பூரணச்சந்திரன் அறக்கட்டளை-முதல் நாள் பயிலரங்கம்

29-09-2022 முதல்நாள் நிகழ்ச்சிகள்

இந்த அறக்கட்டளைப் பயிலரங்க நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியிலிருந்து பதினைந்து மாணவ-மாணவியரும், பிற கல்லூரிகளிலிருந்து பதினேழு மாணவ-மாணவியரும் என முப்பத்திரண்டு பேர் பங்கேற்றனர்.

நிகழ்வைத் தொடங்கிவைத்த கல்லூரி முதல்வர் தமிழ்த்துறையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வதாகக் கூறினார். அறக்கட்டளை அமைப்பாளர் க. பூரணச்சந்திரன் மூன்றுநாட்களிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார்.

திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை பேராசிரியர் சாம் கிதியோன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

நேரமின்மையால் கலை இயக்கங்கள் என்ற தலைப்பில் திரு. பூரணச்சந்திரன் பேச இருந்த பேச்சு கைவிடப்பட்டது. தொடர்ந்து கலைப்பட இயக்குநரான திரு. அம்ஷன் குமார் திரைப்படத்தின் அம்சங்களை விளக்க வேண்டி முதலில் மூன்று குறும்படங்களைத் திரையிட்டார். அவற்றில் Glass என்ற திரைப்படம் சிறப்பாகக் கண்ணாடி தயாரிக்கும் முறையை விளக்கியது. மாணவர்கள் எல்லாத் திரைப்படங்களையும் கூர்ந்து கவனித்தனர்.

வாழையிலை போட்டு வழக்கமான குழம்பு-ரசம்-பொறியல்கள்-தயிர் முதலியவற்றுடன் மதிய உணவு மிகச் சிறப்பாக மூன்று நாட்களுக்கும் கல்லூரி கேண்டீனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு மிக உவப்பாக உணவு அமைந்தது.

முதல்நாள் மதிய உணவு உண்ட பிறகு, அம்ஷன்குமார் தானே தயாரித்து இயக்கிய ஒருத்தி என்ற கதைப்படத்தினைத் திரையிட்டார். இது எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் கிடை என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இருந்தாலும் படத்திற்கேற்பத் தேவையான மாறுதல்களை அம்ஷன் குமார் செய்து சிறப்பாக ஆக்கியிருந்தார். மாணவர்கள் திரைப்படத்தைப் பார்த்தபின் அது பற்றி விவாதித்தனர். அவர்களுடைய கேள்விகளுக்கும் விமரிசனங்களுக்கும் அம்ஷன்குமார் விடையளித்தார். அத்துடன் பொதுவாகத் திரைப்படத் தயாரிப்பு பற்றியும் ஓர் அறிமுக உரை நிகழ்த்தினார். ஏறத்தாழ 5.30 மணி அளவில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. பிறகு மறுநாள் மாணவர்கள் ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்ற வீட்டுவேலை அளிக்கப்பட்டது. மாணவமாணவிகள் தங்கள் இருப்பிடங்களுக்குக் கலைந்து சென்றனர்.

General