நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 2

kannaki-cooking
கேள்வி: தமிழரின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்பது அரசியல் சாராத இயக்கங்களால் முடியுமா?   செல்வன், சென்னை

பதில்:
 அரசியல் என்ற சொல்லின் அர்த்தத்தைக் குறுக்கிப் பார்ப்பதால் கேட்கப் படும் கேள்வி இது. எங்கே, எதில் அரசியல் இல்லை? இன்னொருவர் பண்பாடு நம் மீது சுமத்தப்படுவது அரசியல் செய்கை இல்லையா? அது என்ன கள்ளமற்ற, குழந்தைத்தனமான செயலா? ஆதிக்கத்துக்கான செயல்தானே?
அதுபோல அதிலிருந்து, நம் பண்பாட்டை நாம் மீட்டுருவாக்கம் செய்வது, காப்பாற்றுவது என்பதும் அரசியல் செய்கைதான். அதில் சந்தேகம் என்ன?
நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும், பேசும் எல்லாப் பேச்சுகளிலும் நுண்அரசியல் கலந்திருக்கிறது. நேரடி அரசியல் பங்கேற்பிலிருந்து வித்தியாசப்படுத்த, நுண்அரசியல் என்ற சொல் கையாளப்படுகிறது.

தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி என்ற உதாரணத்தையே எடுத்துக்கொள்வோமே. அதில் முக்கால்வாசி ஆங்கிலமும் கால்வாசித் தமிழும் ஒருவர் கலந்து பேசுகிறார் என்றால் அவரது இயல்பு, பின்னணி, நோக்கம் இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக அவர் ஒரு பணக்காரராக, அல்லது உயர்மத்தியத் தர வகுப்பு சார்ந்தவராக இருப்பார். அவருக்குத் தமிழ் பற்றிப் பெரும்பாலும் ஒன்றும் தெரியாது. ஏதோ கலப்புத் தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசுவதோடு சரி. அதையும்கூட இப்போது பலர் செய்வதில்லை. பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பேச்சு பழகவேண்டும், அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்காக வீட்டிலும் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு மொழித் தூய்மை பற்றியோ கலப்பு பற்றியோ கவலை கிடையாது. சுருக்க மாகச் சொன்னால் தமிழ்ப்பண்பாடு பற்றிக் கவலை கிடையாது. ஏதோ படித்தார்கள், நல்ல ஊதியம் வாங்கிப் பிழைக்கிறார்கள்- அவ்வளவுதான். ஆகவே தங்கள் பிள்ளைகளை அவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படிக்க வைக்கமாட்டார்கள். அப்படிப் படித்தால் நல்ல வேலை கிடைக்காது, வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாது அல்லவா? அவர்கள் ஊதிய உயர்வுக்கெல்லாம் போராட மாட்டார்கள். தாங்களே உயர் அதிகாரிகளாக இருப்பதால் இன்னும் உயர்மட்டத்தில் இருப்பவர்களிடம் பேரம் பேசியே முடித்துக்கொள்வார்கள்..

இத்தகைய மேட்டுக்குடி மனப்பான்மையைத்தான் இவர்கள் தங்களோடு பழகுபவர்களுக்கும்-அவர்கள் கீழ்மத்தியத் தர வகுப்பினராக இருந்தாலும் பரப்புவார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா? இதை எப்படி ஒழிப்பீர்கள்? ஆகவே அரசியல் இயக்கங்களால் மட்டுமே நமது பண்பாட்டை மீட்க முடியும். வேண்டுமானால் நுண்அரசியலோடு நிறுத்திக்கொள்கிறேன் என்று கூறுங்கள். அதுவும் வெளிப்படையான அரசியலுக்குச் சில சம்பவங்கள் நிகழும்போது இட்டுச் சென்றுவிடும்தான். வெளிப்படையாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பெரியாரே அந்தந்தத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அல்லவா?

கேள்வி: மதுரை மீது மாலிக் கபூரின்  படையெடுப்புக்குப் பிறகு சரண் அடைந்த வீர பாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் நிலை என்ன?  மதுரை பொற் குவியல்களை மாலிக் கபூர் கொள்ளை அடித்துச் சென்ற பிறகு ஏற்பட்ட தட்டுப்பாடு பஞ்சத்தில் இருந்து மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் (தமிழர்களின் தற்போதைய நிலை) தமிழர்கள் உயர முடியுமா? அதற்கு என்ன வழி? மௌ.வினோத் குமார்

பதில்- இந்தக் கேள்வி பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கிறது. கூடியவரை பதில்சொல்ல முயற்சி செய்யலாம்.

