நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 10

Madurai-alanganallur-jallikattu

கேள்வி  (39): குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? அது பற்றித் தங்கள் கருத்தென்ன?

நண்பர் ஒருவர் தான் குமரிக்கண்டம் என்ற நூல் ஒன்று எழுதப்போவ தாகக் கூறி அதுபற்றி என்னிடம் அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் எழுப்பிய இந்தக் கேள்விக்கு என் எதிர்வினையைப் பொதுவாகச் சிறகில் தெரிவிக்க வேண்டியே இந்த பதில்.
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். லெமூரியாக் கண்டம் என்ற ஒன்றுகூட-அதைப்போல-இருந்தததாகச் சொல்கிறார்கள். இவையெல் லாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலப்பகுதிகள். அப்போது பூமியின் தோற்றமே வேறாக இருந்தது. இப்போதுள்ள பல நிலப்பகுதிகள் துண்டுபட்டும், பல நிலப்பகுதிகள் ஒன்றாக இணைந்தும் தோற்றமளித்தன. எந்தக் கலைக்களஞ்சியத்திலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம்.
ஆனால் குமரிக்கண்டத்தில் ஏழுஏழு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன, அவற்றில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. (நண்பர் அவற்றின் பெயர்களையெல்லாம் வேறு தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.) சிலப்பதிகாரத்தில் “குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று வருவதெல்லாம் தொல்பழம் மனத்தின் நினைவுகள் அல்லது கூட்டு நனவிலியின் நினைவுகள் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் கொள்வார்கள்.

ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்ததாகச் சொல்லப்படுவதெல்லாம் கட்டுக்கதை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழியே பிறக்காத கற்கால மனிதர்கள்தான் வாழ்ந்தார்கள். இன்று போற்றப்படுகின்ற எகிப்திய நாகரிகம் (பிரமிடுகளையெல்லாம் வானியல் அறிவோடு கட்டியவர்கள்)  என்பதே இன்றைக்கு ஐந்தாயிரம்-ஆறாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுதான். சிந்து வெளி நாகரிகமும் அவ்வாறே. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்தது என்பது பழங்காலக் கற்பனை. ஒருவேளை ஆரியர்கள் அவர்களுடைய வேதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கதைகட்டியதற்கு மாற்றாகத் தமிழ்ப்புலவர்கள் இப்படிக் கதைகட்டினார்களோ என்னவோ!

லெமூரியா என்ற பெயர், லெமூர் என்ற ஆதிக்குரங்கின் பெயரால்தான் வருகிறது. இதனால்தான் புதுமைப்பித்தன் முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று சொல்வதில் தமிழர்களுக்கு ஆசை என்று கிண்டல் செய்தார் போலும்.

இன்று நாம் செய்ய வேண்டியது லெமூரியாவையோ குமரிக் கண்டத்தையோ தேடுவது அல்ல. அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அங்கு தமிழர்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வேறு கற்கால இனம் ஏதேனும் வாழ்ந்திருக்கவும் கூடும். ஏனென்றால் இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய நிலப்படங்களில் ஆப்பிரிக்காவும் இந்தியத் துணைக்கண்டப் பகுதியும் இணைந்திருந்ததாகக் காட்டப்படுகிறது.

இப்போது நாம் செய்யவேண்டியது, இன்று தமிழினம் தன்னை எப்படித் தற்காத்துக் கொள்ளப்போகிறது, எப்படி எதிர்காலத்தின் சவால்களை எதிர் கொண்டு வாழப்போகிறது என்பது பற்றிய சிந்தனைதான். குமரிக்கண்டம் இருக்கட்டும், இன்று போகும் போக்கில் இனி ஐந்து முதல் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விவசாயமே இருக்காது, நிலம் எல்லாம் பிளாட்போட்டு விற்பனை செய்யப்பட்டு விடும், சோற்றைவிடுங்கள் ஐயா, குடிக்கத் தண்ணீருக்கு எங்கே போகப்போகிறீர்கள்? அரசியல்வாதிகளுக்கு இதுபற்றிய அக்கறை எல்லாம் இல்லை

உணவு உடை உறைவிடம் என்றார்கள் பழங்காலத்தில். உணவையும் (விவசாயத்தையும்) உடையையும் (நெசவுத்தொழிலையும்) ஒழித்துவிட்டு வெறும் கான்கிரீட் காடுகளில் (உறைவிடம்) வாழ்ந்துவிட முடியும் என்ற எண்ணமா?

அன்பர்களே, தயவுசெய்து தமிழ்மீது உள்ள அக்கறை என்றபெயரில் குமரிக் கண்டத்தையும் பழங்கால நினைவுகளையும் தேடுவதைவிட்டு இன்றைக்கு வாழ்வதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி யோசியுங்கள்.

கேள்வி (40): அப்படியானால் தமிழ்நாடு வளமற்ற நாடு, தமிழனுக்குச் சரித்திரம் தேவையில்லை என்கிறீர்களா?

மேற்கண்ட (39)ஆம் கேள்விக்குரிய பதிலை என் மாணவர் ஒருவரிடம் காட்டியபோது அவர் கேட்ட கேள்வி இது. ஒரு கேள்வியல்ல, தொடர்பற்ற இரண்டு கேள்விகள் இதில் இருக்கின்றன.

முதல் கேள்விக்கு விடை: ஆம், தமிழ்நாடு வளமற்ற நாடுதான்.

“நாடென்ப நாடா வளத்தன, நாடல்ல

நாட வளந்தரு நாடு”

என்றார் வள்ளுவர். சோற்றுக்கும் தண்ணீருக்கும் பிறரை நாடுகின்ற நாடு எப்படி வளமான நாடாகும்? பக்கத்திலுள்ள நாட்டிடம் தண்ணீர் கேட்டு எத்தனை எத்தனை ஆண்டுகளாகப் பிச்சையெடுக்கிறோம்? அவர்களோ ஈவிரக்க மின்றி (சட்டத்தை விடுங்கள்) ஒருசொட்டுத் தண்ணீர்கூடத் தரமுடியாது என்கி றார்கள்.

தமிழ்நாட்டுக்கென்று ஒரு நதி உண்டா? எல்லா ஆறுகளும் அடுத்த மாநிலத்தில் பிறப்பவை. அவர்கள் மனம்வந்து தண்ணீர் கொடுத்தால்தான் உண்டு.

அதனால்தான் பழங்காலக் கரிகால் சோழன் முதலானவர்களும் பல்லவ மன்னர்களும் பிற்காலச் சோழர் பாண்டியர் விஜயநகர அரசர் முதலான யாவரும் தமிழ் நாட்டில் ஏரி குளங்கள் வெட்டிக் கண்மாய்கள் வைத்துக் காப்பாற்றினார்கள். மழைநீரைத் தேக்கினார்கள். இப்போது அவையெல்லாம் எங்கே? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தனக்கென்று ஓர் ஆறும் இல்லாத ஒரு நாட்டை- முற்றிலு மாகக் குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் எல்லாம்-நீர்ப்பாசன வசதிகள் முழுதும் பாழாக்கப்பட்டுவிட்ட நாட்டை வளமான நாடு என்று தமிழ்மீதுள்ள, தமிழ் நாட்டுமீதுள்ள அன்பால் சொல்லலாம்-குருட்டுக்குழந்தையையும் கண்ணாயிரமே என்று கொஞ்சுகின்ற தாய்போல. ஆனால் உண்மை? சென்னை மாகாணம் என்ற  பெயரை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதில் ஆர்வம் காட்டிய அரசியல்வாதிகளுக்கு “நாடென்ப நாடா வளத்தன” என்ற முதுமொழி தெரியா மலா போயிற்று? மலையைக்கூடத் தின்கிறார்களே ஐயா பணத்துக்கு?

இரண்டாவது கேள்விக்கு பதில்: தமிழனுக்குச் சரித்திரம் தேவைதான். சரித்திரம் என்பது, எழுதியவனின் சார்பு ஓரளவு இருந்தாலும், முதன்மைச் சான்று, இரண் டாம்நிலைச் சான்று ஆகியவற்றின் அடிப்படையில் பிறப்பது. (அன்புகூர்ந்து வரலாறு எழுதும் கலையைச் சற்றே பாருங்கள்). இலக்கியம் போன்ற சான்றுகள் எல்லாம் மூன்றாம்நிலை (டெர்ஷியரி)ச் சான்றுகள்தான். இவை உண்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. குமரிக்கண்டம் போன்றவையெல்லாம் மூன்றாம் நிலைச் சான்றுகளால்கூட நிறுவப்பட முடியாதவை.


தமிழைக் கையாளுதல்

tamil-3

ஏனோ நாம் ஆங்கிலத்திற்கோ இந்திக்கோ தரும் மரியாதையை நமது தாய்மொழி யான தமிழுக்குத் தருவதற்கு மறுக்கிறோம். தமிழர்களாகப் பிறந்தும், நமக்குள் ளேயே ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறோம், இந்திக்காரனோ வடநாட்டுக்காரனோ வந்தால் விழுந்துவிழுந்து அரைகுறை இந்தியிலாவது பதில் சொல்கிறோம். ஆங்கிலத்தைக் கற்பதற்குச் செலவிடும் நேரத்தில் நூற்றில் ஒரு பங்குகூடத் தமிழுக்குச் செலவிடுவதில்லை.

