கனவுகள்

1 தமிழர்கள் எல்லோருக்கும் உலக தரத்திலான மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும்…
2 தமிழர்களின் குழந்தைகள் எல்லோருக்கும் உலகத் தரத்திலான ஒரே கல்வி முறையும் கல்வியும் கட்டணமின்றி கிடைக்க வேண்டும்
3 தமிழகமெங்கும் நீர் ஆதாரம் பெருகி நீர் வளம் மிக்க பூமியாக மாற வேண்டும்.
4 தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சமில்லாமல் மக்களுக்கான சேவைகள் நடக்க வேண்டும்.
5 தமிழகத்தில் விவசாயம் சிறப்புற நடந்து ஏற்றுமதி செய்யுமளவுக்கு உபரி உற்பத்தி காய்கறி, பழங்கள், தானியங்களில் கிடைக்க வேண்டும்.
6 தன்னலமில்லாத , எளிமையும் பண்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழகத்திற்கு வேண்டும்.
7 தமிழர்கள் சாதி ஒழிந்த சமூகமாக ஒரே இன மக்களாக விளங்க வேண்டும்.


FDI

பொறியாளர் பக்கிரிசாமி என்பார் கூறியன, ஆர்வலர் அய்யநாதன் வழியாக–

FDI என்கிற அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகள் மூலம் பல நிறுவனங்கள் உள்ளே நூழைந்துவிட்டன. உதாரணமாக 300 million euro (2500 crore INR) மதிப்பில் ஒரு பிரான்ஸ் தொழிற்சாலை(1200MW Turbine Generator) அண்மையில் குஜராத்தில் நிறுவப்பட்டது. முதலில் ஒரு இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இங்கே களத்தில் இறங்கியது. நிலம் தொழிற்சாலை கட்டுமானம் மனித ஆற்றல் முழுவதும் இந்திய நிறுவனம் ஏற்றது அதாவது வங்கி கடன் மூலம் மூலமே; அவர்கள் வெறும் தொழில்நுட்பத்தை தருவார்கள் என்கிற புரிதல் ஒப்பந்தம்!
ஆனால் முழுவதும் இந்திய பொருளாதாரத்திலேயே அமைக்கப்பட்டது.

கட்டுமானம் முடிந்து சாவி கைக்கு போனதும் இந்திய நிறுவனம் கழற்றிவிடப்பட்டது மற்றுமன்றி, இதை வாங்கிய பிரான்சு நிறுவனம் அப்படியே 30% இலாபம் வைத்து அமெரிக்க நிறுவனத்துடன் விற்றுவிட்டு கழன்றுகொண்டதோடு, இந்தியாவில் அதன் தடமே இல்லை குறிப்பாக டர்பைன் ஜெனரேட்டர் தயாரிப்பில்!

தற்போது இதை வாங்கிய அமெரிக்க நிறுவனம் எதிர்பார்த்த break even point ஐ எட்ட முடியாமல் ஒவ்வொரு யூனிட்டாக மூடிக்கொண்டு வருகிறது என்றால் இந்தியா பொருளாதாரத்தின் முக்கிய பங்கு யாரிடம் உள்ளது?

இது ஒரு நிறுவனத்தைப்பற்றிய கதை மட்டுமே, குஜராத்தில் உள்ள ஒட்டுமொத்த நிறுவனங்களின் கணக்கை போட்டால் நமக்கு மயக்கம் வரும் என்கிற நிலையில், இந்திய பொருளாதாரம் முற்றிலும் அந்நிய முதலீடு என்கிற விளையாட்டில் காணாமல் போய் நெல்லிக்காய் அளவிற்கு வந்துவிட்டது!

உள்ளே புகுந்துள்ள நிறுவனங்கள்–
ABB(old & existing)
SIEMENS (old &existing)
Schneider (old& existing)
Alstom (formal company)
GE (new)
MHI(new)
எனவே இவர்கள் இங்கிருக்கும் L&T, ESSOR, Relience, sapoorji palonji, Dalmia, mital, OP ZINDAL. TATA, ADHANI, VEDANTA மற்றும் பொதுத்துறை நவ மகா ரத்னா BHEL, BEL, SAIL, VIZAK, NOCL, CAI, STEEL, NLC போன்ற நிறுவனங்களுடன் கூட்டுவைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஏன் நம்மை ஆளுகிற எண்ணம் வராது சொல்லுங்கள்? இதுதானே தாராளமயமாக்கல்? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?


