பின்நவீனத்துவக் கோட்பாடுகள்

பின்நவீனத்துவக் கோட்பாடுகள்

புதிய தத்துவம் எல்லாவற்றையும் சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது….எல்லாம் சிதைந்து துண்டுதுண்டாகக் கிடக்கின்றன, எல்லாச் சீரமைவும் போய்விட்டது….எல்லாம் வாங்குதலும் அதன் உறவுகளும்…. (ஆங்கிலக் கவிஞர் ஜான் டன், உலகின் ஆண்டு விழா என்ற கவிதையில், 1611)

பின்நவீனத்துவக் கோட்பாடுகள் எனக் குறிக்கப்படுபவை எவை? சுருக்கமாகப் பிரெஞ்சு அறிஞர்களான லியோடார்ட், ழான் போத்ரி யார் ஆகியோருடைய பிரதிகளில் கூறப்பட்ட கருத்துகளோடு, ழாக் லக்கான், மிஷல் பூக்கோ, ரோலான் பார்த், டெரிடா போன்ற பின்னமைப்புவாதிகளுடைய பிரதிகளின் பல்வேறு வாசிப்புக் கருத்துகளும் இணைந்தவை அவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். தங்களை இம்மாதிரி ஒரு லேபிலுக்குள்ளாக அடைப் பதை அவ்வறிஞர்கள் விரும்ப மாட்டார்கள். இருப்பினும் வேறு வழியில்லை.

பின்நவீனத்துவம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்ட வர் அர்னால்ட் டாயின் பீ என்னும் வரலாற்றறிஞர். என்றாலும் 1979இல் லியோடார்டின் ‘பின்நவீனத்துவ நிலைமை’ (Postmodern Condition) என்னும் நூலில் அவர் வெளியிட்ட கருத்துகளோடு தான் இச்சொல் பற்றிய விவாதம் முனைப்பாகத் தொடங்கியது. பின் முதலாளித்துவ அல்லது மிக முற்றிய முதலாளித்துவ நாடுகளில் வசிப்போர், குறைந்தபட்சமாக 1960களின் மத்தியிலிருந்தேனும் பின்நவீனத்துவ வாழ்க்கைக்கு ஆட்பட்டுவிட்டார்கள் என்றார் அவர். முக்கியமாக அந்நூலில் அவர் அறிவியலின் தகுதி பற்றி இருந்த இரண்டு தொன்மங்களை உடைத்தார்.

அவர் உடைத்த தொன்மங்களில் ஒன்று, விடுதலை பற்றியது. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஹாலோகாஸ்ட், சோவியத் குலாக்குகள், ஆஷ்விச், அணுகுண்டுகள் போடப்பட்டமை போன்ற எந்த அழிவு நிகழ்வோடும் அறிவியலும் அறிவியலாளருமே முதன்மையாகச் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது விடுதலை பற்றிய தொன்மத்தை உடைத்தது. (இப்போது நாம் இதனுடன், வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்மீது அமெரிக்கா படையெடுத்த நிகழ்வுகளையும் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையையும் சேர்த்துக்கொள்ளலாம்.)

இன்னொன்று “அறிவியல் உண்மையைக் கூறுவது” என்னும் தொன்மம். ஃபெயரபெண்ட், தாமஸ் கூன் போன்ற அறிவியல் தத்துவவாதிகளாலேயே இந்த பிம்பம் உடைக்கப்பட்டது.
இம்மாதிரிக் கலாச்சார அமைப்பை மிகச் சரியாக விவரித்தவர் மார்க்சியத் திறனாய்வாளரான பிரடெரிக் ஜேம்சன். ஆழமற்ற மேம்போக்கான மேற்பரப்புகளை மட்டுமே பிடித்துக்கொண்டு அவற்றையே அலங்கரித்துக்கொண்டு வரலாற்றையும் காலத்தை யும் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் வாழும் ஒரு சமூகத்தின் நிலையைப் பின்நவீன நிலை என்றுதான் வருணிக்கமுடியும். ஆழமற்ற பிம்பங்களே ஆட்சிசெய்யும் கலாச்சாரம். அதனால் அங்கதக் குறிப்பு முரண்கள், ஒட்டுவேலைகள், மேம்போக்கான அழகுபடுத் ல்கள் மட்டுமே இசைந்த ஒரு கலாச்சாரம். பிளவுமன ஆளுமைகளால் மக்களை உருவமைக்கவே உருவாக்கப்படும் ஒரு கலாச்சாரம். இருந்தாலும் எல்லாவற்றையும ஏதோ விதத்தில் சரியாக்கிவிடலாம் என்னும் உடோபியத் தன்மையும் கொண்ட கலாச்சாரம். இதுதான் பின்நவீனத்துவக் கலாச்சாரம். இப்படிப்பட்ட கலாச்சாரத்தில் என்னவிதமான கலை வடிவங்கள் தோன்றும்? அவைதான் பின்நவீனத்துவக் கலைகள்.

