நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 4

aaa959
கேள்வி: சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் இடையூறாய் விளங்கும் ஆன்மிக வாதிகள் சொல்லும் இராமர்பாலம் பற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன? அப்படி ஒரு பாலம் அங்கு இருக்குமாயின் குமரிக்கண்டம் கடலடியில் மறைந்த பிறகு கட்டப்பட்டிருக்குமா? விளக்கம் தேவை. (இன்றைய தலைமுறையேனும் தெளிவுறப் புரிந்துகொள்ளவேண்டும்) சுவாமிநாதன் திருமுல்லைவாயில்

பதில்
: நமக்கு அறிவியல் மனப்பான்மை முதலில் தேவை. கட்டுக்கதைகளிலிருந்து மெய்ம்மைகளை வேறுபடுத்தி அறிய இன்று பலருக்கும் தெரியவில்லை. அரசியல்வாதிகள், வேண்டுமென்றே இதில் குட்டைகுழப்புகிறார்கள்.

இராமன், அவன் வாழ்ந்தது, பாலம் கட்டியது எல்லாம் கட்டுக்கதை. ஒவ்வொரு மதத்திற்கும் கட்டுக்கதைகள் உண்டு. இராமன் என்பவன் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக்கொண்டுவந்தான் என்பது இந்துமதத்தின் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதைகளுக்கும் மெய்ம்மைக ளுக்கும் சம்பந்தமில்லை. (உதாரணமாக, சிந்தித்துப்பாருங்கள், இராமனின் தந்தை தசரதன் பல லட்சம் ஆண்டுகள் பத்தாயிரக்கணக்கான மனைவிகளோடு வாழ்ந்தானாம். இது சாத்தியமா?  உண்மையில் நடக்கக்கூடியதா? அவன் தேவர்களுக்காக சம்பராசுரன் என்பவனோடு போரிட்டு வெற்றி பெற்றானாம்…)

குமரிக்கண்ட நிகழ்வு பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போது மனித இனம் தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறி. எனவே குமரிக்கண்டம் போன்றவற்றை கட்டுக்கதைகளோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

கடற்பகுதிகளில் சில இடங்கள் தாழ்வாகவும் சில ஆழமின்றியும் தானாகவே அமைந்திருக்கின்றன. பூமியில் மேடு பள்ளங்கள் இல்லையா? மலைகள், பள்ளத் தாக்குகள் இல்லையா? அப்படித்தான் கடலின் பரப்பிலும். அவற்றில் ஆழங் குறைந்த பகுதியைப் புராணங்களோடு இணைத்து அது ஆதாம் கட்டிய பாலம், இராமன் கட்டிய பாலம் என்று கட்டுக்கதை ஆக்கிவிடுவார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள வள்ளிமலைஎன்ற ஊரில் இன்னும் பல இடங்களில்-சற்றே பாறைகள் மஞ்சளாக இருந்தால் வள்ளியம்மை முருகப்பெருமானோடு மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம் என்று கதை கட்டியிருப்பார்கள். அது போன்றதுதான் இதுவும்.

சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பது அறிவியல் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு அது என்ன எதிர்விளைவு ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டியது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே சேது சமுத்திரத் திட்டமும் உடன் பாடில்லை. மனிதன் இயற்கையை ஒட்டி, அதனோடு இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமே தவிர இயற்கையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்று முயற்சிசெய்யக்கூடாது. அப்படிச் செய்தால் சுனாமிகள்தான் மிஞ்சும்.

கேள்வி : மொழிக்கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஏற்படுவதாக இருந்தாலும், தமிழில் மட்டும் அது விரைவாகவும் திட்டமிட்டும் நடப்பதாகப் படுகிறதே, மொழிக்கலப்பைத் தவிர்க்க வழி என்ன? – கண்ணன், சேலம்

மொழிக்கலப்பு எல்லா மொழிகளிலும் நிகழ்வது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படியானால் தமிழில் மட்டும் அது எப்படி நடவாமல் போகும்? எங்கெல்லாம் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஒன்றுசேர்ந்து பழகவேண்டிய நிலை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த மொழிகள் இரண்டிலுமே கலப்பு ஏற்படும்.