மய்யம்

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று பெயரிட்டு கட்சியைத் தொடங்கியுள்ளார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே ‘மய்யம்’ என்று பத்திரிகை நடத்தியவர் கமல். பல பத்திரிகைகளில், சிறுகதை, தொடர்கதை, கட்டுரைத் தொடர் என்றெல்லாம் எழுதிய கமல்ஹாசன், மய்யம் பத்திரிகையில், அடிக்கடி கவிதைகள் எழுதிவந்தார்.

தன் முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த போது, ஓர் கவிதை எழுதி, மய்யம் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார் கமல். இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, சுஜாதா உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.
அந்தக் கவிதை இதுதான்…

ப்ரதிபிம்பம் பழங்கனவு மறந்த
என் மழலையின் மறுகுழைவு
மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு
என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினமுனக்காய் நான் படிப்பேன் என் குரலில்.
பாசத்தில் என் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன் உன்னிடம்
கோபத்தில் ச்சீ என நீ வெறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்.
அன்று சாய்வு நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே எழுதிவிட்டால்
உன்னுடன் பேசலாம்
எழுதிவிட்டேன் வா பேச!

The hindu tamil


மனைவி-2

தமிழில் கணவன்-மனைவி குறித்த சொற்களை ஆராய்வது சுவாரசியமானது. கணவன் உண்டு, கணவி இல்லை. கணவி என்றால் கண் அவிந்து போகும். மனைவி உண்டு, மனைவன் இல்லை. மனைவன் என்றால் மனை, வன்மையாகிவிடும். புருஷன் உண்டு, புருஷி இல்லை. பெண்டாட்டி உண்டு, பெண்டாளன் இல்லை. தலைவன்-தலைவி இலக்கியத்தில்தான் உண்டு. துணைவன்-துணைவி இப்போதுதான் வழக்கிற்கு வந்துகொண்டிருக்கிறது. தோழன்-தோழி என்ற கருத்து நிச்சயமாக இல்லறத்தில் கிடையாது. கிழவன்-கிழத்தி பழைய வழக்கு. இப்போது பயன்படுத்தினால் ஓல்டுமேன், ஓல்டு உமன் என்று புரிந்து கொள்வார்கள். ஆம்படையான், ஆம்படையாள் என்பது ஒரு சாதியில் மட்டுமே பயன்படும் சொற்களாகி விட்டன. இன்னும் பல சொற்கள் உள்ளன, அவற்றை நீங்களேகூட ஆராயலாம்.

கணவன் பெயரை முதலில் எழுதி மனைவி பெயரைப் பின்னால் எழுதுவதில்லை. சுந்தர் சாந்தி என்கிறமாதிரி. மிகச் சிலபேர்தான் தலைப்பெழுத்தைக்கூட மாற்றுகிறார்கள். பலரும் தங்கள் தங்கள் தலைப்பெழுத்துகளை மாற்றுவது இல்லை. பொதுவாக மனைவிபெயர்தான் முதலில் வருகிறது, கணவன் பெயர் பின்னால்தான் வருகிறது. உதாரணமாக, சாந்தி சுந்தர். (இந்திரா காந்தி என்பதில்கூட இந்திரா அவர் பெயர், காந்தி கணவர் பெயர். கமலா நேரு என்றாலும் அப்படியே.)

ஆனால் எப்படியாயினும் சரி, மனைவிக்குத்தான் மதிப்பு. ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். கணவன் ஒன்று என்ற இலக்கம், மனைவி (பலரும் கருதுவதுபோல, அவனை நம்பியிருப்பதால்) பூச்சியம் என்ற இலக்கம் என்று வைத்துக் கொள்வோம்.

சாந்தி பூச்சியம், சுந்தர் ஒன்று என்றால், சாந்தி சுந்தர்=01, அதாவது அதன் மதிப்பு ஒன்றுதான்.

மாறாக, மனைவி ஒன்று, கணவன் பூச்சியம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது பாருங்கள், சாந்தி-1, சுந்தர்-0 சாந்தி சுந்தர்=10. ஆக அதன் மதிப்பு 10 ஆகிவிடுகிறது. பத்து மடங்கு உயர்வு பாருங்கள்.

