ப்ளூமின் வகைபாட்டியல்-4

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி

மாணவர்களின் அறிவைச் சோதிக்க, பட்டியலிடு, திரும்பக்கூறு, வரையறு போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. விவாதி, விளக்கு, வருணி போன்ற சொற்கள் மாணவர்கள் தங்கள் புரிந்துகொள்ளலை வெளிக்காட்ட உதவுகின்றன. எண்ணு, வரை, பயன்படுத்து, செயல்படுத்து போன்றவை பயன்பாட்டை வெளிப்படுத்து பவை. ஒப்பிடவும் முரண்படுத்தி நோக்கவும் வகைபடுத்து, கூறாக்கு, ஆய்வுசெய் போன்ற சொற்கள் பயன்டுத்தப் படுகின்றன. பாத்திரமேற்று நடித்தலும், யூகித்தலும் உருவாக்கத்திற்கு உதவும். ஆழ்ந்து நோக்கு, நிர்ணயமசெய், பரிந்துரை போன்றவை மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட மதிப்புகளை வெளியிட உதவும். கேள்விகளிலும் செயல்பாடுகளிலும் செயல்வினைகளைப் பயன்படுத்தி, ஆசிரியர் மாணவர்களை அந்தக் குறிப்பிட்ட நிலையில் இயங்க வைக்க முடியும். பாடத்தை திட்டமிடும்போது புத்தாக்கம் செய்தலும், எந்த அளவு செயல்வினைகளைப் பயன்படுத்த முடியும் என்பதும் ஆசிரியரின் கற்பனைத்திறனைச் சார்ந்தவை.

IX. ப்ளூமின் வகைதொகையியலை வகுப்பறையில், மாணவர்களுக்குப் பயன்படுத்துவது எப்படி?

பாடத் திட்டமிடுதலிலும் (சிலபஸ்) கல்வித்திட்ட (கரிகுலம்) நிர்ணயத்திலும் நாம் இதுவரை ப்ளூமின் மாதிரியைப் பின்பற்றிப் பார்த்தோமா என்பது கேள்விக்குரியது.

IX. ப்ளூமின் வகைதொகையியலை வகுப்பறையில், மாணவர்களுக்குப் பயன்படுத்துவது எப்படி?

பாடத் திட்டமிடுதலிலும் (சிலபஸ்) கல்வித்திட்ட (கரிகுலம்) நிர்ணயத்திலும் நாம் இதுவரை ப்ளூமின் மாதிரியைப் பின்பற்றிப் பார்த்தோமா என்பது கேள்விக்குரியது.

முதலில் மாணவர்களுக்கு தெளிவான திட்டவட்டமான அளக்கக்கூடிய இலக்குகள் தேவை.

இலக்கிய (பிஏ, எம்ஏ போன்ற) வகுப்புகளில் கட்டுரைவடிவ விடையளிப்புக்கு அதிக முதன்மை தர வேண்டும். ஏனெனில் அப்போதுதான் எழுதும் பயிற்சி வளரும். அவற்றில் காலியிடத்தைப் பூர்த்தி செய், பொருத்துக போன்ற கேள்விகள் கேட்டால் மாணவர்களின் அறிவும் வளராது. எழுதும் திறனும் வளராது என்பதை ப்ளூம் குறிப்பிட்டுள்ளார். பழையகால முதுகலை வகுப்புகளில் ‘எஸ்ஸே’ என்று ஒரு தாள் உண்டு. மூன்று மணிநேரம் ஒரே ஒரு கட்டுரையை மட்டுமே விடையாக எழுத வேண்டும். இம்மாதிரிப் பயிற்சிகள் எழுத்துத் திறன், மொழியைக் கையாளும் திறன், பேச்சுத் திறன், கருத்துகளை ஒருங்கிசைக்கும் திறன், ஒரு கருத்தை எடுத்து வாதிடும் திறன் போன்றவற்றை மேம்படுத்தின.

