ப்ளூமின் வகைபாட்டியல்-1

ப்ளூமின் வகைதொகையியல்

கல்வி என்பது நடத்தை, மனப்பாங்கு, திறன் என்ற மூவழிகளிலும் மனிதர் களிடையே மாற்றத்தை ஏற்படுத்துகின்ற செயல். அதேசமயம் கற்பவர்களும் கல்வியால் தங்கள் இயலுமைகளும், சாத்தியங்களும் மேம்பட்டதை அறிய முடிய வேண்டும். பிற வழிகள் இருந்தாலும் வகுப்பறை போதனையும் செயல்களும் இதற்கு வாயில்களாக உள்ளன. ஆகவே குறித்த ஒரு போதனைக்கான நோக்கங்களை ஆசிரியர் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். வகுப்பறை ஊடாட்டத்தின் விளைவாக உடனடியாக அடையக்கூடிய குறித்த இலக்கினைத் தான் நோக்கம் என்கிறோம். ஆசிரியர் ஒரு பாடத்தை அல்லது தலைப்பை நடத்துவதற்கு இலக்கு அதுதான். நோக்கம் என்பது இல்லையானால், போதனை என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலக்கற்றதாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் போகும். மாணவர்களின் வெவ்வேறு பரப்புகளை வளரச் செய்வதாக நோக்கங்களை அமைக்க வேண்டும்.     

மாணவர்கள் நன்கு கற்பதற்கும் ஆசிரியர்கள் நன்கு போதிப்பதற்கும் தேவையான வழிமுறைகளைப் பலவிதமாக அறிஞர்கள் காலந்தோறும் கூறிவந்துள்ளனர். அதில் அண்மைக்காலத்தில் புகழ்பெற்றது ப்ளூமின் வகைதொகையியல் என்ற சட்டகம். இதைப் பின்வரும் தலைப்புகளில் நாம் காண இருக்கிறோம்.

I. ப்ளூமின் வகைதொகையியல்-(Bloom’s taxonomy) என்றால் என்ன? அதற்கு முக்கியத்துவம் ஏன்?

I. ப்ளூமின் வகைதொகையியல்-(Bloom’s taxonomy) என்றால் என்ன? அதற்கு முக்கியத்துவம் ஏன்?

taxonomy என்ற சொல் கிரேக்கச் சொல்லான  ‘taxis’ என்பதிலிருந்து வந்தது. அதற்கு systematic classification என்று பொருள். ப்ளூமின் வகைதொகையியல் என்பது 1956 முதல் இருந்துவரும் ஓர் புலன் அறிவாற்றல் சட்டகம் (Framework of cognition). அது கல்வியாளர்கள், நன்கு வரையறுக்கப்பட்ட கற்றல் இலக்கு களை வடிவமைப்பதற்குத் தேவையான விமரிசனபூர்வ காரணஆய்வினை வகைப்படுத்துகிறது. அது கல்வியியல் அடைவுகளுக்கான (Achievements) சட்டகம். அதில் ஒவ்வொரு நிலையும் தனக்குக் கீழே உள்ள நிலையைச் சார்ந்துள்ளது.

பெஞ்சமின் ப்ளூம் ஒரு அமெரிக்கக் கல்வி உளவியலாளர். அவர் கல்விச் செயலுக்கான நிலைகளை வரையறுக்க முயன்றார். அதற்கு முக்கோண வடிவ அமைப்பு ஒன்றினைச் செய்தார். 1940களில் தம்மோடு பணிபுரிந்த மேக்ஸ் எங்கல்ஹார்ட், எட்வர்ட் ஃபஸ்ட், வால்டர் ஹில், டேவிட் க்ராத்வோல் என்பவர்களுடன் சேர்ந்து தமது வகைதொகை அமைப்பை உருவாக்கினார். கல்விசார் இலக்குகளைக் குறித்த வகைகளுக்குள் கொண்டுவரும்போது, அவை கல்லூரி மாணவர்களின் செயல்திறன்களை நன்கு கணிக்க உதவும் என்பது அவரது நம்பிக்கை.

