெருக்கு
  9. ஐந்தொழிற்கு இறைநீ
  10. ஒற்றுமை அமைதி
  11. ஓவியம் பயில்
  12. ஔவியம் பெருநோய்
  13. கல்லார் நலிவர்
  14. காற்றினைத் தூய்மைசெய்
  15. கிழிப்பொறி பெருக்கு
  16. கீழ்மனம் உயர்வுசெய்
  17. குள்ள நினைவுதீர்
  18. கூன்நடை பயிலேல்
  19. கெடுநினைவு அகற்று
  20. கேட்டு விடையிறு
  21. கைம்மை அகற்று
  22. கொடுத்தோன் பறித்தோன்
  23. கோனாட்சி வீழ்த்து
  24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
  25. சாதல் இறுதி
  26. சிறார்நலம் தேடு
  27. சீர்பெறு செயலால்
  28. சுவைஉணர் திறங்கொள்
  29. சூழ்நிலை நோக்கு
  30. செல்வம் நுண்ணறிவாம்
  31. சேய்மை மாற்று
  32. சைகையோடு ஆடல்சேர்
  33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
  34. சோர்வு நீக்கு
  35. தளையினைக் களைந்து வாழ்
  36. தாழ்வு அடிமைநிலை
  37. திருஎனல் உழுபயன்
  38. தீங்கனி வகைவிளை
  39. துன்பம் இன்பத்தின்வேர்
  40. தூயநீ ராடு
  41. தெருவெலாம் மரம்வளர்
  42. தேன்எனப் பாடு
  43. தைக்க இனிது உரை
  44. தொன்மை மாற்று
  45. தோல்வி ஊக்கம்தரும்
  46. நடுங்கல் அறியாமை
  47. நால்வகைப் பிறவிபொய்
  48. நினைவினில் தெளிவுகொள்
  49. நீணிலம் உன்இல்லம்
  50. நுண்ணிதின் உண்மைதேர்
  51. நூலும் புளுகும்
  52. நெடுவான் உலவு
  53. நேர்பயில் ஆழ்கடல்
  54. நைந்தார்க்கு உதவிசெய்
  55. நொடிதோறும் புதுமைசேர்
  56. நோய் தீ யொழுக்கம்
  57. பல்கலை நிறுவு
  58. பார்ப்பு பொதுப்பகை
  59. பிஞ்சுபழுக் காது
  60. பீடு தன்மானம்
  61. புதுச்சுவை உணவுகாண்
  62. பூப்பின் மணங்கொள்
  63. பெண்ணோடு ஆண்நிகர்
  64. பேய்இலை மதம்அலால்
  65. பைந்தமிழ் முதல்மொழி
  66. பொழுதென இரவுகாண்
  67. போர்த்தொழில் பழகு
  68. மறைஎனல் சூழ்ச்சி
  69. மாறுவது இயற்கை
  70. மிதியடியோடு நட
  71. மீச்செலவு தவிர்
  72. முகச்சரக்காய் வாழ்
  73. மூப்பினுக்கு இடம்கொடேல்
  74. மெய்கழிவு அயற்கின்னா
  75. மேலை உன் பெயர்பொறி
  76. மையம் பாய்தல் தீர்
  77. மொடுமாற்றுப் பொது இன்னா
  78. மோத்தலில் கூர்மை கொள்
  79. வறுமை ஏமாப்பு
  80. வாழாட்கு வாழ்வு சேர்
  81. விடுதலை உயிக்குயிர்
  82. வீடுஎனல் சாதல்
  83. வெறும்பேச்சு பேசேல்
  84. வேளையோடு ஆரஉண்
  85. வையம் வாழ வாழ்

நன்றி-பாவேந்தர்பாரதிதாசன் பேரவை


மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்துவருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடக அரசு முயற்சித்தும் தமிழக அரசின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டும் வந்தது. 1996ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. மேகதாதுவில் 2 நீர்மின் திட்டங்களையும் ஓகேனக்கல்லில் தேசிய நீர்மின் கழகம் அமைக்கும் என்கிற திட்டத்தையும் வைத்தது. தமிழ்நாடும் கர்நாடகாவுக்கு இதுகுறித்து பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்நாடகா தாங்களாகவே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்துபோது அந்த பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்நாடு விலகிக்கொண்டது. ஒன்றியத்தில் பாஜக வந்தபிறகு அணை கட்டுவதற்கான முயற்சிகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது . காவிரி நடுவர் ஆணைய உத்தரவை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் தெரிவித்து அரசிதழில் வெளியான பிறகு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அணை கட்டுவதற்கான வேகம் அதிகரித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் எழும் எதிர்ப்பை சமாளிக்க ஒன்றிய அரசு யோசித்து உருவாக்கிய திட்டம்தான் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். மேகதாதுவில் அணை காட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கர்நாடக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

மேகதாது அணை, கிருஷ்ணராஜ சாகர்-கபினி மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடையே கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மொழியில் “balancing reservoir” என்று அழைக்கப்படும் மேகதாது அணை கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நீரை தேக்கி குடிநீர் மற்றும் மின்னுற்பத்திக்கு பயன்படுத்துவதுதான் நோக்கம் என கர்நாடக அரசு சொல்கிறது.