தமிழில் மொழிக்கலப்பு விரைவாக நடக்கிறது என்பது யூகம். அதற்கு ஆதாரமில்லை. ஆனால் திட்டமிட்டு நடக்கிறது என்று நமக்குத் தோன்றுவதற்குப் பின்வரும் காரணங்கள் அமைகின்றன.

இந்தியாவில், சமசுகிருதக் கலப்பில்லாமல் தனித்து இயங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றுதான். பிற திராவிட மொழிகளும்கூட சமசுகிருதக் கலப்பினை வெவ்வேறு அளவில் ஏற்றுக்கொண்டு அது இயற்கை என்று கருதிவிட்டன. மொழிக்கலப்பு இயற்கை என்பதை ஏற்காதவர்கள் தமிழ்பேசுபவர்களில் மட்டுமே இருக்கிறார்கள். சமசுகிருத, இந்தி, வடநாட்டு ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நாம் தமிழில் வடமொழிக்கலப்பு கூடாது என்கிறோம். இது அரசியல் பிரச்சினை. மொழிசார்ந்த பிரச்சினை அல்ல. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமை இருந்து இந்தியின் ஆதிக்கமோ, சமசுகிருத ஆதிக்கமோ இல்லை என்றால் நாம் மொழிக்கலப்பைப் பெரும்பாலும் எதிர்க்கமாட்டோம்.

ஏறத்தாழ கி.பி.1310 முதலாகத் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படவில்லை. கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், வடநாட்டிலிருந்து வந்த முஸ்லிம் கள், பிறகு கடைசியாக ஐரோப்பியர்கள் ஆகியவர்களால் ஆளப்பட்டது. சுதந்திர மடைந்த பிறகும் நாம் சுதந்திரமாக இல்லை. ஆதிக்கத்தில் பிறமொழியினர் இருக்கும்போது, நமது மொழி எப்படி வளரும்? அவர்கள் மொழி நமது மொழி யுடன் அதிகமாகக் கலக்கும் சாத்தியமே அதிகம்.

தமிழ்நாட்டில் பிறமொழியினர் ஆண்டதால் தமிழ்நாடு முழுவதும் பிறமொழி யினர் தமிழர்களுடன் கலந்து வாழ்வதைப் பார்க்கலாம். மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் எல்லா கிராமங்களிலும் உள்ளனர். நாயுடுகள், நாயர்கள், ஒக்கலிகர்கள் என இவர்கள் பட்டியல் நீளும். ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ பிற மாநிலங்களிலோ இப் படிப்பட்ட பிரச்சினை இல்லை. எல்லையில் மட்டுமே ஓரளவு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் ரெட்டியாரோ நாயுடுவோ இல்லாத கிராமம் ஏது? அவர்கள் பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தங்கள் மொழி யையே பேசுகிறார்கள். இவர்களைத் தமிழர்கள் என்பதா, அயலார்கள் என்பதா? எங்கள் கிராமத்தில்கூட நிலையாக வாழ்ந்து சொந்த நிலங்களில் விவசாயம் செய்துவருபவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தாய்மொழி தெலுங்கு என்றே சொல்லுகிறார்கள். வீட்டில் அதில்தான் பேசுகிறார்கள். வடமாவட்டங்களின் முஸ்லிம்களும் (சென்னை, ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி,…) அப்படித்தான். அவர்கள் வீட்டில் உருதுதான் பேசுகிறார்கள். வெளியில் வந்தால் மட்டுமே கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள்.