உதாரணமாக ஏதேனும் ஒரு கவிதையை அளித்து அதைத் தக்க முறையில் ஆய்வு செய்து கட்டுரை வரைக என்று கேள்வி கேட்டால், எத்தனை வகையான திறன்கள் மாணவர்களுக்குத் தேவைப்படும்? ஆனால் அதற்குத் தேவையான விமரிசன முறைகளில் பயின்ற, பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களும் வேண்டும். தமிழ்நாட்டில் இரண்டிற்கும் இடமே இல்லை. பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பல்கலைக்கழகக் குழுக்களும் கூட முன்னாள் பாடத்திட்டங்களை அல்லது பிற பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களைப் பார்த்து அரைத்த மாவை அரைப்பவை யாகவே உள்ளன. முன்னேறிச் சிந்திக்கும் நபர்கள் குறைவு. அவர்கள் நமது அமைப்பில் ஓரம் கட்டப்பட்டு விடுகிறார்கள். ப்ளூமின் வகைதொகையியல் இந்த விஷயங்களில் நாம் முன்னேறிச் செல்ல உதவும்.

ப்ளூமின் மாதிரியைப் பின்பற்றினால் மாணவர்களுக்கு முதலில் அவர்கள் பின்பற்றக்கூடிய தெளிவான திட்டவட்டமான அளக்கக்கூடிய இலக்குகள் தேவை. அவற்றை அடைய முன்னரே குறிப்பிட்ட வினைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரு திட்டத்தில் புத்தாக்க அடிப்படைகளைப் புரிந்துகொள்ள ஒப்பிடுக, விவாதிக்க, முன்னுணர்த்துக போன்ற கேள்விகள் மிகவும் பயனுள்ளவை. தேடியறிக, புலனாய்வு செய்க, தொடர்பு படுத்துக போன்ற கேள்விகள் பகுத்தல் நிலைக்கு உதவுபவை. இம்மாதிரி ஆசிரியர்கள் தங்களுக்குள் விவாதித்து ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு நிலைக்குமான கேள்விகளைத் தயாரிக்க வேண்டும். உதாரணமாக, தமிழ் முதுகலை நிலையில்,

சிந்தனையைத் தூண்டும் பாடத்திட்டமும் கேள்விகளும்

தமிழ்ப் புராணங்களில் கிரேக்க சீயூஸ் போன்ற பாத்திரப் படைப்பு உ்ண்டா, ஆராய்க.

காப்பிய முதற்பகுதியில் கண்ணகியைச் செயலற்ற பாத்திரமாகவே இளங்கோவடிகள் படைத்திருப்பதற்குக் காரணம் ஏதேனும் உண்டா? ஆராய்க.

சமண சமயத்தைச் சேர்ந்த சீவகன் பல பெண்டிரை மணப்பதற்கு அக்காலச் சமூக நிலை இடம் தந்தாலும், அதைத் தவிர வேறு காரணங்களாக எவற்றைக் குறிப்பிடலாம்? ஆராய்க.

இம்மாதிரிக் கேள்விகள் சிந்தனையைத் தூண்டுவனவாக அமையும். ஆனால் இதற்கு எத்தகைய தயாரிப்பு தேவைப்படும்? அதற்குத்தான் ப்ளூமின் வகைதொகையியல் நமக்கு உதவுவதாக இருக்கிறது.

