பிரார்த்தனை

எனக்கு வழிபாடு செய்யும் வழக்கம் மிகச்சிறிய வயதிலிருந்தே உண்டாகிவிட்டது என்று தோன்றுகிறது. உண்டாக்கியவர் எனது தாய். அவர் முருக பக்தை. அதே போன்றதொரு பக்தியை எனக்கும் ஊட்டி வளர்த்தார்.

ஆனால் இப்போது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, முதன்முதலில் நான் வழிபாடு (பிரார்த்தனை) செய்தபோது கூட நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாகத் தெரியவில்லை. உலகம் முழுவதும் (அப்போது உலகம் என்பது என்ன என்பது பற்றி எனக்கு இருந்த அறிவு மிகக் குறைவாகவே இருந்திருக்க வேண்டும்) நன்றாக இருக்க வேண்டும் என்றே பிரார்த்தனை செய்தது நினைவில் இருக்கிறது. முதலில் நான் நன்றாக இருக்கவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். ஆனால் அது சரியில்லை என்று உடனே தோன்றி, என் அப்பா, அம்மா, தம்பி தங்கையர், குடும்பத்தினர் முதலிய அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தோன்றியது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதுவும் சரியில்லை, என்னைச் சுற்றியுள்ளவர்கள், கிராமத்தார்கள், சமூகத்தினர் என்று விரிந்துபோய், இதெல்லாம் சரியில்லை, உலகம் முழுவதும் நன்றாக இருக்க ‍வேண்டும் என்பதாக அது விரிந்தது. இன்றுவரை உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை என் உள்ளத்தில் இருக்கிறது. குறைந்தபட்சமாகக் கால்மணிநேரமேனும் (மிகமிகக் குறைந்த நேரம்தான்) அவ்வாறு தினந்தோறும் கருதுகிறேன். ஆனால் சில காலத்துக்குப் பிறகு- ஏறத்தாழ ஐம்பது வயதாகின்ற நிலையில் கடவுள் வழிபாடு என்ற கருத்து அடியோடு என்னை விட்டு அகன்றுவிட்டது. பின் யாரை நோக்கி வழிபாடு? இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்திடம், இயற்கையிடம் என்பதாக மாறிவிட்டது. இந்த மாற்றம் என் தந்தை, சிற்றப்பாக்களால் ஏற்பட்ட ஒன்று.

இந்த நேரத்தில் இதை நினைக்கக் காரணம், நேற்று–21 ஜூலை அன்று உலகமே அழிந்துவிடப்போவதாக மாயன் காலக்குறிப்பு கூறியதாகச் செய்தி வந்தது. உலகம் அழிய வேண்டும் என்பதற்கு எதிர்தானே உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பது?

உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்றால்–அதாவது உலகத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல, உயிர்கள் அனைத்துமே (தாவரங்களும் உயிர்கள்தான்) நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் கருத்து. அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலாரால் பாட முடிந்தது. ஆனால் நம் சிந்தனைக்கு மாறாகத் தாவரங்கள் மிகுதியாக அழிக்கப்பட்டு விட்டன. விலங்குகள் அழிந்துகொண்டே வருகின்றன. மனிர்கர்கள் மட்டும் எல்லையற்றுப் பெருகுகிறார்கள். இது மிகவும் அபாயகரமான நிலை என்பதில் சந்தேகமில்லை.

மனிதர்களும்தான், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் உடனே சிலர் கேட்பார்கள்–அது எப்படி முடியும் என்று. என் கருத்து, அனைவர்க்கும் அடிப்படைத் தேவைகள்–குறைந்தபட்சம் உணவு உடை உறையுளாவது கிடைக்கவேண்டும். பிறகு சமத்துவநிலையும் சம வாய்ப்பும் வேண்டும். அவ்வளவுதான். இதற்குமேல் என்ன ஆகிறான் என்பது அந்தந்த மனிதனின் உடல், மனத் தகுதிகளையும் சமூகத்தையும் பொறுத்தது. அதேபோல எதிரிகளும் பகைவர்களும் யாவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எனக்கு உடல்ரீதியான பகைவர்கள் இல்லை. கருத்து ரீதியான பகைவர்கள் இருப்பின் அவர்கள் கருத்து காலத்தில் வெல்லுமாயின் வெல்லட்டுமே.

சமூகம்