அண்மைக்காலத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அதன் கலப்பு மிகுதியாகிறது. செயற்கையான கலப்பு என்று நாம் சொல்லக்கூடியது ஆங்கிலக் கலப்பைத்தான். ஆங்கிலத்தைக் கலந்து பேசாவிட்டால் அது சரியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அந்த மோகம் இருக்கிறது. அதற்கு மேல், கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்து வளர்ச்சி. தொலைக் காட்சிகள் திட்டமிட்டே மொழிக்கலப்பை வளர்க்கின்றன. அவர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். 90 சதவீதம் கிராமப்புறப் பெண்கள் பார்க்கக்கூடிய சமையல் நிகழ்ச்சியில் 80 சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்து நடத்துகிறார்கள். குழம்பு, சோறு, எல்லாம் மறைந்து கிரேவி, நான், புடிங் போன்ற சொற்கள் சமையல் நிகழ்ச்சிக்குள் வந்துவிட்டன. காய்கறிகளின் பெயரைக்கூட அவர்கள் தமிழில் சொல்வதில்லை. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகளும் அப்படித்தான். பிறமொழிகளில் இவ்வளவு மோசமான நிலை இல்லை.

செயற்கையான மொழிக்கலப்பை மட்டுமே நாம் தவிர்க்கவேண்டும். எனவே ஆங்கிலக்கலப்பையும், வடநாட்டுப் பண்பாடு திட்டமிட்டுச் சுமத்தப்படுவதால் புகும் இந்திக்கலப்பையும் மட்டும் நாம் சற்றே தீவிரமாக நிராகரித்தால் போதுமா னது. நல்லது. தேவையானது.

கேள்வி :. தமிழகம் இப்போதிருப்பதைவிட அகன்ற நிலப்பரப்பு உள்ளதாகத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதே? – முகம்மது யூசுப், துபாய்

பதில்: ஆமாம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியும், கிழக்கில்-மேற்கில் கடல்களும் தமிழகத்துக்கு அக்கால எல்லைகள். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல் உலகம் என்பது தொல்காப்பியம். இப்போதிருக்கும் வங்காள விரிகுடாவும், அரேபியக் கடலும் கிழக்குக் கடல், மேற்குக் கடல் என்றே அக்காலத்தில் (குணகடல், குடகடல் என்றும்) வழங்கப்பட்டன.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்பனை செய்து பாருங்கள். அக்காலத்தில் சாலை வசதிகள் கிடையாது. எங்கு பார்த்தாலும் காடுகள். இப்போதுபோல எல்லா நிலமும் விவசாய நிலங்களாகவோ, குடியிருப்பு மனைகளாகவோ பழங்காலத்தில் இல்லை. பொது விளக்குகள் கிடையாது. வேக மான வாகனப் போக்குவரத்து  எதுவுமே கிடையாது. மலையாள மொழி அப்போது தோன்றவில்லை. அதனால்  இன்றிருக்கும் கேரளா அப்போது சேர நாடாகவே- தமிழ்நாடாகவே இருந்தது. வடக்கிலும் வேங்கடம் வரை தமிழ் தான் இருந்தது. அதற்கும் அப்பால் வடக்கில் இருந்தவர்கள் வடுகர் (வடக்கு நாட் டவர்) என்றழைக்கப்பட்டார்கள். மேற்கிலும் மைசூர் வரை தமிழ்நாடுதான். அது எருமைநாடு என்று தமிழ் இலக்கியங்களில் வருகிறது. மைசூர் என்பது மஹிஷ + ஊர். மஹிஷம் (வடமொழி) என்றால் எருமை. எருமையூரை, மஹிஷ ஊராக மாற்றி, மைசூராக இப்போது ஆக்கிவிட்டார்கள். அதேபோல கொங்குநாடு என்பது பிற்காலப் பல்லவர்  காலத்தில் கங்க நாடாக மாறிவிட்டது. இப்படி எத்தனையோ மாற்றங்கள். இப்போதிருக்கும் மங்களூரிலிருந்து நேர் கிழக்காகத் திருப்பதி வரை ஒரு கோடு கிழியுங்கள். அதற்குத் தெற்கே உள்ளதெல்லாம் பழங் காலத் தமிழ்நாடுதான். அப்போது வடுக மொழி இருந்தது. கன்னட மொழி உருவாகவில்லை. வெம் + கால் + ஊர் = வெங்காலூர் (மேற்கத்தியச் சீமையி லிருந்து கீழே இறங்கி வந்தால் வெம்மையான காற்று வீசும் ஊர் என்று அர்த்தம்)

என்ற பெயர்தான் இப்போது பெங்களூர் ஆகியிருக்கிறது. பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பேச்சு மொழியில் அவ்வளவாக வித்தியாசம் கிடையாது. (சென்னைத் தமிழுக்கும் கோவைத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம்கூடக் கிடையாது.) எழுத்து மொழிதான் வேறுபட்டுவிட்டது.