ஆகவே கணவன்மார்களே, நீங்கள் என்றைக்கும் பூச்சியம்தான். மனைவியர்தான் ஒன்று. ஒன்று முதலில் இருந்தால்தான் மதிப்பு. எத்தனை பூச்சியம் முதலில் இருந்தாலும் மதிப்பேயில்லை.


இறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3

முன்பு, இறப்பைக் கண்டு எனக்கு அச்சமில்லை என்று குறிப்பிட்டேன். காரணம் இருக்கிறது.

பலரும் உயிர் ஒன்று தனியாக ஆவி ரூபத்தில் இருப்பதாக நம்புகிறார்கள். இன்னும் பலப்பலர் ஆன்மா என்று ஒன்று உண்டு, அது அழியாதது, நாம் இறந்தபிறகும் அது இருக்கிறது என்று கருதுகிறார்கள். இறந்த பிறகு அடையக்கூடிய நல்ல கதி என்பது என்ன என்பது அவரவர் மதத்தையும் சிந்தனையையும் பொறுத்து வேறுபட்டாலும் அவர்கள் எல்லாருக்கும் (கிறித்துவர்கள், முஸ்லிம்கள் உட்பட) தாங்கள் நல்ல கதி அடையவேண்டும் என்ற கவலை இருக்கிறது. ஆன்மா சொர்க்கத்திற்குப் போகவேண்டும், நரகத்திற்குப் போய்விடக்கூடாது என்று பலரும் கவலைப்படுகிறார்கள். இன்னும் பலர் கைலாய பதவி கிடைக்குமா, வைகுண்ட பதவி கிடைக்குமா என்று இறந்தபிறகும் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். இன்னும் பலருக்குச் சாவு என்பது ஒரு சித்திரவதையாக, பயங்கரமாக, அச்சத்தைத் தருவதாக இருக்குமோ, இறந்த பிறகு என்ன ஆகுமோ நமக்கு என்ற கவலை இருக்கிறது.

எனக்கு அப்படிப்பட்ட கவலை எதுவும் இல்லை. முதலாவதாக ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. எனவே இறந்தபிறகு அது என்ன ஆகுமோ என்ற கவலையும் இல்லை.

அப்படியானால் உயிர் என்பது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். உயிர் என்பது இருக்கிறது. ஆனால் பலரும் நினைப்பதுபோல அது ஒரு ஆவியோ, மூச்சுக்காற்றோ, அல்லது வேறுவிதமான காற்றோ அல்ல.

எங்கள் குடும்பம் சைவக்குடும்பம். உயிர் என்பது ஓர் காற்றுப் போன்றதுதான் என்பது அவர்கள் எண்ணம். ஒன்பது வாயிற் குடிலை என்று மாணிக்கவாசகர் பாடியதையும் (யாராவது இறந்தால், சிவபுராணத்தைப் பாடுவார்கள்) நம்புபவர்கள். ஆகவே யாராவது இறந்தால் உயிர் நவதுவாரங்களில் எதன் வாயிலாகப் போயிற்று என்று ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்துவார்கள். இறந்தபோது மலசலம் இருந்தால் அபானத்தின் (ஆசனவாய்) வழியாகப் போயிற்று என்பார்கள். சிலர் ஆவி கண்கள் வழியாக, சிலரது ஆவி காது வழியாக, பலரது ஆவிகளும் வாய் வழியாக, சிலபேருக்கு மண்டைவழியாகக்கூடப் போயிற்று என்று சான்று காட்டுவார்கள். அநேகமாக ஒருவருக்கும் மூக்கின் வழியாக உயிர் போவதே இல்லை போலும்.

என்னைப் பொறுத்தவரை உயிர் என்பது உடம்பின் எல்லா செல்களிலும், திசுக்களிலும் இருக்கிறது. அப்படித்தான் உயிரியல் எனக்குக் கற்பித்திருக்கிறது. அறிவியலை நான் வெறும் பாடமாகப் படிக்க வில்லை. அதனால் விஞ்ஞானத்தை நன்றாகப் படித்தும்கூட ஆன்மா இருக்கிறது என்றோ, உயிர் எங்கேயோ தனியாக ஒரு வாயுவாக இருக்கிறது என்றோ நான் கருதுகின்ற மூடத்தனத்தைச் செய்யவில்லை.