பலசமயங்களில் நமது பேச்சிலும் எழுத்திலும் கையாளும் சொற்களும் தொடர் களும் ஆங்கிலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. மேலும் சிற்றிதழ்கள் பெருகியபிறகு, அவரவர் இஷ்டத்துக்கு-மரபு கொஞ்சமும் தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சியும் செய்யாமல்-சொற்களை உருவாக்கும் தன்மையும் வந்து விட்டது. ஆங்கிலத்தை இலக்கணபூர்வமாகக் கையாளுவதற்குச் செலவிடும் நேரத்தில் நூற்றில் ஒரு பங்கையும் தமிழைச் சரிவர அறிந்துகொள்வதற்குச் செலவிட மனம்வராத அலட்சிய மனப்பான்மை. பல ஆங்கிலப் பத்திரிகைகள் know your English மாதிரியான தொடர்களை வெளியிட்டு வருகின்றன. (“your” இங்கிலீஷாம், அது ஏதோ நமது தாய்மொழி போல! It is always, and ever will be, Englishman’s English only.) அதனால் தமிழைக் கையாளுகின்ற முறை பற்றிச் சற்றே தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. இன்றைக்கு இரண்டு சொற்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

புரிதல்-புரிந்துகொள்ளுதல்

பலபேர் இப்போதெல்லாம் அவன் புரிந்துகொண்டான் என்பதைப் புரிந்தான் என்றே எழுதுகிறார்கள். இது தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பதற்கு பதிலாக தவறான புரிதல் என்கிறார்கள். இம்மாதிரிக் கையாளுவது பிழை.

புரிதல் என்றால் செய்தல். அதனால்தான் “ஆட்சிபுரிந்தான்”, “தவறு புரிந்தான்” போன்று அதைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நான் சொன்னதை “அவன் புரிந்தான்” என்றால் அது நான் சொன்னதை அறிந்துகொண்டான் என்ற அர்த்தத்தைத் தராது, நான் சொன்னதைச் செய்தான் என்ற பொருளையே தரும்.

புரிந்துகொள்ளுதல் என்றால் ஒன்றை மனத்திற்குள் சரியான தன்மையில் வாங்கிக்கொள்ளுதல். கொள்ளுதல் என்ற சொல் மிகை என்று கருதி இப்படிப் புரிதல் என்றே கையாளுகிறார்கள் போலும்!

பழையகாலத்தொடர் ஒன்று-நலம்புரி கொள்கை நான்மறையாளர்….இங்கே நலம்புரிகொள்கை என்பதற்கு நல்லதைச் செய்கின்ற கொள்கை உடைய என்று தான் பொருள்.

உன்னுடைய புரிதல் தவறு என்றால் அர்த்தம்-your doing is not correct.
உன்னுடைய புரிந்துகொள்ளுதல் தவறு என்றால் அர்த்தம்- your understanding is not correct.
ஆங்கிலத்திலும் understanding என்ற சொல் இருக்கிறது. புரிந்துகொள்ளுதலில், கொள்ளுதலை விட்டுவிட்டதுபோல, understanding-இல் under-ஐ விட்டுவிடுவார் களா? (வெறும் ஸ்டேண்டிங் வேறு, அண்டர்ஸ்டேண்டிங் வேறு என்பது உங்க ளுக்கு நன்றாகவே தெரியும். அதுபோலத்தான் புரிதல் வேறு, புரிந்துகொள்ளுதல் வேறு.)

எதிர்மறை-நேர்மறை

உடன்படுதல் என்ற அர்த்தத்தில் இக்காலத்தில் நேர்மறை என்ற சொல்லைக் கையாளுகிறார்கள். “இது நேர்மறைக் கூற்று” என்கிறார்கள். “அவன் நேர்மறையாகப் பேசினான்” என்கிறார்கள். இவை “இது உடன்பாட்டுக்கூற்று”, “அவன் உடன்பட்டு (அல்லது ஒப்புதலோடு) பேசினான்” என்று வரவேண்டும்.

பாசிடிவ்-நெகடிவ் போலத் தமிழிலும் இருக்கவேண்டும் என்று கருதி எதிர்மறைக்கு எதிராக நேர்மறை என்ற சொல்லை உருவாக்கி விட்டார்கள் போலும்! தமிழ் மரபு உடன்பாடு, எதிர்மறை என்பதுதான். அவன் உடன்பட்டுப் பேசினான், எதிர்மறையாகப் பேசினான். அவன் நேர்மறையாகப் பேசினான் என்றால் தவறு.

எதிர்மறை-என்பது எதிராக மறுத்துரைப்பது என்ற தொடரிலிருந்து உருவாகிறது.

மறுப்பது என்பது இங்கே “மறை” என்றாகிறது. மறை என்றால் கூற்று என்றோ,  வேதம் என்றோ அர்த்தமில்லை. (“மறைவாக வை”, “மறைத்துக்கொள்” என்று ஓர் அர்த்தம் இருக்கிறது.) அதனால் ‘நேர்மறை’ என்றால், “(ஓர் ஆளை) நேராக மறுப்பது”, ‘எதிர்மறை’ என்றால் “(ஓர் ஆளை) எதிராக மறுப்பது” என்றுதான் பொருள்கொள்ளமுடியும். (துரதிருஷ்டவசமாக, இரண்டுமே ஒன்றுதான்!)


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 9

Vaalum-parichayum

கேள்வி: பழைய பாட்டு ஒன்று-சித்திரமும் கைப்பழக்கம் என்று வருகிறது. அதில் பழக்கம், பிறவிகுணம் என்று சொல்லப்படுகிறது. அதன் பொருள் என்ன?
நீங்கள் குறிப்பிட்டது அவ்வையார் எழுதிய தனிப்பாட்டு.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
என்பது அந்தப்பாட்டு. இது வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்கின்ற கலைகள், தொழில்கள், நடத்தைகள் போன்றவற்றையும், பிறவியிலேயே வருகின்ற (இப்போதெல்லாம் உயிர்வேதியியலில் பாரம்பரியம், மரபணுக்களால் ஏற்படுகிறது என்கிறார்களே அதுபோல) குணங்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

சித்திரம் பழகுவதால் வருவது; செந்தமிழ், நல்ல தமிழைப் பேசப்பேச வருவது; கல்வி மனப்பழக்கத்தினால் வருவது; நடை (அவரவருடைய பாணி-ஸ்டைல் என்று சொல்கி றோமே, அது)யும் கூடப் பழக்கத்தினால் வருவதுதான்; ஆனால் நட்பு, தயை (கருணை அல்லது பரிவு காட்டுகின்ற பண்பு), கொடை (பிறருக்குக் கொடுக்கின்ற குணம்) ஆகிய குணங்களெல்லாம் பாரம்பரியத்தினால் வருகின்றவை என்று இந்தப் பாட்டு சொல்கிறது.

பொதுமைப்படுத்திச் சொன்னால், பண்புகள் மரபினால் வருகின்றவை, கலைகள், தொழில்கள் போன்றவை எல்லாம் பழக்கத்தினால் வருகின்றவை என்பது அவ்வை யாரின் கருத்து. இன்றைக்கு நாம் நினைவில் இருத்தவேண்டிய மிகச் சிறந்த கருத்து இது.

காரணம், கலைஞர்கள் கருவிலே திருவுடையவர்கள், பிறவியிலேயே வருவதுதான் கலை, எல்லோருக்கும் அது வந்துவிடாது என்றெல்லாம் இன்று கதைகட்டுகிறார்கள். குறிப்பாக, சில ஜாதியிலே பிறந்தவர்களுக்குத்தான் சில கலைகள் வரும், மற்றவர்க ளுக்கு வராது என்று தங்களை உயர்த்திக்கொள்ளவும், பிறரைத் தாழ்த்தவும் இம்மாதி ரிக் கூற்றுகளைப் பயன்படுத்துகிறார்கள். அது தவறு என்கிறார் அவ்வையார். எல்லாக் கலைகளையும் எவரும் பழக முடியும் என்பது அவர் கருத்து. விளையாட்டுகளும் அப்படித்தான். உதாரணமாக செஸ் விளையாட்டு என்பது சிலருக்குத்தான் வரும், புத்திக்கூர்மை உடையவர்கள் சில குறிப்பிட்டவர்கள்தான் என்று பேசுகிறார் கள். அதுவும்கூட பழக்கம்தான்;

பண்புதான் பிறவியில் வருவது என்பது அவ்வை கருத்து. குறிப்பாக இது சாதிமுறைக்கு எதிரான ஒரு பாட்டு.
ஆனால், இன்று நாம் சில பண்புகள்கூட, பழக்கத்தினால் வருவது என்று நிரூ பிக்கமுடியும். உதாரணமாக திருடுதல் என்பது ஒரு பண்பா, தொழிலா? அது பண்பு, பிறவியினால் வருவது என்று கருதித்தான் முன்பு ஆங்கிலேயர்கள் ஒரு தனித்த பிரி வையே உருவாக்கினார்கள். அது பழக்கத்தினால் வருவது என்பதால்தான் இன்று சீர்திருத்தப்பள்ளி வைத்தோ, உளவியல் மருத்துவரிடம் அனுப்பியோ அதைக் களைய முற்படுகிறோம்.
தமிழ்நாட்டில் பல அவ்வையார்கள் இருந்திருக்கிறார்கள். இன்று சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி என்பதுபோல அன்றைக்கு அவ்வை என்பதும் புழக்கத்திலிருந்த ஒரு சிறப்புப் பெயர் (ப்ராபர் நௌன்). இந்தத் தனிப்பாட்டை எழுதிய அவ்வையார் பிற்காலத்தியவர். இவர் சங்க காலத்து அவ்வையார் அல்ல.

கேள்வி: செவ்வியல் என்ற சொல்லை (உதாரணமாக செவ்வியல் தமிழ்) அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதற்கு என்ன அர்த்தம்? 
செவ்வியல் என்ற சொல் இரண்டு தனித்த அர்த்தங்களில் கையாளப்படுகிறது.
ஒன்று, காலத்தினால் பழமையானது, முற்பட்டது என்பது. இதை ஆங்கிலத்தில் கிளாசிகல் என்ற சொல்லால் குறிப்பார்கள். தமிழ் ஒரு கிளாசிகல் (செவ்வியல்) மொழி, செம்மொழி. காலப்பழமைதான் இங்கு முக்கியம் என்றாலும், தனித்து இயங்கு கின்ற தன்மை, இலக்கிய-இலக்கண வளத்தைப் பெற்றிருக்கின்ற தன்மை, சிறந்த பண்பாட்டைப் பெற்றிருக்கின்ற தன்மை ஆகியவையும் இந்தப் பொருளில் அடக்கம்.