இதற்குமேல் இன்னொரு குறிப்பு: வடவேங்கடம் தென்குமரி என்பதிலுள்ள தென் குமரி-அது குமரிமுனை அல்ல, பழங்காலத்தில் குமரிக்கண்டம் இருந்தது, அதில் குமரி ஆறு ஓடியது, அந்தக் குமரி ஆற்றைத்தான் தென்குமரி என்ற சொல் குறிக்கிறது என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், அப்போதிருந்த தமிழகத்தின் பரப்பு எவ்வளவு இருக்கும்?

கேள்வி : கலிங்கத்துப் பரணி கற்பனையால் எழுதப்பட்ட இலக்கியமா? இல்லை உண்மையில் நடந்தனவற்றின் தொகுப்பா? – செந்தில் குமார், சென்னை

பதில்: கற்பனையும் உண்மையும் அற்புதமாக இணைக்கப்பட்ட ஒரு படைப்பு கலிங்கத்துப் பரணி.

கலிங்கத்துப் பரணியில் முதல் குலோத்துங்க சோழ  அரசன், காஞ்சி புரத்தில் தன் அரண்மனையில் வந்து தங்கியிருந்து, அங்கிருந்து தன் படைத்தலைவன் கருணாகர பல்லவனைக் கலிங்கத்துக்குச் சென்று போரிட்டு வருமாறு கூறுகிறான். கருணாகர பல்லவனும், அவ்வாறே ஒரு பெரும் படையுடன் கலிங்கத்துக்குச் சென்று அப்போதிருந்த கலிங்க மன்னர்களைத் தோற்கடித்து (வட கலிங்கத்துக்கும், தென் கலிங்கத்துக்கும் தனித்தனி அரசர்கள் அப்போது) திறை செலுத்தச் செய்து வருகிறான். இது வரலாற்றுச் செய்தி.

கடுங்கோடை காலம். எங்கும் உணவின்றி, பேய்கள் பசியால் வாடுகின்றன. அவை தங்கள் தலைவியான காளியிடம் முறையிடுகின்றன. அவள், இப்போது கலிங்கத்தில் பெரும் போர் நடக்கிறது. அந்தப் போர்க்களத்திற்குச் சென்றால் உங்களுக்குத் தேவையான இரத்தக்கூழும் நிணமும் கிடைக்கும், உங்கள் பசி தீரும் என்று சொல்லி அவற்றை அனுப்புகிறாள். அவ்வாறே அந்தப் பேய்கள் கலிங்கப் போர்க்களத்திற்குச் சென்று உணவருந்திப் பசி தீர்ந்து காளியை வாழ்த்துகின்றன. இது சுத்தமான கற்பனைப் பகுதி.

இன்னொரு சிறிய கற்பனைப் பகுதியும் கலிங்கத்துப் பரணியில் உண்டு. போர்க்களத்திலிருந்து  திரும்பி வருகின்ற வீரர்கள் நள்ளிரவிலோ, விடியலுக்கு முன்னரோ கண்ட நேரத்தில் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அப்போது வாயிலைத் திறக்குமாறு அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் வேண்டு கின்றனர். மனைவியர் எவ்விதம் கணவன் மார்களின் காதலுக்கு ஏங்கியிருந்தார் கள், இப்போது எவ்விதம் நடந்துகொள்கிறார்கள் என்பது கடைதிறப்பு என்ற முதற்பகுதியில் வரும் ஒரு சிற்றின்பச் சுவை மிக்க கற்பனைப் பகுதி.