பாடவிஷயங்கள், தலைப்புகள், விரிவுரைகள், ஒப்புவிப்புகள், வகுப்பறைச் செயல்பாடுகள் போன்ற பலவற்றால் மாணவர்கள் கற்றல் திறன்களின் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு எளிதாக வர முடியும். நம் வகுப்பறைகளில் விவாதம் என்பது அனுமதிக்கப்படாத ஒன்று. ஒன்று, பாடத்திட்டத்தை முடிக்க அவகாசமில்லை என்று ஆசிரியர் மறுப்பார், மற்றொன்று அவருக்கே விடைகள் தெரியாது. விடைகள் தெரியாவிட்டால் பரவாயில்லை, விவாதம் நடக்கத்தான் வேண்டும். ஏனெனில் சிந்திக்கச் செய்வதே கல்வியின் முதன்மை நோக்கம் என்று ப்ளூம் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான் முதல் பரப்பு, இரண்டாம் பரப்பு ஆகியவற்றை விட மூன்றாம் பரப்பான அறிவு என்பதற்கு மட்டுமே அதிக இடமளித்திருக்கிறார். நம் ஆசிரியர்கள் எத்தனை பேருக்கு மாணவர்களைப் பார்த்து “நான் தெரிந்துகொண்டு வந்து அடுத்த வகுப்பில் சொல்கிறேன்” என்று கூறும் துணிச்சலாவது உண்டு? கல்வி பரந்து விரிந்தும் ஆழமாகவும் செல்லக் கூடியது. நமக்குத் தெரிந்தது கையளவுகூட இல்லை என்ற பணிவு முதலில் வேண்டும். அதை நமது நடத்தைப் பாங்கினால் மாணவர்கள் உணரவேண்டும். வெளிப்படையாக எவருக்கும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. (next slide)

செயலூக்கமுள்ள கற்றல்

நவீன வகுப்பறைகளில் மாணவர்கள் செயலின்றி ஒரு மணிநேரம் சும்மா அமர்ந்திருந்து விரிவுரையைக் கேட்ட காலம் மலையேறி வருகிறது. மொபைல் பேசி போன்றவையும் ஆன்லைன் பாடவிஷயங்களும் இதை மாற்றி வருகின்றன. ஆனால் இ்ம்மாதிரிக் கருகைளை வைத்தும் பழைய முறைகளை மாற்றாமல் கல்வி அளிக்கப்படலாம்.

1. சான்றாக முதல்நிலையான நினைவுகூர்தலில், மாணவர்கள் தங்களிடத்தில் அமர்ந்து முந்தைய செய்திகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அவர்களே அதில் ஈடுபடுமாறு செய்தல் வேண்டும். மாணவர்களைக் குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு பழைய நினைவுகூர வேண்டிய செய்திகளைப் பற்றிக் கேள்வி கேட்க, அடுத்த குழு பதிலளிக்க வேண்டும். இப்படியே மாற்றிமாற்றிச் செய்யலாம். அல்லது ஒரு வகுப்பு முடியும் நிலையில் அதில் சொல்லப்பட்ட செய்திகளை ஒன்றுவிடாமல் நினைவுகூரச் செய்யலாம்.

2. பகுத்தல் நிலையில் பிரச்சினைகள் ஆராயப்படவேண்டும். மாணவர்களின் வாழ்க்கையுடன் குறிப்பிட்ட பாடம் எவ்வகையில் தொடர்புறுகிறது என்று ஒப்பிட்டு நோக்க வேண்டும். 

3. வகுப்பறையில் என்ன நிகழவேண்டும் என்று ஆசிரியர் எதிர்பார்ப்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பது நல்லது. அது சரியான திசையில் மாணவர்களை வழிநடத்தும். இதனால் தங்கள் பயிலுதலுக்கு மாணவர்கள் தாங்களே பொறுப் பேற்குமாறும் செய்யலாம். உதாரணமாக ஒரு சமூகவியல் வகுப்பில் பருவத்தின் இடையில் ஒரு திறன்மிக்க தொலைக்காட்சி விளம்பரத்தின் பகுதிக்கூறுகளை மாணவர்கள் அறிந்தால் மட்டும் போதாது, ஏன் அது அந்த நிறுவனத்துக்கு/ சமூகத்துக்கு முக்கியமானது, எப்படி அந்தக் குழுமத்திலுள்ளவர்கள் ஒற்றுமையாக முழு அளவில் வெற்றிகரமாக அதைத் தயாரிக்கிறார்கள் என்பது போன்றவற்றையும் அறிய வேண்டும். (next slide)

4. முறைப்படியான சோதனை (டெஸ்ட்) களில் ஒரு மாணவர் என்ன தரம் (கிரேடு) பெறுகிறார் என்பதை ஆசிரியர்கள் கணித்துவர வேண்டும். அது படிப்பை மதிப்பிடுவதற்கல்ல, மாறாக மாணவர்கள் ப்ளூமின் வகைதொகைப் படிநிலையில் எவ்விதம் முன்னேறுகிறார்கள் என்பதை அளவிடுவதற்கு உதவுவது. மாணவர்களின் வெற்றி தோல்விக்கான அளவுகோல் அல்ல அது. வகுப்பறை போதனைக்குத் தொடர்ச்சியாக மனத்தில் கொண்டிருக்கவேண்டிய கருவி.