முன்பெல்லாம் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளை மட்டுமே செவ்வியல் மொழிகள் என்றார்கள். பிறகு இதில் அராபிய மொழியும் சேர்ந்தது. இவற்றில் சேர்த்துச் சொல்லப்படாவிட்டாலும் இவற்றுக்கு இணையான வளம்கொண்ட செம்மொழி தமிழ்.

செவ்வியல் என்ற சொல்லின் அடிச்சொல், செம்மை (சிறப்பானது). எனவே செவ்- என்ற அடைமொழி சிறப்பான எந்தப் பொருளுக்கும்/தன்மைக்கும் பொருந்தும். அதனால்தான் தமிழில் கடவுளைக்கூட செவ் + வேள் ‘செவ்வேள்’ என்றார்கள். பழங் கால நூல்களே அன்றி, சிறந்த நூல்கள் எல்லாம் ‘கிளாசிக்’(ஸ்)-செவ்வியல் நூல்கள் எனப்படுகின்றன. ஆங்கிலம் தமிழைப்போல அவ்வளவு பழமை உடையது அல்ல என்றாலும், இன்றும் எழுதப்படுகின்ற சிறந்த நூல்கள் எல்லாம் செவ்வியல் நூல்கள் என்றே கருதப்படுகின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மட்டும் கிளாசிக்ஸ் அல்ல, ஜாய்ஸ் எழுதிய டப்ளினர்ஸ் கதைகளும் கிளாசிக்ஸ்தான்.

தமிழுக்குச் செம்மொழித்தன்மை பெற்ற முறைதான் வருந்தத்தக்கது. இதில் நம் அரசி யல்வாதிகளும் அறிஞர்களும் கோட்டை விட்டுவிட்டார்கள். தமிழ் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடைய மொழி என்பது (வெறும்) அந்தஸ்து அளிப்பதைவிட முக்கியமானது. ஆனால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தபோது அது ஆயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த மொழி என்று கூறியே இந்திய அரசாங்கம் அளித்தி ருக்கிறது. இது மிகவும் கேவலமானது என்பதோடு, தமிழை சமஸ்கிருதத்திற்கு பிற்படுத்தியும், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளையும் தமிழோடு காலத்தினால் ஒப்பவைத்து நோக்குவதாகவுமே அமைகிறது.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 8

pongal_22
கே. நாட்டுப் பற்று, தேசத்துரோகம்-இந்தச் சொற்கள் இப்போதெல்லாம் அரசியல் வாதிகள் பேச்சிலும் ஊடகங்களிலும் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவற்றுக்கு விளக்கம் தேவை. (சிவானந்தம், கடலுர்)

முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ளவேண்டியது நாடு வேறு, அரசு வேறு, அரசாங்கம் வேறு. ஆங்கிலத்தில் நாடு என்பதை country என்பார்கள். தேசத்தை nation என்பார்கள். அரசு என்பது state. அரசாங்கம் என்பது government , நிர்வாக முறை. தேசம் என்பது ஓர் இன மக்களைக் குறிக்கும் சொல். நாடு என்பது அந்த இன மக்கள் வாழும் எல்லைக்குட்பட்ட, நிர்வகிக்கப்படுகின்ற பிரதேசம் என்று வைத்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் மறைத்தல், தேசியக் கொடி போன்ற அரசாங்கச் சின்னங்களை மதித்தல், தேசியகீதம் பாடுவது, அரசியலமைப்புச் சட்டம் புனிதமானது என்று போற்றுவது, நம்நாடு அல்லது கலாச்சாரம்தான் உலகத்திலேயே உயர்ந்தது என்று பேசுவது இவையெல்லாம் நாட்டுப் பற்றுக்கு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவை புற அடையாளங்களே ஒழிய, உண்மையான நாட்டுப்பற்று அல்ல. தேசிய கீதம் பாடுவதற்கும் சைவன் ஒருவன் திருநீறு பூசுவதற்கும் வித்தியாசம் ஒன்று மில்லை.
திருநீறு பூசிக்கொண்டே சைவக்கொள்கைகளுக்கு எதிராக நடப்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? அதுபோலத்தான் தேசியகீதம் பாடுபவர்கள் அல்லது அரசியல் சட்டத்தைப் புனிதமாகப் போற்றுபவர்கள் பேசுபவர்கள் நாட்டுப் பற்றாளர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உண்மையில் நாட்டு மக்களை-எந்தப் பகுதியில் அவர்கள் வாழ்ந்தாலும்-மதித்து அவர்களைப் பாதுகாப்பது, அவர்கள் உரிமைகளைப் போற்றுவது, அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை எவ்விதத்திலும் மறுக்காமல் இருப்பது இவைதான் முதலில் நாட்டுப்பற்றுக்கு அடையாளம். அரசாங்கம் இன்றைக்கு ஒரு விதமாக இருக்கும், நாளைக்கு மாறும். இன்று ஒரு கட்சி அரசாட்சியில் இருக்க லாம், நாளை மாறலாம். இவற்றைக் குறைகூறுவதும், இவை செய்யும் தவறு களை எடுத்துரைப்பதும் நாட்டுப்பற்று அல்ல என்று நமது அரசியல் கட்சியாளர் கள் (குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர்) கருதுகிறார்கள். அதற்கேற்ப ஊடகங் களும் தாளம் போடுகின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் சில ஊடகங்கள் இருக்கின் றன. கட்சியின் நிர்வாக முறையைக் குறைகூறினால் அவை தேசப்பற்று நாட்டுப் பற்றைக் குறைகூறிவிட்டதாக ஒப்பாரி வைக்கின்றன. மாநில, மைய அமைச்சர் களும் இதற்கு விதிவிலக்கில்லை.

உதாரணமாக, நமது தேசியகீதத்தை எடுத்துக் கொண்டால், பஞ்சாப சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல வங்கா என்று வருகிறது. பஞ்சாப், சிந்து, குஜராத், மகாராஷ்டிரம், உத்கலம் (ஒரிசா), வங்கம் ஆகிய நாடுகள் மட்டும் குறிக் கப்படுகின்றன. தென்னகம் முழுவதையும் திராவிடம் என்ற ஒரேசொல் அடக்கி விடுகிறது. வடக்கிலுள்ள ஆறுகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. தெற்கு பற்றி வேறு குறிப்புகளே கிடையாது. இதைச் சொன்னால் நாட்டுப் பற்று இல்லாதவன், தேசத்துரோகி என்பார்கள். ஒரு நாட்டுக்குப் பொதுவான தேசிய கீதம் இப்படியா இருப்பது?

நாட்டுப்பற்றுக்கு எதிரானது தேசத்துரோகம். நமது நாட்டை வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்பவர்கள் யார்? நமது மக்களின் உரிமைகளைப் பறித்து அயல் நாட்டுக் கம்பெனிகளுக்கு வாரி வழங்குவது யார்? அவர்கள் கொள்ளை அடிக்க நமது நாட்டு வளங்களைத் திறந்துவிட்டு, அங்குள்ள ஏழை மக்களை இடம் பெயர்ப்பது யார்? நமது நாட்டு மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதை விட்டு இன்னொரு நாட்டுக்காரனுக்கு செல்வத்தை வாரி வழங்கி அவன் இரா ணுவத்திற்கும் பயிற்சி அளிப்பது யார்? இவர்களெல்லாம் நாட்டுத் தலைவர்களா, தேசத் துரோகிகளா? கூடங்குளத்திலிருந்து 29 கி.மீ.இல் நாகர் கோவில் இருக்கும்போது அதைப் பாதுகாப்பான இடம் என்று தேர்வு செய்து மக்களை ஒழிக்கும் திட்டத்தை அமுல்படுத்துவது யார்? மேலே கூறியதைச் செய்பவர்கள் யாரோ அவர்கள்தான் இன்று தேசத் துரோகிகள்.

இவர்கள் சொல்லுவதுதான் நாட்டுப்பற்றாக இருக்கிறது, வயிற்றுக்கே போராடுகின்ற ஏழை எளியவர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டை-பிற உரிமைகளைக் கூட அல்ல-கேட்டால் அவர்கள் தேசத்துரோகிகள் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்காகப் போராடுபவர்கள் நக்சலைட் என்று முத்திரைகுத்தப்பட்டு ஒழிக்கப்படுகிறார்கள். வேறு எந்த நாடாவது சொந்த மக்களையே கொன்று குவித்துப் பார்த்திருக்கிறீர்களா?

உண்மையில் அரசாங்கத்தை விமரிசனம் செய்வது சிறந்த நாட்டுப்பற்றே ஆகும். நாடு முன்னேற வேண்டும் என்ற அக்கறையில்தானே அந்த விமரிசனம் செய்யப் படுகிறது? அடுத்தபடியாக தனிமனித அளவில் என்று சொன்னால் நமது கடமை யை ஒழுங்காகச் செய்வதுதான் நாட்டுப்பற்று. அரசாங்க அதிகாரிகள், தலைவர் கள் என்றால், நாட்டு மக்களுக்கு வேண்டியதைச் செய்வது நாட்டுப்பற்று, மக்கள் உரிமைகளை மறுப்பது தேசத்துரோகம். தொலைநோக்குப் பார்வையில் அரசாங்கத்தை விமர்சிப்பது நல்லது. தேவையானதும் கூட.

கே. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று இன்று பரவலாகப் பேசப்படு கிறது. அப்படி என்றால் என்ன? அவை உண்மையில் தொண்டு செய்கின் றனவா? (பரமேஸ்வரன், காட்பாடி)

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்பவை அரசாங்கத்துக்குச் சம்பந்த மில்லாத, ஆனால் ஏதேனும் ஒரு கொள்கைப்படி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பட்ட நிறுவனங்கள் என்று பொதுவாக வரை யறை செய்யப்படுகின்றது. இன்று இந்தியாவில் யார்வேண்டுமானாலும் ஒரு தொண்டு நிறுவனத்தை அமைக்கலாம். அதற்காகப் பண உதவி பெற்றுத் தொண்டுசெய்கிறேன் என்று கூறலாம், ஏமாற்றவும் செய்யலாம்.