தமிழ்நாட்டின் பார்வையில் மேகதாது அணையின் அடிப்படையே சிக்கல்தான். கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்தேக்கத்திலிருந்து வெளிவரும் “நீர்வழிப் பாதையில்” 67 டிஎம்சி கொள்ளளவில்  மேகதாது அணை அமைய இருப்பதால் கர்நாடகாவிற்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும்.

கடந்த 25 ஆண்டுகளில்,குறிப்பாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீர் இந்த இரு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீர்தான். கர்நாடகா திறந்துவிடும் நீர் கிடையாது. கிருஷ்ணராஜ சாகர் – மேட்டூர் அணைகளுக்கு இடையே உள்ளநீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து ஓடிவரும் நீரால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது.

இதுதான் கர்நாடகாவை உறுத்துகிறது.இதை குறிவைத்துதான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் துடியாய்த் துடிக்கிறது.

கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு தருவதற்கு நதியின் வடிகால் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் தண்ணீர் வருமா என்பது பெரிய கேள்விதான். இந்தியாவின் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளதை நாம் நினைவில் கொண்டால் எந்த கோதாவரி தண்ணீரை திருப்புவீர்கள் என கேள்வி கேட்கலாம்.

ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு நடத்தும் இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு குறித்த எந்த கோரிக்கையையும் வைக்க தேவையில்லை.

தமிழ்நாடு அரசு கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் என்கிற அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தபோது ஓடிச்சென்று வரவேற்றார் அன்றைய முதல்வர்  எடப்பாடி.

நதிகளை இணைக்கிற அறிவிப்பே காவிரியில் நமக்கு உள்ள உரிமையை மறுக்கச் செய்வதற்கான வேலை என அப்போதேபூவுலகு  உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்திருந்தனர். கடந்த வாரத்தில் மேகதாது அணை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்விதமாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.

எந்த நதிநீரும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இப்போது கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குக் கிடைப்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். எல்லா நதிகளும் ஆந்திரத்தின் மையத்தில் உள்ளன. அங்கிருந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் நீரைக் கொண்டுவருவது அரிது, வர முடிந்தாலும், 90 சதவீத நதிநீர் இணைப்புப் பகுதி ஆந்திரத்தின் எல்லைக்குள் இருப்பதால் அவர்களே பயன்பெறுவார்கள் (திருடிக் கொள்வார்கள் என்பது சற்றே வன்மையான தொடர்).

இனிமேலும் கர்நாடகா எந்த அணையும் கட்டாமல் தடுப்பதும் நீரைச் சிக்கனமாகக் கையாள்வதும் மட்டுமே தமிழகத்தின் டெல்டாப் பகுதியின் நீர்த்தேவையை நிறைவு செய்யும். கோதாவரி இணைப்பே சாத்தியமில்லை என்கிறபோது கங்கை-காவிரி இணைப்பு முதலிய திட்டங்கள் பற்றிப் பேசவே வேண்டாம். ஏறத்தாழ கடல்மட்ட அளவில் உள்ள கங்கைச் சமவெளியிலிருந்து 1000 மீட்டருக்குமேல் தக்கணப் பீடபூமியில் நீரை ஏற்றி, பிறகு கோதாவரிச் சமவெளியில் இறக்கி, கிருஷ்ணா, பெண்ணை சமவெளியைத் தாண்டி, மீண்டும் 500 மீட்டருக்கு மேல் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தாண்டி, அப்புறம் தமிழ்நாட்டுப் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாற்றாங்கரைப் பகுதிகளைத் தாண்டி காவிரியில் கொண்டு வந்து இணைப்பார்களாம். எந்த முட்டாள் பொறியியலாளன் சொன்ன ஐடியாவோ இது?


From Rumi

What Is Poison ?
Rumi Replied With A Beautiful Answer : AnyThing Which Is More Than Our Necessity Is Poison. It May Be Power, Wealth, Hunger, Ego, Greed, Laziness, Love, Ambition, Hate, Or AnyThing.

What Is Fear ?
Non Acceptance Of Uncertainty. If We Accept That Uncertainty, It Becomes Adventure.

What Is Envy ?
Non Acceptance Of Good In Others. If We Accept That Good, It Becomes Inspiration.

What Is Anger ?
Non Acceptance Of Things Which Are Beyond Our Control. If We Accept, It Becomes Tolerance.

What Is Hatred ?
Non Acceptance Of Person As He Is. If We Accept A Person Unconditionally, It Becomes Love!