உங்கள் மாணவர்கள் எதைச் சாதிக்க (அடைய) வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அதற்கு மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்ப்பதைவிட, ப்ளூமின் வகைதொகையியலில் அவர்களின் செயல் எந்த இடத்தைப் பெறும் என்பதைக் காணுங்கள். அதை விரிவுரையின் உத்திகள், கேள்விகளுடன் பொருத்திப் பார்த்து, அது எவ்விதம் தேர்வுக்குப் பயன்படும் என்பதை அளவிடுங்கள்.         

நினைவுகூர்தல், புரிந்துகொள்ளல் நிலைகளில், ஆரம்ப வகுப்புகளில் பலவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளும், சரி/தவறு கேள்விகளும் அர்த்தமுள்ளவை. மேல்நிலை வகுப்புகளுக்கும் ப்ளூமின் மேல்நிலைகளுக்கும் வரும்போது வாய்மொழித் தேர்வும் கட்டுரை வடித்தலும் மிகத் தேவையானவை. அவை தேர்வு மதிப்பெண்ணுடன் சம்பந்தப்படாவிட்டாலும், அந்தச் செயல்கள் எந்த அளவுக்கு மாணவர்கள் உண்மையான தேர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பாடவிஷயங்களையோ, தங்கள் அணுகுமுறைகளையோ மாற்றிக் கொள்ள உதவும். ஒட்டுமொத்த மதிப்பீட்டுக்கு வரும்போது இது மாணவர்களை ஆயத்தப்படுத்த உதவும்.

5. தேர்வு மதிப்பீட்டுக்கும் ப்ளூமின் வகைதொகை முறை உதவும். குறிப்பாக இறுதித் தேர்வாக இல்லாத இடைத் தேர்வுகளில் மாணவர்களை நினைவுகூர்தல் முதலாக பயன்படுத்தல் வரையிலான நிலைகள் வரை கேள்விகள் கேட்கலாம். ஆனால் இறுதித் தேர்வில் பகுத்தல், மதிப்பிடுதல், புத்தாக்கம் செய்தல் போன்றவற்றுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.

6. எல்லாவற்றுக்கும் மேலாக பாட விஷயத்துக்கு அப்பால், மாணவர்கள் தங்கள் அறிவை நடைமுறைச் சூழல்களுக்கும் சம்பவங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியவர்களாக வேண்டும். அவற்றைப் பற்றிச் சரியாகக் கருத்துரைத்து அவற்றை ஆதரிக்கும் திறன் வேண்டும். இதையும் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.  (next slide)                

7. பல பாடங்களின் வாயிலாக ஒரே ஒரு நோக்கத்தினை திட்டமிடுதல்

ஒரே ஒரு பாடத்தில் முடிக்க முடியாத ஒரு நோக்கத்தினைப் பல பாடங்களில் முடிக்குமாறு ப்ளூமின் முறை கொண்டு திட்டமிட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, மாணவர்களின் தனித்துப் பணியாற்றவும், தங்கள் விமரிசனச் சிந்தனையை மேம்படுத்திக் கொள்ளவும் ஆசிரியல் பல பாடங்களில் திட்டமிட வேண்டியிருக்கும். ப்ளூமின் வகைதொகையைச் சட்டகமாகப் பயன்படுத்தி மேற்செல்லும் நோக்கம் நடத்தும் பல பாடங்களின்மீது கவிய இயலும். அப்பாடங்களின் தொடக்கத்தில் ஆசிரியர் தான் போதிக்க விரும்பும் நோக்கத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் அந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளும்போது, அந்தத் திறனை அவர்கள் படிக்கும் பலவேறு பாடங்களில் எவ்விதம் பயன்படுத்த இயலும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மெதுவாக அவர்கள் படிநிலைகளில் ஏறி உச்சிக்குச் செல்வார்கள், அந்தக் கருத்தை மதிப்பிடுவார்கள்.