எந்த வடிவத்தில் எப்படிச் சொல்லப்பட்டாலும் பின்நவீன நிலை என்பது நவீனத்துவ நிலைப்பாட்டின் ஒழுங்கமைவுகள் சிதைந்த நிலையைத்தான் காட்டுகிறது. பொதுமைப் பண்புகள் என எவை யும் கிடையாது. மனிதனைச் சிதைத்துவிட்ட பெருமுதலாளித்து வத்தில் மானிடத் தன்னிலை, சமூகம், அரசு, பயன்மதிப்பு, வர்க்கம், ஜாதி முதலிய எதற்குமே மரியாதை கிடையாது. யாவும் அழிந்துவிடுகின்றன. பாராலஜி (paralogy) எனப்படும் அளக்கமுடி யாதவற்றைப் பற்றிய புதிய கலாச்சாரம்தான் உண்டு. எனவே பின்நவீனத்துவம் என்பது வாழும் உலகங்களின் பன்முகப்பட்ட தன்மையைக் குறிக்கிறது. பௌமன் என்பாருடைய கருத்துப்படி பின்நவீனத்துவத்தின் முக்கியத் தன்மைகள், பலவேறுபட்ட தன்மை (வெரைட்டி), தற்செயல் எதிர்வுகள் (காண்டின்ஜன்சி), இருமனப்போக்கு (ஆம்பிவேலன்ஸ்) ஆகியவை. கலாச்சாரங்க ளின் பன்முகத் தன்மை, சமூக மரபுகளின் பன்முகத்தன்மை, கருத்தியல்களின் பன்முகத்தன்மை, வாழுலகுகளின் பன்முகத்தன் மை ஆகிய யாவுமே கடைசியாக மொழிவிளையாட்டுகளே. இப்படிப்பட்ட பின்நவீனத்துவ நிலை இந்தியாவில் நிலவுகின்றதா? நிலவவில்லை என்றால்
பின்நவீனத்துவப் படைப்புகள் எப்படி முகிழ்க்கமுடியும்?

ஒருவேளை பின்நவீனத்துவநிலை நம் நாட்டில் நிலவவில்லை என்று வைத்துக் கொண்டாலும், நமது நாட்டில் முதலாளித்துவம் சிதையவில்லை என்றாலும், பின்நவீனத்துவ நிலைக்கான குணாதிசயங்கள் பல வந்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் நிஜமற்ற யதார்த்தத்திற்கு மக்கள் நாற்பதாண்டுகளாகப் பழகிவிட்டார்கள். பிம்பங்களை வழிபட்டு, பிம்பங்களுக்காகத் தற்கொலை செய்து, பிம்பங்களுக்காகப் போராடி, பிம்பங்களுக்காகவே ஓட்டுப்போட்டு நிஜத்தில் எந்த மகிழ்ச்சியையும் காணாமல் அவற்றையும் கனவுகள் அல்லது பிம்பங்கள் வாயிலாகவே அடைந்து மறைந்துபோகும் நம்நாட்டு மக்கள், உலகின் பிற மக்களை விடப் பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு ஏற்ற களமாகத்தான் அமைந் திருக்கிறார்கள்.

