நிலவுக்கல் (மூன்-ஸ்டோன்)

இவ்வாரம் ஒரு மாறுதலுக்காக, ஒரு மர்மக் கதையைக் காணலாம். நிலவுக்கல் (மூன்-ஸ்டோன்) என்ற (கோஹினூர் போன்ற) கற்பனை “மிளிர்கல்லை”ப் பற்றியது இக்கதை. இந்தப் பெரிய மஞ்சள் நிற ஒளி வீசும் கல்லை நம் நாட்டில் “சந்திரகாந்தக்கல்” என்று அழைப்பது வழக்கம். அதனால் நாமும் அப்படியே குறிப்பிடுவோம்.

இக்கதைப்படி இது ஸ்ரீரங்கப்பட்டணக் கோயிலின் ஒரு கடவுள் சிலை மீது பதிக்கப்பட்டிருந்ததாம். திப்புசுல்தான் காலத்தில் மைசூர்ப் போர் நடந்தபோது ஜான் ஹெர்ன்கேசில் என்ற படைத்தலைவன் சந்திரகாந்தத்திற்குக் காவலான மூன்று பிராமணர்களைக் கொன்று, அதைத் திருடிக்கொண்டு பிரிட்டனுக்கு வந்துவிட்டான். அந்தக் கல்மீது கடவுளின் சாபம் உண்டு என்றும், அதை எடுத்தவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்றும் கதை.

குடும்பத்தில் எல்லாரும் ஜானை அவன் பண்பற்ற நடத்தைக்காக வெறுத்தனர். தன் உறவினளான வெரீந்தர் சீமாட்டி என்பவள் மகளான ரேச்சலுக்குப் பதினெட்டு வயதாகும்போது அக்கல்லைப் பரிசளிக்க வேண்டுமென்று கூறிவிட்டு இறந்திருந்தான் ஜான். அதை அளிக்க வேண்டிய ஆள் ஃப்ராங்க்லின் பிளேக். ரேச்சலின் மனத்துக்குப் பிடித்த நண்பன். சந்திரகாந்தத்தினால் தனக்கு ஆபத்து ஏற்பட இருப்பதைத் தெரிந்தே தனது வெறுப்பினால் ரேச்சலுக்கு அக் கல்லை ஜான் பரிசளித்தான் என்று ஃப்ராங்க்லின் நினைக்கிறான். தன்னைச் சில இந்தியர்கள் பின்தொடர்வதனால் அவன் சந்தேகம் உறுதிப்படுகிறது.

ரேச்சலின் பிறந்தநாள் இரவன்று காட்ஃப்ரே ஏபில்ஒயிட் என்ற அவள் உறவினன் வருகிறான். அவன் ஒரு புகழ்பெற்ற கொடையாளி. அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். ஆனால் ஃப்ராங்க்லின் மீது காதல் கொண்டிருந்த ரேச்சல் அவனை மறுத்துவிடுகிறாள். ஏற்பாட்டின் படியே, ஃப்ராங்க்லின் அவளுக்கு மாணிக்கத்தைப் பரிசளிக்கிறான். அவள் அதை நிகழ்ச்சி முழுவதும் அணிந்திருக் கிறாள். பிறகு தன் படுக்கையிடத்தில் வைத்துக் கொள்கிறாள். ஆனால் காலையில் அக்கல்லைக் காணவில்லை.

மறுநாள் ரேச்சல் உள்ளூர்க்காவலர்களின் புலனாய்வுக்கு ஒத்துழைக்காததோடு, ஃப்ராங்க்லினையும் கடுமையாக நடத்துகிறாள். ஃப்ராங்க்லின் லண்டன் போலீசின் திறமை மிக்க சார்ஜண்ட் கஃப்-ஐ அழைக்கிறான். கஃப் ரோசன்னா என்ற பணிமகளைச் சந்தேகிக்கிறான். திருட்டு நடந்து பல நாட்கள் ஆன பிறகு, ரோசன்னா ஒரு பாக்கெட்டை மறைத்து வைத்தது பற்றி அவன் ஆராய்கின்ற போது அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். இதனால் ரேச்சல்மீதே சந்தேகம் திரும்புகிறது. கஃப் பணியிலிருந்து விலக்கப்படுகிறான். வெரீந்தர் சீமாட்டி ஒரு மாறுதலுக்காக ரேச்சலுடன் லண்டன் சென்று தங்குகிறாள்.

அடுத்து, ரேச்சல், காட்ஃப்ரேயுடன் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வது பற்றியும் பிறகு ஒப்பந்ததை முறிப்பது பற்றியும் வேறொரு நபரால் கதை சொல்லப்படுகிறது. வெரீந்தர் சீமாட்டி இறக்கிறாள். ரேச்சல் அனைத்துச் சொத்துக்கும் வாரிசாகிறாள். காட்ஃப்ரே பணத்திற்காகவே ரேச்சலை மணப்பதாகத் தெரிந்ததால் ஒப்பந்தத்தை முறித்து விட்டாள் என்று குடும்ப வழக்கறிஞரான ப்ரஃப் சொல்கிறார். லண்டனில் தொடர்ந்து இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார். அவர்கள் செப்டிமஸ் லூக்கர் என்ற லேவாதேவிக்காரனிடம் சந்திரகாந்தம் இருப்பதாகக் கருதித் தொடர்கிறார்கள்.