இன்று இந்தியாவில் ஏறத்தாழ 40000 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இவை உண்மையான தொண்டு செய்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். மக்களுக்கு விழிப்புணர்வு தருவதைவிட அவர்கள் அறிவை மழுங்கடிப்பதைத்தான் இவை நன்றாகச் செய்கின்றன.

இன்று உலகமயமாதல்தான் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம். தனியார்மயமாதலின் இன்னொரு பெயர்தான் அது. பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் ஆதிக்கத்தை உலகின் எல்லாப்பகுதிகளிலும் நிறுவச் செய்யப்பட்ட ஏற்பாடுதானே அது? தொண்டு நிறுவனங்களும் இந்தப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் சார்பாக இயங்குபவையே.

மேலும் அரசு செய்யவேண்டிய பல சேவைகளைத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் நிலையும் இருக்கிறது. இது ஜனநாயகத் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும். அரசுத் துறைகள் பெயரளவிலாவது மக்களின் கட்டுப்பாட்டில் இருக் கின்றன. ஆனால் தொண்டு நிறுவனங்கள் அப்படி அல்ல. அவை தங்களுக்கு நிதி உதவி செய்கின்ற பெருநிறுவனங்கள், பெரும்பணக்காரர்களின் கட்டுப்பாட் டில்தான் இயங்கமுடியும். பலசமயங்களில் அரசாங்க அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பிறர் பெயரால் (பினாமியாக) தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு அந்தந்த சமயத்திலான சிறு ஆறுதலை வழங்கி, அவர்க ளுடைய விமரிசனப் பண்பையும் போராட்ட குணத்தையும் மழுங்கடிக்கின்றன என்பது மார்க்சிய நோக்கிலான விமரிசனம்.

நல்ல மக்கள் நல அரசாங்கம் செயல்பட்டால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வேலையில்லை.


தமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு

thamil-naagarigam5

தமிழன் என்றொரு இனமுண்டுதனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில்என் சிந்தனையில்அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்லவந்தவர்கள் கலாச்சாரத்தையும் தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்தக் கலாச்சாரத்தைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு.

வடமொழிக்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ் எவ்வளவோ தொண்டு செய்திருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானிகளில் இருவர் தமிழகத்தில் தோன்றியவர்கள் (ஆதி சங்கரரும் இராமாநுஜரும்-ஆதிசங்கரர் தோன்றிய காலடி இன்று கேரளா என்று கூறப் பட்டாலும் அந்தக் காலத்தில் சேரநாடுதான்.) கும்பகோணத்திலும் காஞ்சிபுரத்திலும் இருந்த வடமொழி அறிஞர்கள் (இவர்கள் எல்லாரும் பிறப்பினால் தமிழர்கள்தான்) தமிழில் இருந்த வளமான நூல்களை எல்லாம் (அன்று சமஸ்கிருதம் இந்தியாவின் பொதுமொழி என்று கருதப்பட்டதால்) சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொடுத் தார்கள்சொந்தமாகவும் எழுதினார்கள். சாணக்கியர்பரதர் முதற்கொண்டு பல ஞானி களும் தமிழகத்தில் தோன்றியவர்கள்தான். இந்த அளவுக்கு வடமொழிக்குத் தொண்டு செய்த இனத்தைப் பார்த்துத்தான் இன்று சிலர்,இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள்.

சமசுகிருதத்துக்கு மட்டுமல்லவிஜயநகர ஆட்சியில் இருந்ததால் கன்னடம்தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் தமிழர்கள் எவ்வளவோ தொண்டுசெய்திருக்கிறார்கள். தமிழுக்குக்கூட அவர்கள் பாடுபட்டதில்லை. மாஸ்தி வேங்கடேசரும்உள்ளூரும் தமிழர்களே அல்லவாஇப்படிப்பட்ட மக்களைப் பார்த்துத்தான் இனவெறி கொண்ட மக்கள் என்கிறார்கள் சிலர். நம் தமிழகத்து ஆர்.கே. நாராயனணையும்ஏ.கே. இராமாநுஜனையும்கூட கன்னடப் பிரதேசத்தில் வாழ்ந்ததால் அவர்கள் எழுத்தாளர்கள் என்று முறையற்ற சொந்தம் கொண்டாடுகிறார்கள் அவர்கள்.

இந்த ஏமாளித் தமிழக மக்களைப் பார்த்துத்தான் மொழிவெறிஇனவெறி பிடித்தவர்கள் என்கிறார்கள் சிலர்.

எல்லா இன மக்களும் அவரவர் சொந்த மொழியில்தான் பெயர்வைப்பார்கள்பேசுவார்கள்பாடுவார்கள்கவிதை கதை முதலிய இலக்கியங்களை வளர்ப்பார்கள். இதில் என்ன தவறு இருக்கிறதுஎந்த ஆங்கிலேயனைப் பார்த்தாவது நீ ஜேம்ஸ் என்று பெயர் வைத்துக்கொள்ளாதேவாஞ்சிநாதன் என்றுதான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமாஆங்கிலப் பாட்டைவிட்டு நீ இந்தியில் அல்லது ரஷ்யனில்தான் பாடவேண்டும் என்று சொல்ல முடியுமா?

ஆனால் தமிழில் பெயர் வைத்துக்கொண்டால் மட்டும்தமிழில் பேசினால் மட்டும்தமிழில் பாடு என்று கேட்டால் மட்டும் அது குறுகிய மொழி வெறியாம். இப்படிப் பட்டவர்களைப் பக்கத்திலுள்ள பெங்களூருக்கோ மைசூருக்கோ அனுப்பினால் போதும்நீ உன் மொழியில் (அங்கே கன்னடம்) பேசாதேபாடாதேபெயர் வைத்துக் கொள்ளாதே என்றால் போதும்தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விடுவார்கள்.

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. இதுதான் தமிழனின் தனிப் பண்பு போலும்.

அபர்ணா என்ற சொல்லுக்கு ஆடையற்றவள் என்று ஒருவர் பொருள் சொன்னால் உடனே அது பார்வதி என்ற தெய்வத்தின் பெயராயிற்றே எப்படிச் சொல்லலாம் என்று குதிக்கிறார் ஒருவர். தெய்வம் எந்த ஆடை அணிந்திருந்தது என்று அவர் போய்ப் பார்த்துவிட்டுவந்து சொல்லட்டும். தெய்வத்தை அவள் அவன் என்று கூடச் சொல்லக் கூடாது தத்‘-அது என்றே சொல்லவேண்டும் என்பதுதான் நமது வேதாந்த மரபு. “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று இறைவனின் உருவமற்ற,நாமமற்றபண்புகளற்ற (நிர்க்குணத்) தன்மையைப் பாடினார் மாணிக்கவாசகர்.

அதெல்லாம் போகட்டும்அபர்ணா கதைக்கு வருவோம். பர்ண என்றால் இலை. இலைகளால் வேயப்பட்ட குடிலைப் பர்ணசாலை என்றார்கள் (இதுவும் இலை அணிந்த வீடுதான்இலை தின்னும் சாலை அல்ல). பர்ணா-இலை உள்ளவள்இலை ஆனவள்இலையை அணிந்தவள். அபர்ணா என்றால் இலை ஆகாதவள்இலையை அணியாதவள். (இலையை உண்ணாதவள் என்று வலிந்து பொருள் சொல்கிறார்கள் இங்கே.) பழங்காலத்தில் பெண்கள் தழையாடைஇலையாடை அணிவது மரபு. இது வடநாடு முதல் தென்னாடு வரை உள்ள பழக்கம்தான். குறிஞ்சிப்பாட்டில்கூடதலைவியும் அவள் தோழியும் சுனையில் நீராடிவிட்டுஆங்காங்கு கிடைத்த இலை தழைகளைக் கொய்து உடுத்திக் கொண்டார்கள் என்று ஒரு நீண்ட பகுதி வருகிறது. இவர்கள் எல்லாம் பர்ணாக்கள். அதாவது இலை அணிந்தவர்கள். அபர்ணா என்றால் இலைகூட அணியாதவள்அதனால் நிர்வாணி என்று பொருள் கொள்வதில் என்ன தவறு?

அபர்ணா என்ற பெயர் பார்வதியைக் குறிக்கும் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். பார்வதி சிவனை மணப்பதற்கு இமவான் மகளாகப் பிறந்து மன்மதன்-ரதியை அனுப்பிப் பார்த்தாள். கதை நடக்கவில்லை. தட்சன் மகளாகப் பிறந்து தாட்சாயணி ஆகியும் எரிந்துபோனாள். அதனால் கடைசியாக உணவு ஏதுமின்றி (அதாவது இலைகூட உண்ணாமல்) தவம் செய்ததால் அபர்ணா என்று பெயர் பெற்றாளாம் பார்வதி. ஒரு கனிகூட உண்ணாமல் என்றால் நாம் ஒப்புக்கொள்ளலாம். ஒரு இலைகூட (அதாவது கீரை என்று அர்த்தம் கொள்ளவேண்டுமாம்) உண்ணாமல் இருந்ததால் பார்வதி அபர்ணா ஆனாளாம்.

தமிழகத்தில் பலபேரும் பெயரின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டா பெயர் வைக்கிறார்கள்ஏதோ வழிவழியாக வருகிறதுஅவ்வளவுதான். நல்ல தேனாக இனிக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கலாமேஇப்படிச் சுற்றலில் விடும் (ambiguous) வடமொழிப் பெயர்களை ஏன் வைக்கவேண்டும் என்று ஒருவர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?தமிழ்நாட்டிலேயே தமிழ்ப் பெயர்களை வைக்கப்போவதில்லை என்றால்வேறு எந்த நாட்டில் போய் வைத்துக் கொள்ளச் சொல்வது?