மாலிக் காபூர் கொள்ளையடித்துச் சென்றபிறகு தமிழ்நாடு பாலைவன மாயிற்று. இன்னும் இரண்டு முறை- 1314இல் குஸ்ரூகான் என்பவன் படையெடுத்தான், 1323இல் உலூஸ்கான் படையெடுப்பு நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். உலூஸ்கான் பின்னால் முகமது பின் துக்ளக் ஆனான். அசன்ஷா என்பவனிடம் ஆட்சியை விட்டுச் சென்றான். முஸ்லிம்கள்தான் மதுரையில் 1344வரை முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள், இருந்தாலும் நான்காம் சுந்தரபாண்டியன் 1320 வரையிலும், நான்காம் வீரபாண்டியன் 1347 வரையிலும் உயிரோடிருந்தார்கள் என்று தெரிகிறது. இதுபற்றித் தேவையானால், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு என்ற நூலைப் பார்க்கலாம்.

அதற்குப் பிறகும் பாண்டிய பரம்பரையினர் தலைக்கோட்டைப் போர் வரை (கி.பி.1565) வாழ்ந்திருந்தார்கள், விசயநகரப் பேரரசுக்குச் சிற்றரசர்களாக இருந் தார்கள் என்று தெரிகிறது. (உங்களுக்குத் தேவைப்பட்டால் 1309 முதல் 1565 வரை குறுநில மன்னர்களாக இருந்த பாண்டிய மன்னர்களின் பட்டியலைத் தர இயலும்.)

1336இல் விசயநகரப் பேரரசு ஆந்திரத்தில் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குள் ளாகவே முதலாம் புக்கன் மதுரையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். பிறகு தமிழகத்தில் விசயநகர ஆட்சிதான். அவன் படையெடுப்பு பற்றி அவன் மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்ற நூல் நன்றாக விளக்குகிறது.

பாளையக்காரர்களான கட்டபொம்மு போன்றவர்கள் தெலுங்கர்கள், அவர்கள் பெயரில் பாண்டியன் இருந்தாலும் அவர்கள் பாண்டியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

கடைசியாக, இன்றைய தமிழர்கள் முன்னேறுவதற்கு வழிகேட்கிறீர்கள். மொழியுணர்வும் இனவுணர்வும் எந்த மக்களுக்கும் இன்றியமையாதவை. அவற்றை வளர்ப்பது ஒன்றுதான் நாம் எதிர்காலத்தில் இருப்பதற்கான ஒரே வழி. இல்லையென்றாலும் இருக்கமுடியும் -எந்த அடையாளமும் அற்றவர்களாக.

மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் நம்மைவிட தேர்ந்த மொழி யுணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு சிறிய சம்பவத்திலும் காணமுடியும். அவர்கள் இனத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் கட்சிகளை, பிற பிரிவினைகளை மறந்து ஒன்றாக நிற்கிறார்கள். தமிழர்கள்?  மூன்று ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் கூடி நம் இனத்தவரைக் கொலைசெய்ததை வேடிக்கை பார்த்த மாபெரும் இனமல்லவா நாம்? அந்த மாபெரும் இனப்படுகொலைக்கு இன்றுவரை தில்லி அரசு ஆதரவாக இருக்கிறதே, அதற்கு ஆதரவாக இங்கே ஊடகங்கள் இருக்கின்றனவே,  நமக்கு இன உணர்வு இருக்கிறதா?

கேள்வி: நிலம் வகைப்படுத்தலும், பிரிவுகளும் மற்ற எந்த நாகரிகங்களிலும் இல்லாத வகையில் தமிழர்கள் பகுத்தது வியப்பாக உள்ளது. அரப்பா நாகரிகத்தின் தொடராக நம் இனத்தை அடையாளம் காண எந்த வகையான தொன்மச் சான்றுகள் நம்மிடம் உள்ளன? மொழி தவிர்த்து வாழ்வியல் முறைகளில் ஒப்புமை உள்ளதா என்பதுதான் கேள்வியின் நோக்கம். கோவிந்தராஜ், அம்பத்தூர்