8. வகைதொகை நிலைகளை ஒன்றுசேர்ப்பதன் வாயிலாக பாடங்களை திட்டமிடுதல்

இரண்டிரண்டு நிலைகளாக ஒன்று சேர்த்து மூன்று குழுக்களை உருவாக்கிப் பாடத்தை திட்டமிடும் நிலையை ப்ளூம் அறிமுகம் செய்தார்.

9. ஒரு பாடத்தில் எல்லா நிலைகளும் உள்ளனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ள, அந்த நிலைகளை மூன்றாகப் பகுத்துக் கொள்ளவும்.

ஃ அறிவும் புரிதலும் அடிப்படை நிலைகள்

ஃ பயன்படுத்தலும் பகுப்பும் கருத்துகள்மீது கவனத்தைக் குவித்து ஆராய உதவுபவை

ஃ தொகுப்பும் மதிப்பீடும் மிகச் சிக்கலான உயர்நிலைகள்

பாடத்தை மூன்றாகப் பகுத்து ஒரு குழுவுக்கு ஒரு நிலை என்பதாக அளிக்கவும். ஒவ்வொரு பாடப்பகுதியிலும் முன்வைக்கப்படும் நிலைகளை மையப்படுத்தி செயல்களையும் கேள்விகளையும் வடிவமைக்கவும். ஒரு செயல்பாட்டினையும் இவ்வாறே கையாள முடியும். பாடத்துக்கு பதிலாகச் செயல்பாட்டை மூன்றாகப் பகுத்துக் கொள்ளவும்.

அந்தச் சட்டகத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் கேள்விகளை உருவாக்கலாம்

வகைதொகையைக் கேள்விகளை உருவாக்கப் பயன்படுத்துவது, ஆசிரியர்களுக்குத் தங்கள் பாடங்களை திட்டமிடுவதில் மிக நன்கு உதவுகிறது. மாணவர்கள் தங்கள் சகாக்களைச் சோதிக்கும் அளவில் கேள்விகளை உருவாக்க வேண்டும்.

முதலில் ப்ளூமின் வகைதொகையை உதாரணங்கள் தந்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும். பிறகு வகுப்பைப் பல குழுக்களாகப் பிரிக்கலாம் அவர்களுக்கு ஐந்து முதல் ப்த்து நிமிடம் வரை நேரம் கொடுத்து ஒரு வகைதொகைநிலைக்கு இரண்டு கேள்விகள் வீதம் பாடத்திலிருந்து கேட்கச் சொல்லவும்.

இந்தக் கேள்விகளின் நோக்கம், அவர்களது பாடத்தின் அறிவையும் புரிதலையும் சோதிப்பதற்கு ஆகும். குழுக்களை எதிரெதிராக நிறுத்தி ஒருவர் கேட்கவும் மற்றவர் பதிலுரைக்கவும் செய்யலாம். (next slide)

உதாரணமாக, ப்ளூமின் அமைப்பைப் பயன்படுத்தி மூன்று சவாலுக்குரிய செயல்கள்:

1.விளம்பரம் ஒன்றைத் தயாரித்தல்

2.ஒரு கூற்றினைத் தற்காப்புச் செய்தல் (ஆதரித்தல்)

3.சொந்தமாக எழுதுதல்  

X. ப்ளூமின் வகைதொகையியலை இந்தியா ஏற்ற விதம்

இந்தியச் சூழலுக்குப் பொருத்தமாக ப்ளூமின் திட்டத்தை சில மாற்றங்களுடன் என்சிஇஆர்டி (NCERT) ஏற்றுக் கொண்டுள்ளது. அறிவாற்றல் தளத்தை மட்டுமினறி, மூன்று பரப்புகளையுமே அது ஏற்றுக்கொண்டுள்ள விதம் பாராட்டத் தக்கதாக உள்ளது. 

