ப்ளூமின் வகைபாட்டியல்-2

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி.

III. உணர்ச்சி விளைவு சார்ந்த பரப்பில் போதனையின் நோக்கங்கள் 

உணர்ச்சிவிளைவுக் களம் மாணவரின் இதயம், மனம் சார்ந்தது. உணர்வுகள், உணர்ச்சிகள், ஆர்வங்கள், மனப்பாங்கு, இரசனை, மதிப்புகள் ஆகியவை அதில் அடங்கும். உணர்ச்சி விளைவுப் பரப்புடன் அறிவாற்றல் பரப்பினையும் ஒருங்கிசைப்பதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். சான்றாக, காந்தியக் கொள்கைகளையும் குடிமக்கள் உரிமைகளையும் கடமைகளையும் உணர்ச்சி விளைவுப் பரப்புடன் சேர்க்காமல் வெறுமனே அறிவுப்பரப்புடன் இணைத்துப் படிப்பவன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனற்றவன். ஆகவே உணர்ச்சிவிளைவுப் பரப்புடன் இணைந்து அறிவாற்றல் பரப்பு செல்கின்றதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமை. ப்ளூமும் க்ராத்வோலும் 1964இல் பின்வரும் படிநிலையை உணர்ச்சிவிளைவுப் பரப்பிற்காக உருவாக்கினர்.   

1. பெறுதல்

அடிப்படையில் மாணவர்கள் சில நிகழ்வுகள் நடப்பதை கவனிக்கிறார்கள். சிலவிதத் தூண்டல்கள் தங்களுக்கு ஏற்படுவதை அறிகிறார்கள். இவற்றைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதால் குறிப்பிட்ட நபர், கொள்கை, தத்துவம், சம்பவங்கள் போன்றவற்றில் ஆர்வம் ஏற்படுகிறது. சிலர் மதக் கொள்கைகள், சிலர் காந்தியம், சிலர் மனிதநேயம், சிலர் மார்க்சியம் எனப் பலவிதமான கொள்கை களைப் பிறர் வாயிலாக ஏற்பதை உதாரணமாகக் காட்டலாம்.

2. எதிர்வினை புரிதல்

நல்லவிதமாக கொள்கைகளைப் பெறுதல், பொறுப்பான எதிர்வினைக்குத் தூண்டுகிறது. உதாரணமாக “ஆருயிர்கட்கெல்லாம் அன்புசெயல் வேண்டும்” என்ற ஒரு நல்ல செய்தியை உளப்பூர்வமாகப் பெற்ற மாணவர், அதற்கு நேர்முகமான எதிர்வினையைப் புரிகிறார். மூத்தவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் அன்பு காட்டுகிறார். நேரடி வாழ்க்கை அனுபவங்களில் நேர்மையாக நடக்கிறார்.

3. மதிப்பிடுதல்

நல்வழியில் எதிர்வினை புரிவதனால், தங்கள் வாழ்க்கைக்கு நெறிமுறைகளை மாணவர்கள் வகுத்துக் கொள்கின்றனர். நல்லொழுக்க மதிப்புகளை ஏற்றுக் கொள்ளுதல், அவற்றிற்கு முன்னுரிமை அளித்தல், அவற்றைப் பேணுதல் என்பவை இந்தத் தளத்தில் நிகழும் முக்கிய மாற்றங்களாகும். வன்முறையற்ற நடத்தை, உண்மையுடனும் நேர்மையுடனும் நடத்தல் போன்றவற்றில் நேர்முக மனப்பாங்கினைக் கொள்கின்றனர்.

4. அமைத்துக் கொள்ளல்

மாணவர்கள் இந்நிலையில் ஒழுக்க அமைவு ஒன்றைத் தங்களுக்கென அமைத்துக் கொள்கின்றனர். இதன்வழியாகச் சமூகத்தில் தங்களுக்கென ஒரு நடத்தை விதிமுறையையும் (code of conduct) பொதுவாழ்க்கைத் தரத்தையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இது நேர்முகமாகவும், எதிர்மறையாகவும் நடக்கலாம். எதிர்மறை நிலையில் பொய்சொல்லுதல், லஞ்சம் கொடுத்தலும் பெறுதலும், சாதிப்படிநிலை களைப் போற்றுதல் என்றெல்லாம் இது செல்லும்.      

5. பண்புருவாக்கம்

இதுதான் உணர்ச்சிவிளைவுப் பரப்பின் உச்சநிலை. ஒழுக்க மதிப்புகள் உள்வாங்கப்பட்டுக் குறித்த நபரின் வாழ்க்கை முறையாக அவை மாறுகின்றன. சான்றாக, எளியவர் மீது எல்லையற்ற இரக்கத்தினால் அவர்கள் வாழ்க்கை நிலைக்குக் காரணங்களை ஆராயும் ஒருவன் மார்க்சியவாதியாக மாறக்கூடும். அல்லது காந்தியவாதியாகி ஆசிரமம் ஒன்று நடத்தக்கூடும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் கொள்கைகளை எந்த நிலையிலும் விட்டுத்தர மாட்டார்கள். தாங்கள் தனியாகப் போரிட நேரிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள். (next slide) 

IV. உளஉடலியக்கம் (திறன்) சார்ந்த பரப்பில் போதனையின் நோக்கங்கள்

செயல்படுதல், நிகழ்த்தல் நிலைகளில் திறன் சார்ந்த பரப்பு செயல்படுகிறது. இதற்குத் தசையியக்கமும், நரம்பு-தசை ஒருங்கிணைப்பும் தேவை. சில செயல்பாடுகளில் குறித்த திறமையை அடைவது என்பது இந்தக்களத்தில் கல்வியின் நோக்கமாகிறது. இதனைப் பின்வருமாறு காணலாம்.