எல்லாச் செல்களிலும் உயிர் இருக்கிறது என்பதன் அர்த்தம் ஒன்றுதான். நமக்கு வயதாகும்போது அவை தளர்ச்சியுற்று ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. அப்படி அவை ஓய்வெடுத்துக் கொள்ளும்போது நமக்கு இறப்பு ஏற்படுகிறது. தினசரி தற்காலிகமாக நமது செல்கள் களைப்படைந்து ஓய்வெடுக்கும்போது தூக்கம் வருகிறது. நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டும் என்ற அளவுக்கு செல்கள் தளர்ச்சியுறும்போது சாவு நிகழ்கிறது.

இதை அறிந்துதானோ என்னவோ, நம் திருவள்ளுவர், “உறங்குவது போலும் சாக்காடு” என்று அழகாகக் கூறிவிட்டார். உறங்கி விழிப்பது போல (மறு) பிறப்பு உண்டா என்பது நமக்குத் தெரியாது. தெரியாத, என்றைக்குமே தெரிந்துகொள்ள முடியாத விஷயத்தில் சிந்தனையைச் செலுத்துவது வீண்.


இறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2

பொதுவாக இன்றைய உலகில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிக காலம் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
என் சொந்த அனுபவத்திலும் இது உண்மை என்பதைக் கண்டிருக்கிறேன்.
எனது குடும்பத்திலேயே நான் கண்கூடாகக் கண்டவை இவை. என் தாத்தா மறைந்த பிறகுதான் பாட்டி மறைந்தார். என் தந்தையார் மறைந்த பிறகு என் தாயார் எட்டு ஒன்பதாண்டுகள் இருந்தார்கள். என் மாமனார் மறைந்த பிறகுதான் மாமியார் இறந்தார்.
எனக்கு இரண்டு சிற்றப்பாக்கள். முதல்வர் இறந்தபிறகு அவருடைய துணைவியார் – என் முதல் சித்தி பத்தாண்டுகள் இருந்தார்கள். அடுத்த சிற்றப்பா மறைந்து இப்போது ஒன்பதாவது ஆண்டு என்று நினைக்கிறேன். இப்போதும் என் இரண்டாவது சித்தி இருக்கிறார்கள்.
தாய்வழியிலும் அப்படித்தான். என் தாய்மாமன் இறந்தபிறகும் மாமி இருக்கிறார்கள். என் சித்திமார் இருவர் (தாயின் தங்கையர்). அவர்களும் தத்தம் கணவன்மார்கள் இறந்தபிறகும் இன்றும் இருக்கிறார்கள்.
ஆகவே ஆடவரைவிடப் பெண்டிர் சில ஆண்டுகள் அதிகமாக வாழ்வது பொது விதி என்றே தோன்றுகிறது. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபிறகு, மனைவி சராசரியாகப் பத்தாண்டுகள் உயிரோடு வாழ்வது வழக்கமாக இருக்கிறது.
இதற்கு ஒரு காரணம் திட்டமாக இருக்கிறது. பழைய காலங்களில் கணவரைவிட மனைவி ஏழு எட்டு ஆண்டுகள்கூட வயதில் குறைந்தவராகவே இருப்பார். மற்றொரு காரணம், அநேகமாக எல்லா மனைவிமார்களுமே தங்கள் கவலைகளைத் தங்கள் கணவர்மீது சுமத்திவிட்டுத் தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
என் மனைவியைப் பொறுத்தவரை இதுவரை என்னை நன்கு கவனித்துவருகிறார். இனிமேலும் நான் உயிருடன் இருக்கும் காலம்வரை அவர் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டிருந்து, என்னை அனுப்பிவிட்டு தக்க காலம்வரை மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
இதில் மகிழ்ச்சிதான். ஏனெனில் மனைவி இறந்தபிறகு கணவன் வாழ்ந்தால், அவனை கவனிக்க ஆள் இருக்காது. ஆனால் தந்தை இறந்த பிறகு தாய் இருந்தாலும் பிள்ளைகள் நன்கு கவனித்துக் கொள்வார்கள். தாய்மைக்கு அந்த அளவு சக்தி இருக்கிறது. ஆனால் ஒரேவிஷயம், அந்தத் தாய் தன் மருமகளுடன் சற்றே ஒத்துப் போய்விட வேண்டும்.