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 7

1378158449993
கேள்வி: தமிழ்நாட்டில் பட்டிமன்றங்கள் பல நடக்கின்றன. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: 
பட்டிமன்றம் போன்ற பாணியில் இலக்கிய விவாதங்களை நடத்துவது இந்திய மொழிகள், கலாச்சாரங்கள் பலவற்றிலும் உண்டு. குறிப்பாக, உருது, இந்தி போன்ற மொழிகளில் இதை நன்றாக நடத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் பட்டிமன்றங்கள் சற்றே வேறுபட்டவை, விசித்திரமானவை. ஒன்று, இது திராவிடக் கட்சிகளால் ஆரம்பித்து, ஆதரிக்கப்பட்டது- ஓர் அரசியல் விளைவு என்பது.
ஆரம்பத்தில் பட்டிமன்றம் பெரிய நன்மையாகவே இருந்தது. சாதாரண மக்கள் பேசும் உரிமை பரவலாக இல்லாத ஒரு நாட்டில், பட்டிமன்றம் ஒரு ஜனநாயக அமைப்பாகவே- பலருக்கும் பேசும் வாய்ப்புத் தருகின்ற அமைப்பாகவே முதலில் செயல்பட்டது. யாரோ முன்பின் தெரியாதவர்கள்-வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள்- வந்து தங்கள் கருத்துகளை மேடையில் வெளிப்படுத்துவது ஒரு ஜனநாயக நடைமுறையைப் பிரபலப்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும். இன்றுள்ள அரட்டை அரங்கம் போன்றவை முதலாக நீயா-நானா வரைகூட அப்படித்தான்.
இப்போது பட்டி மன்றம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லை. எண்பது தொண்ணூறுகளிலிருந்த வரவேற்பு இப்போது அவற்றிற்கு இல்லை. யாரோ ஒரு சிலர்-பாப்பையா, லியோனி போன்றவர்கள் பழம் புகழில் குளிர்காய்ந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு பதிலாக வேறு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வந்துவிட்டன. பட்டிமன்றம் தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மிகப் பிரபலம் அடைந்திருந்த ஒன்று.

இதுவும்கூட ஆரம்பத்தில் ஒருமாதிரியாக இலக்கியக் களமாகத்தான் தொடங்கியது. பலர், பட்டிமன்றத்தின் முதல் தலைப்பே “கற்பில் சிறந்தவள் கண்ணகியா-மாதவியா” என்று கூறுவார்கள்.

ஆனால் பிற்காலத்தில் இது வெறும் காட்சி ஆகிவிட்டது. செயற்கையான தலைப்புகள், அலங்காரப் பேச்சுமுறை, வெறும் நகைச்சுவைக் களஞ்சியமாக-நகைச்சுவைகளின் தொகுப்பாக ஆக்குதல்-கைதட்டல் வாங்குவதற்காகவே பேசுதல்-கருத்துகளுக்கு முக்கியத்துவமின்மை போன்ற தன்மைகள் அவற்றின் இலக்கியப் பண்பையும் விவாதத் தன்மையையும் இல்லாமல் செய்து கேளிக்கை ஆக்கி விட்டன. நான் முதலிலிருந்தே பட்டிமன்றத்தை எதிர்த்தவன். அதற்குக் காரணம், அதன் கோமாளித்தனமோ செயற்கைத்தன்மையோ கூட அல்ல. எந்தப் பிரச்சினையையும் அது நோக்கும் தன்மைதான்.

பட்டிமன்றம், எந்தப் பிரச்சினையையும் (இலக்கியம், சமூகம் சார்ந்த எதுவா யினும்) இரண்டு எதிரெதிர் முனைகளாக- அமைப்புவாதத்தில் துருவ எதிர்வுகள் அல்லது இருமை எதிர்வுகள் (binary opposites என்று சொல்வார்கள்-அப்படிப் பகுத்துப் பார்க்கிறது. இது ஒரு கோளாறான பார்வை. உதாரணமாக நன்மை-தீமை என்று இரண்டு எதிரெதிர் முனைகளில் சமுதாயத்தில் காணும் எல்லாவற்றையும் அடக்கிவிட முடியுமா?  வெள்ளை-கருப்பு என்ற இருமையில் எல்லாமே வந்துவிடுமா? இடையில் எத்தனை விதமான சாம்பல்நிறச் சாயைகள் இருக்கின்றன? இதுவா-அதுவா என்று பார்ப்பதே தவறான முறை. ஏனென்றால் இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல் அவற்றிற்கு உள்ளேயோ வெளியேயோ ஏராளமான நிலைப்பாடுகள் உண்டு. பட்டிமன்றத்தின் அடிப்படையே இரண்டு அணிகள், ஒரு தலைவர். இரண்டு அணிகள் இரண்டு எதிர்முனைகளை எடுத்து வாதிடுகின்றன. ஆனால் விஷயமே இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையில்தான் இருக்கிறது.

அதனால் அறிவைக் குறுக்குதல், எளிமைப்படுத்திப் பிரச்சினைகளை நோக்குதல் என்ற அடிப்படைத் தவறுகள் பட்டிமன்றத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் அது வரவேற்கத்தக்கதல்ல என்பது என் அபிப்பிராயம்.

கேள்வி: நடிக நடிகையர்கள் அரசியலில் பெரிய தலைவர்கள் ஆகின்றார்களே, அது சரிதானா?

பதில்: ஜனநாயகம் என்றால் மக்கள் ஆட்சி. மக்கள் எல்லாருக்கும் அந்த ஆட்சியில் பங்கேற்கச் சரிசமமான உரிமை உண்டு என்பதுதான் அதன் பொருள். நடிகர்களும் நடிகைகளும் மக்கள்தானே? அந்த வகையில் அவர்களும் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கவோ கட்சிகள் வைக்கவோ தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவோ நாட்டை ஆளவோ உரிமை உண்டு என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அயல்நாடுகளிலும் இப்படி நடிக நடிகையர் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் நடிக நடிகையர் பங்கேற்பதில் ஒரு பெரிய ஆதாயம் அவர்களுக்கு இருக்கிறது. தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இன்று பரவலான ஒரு விளம்பரம்-அல்லது பங்கேற்பவர்களைப் பற்றிய ‘பிம்பம்’(இமேஜ்) ஒன்று தேவையாக இருக்கிறது. பழங்காலத்திலும் இன்றும் பலருக்குச் சமூகத் தொண்டின் வாயிலாகவோ, சமூக அக்கறை சார்ந்த உழைப்பின் வாயிலாகவோ, பெரிய பதவிகள் வாயிலாகவோ அந்த பிம்பம் ஓரளவுக்கு ஏற்படுகிறது. சென்ற நூற்றாண்டின் மத்தியில் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற பிம்பத்தினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். (நான் காமராஜர் போன்ற பெரிய தலைவர்களைப் பற்றிக்கூடச் சொல்ல வரவில்லை. பல ஊர்களில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ், அதில் இருந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பல பஸ் முதலாளிகளும் பணக்காரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.)

சினிமா நடிகர்களுக்கும் நடிகையர்களுக்கும் இந்த பிம்பம் ஏற்கெனவே தயாராக, கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அவர்களைத் திரையிலும் விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் பார்த்துப் பார்த்து அவர்களைக் குடும்பத்தில் ஒருவராக நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த பிம்பத்தை அவர்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஒரு தொகுதியில் யாரோ ஒரு குப்புசாமி நிற்பதற்கும் ஒரு நடிகர் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இது சமமற்ற போட்டி. நடிகர் ஏற்கெனவே முக்கால்வாசி தூரம் ஓடி வெல்லும் நிலையில் இருக்கிறார். எதிர்ப்பவரோ ஆரம்பத்திலிருந்து ஓடியாக வேண்டும். எனவே நடிகர்கள் தங்களுக்கு உரியதல்லாத ஆதாயத்தை அடைகிறார்கள். அது அவர்கள் தொழிலினால் கிடைத்தது. ஒரு எழுத்தருக்கோ விவசாயிக்கோ அதிகாரிக்கோ தொழில்ரீதியாகக் கிடைக்காத விளம்பரம் திரைப்படத் துறையில் கிடைக்கிறது. திரைப்படமும் ஒரு தொழில்தானே? இப்படிப்பட்ட முன் தயாரித்த விளம்பரங்களைப் பயன்படுத்திக் கொள்வது தவறு என்று நான் நினைக்கிறேன்.

மறுபடியும், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு கேவலம் இருக்கிறது. இது நடிக நடிகையர்களுக்குத் திரைப்படத் துறையில் அளிக்கின்ற பட்டம். இதை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பதே நமக்குத் தெரிவதில்லை (மக்கள் எந்தப் பொதுக் கூட்டத்திலும் அல்லது அமைப்பிலும் வழங்கியதில்லை). எந்தப் புரட்சியையும் பார்க்காமலே, பங்கேற்காமலே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, எந்த இராணுவத்தையும் கண்ணாலும் காணாமலே தளபதி, இளைய தளபதி, கேப்டன் போன்ற பட்டங்கள். இவையெல்லாம் நடிகர்களின் பிம்பங்களை ஊதிப் பெருக்குகின்றன. மேலும் காமிரா என்பது ஒரு பொய் சொல்லும் கருவி என்பதையே அறியாத மக்களுக்கு சினிமாவில் முன் வைக்கப்பட்ட கருத்தெல்லாம் உண்மை என்று தோன்றுகிறது. சில பெயர்கள்கூட பிம்பத்தை உருவாக்குகின்றன. ஒரு நடிகர் திருச்சிக்குத் தான் படித்த கல்லூரிக்கு வந்தபோது மாவீரன் என்ற அடைமொழியோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சரித்திரப் பெயருக்குரியவர் மாவீரன்தான். ஆனால், அந்தப் பெயரை உடைய நடிகரும் மாவீரன் ஆகிவிடுவாரா?

இது தமிழகத்தில் மட்டுமே உள்ள கேவலம். பிற நாடுகளில் ரீகன் ரீகன்தான். ராஜ்கபூர் ராஜ்கபூர்தான். மாவீரன் ரீகனோ புரட்சிச் சிங்கம் ராஜ்கபூரோ அல்ல. ஒரே விதிவிலக்கு ஆந்திராதான். அங்கேதான் கிருஷ்ணபகவானாகவும் இராமனாகவும் நடித்த என்.டி.ஆரின் பிம்பத்தை நிஜவாழ்க்ககையிலும் நம்பி வணங்கி ஓட்டுப்போட்டனர். உண்மையில் எந்தக் கடவுளாவது வந்து தேர்தலில் நிற்க முடியுமா என்ற சிறிய சிந்தனைகூட அவர்களுக்கு இல்லை.