1. உள்வாங்கல் (அவதானித்தல்)

இதுதான் முதல்நிலை. பொருள்கள், அவற்றின் பண்புகள், அவற்றிற்கிடையிலான உறவுகள் ஆகியவற்றைப் புலனுறுப்புகளால் குழந்தைகள் அறிவது இந்த நிலை.  

2. ஆயத்தம்

ஒரு குறித்த செயல் அ்ல்லது அனுபவத்துக்குச் சிறார்கள் ஆயத்தமாகி ஒத்து வருவது இந்த நிலை. மனத்தளவிலும், உடலளவிலும் இதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

3. வழிகாட்டுதலில் பெற்ற எதிர்வினை   

 சிறார்கள், மாணவர்கள் முதலில் தங்கள் மூத்தவர்களை, பெற்றோரை, ஆசிரியர்களைச் செயல்களில் பின்பற்றுகின்றனர். பிறகு தாங்களாகச் செய்து பார்க்கின்றனர். சான்றாக, எழுத்துகளை மாணவர் அரிச்சுவடி நிலையில் எழுதிப்பார்க்க முனைவதைக் கூறலாம். அச்சமயத்தில் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்போது முன்னேறுகின்றனர்.

4. இயக்கம்

இது மாணவர்கள் தாங்களாகவே இயங்கும் நிலை. தாங்களாகவே முயற்சி-தவறுதல் என்ற வழியில் செயல்படுகிறார்கள். இங்கு இதுவரை கற்ற எதிர்வினைகள் பழக்கமாகின்றன. இச்சமயத்தில் ஆசிரியர்கள் இயக்கத்தின் ஒவ்வொரு நிலையையும் நுண்ணாய்வு செய்து பயிற்சி அளித்தல் வேண்டும்.

5. சிக்கலான மேலெதிர்வினை

இச்சமயத்தில் சிக்கலான இயக்கப் பாணிகளைக் கொண்ட செயல்களை மாணவர்களால் செய்யமுடிகிறது. அவர்கள் உயர்வகைத் திறன் பெற்று எந்தச் செயலையும் எளிதாகவும் தயக்கமின்றியும் செய்ய முடிகிறது. இந்தநிலையின் சிறப்புகள், நுணுக்கமான தசை ஒருங்கியக்கமும், மிக எளிதாக நிகழ்த்துதலும் ஆகும். ஓடுதல், தாண்டுதல், கைகளை எவ்விதமாகவும் இயக்குதல் போன்ற செயல்களைச் செய்ய இயலுகிறது.

6. தகஅமைத்துக் கொள்ளலும், அசலான செயல்நிலையும்  

சாதாரண இயக்கங்கள் மட்டுமின்றி, தச்சு, பானை வனைதல் போன்ற தொழில்களையும் சிக்கலான விளையாட்டு ஆட்டங்களையும் சிறப்பாகச் செய்ய இயலும். இதுதான் மிக உயர்ந்த நிலை. செய்வதைத் துல்லியமாகச் செய்யும் திறன் மட்டுமின்றி, புதிதாகச் செயல்பாணிகள், நடைகளையும் உருவாக்க முடிகிறது.

உணர்ச்சி விளைவுப் பரப்பு, திறன் பரப்பு இவையிரண்டையும் விட ப்ளூம் அறிவாற்றல் பரப்பு என்பதற்கே முதன்மை அளிப்பதாலும் வகுப்பறை பாடபோதனை என்பதை அது ஒட்டியது என்பதாலும் அறிவாற்றல் நிலை வளர்ச்சி பற்றி இனிக் காணலாம்.   (next slide 1956 figure)           

V. ப்ளூமின் வகைதொகையியலில் அறிவாற்றல் பரப்பில் ஆறு நிலைகள்

அறிவாற்றல் வளர்ச்சியில் ஆறு படிநிலைகளை ப்ளூமின் வகைதொகையியல் விளக்குகிறது. கடைசி நிலையான அறிவிலிருந்து, புரிவு, பயன்பாடு, பகுப்பு, தொகுப்பு என்ற நிலைகளைத் தாண்டி மதிப்பீடு என்ற இறுதிநிலைக்குச் செல்கிறது இது. ப்ளூமின் சிறந்த கொடையாகக் கருதப்படுவதும் இந்தப்பகுதிதான். (next slide)

அறிவு என்பது வெறும் நினைவாற்றல்தான். மாணவர் மனப்பாடம் செய்வதனாலும் அர்த்தம் தெரியாத குருட்டுப்பாடத்தினாலும் மாணவர் கற்றுக் கொண்டவை. சிறுவர்களுக்கு மதப்பாடல்களையும் ஓதுதல்களையும் கற்றுத் தருவது, ஆத்திசூடி நன்னெறி போன்ற நூல்களை மனப்பாடம் செய்ய வைப்பது போன்றவை.