1940 முதல் 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து ப்ளூம் போன்ற கல்வியாளர்கள் ஒவ்வோராண்டும் பல்வேறான சட்டகங்களை அமைத்து வந்தனர். 1956இன் அமெக்க உளவியல் சங்கத்தின் கூட்டத்தில் தாங்கள் செம்மைப்படுத்திய வடிவத்தைக் கல்வியியல் இலக்குகளின் வகைதொகையியல் என்ற பெயரால் வெளியிட்டனர். கல்வியின் நோக்கம் சிந்தனையாளர்களையும் செயல்படு வோரையும் உருவாக்குவது என்பது அவர்கள் கருத்து. ஒரு கருத்தின் அல்லது கல்வித்திறனின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்வதற்கு, அல்லது மாணவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி மாணவர்கள் படைப்பாற்றலோடு சிந்தித்து பிரச்சினைகளைத் தாங்களாகவே தீர்ப்பதற்கு, ஒரு வழியமைத்துத் தருவது இந்த வகைதொகையியலின் நோக்கம். ஆகவே மாணவர்கள் கற்கும் போது அதைத் தாங்கும் விதமான பாடஅமைப்புகளை ஆசிரியர்கள் தங்கள் போதனையின் சட்டகத்தின் எல்லா நிலைகளிலும் கொண்டிருக்க வேண்டும்.

ப்ளூமின் இந்தத் திட்டத்தின் மையத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய கற்றல் இலக்குகளை உருவாக்கும் திறன் இருக்கிறது. அவற்றை அடைவதற்கு திட்டவட்டமான வழியும் இருக்கிறது. போதிப்பவர்கள் கற்றல் இலக்குகளை நடத்தையியல் சார்ந்து காண வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் எதைப் பெற்றார்கள் என்பதை நேரடியாக அவர்கள் கணிக்க வேண்டும்.

இந்த வகைபாட்டைப் பயன்படுத்தினால் கல்வியாளர்கள் தங்கள் நோக்கங்களைத் திறமையுடன் அமைத்து அதற்குத் தக்கவாறு உள்ளடகத்தைக் கொண்ட பாடத் திட்டத்தையும் கட்ட முடியும். அதற்கேற்ற சரியான கணிப்புக் கருவிகளையும் உத்திகளையும் வடிவமைக்க முடியும். இந்த வகைதொகையில் ஆறு நிலைகள் உள்ளன. மிகக் கீழ்நிலையில் அறிவாற்றலின் அடிப்படைத் திறன்களும் உச்சநிலை யில் சிறந்த அறிவாற்றல், சிக்கலான சிந்தனையை உள்ளடக்கிய திறன்களும் உள்ளன. ஏணிப்படி முறையில்அமைந்த அடிப்படையான இந்த எளிய இலக்கு களை ஒவ்வொன்றாக வெற்றி கொண்டு வந்தாலொழிய மாணவர்கள் உயர் நிலைச் சிந்தனையை அடைவதில் வெற்றிபெற இயலாது என்பது கருத்து.

மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தற்போது என்ன அறிந்திருக்கிறார்கள் என்பதற்கும் அடுத்த நிலை அறிவைப் பெற அவர்கள் கற்க வேண்டியது என்ன என்பதற்குமான இடைவெளியை ஒரு பாலமாகக் கடக்க இந்த வகைதொகை அமைப்பு உதவிசெய்கிறது. கற்றல் செயல்முறையின் இறுதியில், மாணவர் ஒரு புதிய திறனை அடைந்திருக்க வேண்டும், ஒரு புதிய அறிவுநிலையை அடைந்திருக்க வேண்டும், தங்கள் மனப்பாங்கில் ஒரு மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாற்றங்களை போதனையாளர்கள் அடுத்தடுத்துத் திறம்படக் கணித்துவர வேண்டும். இதற்கு இந்த வகை தொகை அமைப்பு உதவுகிறது.

அமெரிக்கக் கல்விமுறையில் மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் மிகப் பெரிய சாதனையை இந்த வகைதொகையியல் உருவாக்கியிருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.             

II. ப்ளூமின் முதல் வகைபாடுமூன்று பரப்புகள்  

ப்ளூமின் வகைபாடு அடிப்படையில் மூன்று கற்றல் பரப்பெல்லைகளைக் கொண்டுள்ளது. அறிவாற்றல் சார்ந்த பரப்பு, உணர்ச்சிவிளைவு சார்ந்த பரப்பு, உள-உடல் இயக்கம் சார்ந்த பரப்பு என்று அவற்றைக் கூறலாம். சுருக்கமாக இவற்றைக் கேஎஸ்ஏ (K- Knowledge. S- Skills (psychomotor),  A- Attitudes)  என்று சொல்வர். அதாவது, ஒரு கற்றல் காலப்பகுதியின் முடிவில் மாணவர் புதிய அறிவு, புதிய மனப்பாங்குகள், புதிய திறன்கள் ஆகியவற்றை அடைந்திருக்க வேண்டும் என்பது கருத்து.