இது அவரவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. என்டிஆருக்குப் பிறகு அவருடைய மகனும் அரசியலில் தந்தையின் பிம்பத்திலேயே வெற்றிபெற்று விட முடியும். எம்ஜிஆருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள்கூட ஆட்சிசெய்யமுடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நடிக நடிகையர் அவர்கள் துறையில்- நடிப்பில்-வேண்டுமானால் திறன் உடையவர்களாக இருக்கலாம் (இதையும் உறுதிப்படச் சொல்லமுடியாது). ஆளுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட சினிமாக் காட்சிகளில் தவிர, நிஜமாகவே சமூகத்தைப் பற்றிய அக்கறையை எங்கேயாவது வெளிப்படுத்தியிருக்கிறார்களா? சமூகத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு என்ன? எந்தச் சமூகப் போராட்டத்திலாவது ஈடுபட்டார்களா என்பது பற்றியெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும்.


ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

Catch22

ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

இது ஒரு அமெரிக்க நாவல். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இருக்கும். என் நண்பர் ராஜன் குறை ஒரு நாள் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். படித்துப்பாருங்கள், ரொம்ப நல்ல புத்தகம் என்றார். ஆனால் அப்போது ஏதோ வேலைகள். ஏறத்தாழப் பத்துநாட்கள் கழித்து அவரிடம் படிக்காமலே திரும்பக் கொடுத்தபோது என்னை மிகவும் கேவலமாகப் பார்த்தார். சரி, சமயம் வாய்க்கும்போது படித்துவிடவேண்டும் என்று நினைத்தேன். சில ஆண்டுகள் கழித்துத்தான் படிக்கமுடிந்தது.
மிகச் சிறப்பான சமூக அங்கதம், நையாண்டி, கேலி. கதையின் சூழல்கள் மிகவும் அபத்தமான நிலைகளுக்கும் மிகமோசமான துன்பியல் நிலைகளுக்கும் இடையில் ஊடாடுகின்றன. கதையைச் சொல்பவன், யோசேரியன் என்ற விமானப்படைக் கேப்டன்.
கேட்ச்-22ஐத் தமிழில் தர்மசங்கடம் என்று சொல்லலாம். ஒன்றைச் செய்தாக வேண்டும் என்று சிலசமயம் நமக்குத் தோன்றும், ஆனால் அதைச் செய்யவே முடியாதவாறு அந்த அபத்தமான சூழல் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நிலையை கேட்ச்-22 எனலாம். உதாரணமாக, நான் அடிக்கடி என் கண்ணாடியைத் தொலைத்துவிடுவேன். அதைக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்போது தான் அடுத்தவரி படிக்கவோ எழுதவோ முடியும். ஆனால் அதைத் தேடுவதற்கே கண்ணாடி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால் தேடுவதற்குக் கண் தெரியாது. என்ன செய்வது? இது ஒரு கேட்ச்-22 சூழல் எனலாமா?
இந்த நாவலின் அபத்தமும் அப்படித்தான். அந்த படைத் தளபதி, தன் வீரர்களை மேலும் மேலும் மோசமான போர்ச்சூழல் பறத்தல்களில் ஈடுபடுத்துகிறார். தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தான் ஒரு பைத்தியம் என்று நம்பவைத்துவிட்டால் இராணுவத்திலிருந்து விடுவித்துவிடுவார்கள். ஆனால் ஒரு பைத்தியம் என்று ஒருவன் விண்ணப்பிக்கும் செயலே அவன் பைத்தியம் அல்ல என்பதைக் காட்டிவிடுகிறது. ஆகவே அவன் விடுவிக்கப்பட மாட்டான். மாறாக மேலும் மேலும் போரில் ஈடுபடுத்தப்படுவான்.
ஏறத்தாழ காஃப்காவின் கதைத் தன்மைகளைக் கொண்ட நாவல். நம் காலத்தின் அதிகாரஆட்சியின் மிகமோசமான குணங்களை இந்த நாவல்போல் எதுவும் விமரிசனம் செய்ததே இல்லை என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆங்கில நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இதைத் தயவுசெய்து படித்துப்பாருங்களேன். இம்மாதிரி தீர்க்கமாகச் சமகால விஷயங்களை விமரிசனம் செய்கின்ற நாவல் எதுவும் தமிழில் வெளிவரவில்லையே என்பது என் மனக்குறை.


இதென்னய்யா, ஜுஜுபி மேட்டர்…

chennai-dialects
மொழியில் ஆர்வம் கொண்டவன் என்ற முறையில் சென்னைத் தமிழ் எனக்கு மிகுந்த சுவையைத் தருகிறது. பலர் அதை இழித்தும் பழித்தும் பேசியிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. விக்கிபீடியாவில் மெட்ராஸ் பாஷைக்கென்றே சில பக்கங்கள், பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது வியப்பாக இல்லையா?

மொழிகள் எவ்வாறெல்லாம் கலப்பு அடைகின்றன என்பதை ஆராய்பவர்களுக்குச் சென்னைத் தமிழ் ஒரு வரப்பிரசாதம். பம்பாயில்-குறிப்பாக பாலிவுட் (இதுவே தனிச் சிறப்புள்ள ஒரு சொல்தான்) பகுதியில் பேசப்படும் மொழி பம்பையா என்றே அழைக்கப்படுகிறது. அதுபோல மீன் பிடிப்பவர்களும் ரிக்க்ஷாக்காரர்களும் நிறைந்த வடக்குச் சென்னைச் சேரிமொழி சென்னைத் தமிழ் (மெட்ராஸ் பாஷை) என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
(குறிப்பு 1: சேரி என்பதைக் கீழ்ச்சாதி மக்கள் தங்கியிருக்கும் இடம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை-சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம் என்று அர்த்தம். பழந்தமிழில் பார்ப்பனச் சேரி போன்ற சொற்கள் புழங்கியுள்ளன. புதிய சேர்ந்து வாழும் இடமாக அமைக்கப்பட்ட பகுதி புதுச்சேரி எனப்பட்டது. இப்படித் தமிழகத்தில் பல சேரிகளைப் பார்க்கலாம். மலையாளத்தில் இது ஸேரி (வடஸேரி, செங்கணாஸேரி… என்று புழங்குகிறது.)
(குறிப்பு 2: இம்மாதிரிச் சொற்கள் காலப்போக்கில் இழிவான அர்த்தத்தைப் பெறுவதை மொழி வரலாற்றாசிரியர்கள் இழிபொருளாக்கம் என்கிறார்கள். உதாரணமாக சேரி என்ற சொல். நல்ல அர்த்தத்தைப் பழங்காலத்தில் பெற்றி ருந்த இந்தச் சொல் இப்போது இழிவழக்காக ஆகிவிட்டது. அதேபோலத்தான் நாற்றம் என்ற சொல். நாற்றம் என்றால் பழந்தமிழில் நறுமணம். இப்போது துர் நாற்றம்தான்! சென்னை மொழியில் கப்பு. இன்றைய தமிழில் நாற்றம் மிகுந்த நங்கையின் கூந்தல் என்று வருணிக்க முடியுமா, பாருங்கள்!)
நமது தொலைக்காட்சிகள், திரைப்படங்களும் சென்னை மொழியைப் பிரபலப் படுத்துகின்றன. உதாரணமாக, இது “ஜுஜுபி மேட்டர்பா” என்பார்கள். இதென்ன ஜுஜுபி? சின்ன விஷயம் என்று பெரும்பாலும் இது பொருள்படுகிறது, ஆனால், அதற்கு மேலும் இருக்கிறது.
கொஞ்சநாளைக்கு முன்னால் ஒரு வடநாட்டு மருத்துவப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சி வைட்டமின் அதிகமாகத் தேவை, நிறைய பழங்கள் தரவேண்டும் என்று சொல்லி, தரவேண்டிய பழங்களில் ஒன்றாக ஜுஜுபி பழம் என்பதைக் குறிப்பிட்டிருந்தது. ஆச்சரியமாகப் போய்விட்டது எனக்கு. உடனே அர்த்தத்தைத் தேடத் தொடங்கினேன். ஜுஜுபி என்றால் இலந்தைப் பழம்.

ஒரு விஷயத்தை இலந்தைப் பழ மேட்டர் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் தான் என்ன? எனக்கு உடனே பணமா பாசமா என்ற பழைய திரைப்படத்தில் வரும் “எலந்தப் பயம், எலந்தப் பயம்…செக்கச் செவந்த பயம்…இது தேனாட்டம் இனிக்கும் பயம்” என்ற ‘அற்புதமான தேனிசைத் தமிழ்ப்பாடல்’ (சொற்கள் எனது என்று யாரும் தயவு செய்து சண்டைபோட வேண்டாம், கலைஞர், ராஜ், மெகா தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் பயன்படுத்தியவை) நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல் இரட்டை அர்த்தம் தொனிப்பது. ஜுஜுபி மேட்டர்பா என்று ஒருத்தர் சொல்வதில் அந்த விஷயத்தின் சின்னத்தனம், சின்னத்தனம் (சின்னமாக இருக்கும் தன்மை) இரண்டுமே வெளிவருகின்றன என்பதுதான் முக்கியம்.
ஜுஜுபி என்ற சொல் கிரேக்கச் சொல்லாம். zizuphus என்ற சொல்தான் ஜுஜுபியாகத் திரிந்தது என்று சொல்கிறார்கள். அந்தக் கிரேக்கச் சொல்லுக்கும் இலந்தைப் பழம் என்றுதான் அர்த்தம்.
இதேபோல ஒருவர் ‘கில்மா மேட்டர்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெண் தன் காதலனோடு உல்லாசமாக இருந்திருக்கிறாள். அதைத்தான் அவர் கில்மா மேட்டர் என்றார். விக்கிபீடியாவில் மெட்ராஸ் பாஷை என்பதைப் பற்றிய பதிவு, ‘அது சுத்தமான தமிழ்ச் சொல்’ என்று பறைகிறது. கில்மா என்று பெண்கள் இப்போது பெயர் வைத்துக்கொள்கிறார்கள். கில்மா என்று பெயர்கொண்ட-திரைப்படத்தைப் பற்றிய-சில இணையதளங்களும் இருப்பதாக அறிகிறேன். ஆகவே கில்மா என்றால் சினிமா என்றுதான் நான் நினைத்திருந் தேன். இன்னொரு இணைய தளம், அதுவும் பெண்ணைக் குறிக்கும் கிரேக்கச் சொல் என்று தெரிவிக்கிறது. Gilma is a Greek feminine name which means, “A beautiful young woman, dedicated and full of life.” சென்னை மொழியிலும் அது பெண்ணைப் பற்றிய விஷயம்தான்-ஆனால் மோசமான விஷயத்தை மட்டுமே அப்படிச் சொல்கிறார்கள் என்பது அதன் பிரயோகத்திலிருந்து தெரியவருகிறது.