புரிவு என்பது மாணவர் கற்றுக் கொண்ட தகவலைத் தனது சொந்த வார்த்தையில் விளக்கவோ சுருக்கியுரைக்கவோ இயலுமாறு உள்வாங்கிக் கொள்ளும் தன்மை. ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றும் தன்மையும் இதில் அடக்கம். பொழிப்புரை சொல்வது, ஒரு கவிதையை உரைநடைக்கு மாற்றுவது, உரைநடையைக் கவிதை நடைக்கு மாற்றுவது, புதுக்கவிதையை மரபுக் கவிதையாக்குவது போன்றவை. அதன் வாயிலாக, போக்குகள், விளைவுகள், பயன்கள் ஆகியவற்றைக் கணித்தல். (next slide)

பயன்பாடு என்பது மாணவர் தான் கற்றுக் கொண்ட விதிகளை, கொள்கைகளை, சட்டதிட்டங்களைப் பயன்படுத்திப் புதிய சூழல்களில் நடைமுறைத் தீர்வுகளைக் காணக் கற்றுக் கொள்ளுதல். பிரச்சினையைத் தீர்த்தல், சிந்தனைகளைத் துருவியெடுத்தல் போன்றவை இதில் அடங்கும்.

பகுப்பு என்பது உள்ளடக்கத்தைப் பகுதிகளிடையிலான உறவுகளை விளக்கும் வண்ணமாகப் பிரித்தல், தனித்த பகுதிகளை அடையாளம் காணுதல், கட்டமைப்பினைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றைக் கொண்டது.

தொகுப்பு என்பதில் கோட்பாடு, வடிவமைப்பு, சோதனை ஆகியவற்றின் வாயிலாகத் திட்டமிட, உருவாக்க, புதிய அமைப்புகளை அமைக்கத் தேவையான புத்தாக்கச் செயல் அடங்கும்.

ஃ மாணவர் தனது முடிவினை அல்லது தீர்மானத்தைக் கணித்தல், நடுநிலையோடு ஆராய்தல், விமரிசனம் செய்தல் ஆகியவற்றின் வாயிலாக ஆதரிக்கத் தேவையான இயலுமை, மதிப்பீடு ஆகும்.

இவற்றில் அறிவு அல்லது நினைவாற்றல் என்ற அடிப்படைக் கீழ்நிலையிலிருந்து ஏணிப்படி முறையில் ஒவ்வொன்றாக அடுத்த நிலைக்கு மேலேறி வரவேண்டும் என்று கருதப் படுகிறது. கீழ்நிலையில் குறைந்த அறிவாற்றல் இயக்கம் தேவைப்படுகிறது. உயர்நிலையில் அதிக அறிவாற்றல் தேவைப்படும். இதனை அடையக் கீழ்நிலைகளை முற்றிலும் கற்று அடைந்திருப்பது அவசியம். (next slide 2001figure)  

VI. ப்ளூமின் வகைதொகையியலில் மாற்றம்

2001இல் அறிவாற்றல் உளவியலாளர்கள், கல்வித்திட்ட வல்லுநர்கள், போதனை ஆய்வாளர்கள், சோதித்தல் வாயிலான கணிப்பின் திறனாளர்கள் போன்ற பலர் லோரின் ஆண்டர்சன் தலைமையில் இணைந்தனர். லோரின் ப்ளூமின் மாணவர். அவர்கள் சேர்ந்து ப்ளூமின் பழைய வகைதொகை முறையைச் சற்றே மாற்றியமைத்தனர். அவ்விதம் மாற்றிய போது, அதில் மூன்று விஷயங்கள் முக்கியமாக மாற்றப்பட்டன. அவர்கள் வகைகளுக்குப் பெயர்களுக்குப் பதிலாக வினைச் சொற்களைப் பயன்படுத்தினர். (next slide)

அறிவு             – நினைவுகூர்தல்

புரிவு              – புரிந்துகொள்ளல்

பயன்பாடு         – பயன்படுத்தல்

பகுப்பு             – பகுத்தல்

தொகுப்பு          – மதிப்பிடுதல்

மதிப்பீடு           – புத்தாக்கம் செய்தல்           மூன்று வகைகளுக்குப் புதுப்பெயர் சூட்டினர். அறிவு என்பது நினைவுகூர்தல் ஆக்கப்பட்டது, புரிதல் என்பது புரிந்துகொள்ளல் ஆக்கப்பட்டது, தொகுப்பு என்பது புத்தாக்கம் செய்தல் ஆக்கப்பட்டது. படிநிலையமைப்பில் புத்தாக்கம் செய்தல் உயர்நிலையாகவும், மதிப்பிடுதல் அடுத்த உயர்நிலையாகவும் ஆயின. (தொடரும்)

வரலாறு