பாகுல்ஸ்கி, எம். வாடர்ஸ், எல். குரூக் ஆகிய சமூகவிய லாளர்கள், சமூகச் சமமின்மைகள், பொருட்களின் உற்பத்தியை விட அவற்றின் நுகர்வினால் அதிகம் வடிவமைக்கப்படும் நிலை யில், வர்க்க/இன பேதங்கள் சமன்படுத்தப்பட்டு, அவை துணடு துண்டாக்கப் படுகின்றன என்று சொல்கிறாக்ள். எனவே பொருட் கள், தமது பயன்மதிப்பை இழந்துவிட்டன. அவற்றிற்கு அவற்றின் குறியியல் (பிம்ப அடையாள) மதிப்பு மட்டுமே இருக்கிறது. அதுவும் சமமற்ற ஒரு சமூகத்தை எப்படி உற்பத்தி செய்யலாம் என்ற அள விலேயே அவை இயங்குகின்றன. எனவே சமூக, இன/வர்க்க எல்லைக்கோடுகள் தெளிவற்றவை ஆகிவிட்டன. எனவே வர்க்கசமூகங்கள் உடைபட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். நன்கு வளர்ந்த அமெரிக்கா போன்ற சமூகங்களில் வர்க்க எல்லைக்கோடுகள் என்பவை காணப் படுவதே இல்லையாம்!

பொருளாதார வேறுபாட்டுக்கருவிகள் இருபதாம் நூற்றாண்டில் அர்த்தமற்றுப் போய்விட்டன. மத்தியதர வர்க்கம் வரை பரவிச் செல்லும் செல்வம், தொழில்களின் பெருக்கம், வேலைத் திறனுக்கான சான்றுகள், வேலைகளைத் தரப்படுத்துதல், பெரும்வணிகப் பிரிவுகள் உருவாதல், உலக மயமாக்கம், வாழ்க்கை மதிப்பிற்காகவும் அந்தஸ்திற்காகவும் மேலும்மேலும் நுகர்பொருட்களை உருவாக்குதல் போன்றவை வர்க்க சமூகத்திற்கு எதிரான ஒரு நுகர்வுச் சமுதாயத்தை உருவாக்கிவிட்டன.

மரபுசார்ந்த இலக்கியம் அனுபவ யதார்த்தத்தைப் பிரதிபலிப்பது அல்லது எடுத்துரைப்பது என்று சொன்னாலும், அது யதார்த் தத்தை எடுத்துரைக்கமுடியாமல் தடுமாறுகிறது என்கிறார்கள் பின்நவீனத்துவவாதிகள். அறிவுக்கும் அறிவியலுக்குமான தொடர்பு என்பது முற்றிலும் உடையும்போது உலகம் பைத்தியக்கார விடுதி யாகிவிடும். மொழி விளையாட்டுகள் என்பவை வெறுமனே ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் பயன்படும்போது அதிகாரம் முழுமையாட்சி பெற்று தான் விரும்புவது கிடைப்பதற்கு அலைகிறது. பெருந்தடியைக் கையிலெடுப்போர் இடுவது சட்ட மாகி விடுகிறது.

பின்நவீனத்துவ இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் தொடர்ச்சியைக் கைவிட்டதாகவும் நோக்கப் படுகிறது. நவீனத்துவ இலக்கியம், ஒரு முன்னணிப்படை இலக்கியம், சோதனை விருப்ப இலக்கியம். அது முற்றிலும் ஒரு செவ்விய வடிவத்தை வலியுறுத்துகிறது. நவீனத்துவ காலத்தில் தான் வடிவச் சோதனைகள் மிகுதியாகச் செய்யப்பட்டன. தமிழில் புதுமைப்பித்தன் காலத்தில் நவீனத்துவம் ஆரம்பமாகி, எழுத்து பத்திரிகையில் ஏறத்தாழ முழுமை பெற்று, தொடர்ந்தது. பின்நவீனத்துவமோ எதிர்வடிவம் (ஆண்டி-பார்ம்) என்பதை வலியுறுத்துகிறது. அதாவது வடிவ இணைப்புகளை மறுப்பது, திறந்த வடிவத்தைக் கையாள்வது போன்றவற்றை ஆதரிக்கிறது.

நவீனத்துவ இலக்கியத்திற்குக் குறித்த நோக்கம் உண்டு. அந்நோக்கத்தை நிறைவேற்று தல், இலக்கியத்தின் ஈடேற்றமாகக் கணிக்கப்படுகிறது. பின்நவீனத்துவ இலக்கியத்தில் குறித்த நோக்கம் என்பது கிடையாது. அதற்கு பதிலாக ஆட்டம் (ப்ளே) என்பது முக்கியமாகிறது.