​அறிவாற்றல் பரப்பில், அறிவு புரிந்துகொள்ளல் இவற்றுடன், பயன்பாடு என்ற ஒன்றைச் சேர்த்துள்ளது என்சிஇஆர்டி. இதில் பகுப்பு, தொகுப்பு, மதிப்பீடு ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன. உளஉடல் இயக்கப் பரப்பில் திறன் என்ற ஒன்றை மட்டும் ஏற்றுள்ளது. இவை பாடசம்பந்தமான எந்தத் திறனாகவும், படம் வரைதல் முதலாக நடிப்பது, சோதனை செய்வது வரை எதுவாகவும் இருக்கலாம். உணர்ச்சிப் பரப்பில், பாராட்டு, ஆர்வம், மனப்பாங்கு ஆகியவை உள்ளன. ஆளுமைகள், நிகழ்வுகள், பண்பாடு, மரபு, தனிமனிதர்களின் நற்செயல்கள் போன்ற எல்லாமே பாராட்டில் அடங்கும். மேலும் கற்று, செயல்களில் (நேர்காணல், ஆல்பம் தயாரிப்பு, புல்லடின்கள், இதழ் நடத்தல், பிற திட்டங்கள் போன்றவற்றில்) ஆர்வம் கொள்ளுதல் அடுத்த நிலை. இறுதியாக இவற்றின் விளைவாக ஆக்கபூர்வமான மனப்பாங்கு ஏற்பட வேண்டும்.

NCERTயின் கோட்பாட்டின்படி போதனை நோக்கங்களும் குறித்த நோக்கங்களும்

ஒரு பயனுள்ள விளைவை அடைய வகுப்பறை போதனைக்கு திறன்மிக்க திட்டம் தேவையாகிறது. பாடத்தை திட்டமிடுவதில்தான் வகுப்பறைச் செயல் அடங்கி யுள்ளது. பொதுவான போதனை திட்டத்திற்குள் குறிப்பான நோக்கங்கள் அடங்குகின்றன. இவற்றை ஓர் அட்டவணை வாயிலாகக் காண்போம்.  

XI. ப்ளூமின் மீதான விமரிசனங்கள்

ப்ளூமின் வகைதொகையியல் என்பது மாற்றமுடியாத விதிகளைக் கொண்ட சட்டவிதிப் புத்தகம் அல்ல. தனிப்பட்ட போதனைப் பாங்குகள், வழிமுறைகள், பாடத் திட்டமிடல்கள் போன்றவற்றுக்குப் பொருந்தக்கூடிய வழிகளைக் கொண்ட ஒரு கோட்பாட்டுக் கட்டமைப்புதான் அது. சில உளவியலாளர்கள் அது கீழ்நிலைக் கற்றலுக்குத்தான் உதவும் என்கிறார்கள். மாணவர்கள் கற்கும் செயல்முறை முழுவதிலும் தங்கள் மனங்களில் தாங்களாகவே அறிவை உருவாக்குகிறார்கள் என்னும் புதிய அறிவாற்றல் உளவியல் முன்னேற்றங்களை அது ஏற்கவில்லை என்கிறார்கள். பலர் அடிப்படைநிலையிலிருந்து உச்சநிலைக்குச் செல்லுதல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது, ஆகவே இதை ஏற்கவியலாது என்கிறார்கள்.

பலரும் படைப்பாக்கம் என்பது ஒரு இலக்கன்று, அது ஒரு கருவியாகப் பயன்படக்கூடியது என்றும் தெரிவிக்கிறார்கள். அதனை அடிப்படை நிலைகளிலேயே உருவாக்கலாம் என்றும், அதை மேற்கொண்டு பாட போதனைக்குப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். உதாரணமாக சிறுவகுப்புகளிலேயே உலகம் வெப்பமயமாதலைப் பற்றி அவர்கள் கண்கூடாகக் காணும் வெள்ளம், புயல், சுனாமி, வறட்சி போன்றவை வாயிலாக அறிமுகப்படுத்தி அதற்கான தீர்வுகளை அவர்களே காணச் சொல்லலாம் என்றும், அதை மேற்கொண்டு பாடம் நடத்துவதற்கான (அதைப்பற்றிய அறிவை அளிப்பதற்கான) அடிப்படையாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள்.