அடுத்தபடி கதைசொல்லும் ஃப்ராங்க்லின் பிளேக், ரோசன்னா ஸ்பியர்மன் தனக்கு விட்டுச் சென்ற கடிதத்தைப் பற்றிச் சொல்கிறான். அவள் அவனைக் காதலித்தாள். ஆகவே ஃப்ராங்க்லின்தான் சந்திரகாந்தத்தை எடுத்தான் என்ற செய்தியைச் சொல்லாமல் மறைத்துவிட்டாள். ஆனால் அவளை அவன் புறக்கணிப்பது தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்டாள். தான் அக் கல்லை எடுத்தததாகவே நினைவில்லாததால் ஃப்ராங்க்லின் ஆச்சரிய மடைகிறான். ஆனால் ரேச்சல் அவன்தான் எடுத்தான் என்பதை உறுதிப்படுத்துகிறாள்.

தன் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஃப்ராங்க்லின் தொடர்ந்து புலனாய்வில் ஈடுபடுகிறான். லேடி வெரீந்தரின் மருத்துவர் கேண்டி. அவருக்கு உதவியாளான எஸ்ரா ஜென்னிங்ஸ் ஒரு விளக்கம் தருகிறார். அதாவது கேண்டி, தன் மருத்துவச் சந்தேகம் ஒன்றை நிவர்த்தி செய்வதற்காக, ஃப்ராங்க்லினுக்கு அவனுக்குத் தெரியாமல் ரேச்சலின் பிறந்தநாள் இரவன்று அபின் (போதை மருந்தை) அளித்திருக்கிறார். மாணிக்கத்தின் பாதுகாப்பு பற்றிய பயத்தினால் ஃப்ராங்க்லின் மருந்தின் போதையில் அதை எடுத்துவந்துவிட்டான். இது மறுபடியும் அதேபோன்ற நிகழ்த்தலால் உண்மை என நிரூபிக்கப்படுகிறது. ஆகவே ஃப்ராங்க்லின் மருந்தின் தாக்கத்தால் அக்கல்லை எடுத்ததால் அவன் குற்றமற்றவன் என நிரூபணமாகிறது, ரேச்சலும் ஃப்ராங்க்லினும் சமாதானம் ஆகி அவர்களுக்குள் திருமண உறுதிப்பாடு நிகழ்கிறது.

லண்டனில் வழக்கறிஞர் ப்ரஃப், அந்தக் கல் செப்டிமஸ் லூக்கர் என்பவன் வழியாக, கருநிற மாலுமி ஒருவனுக்குச் சென்று விட்டதாகக் கண்டுபிடிக்கிறார். ஃப்ராங்க்லினும் சார்ஜண்ட் கஃப்பும் அவனைத் தேடுகிறார்கள். கண்டுபிடிக்கும்போது அவன் கொல்லப் பட்டிருக்கிறான். அவன் கருப்பாகத் தன்னை உருமாற்றிக் கொண்டிருந்த காட்ஃப்ரே ஏபில்ஒயிட் என்பது தெரிகிறது. காட்ஃப்ரே இரட்டை வாழ்க்கை வாழ்ந்ததாக கஃப் சொல்கிறார்.

ரேச்சலின் அறையிலிருந்து ஃப்ராங்க்லின் சந்திரகாந்தத்தை எடுத்து அபின் மயக்கத்தால் காட்ஃப்ரேயிடம் கொடுத்துத் தன் தந்தையின் வங்கியில் பத்திரமாக வைக்கும்படி கூறிச் சென்றுவிட்டான். காட்ஃப்ரே அதை அடமானம் வைத்துக் கடன் பெற்றிருந்தான். பிறகு இப்போது கடனை அடைத்துவிட்டு, அதைத் திரும்ப எடுத்து, அதை மேலும் அழகுற வெட்டி மிளிரச் செய்வதற்காக ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்ல இருந்தான். ஆனால் இறுதியாக இந்தியர்கள் அவனைக் கொன்றுவிட்டுத் தங்கள் சிலைமீது பதிப்பதற்காக அக்கல்லை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று கதை முடிகிறது.

இக்கதையை எழுதியவர் வில்கி காலின்ஸ் என்பவர். சார்லஸ் டிக்கன்ஸின் நண்பர். பிற்காலத் துப்பறியும் கதைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த துப்பறியும் நாவல் இது. 1868இல் எழுதப்பட்டாலும், இன்று எழுதப்பட்டதொரு புதிய மர்மக்கதை போன்றே புத்தம் புதிதாக நம்மை உணரச் செய்கிறது இந்த நாவல். துப்பறியும் நாவல் என்றாலும் பாத்திரப் படைப்புகள் சிறந்து விளங்குவது இதன் மற்றொரு சிறப்பு. இந்த ஆசிரியரின் மற்றொரு புகழ்பெற்ற நாவல் ‘வுமன் இன் ஒயிட்’ ஆகும். அதுவும் ஒரு மர்மக்கதையே என்றாலும் கிளர்ச்சிமிகு (சென்சேஷனல்) நாவல் என்பார்கள்.

இலக்கியம்