நவீனத்துவ இலக்கியத்தில் சரியான வடிவமைப்பு (டிசைன்) என்பதும் முக்கியம். பின்நவீனத்துவ இலக்கியத்திலோ டிசைன் என்பதைவிடத், தற்செயல் ஆக்கத்திற்கு முக்கியத்துவம் தரப் படுகிறது.
நவீனத்துவவாதிகளின் நோக்கம் ஒரு முழுமையான கலைப் படைப்பு அல்லது கலைப் பொருளை உருவாக்குவது. பின்நவீ னத்துவவாதிகளின் நோக்கம் ஒரு கலைப்படைப்பினை உரு வாக்கி முடிப்பது என்பதைவிட, அதனை இயற்றும் அல்லது செய்கின்ற முறை எவ்வாறென ஆழ்ந்து சிந்திப்பது எனலாம். இதனாலேயே பின்நவீனத்துவப் படைப்புகளின் முக்கிய இயல்பாகச் சுயஆழ்வு (self-reflexivity) என்பது அமைகிறது.

நவீனத்துவ இலக்கியத்தில் படைப்பு என்பதும், ஒருங்கிணைத்தல் என்பதும், தொகுத்தல் என்பதும் முக்கியமானவை. பின்நவீனத் துவப் படைப்புகளில் தகர்த்தல் என்பதும், எதிர்நிலைப்பாடும் முக்கியமானவை.

நவீனத்துவம் இருப்பை வலியுறுத்துகிறது (ஆசிரியனின் இருப்பு, பொருளின் இருப்பு, சம்பவ இருப்பு, சுயத்தின் இருப்பு, கலைக் கருவிகளின் இருப்பு….எனப்பல இருப்புகள்). பின்நவீனத்துவம் இன்மையை (ஆப்சென்ஸ்) வலியுறுத்துகிறது.

நிச்சயமான ஒரு அல்லது பல அர்த்தங்களை நவீனத்துவம் முக்கியமாகக் கருதுகிறது (டிடர்மினசி). பின்நவீனத்துவம் நிச்சய மற்ற தன்மையையே முககியமாகக் கருதுகிறது.
ஜான் பார்த், பின்நவீனத்துவ இலக்கியத்தைத் திருப்தி செய்யும் இலக்கியம் என்கிறார். சார்லஸ் நியூமன் பணவீக்கப் பொருளாதாரத்தின் இலக்கியம் என்றார். லியோடார்டுக்குப் பின்நவீனத்துவ நிலை என்பது சமகாலத் தகவல் தொடர்புவீக்க நிலையில் அறிவின் பொதுநிலை. இஹாப் ஹாசனுக்குப் பின்நவீனத்துவ நிலை என்பது மனித குலத்தை ஆன்மிக இணைப்புச் செய்யும் பாதையில் முதல்கட்டம். இப்படிப் பல பார்வைகள்.
லவ் ஜாய் ஒரு முறை சொன்னார்-”ரொமாண்டிசிசம் என்பது ஒன்றல்ல, பல ரொமாண்டிசிசங்கள் இருக்கின்றன”. அதேபோல நாம் சொல்லலாம்-பின்நவீனத்துவம் என்பது ஒன்றல்ல, பல பின்நவீனத்துவங்கள் உள்ளன.
பின்நவீனத்துவத்தை இனம் காணக்கூடிய பல தன்மைகள் உள்ளன. முதலாவதாக, அவற்றுள் வருவது நிச்சயிக்க இயலாத் தன்மை (இண்டிடர்மினசி). எதுவுமே நிச்சயம் இல்லை, நாம் எதைப்பற்றியும் உறுதியோடிருக்க முடியாது. பழஞ் செவ்விலக்கியங்கள் காட்டும் உறுதிப்பாடும், சமயங்களின் உறுதிப்பாடும் நமக்கு இல்லை என்றாகி விட்டது. யாரும் எதைப்பற்றியும் உறுதியாக எதையும் சொல்லமுடியாது. இவ் உறுதியற்ற தன்மை நமது பிளவுபடு நிலையால் ஏற்பட்டது. கடவுளின் மறைவோடு உலகம் துண்டுதுண்டாகிவிட்டது. சமூகம் பிளவுபட்டுவிட்டது. குடும்பம் துண்டுதுண்டாகிவிட்டது. இவ்வாறு பிளவுபடுவதையே நாம் தினந்தோறும் கண்டுகொண்டிருக்கிறோம். பின்நவீனத்துவத் தில் இப்பிளவுபடுநிலை வடிவங்களைச் சிதைத்தலாக முடிகிறது. மோன்டாஜ், கொலாஜ், கிஷ், நையாண்டி, எதிர்பாரா வகைகளில் இலக்கிய வகைகளைக் கலத்தல் ஆகியவை நிகழ்கின்றன. பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்பது ஒரு வெகுஜனக் கலாச்சாரம். ஆகையால் எல்லா விதிகளும் உடைக்கப்படுகின்றன. எல்லாச் சாத்திரங்களும் மீறப்படுகின்றன. இதற்கு முதல் நல்ல எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது, மோனா லிசாவின் ஓவியத் தில் ஒரு வெள்ளாட்டை வரைந்து சேர்த்த டியூ சாம்ப் என்பவ ருடைய ஓவியம். கலை இழிவுக்குள்ளாக்கப்பட்டு கேளிக்கை யாக்கப்படுகிறது. வெறும் நுகர்வுக் கலாச்சாரம் நிலவுமிடத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