பதில்: இவை இரண்டு தனித்தனிக் கேள்விகள். நிலத்தைத் திணைகள் அடிப்படையில் வகைப்படுத்தலும் அதிலுள்ள துறைகளும் வேறு எந்த நாகரிகத் திலும் காணப்படாத, தமிழர்களுக்கே உரிய தனித்த முறை. இது வியப்புக்குரிய ஒன்றாகத்தான் உள்ளது. சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் இந்த திணை துறைப் பிரிவுகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. சங்க இலக்கியம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நு£ற்றாண்டு அளவிலிருந்து எழுதப்பட்டது என்பதால், அதற்கு முன்னரே இந்த முறை உருவாகியிருக்கவேண்டும். தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் நாம் காண்பது சங்க இலக்கியம் என்றால், அது மிகச் செம்மையான கூறுகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட செம்மை அப்போதுதான் தோன்றுகின்ற இலக்கியத்திற்கு இருக்கமுடியாது. ஆகவே சங்க இலக்கியம் தோன்றுவதற்குக் குறைந்தது ஓர் ஆயிரம் ஆண்டுப் பழமையாவது தமிழ்மொழிக்கும் இலக்கியங்களுக்கும் இருந்திருக்கவேண்டும் என்பது நியாயமான யூகம். அதாவது கி.மு. 1200 அளவுக்கு நியாயமாகத் தமிழ் மொழியின் பழமை யைக் கொண்டு செல்ல இயலும்.

கி.மு. 1500 அளவில் வடமேற்கு ஐரோப்பா-இன்றைய காகசஸ்-யூரல் பகுதியிலி ருந்து ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது. சிந்துவெளி நாகரி கத்தை ஆரியர்கள் அழித்தார்கள் என்று முன்னர் கூறினார்கள். இப்போது அந்தக் கருத்து மாறியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3000-2000 காலப் பகுதியைச் சேர்ந்தது. அது தட்பவெப்ப மாறுதல்களால் அழிந்ததாக இன்று கருதுகிறார்கள். இப்படிப் பார்த்தால், நாம் ஒரு கேள்விக்கு விடைகண்டாக வேண்டும்.

கி.மு. 2000 அளவில் மறைந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும், கி.மு. 1000 அளவில் தோன்றிய தமிழர் நாகரிகத்திற்கும் எப்படித் தொடர்புப்படுத்துவது?

இப்படித் தொடர்பு படுத்துவதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால இடைவெளி. இன்னொன்று ஆயிரம் மைல் இட வேறுபாடு.

இந்த இரண்டையும் மிகச் சரியாக நிரப்ப நம்மிடம் சான்றுகள் இல்லை. கி.மு. 1000க்கும் கி.மு. 2000க்குமான கால இடைவெளியும் வடக்கு-தெற்கு என்ற இட இடைவெளியும் நிரப்பப்படத் தக்க சான்றுகள் கிடைத்தால்-இதுவரை கிடைக்க வில்லை-நாம் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், தமிழ் நாகரிகம்தான் என்று அடித்துக்கூற முடியும். இல்லாதவரை சந்தேகம்தான்.

இந்த இடைவெளியைத்தான் வடநாட்டு இந்துவெறியர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆரியர் வருகை சிந்துவெளி நாகரிகத்திற்கு எவ்வளவோ பின்னால் என்ற போதிலும் அது ஆரிய நாகரிகமே என்று சான்று களையெல்லாம் திருத்தி வரலாறு எழுதுகின்றனர். (சான்றாக, சிந்துவெளி நாகரி கத்தில் பசு-எருது முத்திரைகள் உள்ளன. அவை இறைவனைப் போன்ற ஒருவர் அருகில் உள்ளன. அதனால் பசுபதி ஈசுவரருடைய முற்காலச் சித்திரிப்பு, திராவிடம் சார்ந்தது என்றார்கள். இந்துவெறியர்கள், அவற்றைக் குதிரை முத்தி ரைகளாகப் படம்வரைந்து அதை ஆரிய நாகரிகத்தினது என்று சித்திரிக்கின்றனர். குதிரைகள் ஆரிய நாகரிகத்தில் உண்டு. அஸ்வமேத யாகம் செய்தவர்கள் அல்லவா அவர்கள்?) அதனால் ஆரிய நாகரிகமே காலத்தினால் முந்தியது, அதன் தொடர்ச்சியே இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்-தமிழ் நாடு உட்பட-உள்ள நாகரிகம் என்று நிலைநாட்டுவது அவர்கள் நோக்கம். அவர்கள் இப்படிச்

செய்தது, இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. இப்போதும் இதற்கான இணையதளங்களில் இந்தச் சான்றழிப்புகளைக் காணலாம்.