1. அறிவாற்றல் சார்ந்த பரப்பு

நுண்ணறிவு சார்ந்த திறன்களை அடைவது அறிவாற்றல் பரப்பின் மையம். இதில் மாணவர் புதிய மெய்ம்மைகளையும் பாணிகளையும் மேலதிகக் கற்றலுக்கு அடிப்படையான கருத்துகளையும் அறியவும் நினைவுக்குக் கொண்டுவரவும் இயல வேண்டும். இதில் ப்ளூமின் வகைதொகையியலின் அடிப்படையான ஆறு முகங்கள் உள்ளன. அறிவாற்றல், புரிதல், பயன்பாடு, பகுப்பு, தொகுப்பு, மதிப்பீடு என்பன அந்த ஆறு முகங்கள்.

2. உணர்ச்சிவிளைவு (மனப்பாங்கு) சார்ந்த பரப்பு

இதில் தாங்கள் கற்ற பொருளைப் பற்றியும் அந்தப் பொருள்பற்றிய தங்கள் மனவோட்டத்தைப் பற்றியும் மாணவர்கள் புதிய உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பெறுகிறார்கள். பலவேறு உந்துதல்கள், மனப்பாங்குகள் இவற்றோடு மாணவர்கள் சிலவற்றை உயர்வாகப் பாராட்டுதல், அதிக மதிப்புக் கொள்ளுதல் ஆகியவற்றையும் பெற வேண்டும். சான்றாக, ஒரு மருத்துவச் சூழலில் என்றால், நோயாளிகள், சிறார்கள் மீது அதிகப் புரிவுணர்ச்சியை (எம்பதி) அவர்கள் காட்ட வேண்டும். மரியாதையுடன் பிறரைச் செவிமடுக்கும் பண்பு, மாறாது கவனத்தைச் செலுத்துதல் போன்ற பல பண்புகளால் இந்த மாற்றங்கள் நடைபெற்றிருப்பதை உணரலாம். மேலும் விவாதங்களில் பண்புடன் ஈடுபடவும், மோதல்களைத் தீர்க்கவும, உள்ளேற்றுக்கொண்ட ஒழுக்கமதிப்புகளை வெளிக்காட்டவுமான செயல்பாடுகள் அதிகரிக்கும்.

3. உள-உடலியக்கம் (திறன்) சார்ந்த பரப்பு இது முதலில் ப்ளூமின் வகைபாட்டில் இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டது. ஆரம்ப நிலைக் கல்வியின் இறுதியில் மாணவர்கள் புதிய திறன்கள் பலவற்றைப் பெறுகிறார்கள் என்ற கணிப்பின் அடிப்படையில் இது சேர்க்கப்பட்டது. உடலியக்க மாற்றங்கள், உடல்நுட்பத் திறன்களை ஒருங்கிசைத்தல் இரண்டும் இதில் அடங்கும். உதாரணமாக, ஒரு மாணவன் மரத்தில் நுட்பமான வேலைத்திறன்களைச் செய்தல், ஒரு மருத்துவ மாணவன் விரைந்து காயத்திற்குத் தைத்தல் போன்றவை இம்மாதிரி மாற்றங்கள், இயக்க ஒருங்கிசைத்தல்கள் ஆகியவற்றில் அடங்கும். மிகச் சிறுவயதிலிருந்தே இவை தொடங்குகின்றன. ஓர் இடத்தைக் கழுவுதல் போன்ற பரந்த நிலையிலிருந்து கோலம் போடுதல் போன்ற நுட்பநிலைகளை நம் சமுதாயப்  பெண்கள் அடைவதும் இதில் வரும். தொழிலாளர் களுக்குப் பின்னர் தேவைப்படும் கனரக எந்திரங்களை இயக்குதல், லேத்துகளை இயக்குதல் போன்றவை வளர்கின்றன. வேகம், நுட்பம், தொலைவு, செயல்முறைகள், உத்திகள் ஆகியவற்றின் திறமையைக் கொண்டு உள-உடல் இயக்கத் திறன்கள் மதிப்பிடப் படுகின்றன. (தொடரும்)

வரலாறு