இலக்கியத்தில் சிறார்களே புத்தாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகுதி. பாரதி சிறுவயதில் படம் மடம் கடம் என்று எதுகைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். அது பின்னர் அவர் ஒரு பெரிய கவிஞராக வழிவகுத்தது. (next slide)

சிலர் ப்ளூமின் கட்டமைப்பை ஒரு முக்கோணமாக அன்றி மண்டல அமைப்பிலும் காணலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். (next slide)

எவ்விதமாயினும் முற்றிலும் இதன்மீது அதிநம்பிக்கை வைப்பது தேவையற்றது என்றும் தேவைப்படும் நிலைகளில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.  

நம்மைப் பொறுத்தவரை, இதன் பயன்கள் எவ்விதம் இருப்பினும் நமது சூழல்களை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். நம் ஆசிரியர்களைப் படிக்கவேண்டாம் என்று அரசே தடுக்கிறது. படிப்பதைக் கற்றுத் தருவதன்றி, நீ வேறு பல வேலைகளைச் செய்ய வேண்டும், எழுத்தனாக இயங்க வேண்டும் என்று இப்போதைய பாடத்திட்டம் சொல்லுகிறது. அதற்கே அவர்களின் நேரம் சரியாகப் போகிறது. அரசாங்கம் கொரோனாவுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்தலாமா, மக்கள் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தலாமா என்று யோசிக்கிறது. ஆக நம் அரசாங்கங்கள் இப்போதிருக்கும் கல்வி முறைக்கே உதவியாக இல்லை. அப்படியிருக்க ப்ளூமின் முறைகளை எல்லாம் பின்பற்ற யார் கல்வித்திட்டம் வகுக்கப் போகிறார்கள், யார் உதவி செய்யப் போகிறார்கள்?

வகுப்பறையில் இருபது மாணவர்களுக்கு மிகாத, அனைத்து வசதிகளும் கொண்ட, ஆசிரியரும் வாரத்திற்கு இருபது வகுப்புகளுக்கு மேல் பாடச்சுமையின்றி இருக்கின்ற அமெரிக்க வகுப்பறைகளுக்கு இம்மாதிரிக் கொள்கையை எளிதாகப் பயன்படுத்த முடியலாம். நடத்த வசதியின்மை என்ற காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடுகின்ற அமைப்பு நம்முடையது. ஐம்பது அறுபது மாணவர்களுக்கு மேல் வகுப்பறையில்  இருக்கின்ற, ஆசிரியரும் வாரத்திற்கு முப்பது முப்பத்தைந்து வகுப்புகளுக்குமேல் எடுத்தாக வேண்டும் என்ற கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மரத்தடிகளில் பாடம் நடத்துகின்ற பள்ளிகளைக் கொண்ட நம் நாட்டில் டிஜிடல் யுகத்தில் காலெடுத்து வைத்திருக்கிறோம். இத்தகைய வழி முறைகளை நாம் பயன்படுத்த இயலுமா என்பது அடிப்படையான கேள்வி. சமூகத்தைப் பற்றிய அக்கறையை ப்ளூமின் வகைதொகையியலினால் வளர்க்க முடியுமா என்பது அடுத்தநிலைக் கேள்வி. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு வேண்டுமானால் சமூக அக்கறை ஒருவேளை தேவைப்படாமல் இருக்கலாம். மூன்றாம் உலக நாடுகளாகிய நமக்குச் சமூக அக்கறையும் சமூகத்தின் பல தரத்தினர், தளத்தினர், அவர்களுக்கிடையில் நிலவும் தொடர்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளும், சமூக விழிப்புணர்வும் கட்டாயம் தேவை.     மேலும் இதன் இயலுமை இயலாமைகளைப் பற்றி நாம் நிறைய விவாதிக்க இடமிருக்கிறது.

————-

வரலாறு