தமிழ்க் கலாச்சாரத்தில் இதற்கு நல்ல உதாரணம் சொல்லவேண்டுமானால், சென்னைச் சேரிப்புறங்களின் கானாப் பாடல்களையும், திரைப்படத்தில் பிரவுதேவாவின் நடனங்களையும் சொல்லலாம். பின்நவீனத்துவத்தின் கேளிக்கைக் கோட்பாடு (கார்னிவல் தியரி) எல்லையற்று இலக்கிய வடிவங்கள் கலப்புறுவதற்கும், ஊடகங்கள் கலப்பதற்கும், அழகியல் சிந்தனையும் கருத்தியல்சார் கலையும் கலப்பதற்கும் உதவுகிறது. திரைப்படமும் இலக்கியமும், முன்னணிக் கலையும் வெகுஜனக் கலையும், துன்பியலும் இன்பியலும், உயர்ந்ததும் தாழ்ந்ததும், உள்மனப் பேச்சும் ஜால யதார்த்தமும் என எவை எவையெல்லாமோ கலப்புறுகின்றன. எல்லாம் குப்பையாக ஒன்றாக்கப்படுகின்றன. எல்லாம் கடைசியில் நமது கண்ணெதிரேயுள்ள சமுதாயம் போலவே இருக்கிறது.

எந்தக் கோட்பாட்டையும் சுருக்கி, அதன் அடிப்படைப் பண்புகளை மட்டுமே சொல்லுதல் என்பது எளிமைப்படுத்தலும் குறைப்படுத்த லுமாகும் என்றாலும், விமரிசகர்களின் கருத்துகளை வசதிக்காக இங்கே மேற்கொள்ளலாம். டேவிட் லாட்ஜ் முதன்மையாக ஐந்து எடுத்துரை உத்திகளைப் பின்நவீனப் பிரதிகளுக்குரியதாக எடுத்துக் காட்டுகிறார்.
முரண்படுத்தல் (காண்ட்ரடிக்ஷன்),
வரிசைப்படுத்தல் (பெர்ம்யூடேஷன்),
தொடர்ச்சியறுத்தல் (டிஸ்கண்டின்யுடி),
குறித்த நோக்கமின்மை (ரேண்டம்னஸ்),
குறைச்சுற்று (ஷார்ட் சர்க்யூட்)
என்பன அவை. இவற்றோடு நாம் மிகையளவு (எக்சஸ்) என்ற ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவையனைத்தும் பழங்கால முதலே ஆளப்படும் இலக்கியக் கருவிகள்தான் என்றாலும் இவற்றை ஆங்காங்கு இலக்கிய ஒருமைப்பாட்டுக்கெனக் கையாளும் தன்மை பின்நவீனத்துத்திற்கு மாறுபட்டது. இவையனைத்தையும் பெரும்பாலும் கையாண்டு, அதேசமயம் பொருள் நிர்ணயத்தையும் மறுத்துச் செல்லும் போக்குடையவை பின்நவீனத்துவ இலக்கியங்கள் என்று சொல்லலாம்.