ஒரு வரலாற்றுப் போரையும் ஒரு பேய்க்கதையையும் இணைப்பது எவ்வளவு வித்தியாசமான கற்பனை?

கேள்வி : சங்க இலக்கியங்களில் உள்ள தமிழ் தமிழ் மொழியா என்னும் அளவுக்கு உள்ளது. வார்த்தைகள் ஒன்றும் புரியவில்லை. அவைகள் வேறு ஏதோ மொழிக்காக தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்ட மாதிரி இருக்கின்றன. அந்த வார்த்தைகள்தான் அக்காலத்தில் வழக்குச் சொல்லாக இருந்தனவா? இல்லையெனில் புலவர்கள் தங்கள் பழமையை வெளிப்படுத்த அத்தகைய சிக்கலான சொற்களைக் கையாண்டுள்ளார்களா? – பாண்டியன் – ராமநாதபுரம்

பதில்: உண்மையில் தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறைவு, மிகக் குறைவு. சங்க இலக்கியம் படிக்கும்போது  நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மொழியைப் படிக்கிறீர்கள். மொழி காலத்தாலும் இடத்தாலும் வேறுபடக் கூடியதுதானே?  ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த பல வார்த்தைகள் இப்போது புழக்கத்தில் இல்லை. அப்போது இருந்த பெரியவர்களுக்கு- அவர்கள் இருந்தால்- இப்போது உள்ள தமிழ் சுத்தமாகப் புரி யாது. ஐம்பதாண்டுகளிலேயே இவ்வளவு மாற்றம் என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தமொழி எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்?

உங்களுக்கு ஒரு சில மொழிகளேனும் நன்றாகத் தெரிந்தால் இந்தக் கேள்வியே எழாது. ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும்- ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமே (சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது) இப்போது சுத்தமாகப் புரியாது. அவ்வளவு மாற்றம். பிற எல்லா மொழிகளுமே அப்படித் தான். சமசுகிருதம் ஒன்றைத்தான் செயற்கையானதாக, உச்சரிப்பு மாறாததாக வைத்திருக்கவேண்டும் என்று “செம்மைப்படுத்தியதால்” அது மாறாததாக ஓரள வுக்கு இருக்கிறது. அதே சமசுகிருதத்தின் பேச்சுமொழி வடிவமான பிராகிருதம்-இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்தது-அபபிரம்சமாக உரு மாறி, குஜராத்தி, மராட்டி, வங்காளி, இந்தி என்பதுபோல பல மொழிகளாக மாறிவிட்டது. இவற்றோடு எல்லாம் ஒப்பிடும்போது தமிழின் மாற்றம் மிகக் குறைவு. இன்றைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது புரிகிறதே. (கேளிர் என்பது மட்டும் சற்றே கடினமான சொல்.) அல்லது செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன என்றால் புரிகிறதே. அதனால் உங்கள் கூற்று ஓரளவு உண்மை. உங்கள் பிற கேள்விகளுக்கு பதில்கள்.

1. தமிழ்ச் சொற்கள், தமிழுக்காக மட்டுமே உருவானவைதான். வேறு எந்த மொழிக்காகவும் அல்ல. இதுதான் எந்த மொழிக்குமே உள்ளது.

2. அந்தச் சொற்கள்தான் அந்தக் காலத்தில் வழக்குச் சொற்களாக இருந்தன.

3. புலவர்கள் செயற்கையான பழந்தமிழில் எழுதினால் நிற்காது. இந்தக் காலத்தில்கூடப் பெருஞ்சித்திரனார் போன்ற சிலர் அக்கால வழக்கைக் கையாண்டு கவிதை எழுதிப்பார்த்தார்கள். ஆனால் அவற்றைப் படிப்போர் இல்லை. எந்தக் காலமாக இருந்தாலும், அந்தந்தக் காலத்துப் பேச்சுமொழிச் சொற்களைப் பயன்படுத்தி எழுதினால்தான் மக்கள் படிப்பார்கள்.

கேள்வி பதில்