பலபேர் சொல்திரிபுகளையும் மெட்ராஷ் பாஷையில் அடக்குகிறார்கள். அது எனக்கு உடன்பாடல்ல. அது கிளைமொழி உச்சரிப்பு பற்றிய ஆய்வில் வரவேண்டியது. உதாரணமாக, ‘வீட்டருகில்’ என்று சென்னைவாசிகள் சொல்லமாட்டார்கள். ‘ஊட்டாண்ட’ என்பார்கள். (மறுபடியும் ஓர் அருந்தமிழ்ப் பாடல்-”வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்”). வீடு என்ற சொல், ‘வ’கரம் உதடு ஒட்டும் எழுத்தாக இருப்பதால் இன உதடு ஒட்டும் எழுத்தான ‘உ’ஆகிறது. அதனால் வீடு, ஊடு (அல்லது வூடு) ஆகிறது. வூடு+அண்(¬)ட=
வூட்டாண்ட. வீடு, அண்டை இரண்டுமே தூய தமிழ்ச் சொற்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
கடைசியாக ஒரு குறிப்பு. சிலபேர், ஒரு சமுதாயத்திலுள்ள உயர்ந்த விஷயங்க ளைப் பேசுவது மட்டுமே கலாச்சாரம் அல்லது பண்பாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சமுதாயத்திலும் நன்மையும், தீமையும் உண்டு. எல்லாவற்றையுமே பேசுவதுதான் நிஜமான பண்பாடு. பைபிளில் அந்தக் காலத்திலேயே கே ((gay -ஓரினச் சேர்க்கையாளர்கள்) ஆசாமிகள் இருந்ததையும் அதுமட்டும் மிஞ்சிப்போனதனால் அந்த ஊரே அழிக்கப்பட்டதையும் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்தது, அக்கால யதார்த்தம். அவர்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுவது பின்வந்தோருடைய மன ஆறுதலுக்கான தீர்ப்பு.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 6

aa
கேள்வி: துரை என்பது தமிழ்ச்சொல்லா? மக்கள் எந்தக் காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்?

பதில்:
 துரை என்ற சொல்லின் மூலம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல் ஐரோப்பியர்கள் நம் நாட்டில் வந்தபிறகுதான் புழக்கத்திற்கு வந்தது. மேலானவர், பதவியில் உயர்ந்தவர் என்ற பொருளில் பொதுவாக ஆங்கிலேயர்களையும், குறிப்பாக அதிகாரிகளையும் துரை என்று அழைப்பது பழக்கமாக இருந்தது. பிறகு அது மக்களின் சிறப்புப் பெயராகவும் காலப்போக்கில் (துரை, துரையரசன், துரைராஜ், பெரியதுரை, தருமதுரை, தம்பிதுரை என்பவை போல) மாறிவிட்டது. இந்தப் பெயர்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு காணமுடியவில்லை.
கேள்வி: ஆன்மிகத்தில் அத்வைதம், துவைதம் என்று கூறுகிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
பதில்: 
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பவை நம் இந்தியத் தத்துவத்தில் வழங்கும் சொற்கள். ஆன்மிகம் வேறு, தத்துவம் வேறு என்பது என் கருத்து. இந்த மூன்று தத்துவங்களுமே தென்னாட்டில் ஏற்பட்டவை. அத்வைதக் கொள்கையை உருவாக்கியவர் ஆதிசங்கரர். அவர் பிறந்த இடம் இன்று கேரளாவில் உள்ள காலடி என்ற ஊர் (அக்காலத்தில்-கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அது தமிழகம்). விசிஷ்டாத் வைதக் கொள்கையை உருவாக்கிய இராமாநுஜர் திருப்பெரும்புதூரைச் சேர்ந்தவர். துவைதக் கொள்கையை உருவாக்கிய மத்வர், உடுப்பியைச் சேர்ந்தவர்.
அத்வைதம் என்பது ஒருமைக் கொள்கை ((monism). அ+த்வைதம். இரண்டு அல்லாதது, ஒன்று, என்பது பொருள். த்வைதம் என்பது இருமைக் கொள்கை (dualism). சுருக்கமா கச் சொல்வதானால், பழங்காலத்தில் ஆன்மாவும் (அதாவது உயிர்களும்) இறைவனும் (தத்துவச் சொல்லாடலில் பிரம்மம்) ஒன்றா, வெவ்வேறா-குறிப்பாக ஜீவன்கள் முக்தி அடைந்தபின் இறைநிலை அடைகின்றனவா, அல்லது இறைவனுக்கு வேறான நிலை யில் உள்ளனவா என்ற கேள்வி பற்றி யோசித்ததன் விளைவு இவை. இறைவனும் ஆன்மாக்களும் வெவ்வேறு அல்ல (இறைவன் பரமாத்மா, மனிதன் ஜீவாத்மா) என்பது அத்வைதம். இவை வெவ்வேறானவை (ஒன்றல்ல, இரண்டுதான்) என்பது துவைதம். மேற்குநாட்டிலும் ஒருமைக்கொள்கை, இருமைக் கொள்கை உண்டு. spirit and matter இவை ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி அது.

கேள்வி: பார்ப்பன வெறுப்பு தமிழ்நாட்டில் ஏன் ஏற்பட்டது? – சதாசிவம், பெங்களூர்

இந்தக் கேள்வி தவறு. பார்ப்பன வெறுப்பு ஏற்படவில்லை, பார்ப்பனிய வெறுப்புதான் ஏற்பட்டது. பார்ப்பனியம் என்பது ஒரு தத்துவம், கொள்கை. அதைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எல்லாச் சாதியினருமே கடைப்பிடிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவராகப் பிறந்தும், வாழ்க்கையில் முன்னேறிவிட்ட பிறகு இன்றைய பார்ப்பனர்களைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் சாதி மக்களையே இழிவாக நோக்கும் தலித்துகளும் பார்ப்பனியத்தில் திளைப்பவர்கள்தான். பார்ப்பனர்களைப்போலவே தங்களுக்குக் கீழுள்ளவர்களை இழிவாக நினைக்கின்ற வேளாளர்கள் போன்ற சாதியினரும் பார்ப்பனியத்தைக் கடைப்பிடிப்பவர்கள்தான்.
எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும் மேல்-கீழ், உயர்ந்த-தாழ்ந்த என்ற வேறு பாடு இல்லையா என்று பலர் கேட்கிறார்கள். பிற மதங்களில் இல்லையா என்ற கேள் வியையும் எழுப்புகிறார்கள். இதற்கு விடை எளியது. பிற நாடுகளிலும், பிற மதங்களி லும், ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது பிறப்பினால் ஏற்படுகிறது என்றும் அப்படிக் கடவுள் (பிரம்மா) எழுதிவைத்தார் என்றும் நியாயப் படுத்துவது இந்து மதத்தில் மட்டுமே நிகழ்கிறது. இதுதான் பார்ப்பனியம். இப்படிப் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு உண்டு என்றால் இந்த மதத்தில் இருப்பதற்கு நாம் வெட்கப்படுகிறோம்.


தமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை

Music-e1339701935618-1024x707
திரைப்படப் பாடல்கள் எல்லாம் கவிதை என்று எத்தனையோ பேர்-கல்லூரிப் பேராசிரியர்கள், நன்கு கற்றவர்கள் உள்பட-நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள்மேல் தப்பில்லை. காலம் காலமாக நாம் இலக்கியத்தை-செய்யுள் வடிவில் எழுதப்பட்டதை எல்லாம் பாடல் என்றே சொல்லி வந்திருக்கிறோம். உதாரணமாக “இந்தச் சங்கப்பாடல் கடினமாக இருக்கிறது” என்போம்.

ஆனால் பாடல் வேறு, கவிதை வேறு. இது காலம்காலமாக-நான் ஏறத் தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் கருத்து. அது மட்டுமல்ல, செய்யுள் என்பதும் வேறுதான். ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகள் முன்னால் இந்தப் பிரிவுகளுக்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் ஆங்கிலக் கல்வி வளர்ந்து, ஆங்கில முறையைப் பின்பற்றி நாம் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்றெல்லாம் ஆளத்தொடங்கிய பிறகு, முன்புபோலப் பேசினால் அர்த்தமில்லை.

முதலில் செய்யுள் என்ற சொல். இதை நாம் உடன்பாடாகவோ (பாசிடிவாகவோ), எதிர்மறையாகவோ (நெகடிவாகவோ) எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் என்றால் செய்யப்பட்ட ஒன்று என்று அர்த்தம். அது கவிதையாகவும் இருக்கலாம், உரைநடையாகவும் இருக்கலாம், புதுக்கவிதையாகவும்கூட இருக்கலாம். ஆனால் பொதுவழக்கின்படி, யாப்பின்படி அமைந்த, கவிதையாகாமல் போய்விட்ட ஒன்றிற்குத்தான் செய்யுள் என்று பெயர்.