புரியாமல் எழுதுவது பின்நவீனத்துவ எழுத்து என்று சில சம காலப் படைப்பாளிகள் நினைக்கின்றனர். புரியாமல் எழுதுவது நவீனத்துவத் தன்மையே அன்றிப் பின்நவீனத்துவத் தன்மை அன்று. ஹெல்லரின் கேட்ச் 22, தாமஸ் பிஞ்ச்சனின் வீ போன்ற எந்தப் பின்நவீனத்துவப் பிரதியும் புரியாமல் இல்லை. ஆனால் சென்ற நூற்றாண்டின் முற்பாதிக்குள் ஜாய்ஸ் எழுதிய யுலிசிஸ், ஃபினிகன்ஸ் வேக் போன்ற நவீனத்துவ நாவல்கள் புரியாமைக்குப் பேர்போனவை. கோட்பாட்டுப் பரிச்சயமற்ற சில தமிழ் எழுத் தாளர்கள் இவ்வாறு புரியாமல் எழுதுவதே பின்நவீனத்துவம் என்று கருதுவது வருந்தத் தக்கது. பொருள் கொள்வதில் பன்முகத்தன்மை என்பது வேறு, புரியாமல் எழுதவேண்டும் என்றே எழுதிச் சிரமப்படுத்துதல் வேறு.
முரண்படுத்தல், வரிசைப்படுத்தல், தொடர்ச்சியுறுத்தல் போன்ற சொற்களின் பொருள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். குறித்த நோக்கமின்மை என்பது அதிகாரங்களை அல்லது அத்தியாயங்களை எந்த ஒரு குறித்த நோக்கத்திலும் அமைக் காமையும், அதுபோன்ற பிற செயல்களும் ஆகும்.

உதாரணமாக, கனடா நாட்டைச் சேர்ந்த பி.எஸ். ஜான்சன் என்னும் நாவலாசிரியரின் தனித்தாள் நாவல்கள் எனப்படுபவை, தனித் தனித் தாள்களாக இணைக்கப்பட்டிருக்கும். நாம் அவற்றை எந்த வரிசையிலும் முறைமாற்றி அமைத்துப் படித்துக்கொள்ளலாம். இதுபோல நிகழ்ச்சிகளும் வரிசைப் பாடின்றி அமைக்கப்படலாம். தமிழில் சங்க இலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, பரிபாடல் போன்றவற்றின் பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளமையும் இன்று நோக்கமற்ற ஒன்றாகத்தான் தோற்ற மளிக்கிறது. திருக்குறட் பாக்கள் ஒவ்வொரு அதிகாரத்திலும் அநேகமாகக் குறித்த நோக்கமற்று, வரிசையற்றுத்தான் உள்ளன. காமத்துப்பாலில் பல அதிகாரங்ளே நோக்கமற்ற வரிசையில் உள்ளன. அநேகமாக நந்திக்கலம்பகம் போன்ற பலதுறைகள் பயின்றுவரும் நூல்களிலும் அவற்றை நாம் வெவ்வேறு வகையில் முறைமாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

குறைச்சுற்று என்று லாட்ஜ் பெயரிட்டிருப்பது எழுத்தாளரும் நூலினுள் தம்மைப் பாத்திரங்களுக்கிடையே செயல்படுபவராக நுழைத்துக் கொள்வது. இதனைப் பழங்காலக் காப்பிய நூல்கள் பலவற்றிலும் பார்த்திருக்கிறோம். சிலப்பதிகாரத்திலும் இளங்கோ வடிகள் தம்மை ஒரு பாத்திரமாக நுழைத்துக்கொள்வதைப் பார்க்கிறோம். சமகால மன்னர்களின் வரலாற்று

நிகழ்வுகளையும் அவர் கதைப்போக்கில் சேர்த்துக் கொள்கிறார்.
மிகையளவு என்பது பிரதிக்குள் வாசகன் தொகுத்துப்பகுத்துப் பார்த்துச் சம்பவங்களை அல்லது கூறுகளைத் தனக்குள் வாங்க முடியாத வகையில் மிகுதியான தகவல்களை அளிப்பது. இப் பண்பையும் மகாபாரதம் இராமாயணம் போன்ற பெருங்காப்பி யங்களில் நாம் காண்கிறோம். இக்காலததிலும் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் போன்ற நாவல்களிலும் பிரேம் பிரேதா எழுதிய பிரதிகளிலும் காணமுடியும். இப்படிப்பட்ட இக்காலப் பிரதிகளைப் பின்நவீனத்துவப் பிரதிகள் என்பதில் தடையில்லை.

