பண்பாட்டுப் பெருமிதம்

சீனப்பேரரசர் சி’என் லங்கிற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜியார்ஜ் அரசன் வணிக அனுமதி வேண்டி ஒரு தூதுக்குழு அனுப்பியிருந்தான். அதற்கு அவர் 1793இல் தனது தூதர் மூலமாக இங்கிலாந்தின் அரசனுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் அவர் ‘பணிவுடன்’ தெரிவிக்கிறார்:
“அரசனே, நீ பல கடல்களுக்கப்பால் வாழுகிறாய். இருப்பினும் உனது தாழ்மையான ஆசையால் தூண்டப்பட்டு, எங்கள் நாகரிகத்தின் சிறப்புகளில் பங்கு கொள்ள விரும்பி, உன் ஞாபகச்சின்னங்களை ஏந்திய ஒரு தூதுக் குழுவினரை அனுப்பி யிருக்கிறாய். எங்கள் நாகரிகத்தைப் பெறவேண்டிய ஒரு பேராவலை எங்கள் தெய்விக வமிசத்தின்மீது உனக்குள்ள மரியாதை தூண்டியிருக்கிறது என்று நீ உறுதி கூறினாலும், எங்கள் சடங்குகளும் சட்டவிதிகளும் உனக்குரியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன ஆதலின் உனது தூதுக்குழுவினர் எங்கள் நாகரிகத்தின் அடிப்படைக் கூறுகளைப் பெறமுடிந்தாலும், எங்கள் நடத்தை முறைகளையும் வழக்காறுகளையும் உன் அந்நிய மண்ணுக்கு மாற்றித் தர முடியாது.
எங்கள் நாகரிகத்தின் கம்பீரமான மேன்மை வானுலகின்கீழுள்ள எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது, எல்லா தேசங்களின் அரசர்களும் அவர்களுடைய விலைமதிப்பற்ற பரிசுகளை நிலத்தின் வழியாகவும் நீரின் வழியாகவும் அனுப்புகிறார்கள். நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம் என்பதை உன் தூதுவரே நேராகப் பார்த்து அறிந்துகொள்வார். விசித்திரமான, வினைத்திறம் மிக்க பொருள்கள்மீது நான் மதிப்பு வைக்கவில்லை, எனவே உன் நாட்டின் உற்பத்தி யாளர்களால் எனக்குப் பயனில்லை”.
இதை நாம் கம்பீரம் என்பதா? தன் நாட்டின்மீதுள்ள, பண்பாட்டின் மீதான பற்று என்பதா? எவ்விதம் நாம் நோக்கினாலும், பிரிட்டன் புகையிலையைச் சீனாவில் இறக்குமதி செய்ததும், அதை விரைவில் தன் வணிகத்திற்கும் ஆட்சிக்கும் உட்படுத்தியதும் வரலாற்று மெய்ம்மைகள். ஆனால் இதுபோன்றதொரு பதிலை எந்த இந்திய அல்லது இந்தியப்பகுதிகளில் உள்ள ஆட்சியாளர்களாவது பிரிட்டனுக்குச் சொன்னது உண்டா?

தினம்-ஒரு-செய்தி