அண்ணன்  என்பவன்  தம்பிக்கு  மூத்தவன்

திண்ணை  என்பது தெருவிலே  உள்ளது

கண்ணன்  என்பவன்  கண்ணிரண்டு  உள்ளவன்

வெண்ணெய்  என்பது  பாலினில்  விளைவதே.

இது செய்யுள் என்பதற்கு பேராசிரியர் கைலாசபதி தந்த எடுத்துக்காட்டு. இதில் யாப்பு மிக நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் இதைக் கவிதை என்று நமது நண்பர்கள் கருதமாட்டார்கள் என்பது நிச்சயம்!

கவிதை என்பது ஓர் அனுபவத்தை மனத்திற்குள் விதைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற ஒன்று. அது யாப்பில் அமைந்திருக்கலாம், யாப்பில் இல்லாமலும் இருக்கலாம். யாப்பில் இல்லாததைப் புதுக்கவிதை என்றும் மற்றதை மரபுக் கவிதை என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மிகச் சிறிய கவிதை இதோ-

இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்.

வருகிறோம்-போகிறோம் என்ற இருமை எதிர்வையும், இருப்பதற்கென்றுதான்-இல்லாமல் என்ற முரண்பாட்டையும் பாருங்கள். எவ்வளவு அற்புதமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறது!

இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது பாட்டு. பாட்டு, இசை என்ற கைத்தடி இல்லாமல் நடக்கமுடியாது. ஸ்வரம் மாதா, லயம் பிதா என்பார்கள். ஸ்வரங்களால் ஆன ராகத்தைப் பாட்டு கொண்டிருக்கவேண்டும், லயம் என்ற தாளத்திற்கேற்ப அது நடக்கவேண்டும்-அதாவது பாடப்பட வேண்டும்.

கவிதை பாடப்படவேண்டிய அவசியம் இல்லாதது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறள் கவிதையை-இது நிச்சயம் கவிதை-எந்த ராகத்தில் பாடுவது? பாடுவதுதான் தேவையா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கக்கவிதையை எந்த ராகத்தில், எந்தத் தாளத்தில் பாடுவது? இவற்றைப் படித்து அனுபவிப்பது, உணர்வதுதான் முக்கியம்.

திரைப்படப் பாடல்கள் எல்லாம் பாட்டுகள்தான். பாட்டுகளில் வார்த்தை இல்லாத இடத்தை லாலாலாலா, ராராரீரீ, டபக் டபக்கு டபக்குதான், சிங்கிரி சிச்சான் சிச்சான் ங்ங்கொய்யா என்று எதையாவது போட்டு நிரப்பிவிடுவார்கள். பழைய பாகவதர்கள் என்றால் ஆலாபனையிலேயே இழுத்துவிடுவார்கள். ஆக, இசைக்காக, தாளத்துக்காக எழுதப்பட்டதைப் பாட்டு என்கிறோம். பழைய காலத் திலேயே ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா ஆளுங்கோ ரவுண்டானா அசந்துட்டா டஹல்தானா என்று திரைப்படப் பாட்டு எழுதியிருக்கிறார் தஞ்சை ராமையதாஸ்.

ஆகவே பாட்டு வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்று தெரிந்து கொள்வது நல்லது. பாட்டு எழுதுபவர்களைக் கவிஞர்கள் என்று சொல்வது வழக்கமில்லை. லிரிசிஸ்டு என்பார்கள் ஆங்கிலத்தில். பொயட் என்று அந்தஸ்து தரமாட்டார்கள். நம் ஊரில்தான் பாட்டு எழுதுபவன் எல்லாருமே கவிஞன் என்று போட்டுக்கொள்கிறான்.

நாம் இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களுடனே வாழ்ந்து திரைப் படப் பாடல்களுடனே சாகிறோம். குழந்தை பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே சினிமாப்பாடல் பழக்கமாகிவிடுகிறது.

பாட்டு கவிதை இல்லை என்று சொன்னதால் கெட்டது என்று அர்த்த மில்லை. நம் திருவையாற்றில், பிறகு சென்னையில் ஆண்டுக்கு ஒருமுறை பெரிய சங்கீதத் திருவிழா நடத்துகிறார்களே, எதற்கு? எல்லாம் தியாகராஜ சுவாமிகள் செய்த தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு (பாடல்களுக்கு)த்தான்.

அப்பர் சுவாமிகள், திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி, வள்ளலார் வரைக்கும் இறைவன்மீது பக்திப்பாடல்கள் பாடியிருக்கிறார்கள். வள்ளலார் கீர்த்தனைகளும் பாடியிருக்கிறார். பாரதியார் பாடல்கள் இயற்றியிருக்கிறார். பாரதி தாசன் இசையமுது இயற்றியிருக்கிறார். இவையெல்லாம் நல்ல பாட்டுகள் (அதாவது ஏதோ ஒரு இலட்சியத்தைக் கொண்டு அமைந்த பாடல்கள்) என்று சொல்லலாம். இலட்சியமில்லாத பாட்டுகளையும், பாட்டு எழுதுபவன் வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத பாட்டுகளையும் நான் மோசமான பாட்டுகள் என்பேன்.

வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்

ஆகா, என்ன அற்புதமான வரிகள், எவ்வளவு அற்புதமான கருத்து என்று பாராட்டத் தொடங்கிவிடுவீர்களே? இதை எழுதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியும்.

இது உண்மையான, இலட்சியப் பாட்டு என்றால், அந்தப் பாடலாசிரிய ருக்கு வானம் என்ற போதிமரம் நாளும் தந்த சேதி என்ன? கோடிகோடியாகக் குவித்துக்கொள், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதா? இந்த ஜனங்கள் எல்லாம் முட்டாள்கள், நன்றாக இவர்களை எந்த உருவகத்தையாவது போட்டு ஏமாற்று என்பதா? அதனால்தான் இதுபோன்றவற்றைப் போலிப்பாட்டுகள், ஏமாற்றுப் பாட்டுகள், வணிகப்பாட்டுகள் என்கிறோம். அந்த நேரக் கவர்ச்சிதான் இதற்கெல் லாம் முக்கியம். அதற்குமேல் ஒன்றுமில்லை.

தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் மிக முக்கியமான குணம், பெண்    அடிமைத்தனத்தை உருவாக்குவது. சிறு குழந்தை முதலாகவே திரைப்படப் பாடல்கள் மனத்தில் நம்மை அறியாமல் பதிந்து நம்மை ஆட்சிசெய்துகொண்டே இருப்பதால், பெண் அடிமைத்தனம்-அதாவது பெண்களை அடிமைகளாக நினைப்பது, இரண்டாந்தர மனிதர்களாக நினைப்பது என்ற பண்பு ஆண்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. பெண்களுக்குத் தங்கள் அடிமைத்தனத்தை இது இயல்பானதுதான் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்துவிடுகிறது.

இதற்கு விதிவிலக்கான திரைப்படப்பாடல்கள் மிகக் குறைவு. ஒரு சதவீதம் தேறுவதுகூடக் கடினம். உதாரணத்திற்கு சில பாடல்களை நாம் பார்க்கலாம். நான் எங்கள் காலத்திலிருந்து (ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து) எங்களை பாதித்த-நல்ல இனிமையான பாடல்கள் என்று கருதப்பட்டவற்றிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

1968இல் வெளிவந்த ஒரு பாட்டு-நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன், நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்….என்று செல்வது. உங்களில் பலபேருக்குத் தெரியும் இது.

பலபேர் இது ஒரு நல்ல காதல்பாட்டு என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு காதலன் தன் காதலியைக் கேள்வி கேட்பது போலவும், காதலி அதற்கு விடை சொல்வதுபோலவும் அமைந்திருக்கிறது. காதலன் கேட்கிறான்-

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளைகொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது பரிசென்ன தந்தார்?

(இதையெல்லாம் இந்தக் காதலனே செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம், இது மரபாம்.) அந்தக் காவியக் காதலி அவ்வளவு சுரணை உள்ளவள் அல்ல. அவள் சற்றும் கோபமில்லாமல் சொல்கிறாள்-

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்கிறாள். உண்மை கூறவாம், நினைத்துப்பாருங்கள், எவ்வளவு மோசம் என்று.

இன்னும் பழங்காலப் பாட்டு ஒன்று.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

பெண்ணுக்குச் சிந்திப்பதற்கும் தனக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் உரிமை கொஞ்சம்கூட இல்லையா?

முதல்வராய் இருந்த ஒரு நடிகரின் பாட்டுகளில் பெண் அடிமைத்தனம் மிகப் பச்சையாகவே இருக்கும். ஒரு திரைப்படத்தில் வரும் “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே-இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே” என்ற பாட்டைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். அல்லது “புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற பாட்டைக் கேட்டுப்பாருங்கள். இதில் புரட்டிப்பார்ப்பது, பள்ளியறை என்ற சிலேடை (இரண்டு அர்த்தம் தொனிக்கும் சொற்கள்) வேறு.

இப்படி புத்தகம், கித்தகம் என்ற நல்ல சொற்கள்கூட இல்லாமல்போய், இப்போது சினிமாப் பாட்டுகளில் பெண்ணைக் கட்டையாக்கி, ஃபிகர் ஆக்கிவிட்டார்கள். சற்றும் கூச்சமில்லாமல் நாட்டுக்கட்டே நாட்டுக்கட்டே என்று பெண்ணை விளிக்கிறான் ஆண். பெண்ணும் சற்றும் தயக்கமில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். போய் உண்மையாகவே கிராமத்தில் விளித்துப்பாருங்கள். விளைவு என்னவென்று தெரியும்.

ஆனால் இதையெல்லாம் பொது இடத்தில்- ஏற்றுக்கொள்ளும், பாடும் மனம்-திருவிழாவில் ரிகார்டு போடும் மனப்பான்மை எப்படி உண் டாயிற்று? அதுதான் ஈவ்டீசிங் முதலிய கொடுமைகளுக்குக் காரணம். இப்படிப் பாடல் எழுதுபவர்களை என்ன செய்ய முடியும்? அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.