முரண்படுத்தல், வரிசைப்படுத்தல் என்னும் இலக்கியக் கருவி களைப் பழங்கால முதலே, சங்ககாலப் புலவர்கள் முதலாக இன்றையக் கவிஞர்கள் வரை பல்வேறு நிலைகளில் கையாண் டுள்ளனர். உடோபியத் தன்மைகளைக் கம்பர் வருணனைகளில் மட்டுமின்றிப் பிற புலவர்கள் படைப்புகளிலும் கண்டிருக்கிறோம். உடோபியத் தன்மை மட்டுமே பின்நவீனத்துவத் தன்மையன்று. அதற்கு எதிரான டிஸ்டோபியா என்பதும் பின்நவீனத்துவத் தன்மையே. இதனை நாம் கலிங்கத்துப் பரணி போன்ற பழங் காலப் படைப்புகளில் காணலாம். குறிப்பாகப் பேயுலகு ஒன்றை மிக நகைச்சுவையாகச் சித்திரப்படுத்துவதில் கலிங்கத்துப்பரணி பிற தமிழ்நூல்களிலிருந்து முதன்மையாக வேறுபட்டுள்ளது.

தொடர்ச்சியறு எழுத்துகள் அல்லது நேர்க்கோட்டு முறையில் படைக்கப்படாத பிரதிகள் பல தமிழில் இன்று வந்துகொண்டிருக்கின்றன. அவை யாவும் பின்நவீனத்துவப் படைப்புகள் என்று சொல்லத் தக்கவை அல்ல. நேர்க்கோட்டு முறையில் அமையாப் படைப்புகள் யாவும் பின்நவீனத்துவம் சார்ந்தவையாக இருக்கத் தேவையில்லை. நவீனத்துவப் படைப்புகள் பல தொடர்ச்சியறு எழுத்துமுறையில் எழுதப்பட்டவை. உதாரணத்திற்கு டி.எஸ். எலியட்டின் ‘பாழ்நிலம்’ கவிதையையே கூறலாம். அல்லது ஜாய்ஸின் ‘யுலிசிஸ்’ நாவலைக் கூறலாம்.

‘ஒரு நூற்றாண்டுத் தனிமை’ (One Hundred Years of Solitude) நாவலின் என்னும் லத்தீன் அமெரிக்க நாவலின் பாதிப்பில் தமிழவன் எழுதிய முதலிரு நாவல்களும் ஜால யதார்த்தம் என்பதற்கு உதாரணங்களாக உள்ளன. ‘ஜே.கே. எழுதிய மர்ம நாவல்’ என்பதில் பின்நவீனத்துவக் கூறுகள் பல உள்ளன. எழுத்தைப் பற்றிய எழுத்து என்ற முறையில் அது பின்நவீனத்துவப் பிரதி என்று கூறலாம். பின்நவீனத்துவப் படைப்புகளில் எம்.ஜி. சுரேஷ் எழுதிய சில பிரதிகளும், ஜீ. முருகனின் நாவல்களும் அடங்கக்கூடியவை. குறிப்பாக எம்.ஜி. சுரேஷ் எத்தனை வகையான பின்நவீனத்துவப் படைப்புகள் சொல்லப்படுகின்றனவோ அவற்றிற்கெல்லாம் உதா ரணமாக ஒவ்வொன்று எழுதியே தீரவேண்டுமென்று எழுதுவது போலத் தோன்றுகிறது. சுயத்திற்குள் ஆழ்தல், எழுத்தைப் பற்றிய எழுத்து, ஒரே கதைக்கு இரண்டு மூன்று முடிவுகளை அளித்தல் போன்ற சில பண்புகள் அவரிடம் காணப்பட்டாலும், இன்று பின்நவீனத்துவப் பிரதிகளுக்கு மிக அடிப்படையாக நோக்கப்படும் குறிப்புமுரண் (ஐரனி), நையாண்டி (பேரடி), பாஸ்டிஷ் போன்ற வை அவரது படைப்புகளில் மிகுதியாக இல்லை. இவையின்றிப் பார்க்கும்போது அவரது நாவல்கள் வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட துபபறியும் கதைகளாகத் தோற்றமளிக்கின்றன.

இன்றைக்குத் தமிழிலக்கிய உலகினை நோக்கும்போது அதிகமாகப் பின்நவீனத்துவப் பிரதிகள் வந்துள்ளதாகத் தெரியவில்லை. காரணம் வெளிப்படை. பலர் பின்நவீனத்துவப் பிரதிகள் என்ப வற்றை ஜாலயதார்த்தப் படைப்புகளாகவோ, புரியாமல் எழுதுகின்ற எழுத்துகளாகவோ சுருக்கிவிடுகின்றனர். இவர்களுக்குத் தத்துவரீதியான புரிந்து கொள்ளல், பிறமொழிகளில் உள்ள இப்படி யான படைப்புகளை ஆழ்ந்து படித்தல் ஆகிய இரண்டும் தேவை. இரண்டுமற்ற ஒரு தான்தோன்றித்தன நிலையைத்தான் தமிழ் உலகில் காண்கிறோம். கோட்பாடுகளை அறிந்து படைக்க முடியுமா என்ற கேள்வி இங்கு எழலாம். கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு எழுதுதல் என்பது தேவை யில்லைதான். ஆனால் அப்படிப்பட்டவர்கள் பின்நவீனத்துவம் போன்ற லேபில்களுக் காகக் கவலைப்படக்கூடாது. தங்கள் படைப்புகள் ஒரு தனிவிதம், சோதனைப் பிரதிகள் என்ற மாதிரியாக விட்டுவிடலாம். அவற்றுக்குத் தக்க கோட்பாடுகளை விமரிசகர்கள் வகுத்துக்கொள்வார்கள்.

பின்நவீனத்துவக் கருவிகள் எல்லாவற்றையும் ஒருவர் ஒரே நாவலில் அல்லது படைப்பில் கையாண்டுவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் குறைந்தபட்சமாக, தற்சிந்தனையுள் ஆழ்தல், சுயபிரக்ஞையோடு படைத்தல், அளந்தறிய அல்லது அர்த்தம் நிர்ணயம் செய்ய இயலாத் தன்மை, மையமழிந்த தன்மை, முழுமை-நிச்சயம் போன்ற பண்புகளை விலக்குதல், பலபிரதித்துவ உறவு போன்றவற்றை எப்பிரதிகள் கொண் டுள்ளனவோ அவற்றை நாம் பின்நவீனத்துவப் பிரதிகளாக ஏற்கலாம். தாமதம், இடையீடு, காலவயப்பட்ட தன்மை, இடப்பெயர்ச்சி போன்ற தன்மைகளோடு வாசகனையும் எழுத் தாளன் அர்த்த உருவாக்கத்திற்கு அடிப்படையானவனாகக் கொள் ளும் நிலை ஏற்படும்போது கட்டாயம் இவை பின்நவீனத்துவப் பிரதிகள் என்ற முத்திரையினைத் தரலாம்.

எழுத்தைவிட இன்று ஊடகப் பரப்புகளிலேயே பின்நவீனத்துவப் பண்புகள் நிறைந்துள்ளன. வெகுஜனக் கலாச்சாரத்திற்குரிய மேலோட்டமான பண்புகளை இவை முற்றிலும் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். ஆனால் இவை அதிகார வர்க்கத்திற்குத் துணை செய்வனவாகவே உள்ளன. இவற்றை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள முடியும், எத்தனை நாளுக்கு இவை நிலை நிற்கும் என்பது தெரியவில்லை. இம்மாதிரிப் பிரதிகளை ஏற்றுக்கொண்டால், அதிகாரத்திற்கு நாம் துணைபோகும் நிலை யோடு, கலை என்பதற்கு அடிப்படைப் பண்புகளாக நாம் வைத்திருக்கும் அனைத்தையும் மறுபரி சீலனை செய்யவேண்டி வரலாம்.

—–

திறனாய்வு