இப்போது கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு வரலாம். தமிழர் திணை-துறைப் பகுப்புக்கு நேரடியான சான்றுத் தொடர்ச்சி சிந்துவெளிநாகரிகத்திலிருந்து கிடைக்கவில்லை. சிந்துவெளி நாகரிகத்தை நாம் சேர்ந்தவர்கள் என்றாலும் இல்லை என்றாலும், திணை-துறைப் பகுப்பு நமக்கே உரிய ஒன்று என்பதில் ஐயமில்லை.

கேள்வி:  மார்ட்டின் வீலர் காலத்திற்குப் பின் தமிழகக் கரையோரம் மற்றும் கரைப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு முடக்கப்பட்டது. இது தொடர்ந்திருக்கு மானால் நமது தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்குமல்லவா? பாண்டியன், மதுரை

பதில்: மார்ட்டின் வீலர் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியை நடத்தியவர். சிந்துவெளி நாகரிகம் மிகப் பரந்த நாகரிகம். மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல், ரூபார், ராக்கிகடி, காளிபங்கன் முதலிய பல இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து குஜராத் வரை நீளும் நாகரிகப்பகுதி இது. இதை ஆரம்பித்து வைத்தவர் சர் ஜான் மார்ஷல். 1930-40களில், இந்தியா சுதந்திரம் பெறும்வரை அகழ்வாராய்ச்சிக் குழுவில் இருந்தவர் மார்ட்டிமர் வீலர். லோத்தல் இன்றும் குஜராத்தில் உள்ளது. மிச்சப் பகுதிகள் பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் உள்ளன. 2010இல் சட்லெஜ் பகுதியில் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தாமிர உருக்குச் சாலை (கி.மு.5000 அளவிலானது) மூழ்கிப்போயிற்று. இப்போது இந்து வெறியர்கள், ரிக்வேதத்தில் உள்ள நதிஸ்துதி சூக்தம் என்பது சிந்துவெளி நாகரி கத்தில் எழுதப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்ட்டிமர் வீலர்தான் சிந்துவெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு களை ஆராய்ந்து ஆரியர்கள் இந்த நாகரிகத்தை அழித்தவர்கள் என்ற கருதுகோளை முன்வைத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்த அகழ்வா ராய்ச்சியின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதால் தொல்லியல் ஆய்வில் இந்தியர்களுக்கு ஆர்வம் குறைந்துபோயிற்று.

இந்தத் தொல்லியல் ஆய்வு தொடர்ந்திருக்குமானால் சிந்துவெளி நாகரிகத்தையும் தமிழ் நாகரிகத்தையும் இணைக்கும் சங்கிலிக்கான சான்றுகள் கிடைத்திருக்கலாம் என்பது யூகம்தான். உறுதியாகச் சொல்லமுடியாது. மேலும், சுதந்திரமடைந்தபின் இதில் ஈடுபட்ட தொல்லியலாளர்கள்-சிகாரிபுரம் ரங்கநாதராவ் போன்றவர்கள் அது ஆரியநாகரிகம் என்று நிரூபிக்க முனைந்தார்கள். எனவே பயன் கிட்டி யிருக்குமா என்பது சந்தேகம்தான்.

கேள்வி: கவிதை வடிவம் சிதைந்தது, புதுக்கவிதை என்ற வடிவம் வந்ததாலா அல்லது மக்களின் இலக்கண அறிவு குறைந்ததாலா? சேது, புதுக்கோட்டை

பதில்: புதுக்கவிதை என்ற வடிவம், உரைநடை பரவியதன் விளைவாக ஏற்பட்டது. தமிழைவிட ஆங்கிலத்தில் உரைநடை முன்னமே தோன்றிவிட்டதால், புதுக்கவிதை வடிவம் ஆங்கிலத்தில், ஒரு நு£ற்றாண்டுக்கு முன்னமே தோன்றி விட்டது. இது உலகமெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு மாற்றம். இதற்கு மக்களின் இலக்கண அறிவின் குறைவைக் காரணம் சொல்லமுடியாது.

நாயக்கர் காலத்திலிருந்து சிற்றிலக்கியங்கள் புராணங்கள்தான் தமிழில் தோன் றின. அவை கற்பனை வறட்சியையும், வடநாட்டுக்கதைகளின் தழுவலையும் கொண்டிருந்தன. ஆனால் நல்ல யாப்பில்தான் எழுதப்பட்டன. இவற்றைக் கவிதைகள் என்று சொல்லவே முடியாது. ஏனெனில் கவிதைக்குரிய உயிர்ப்புத் தன்மை இவற்றில் இல்லை.

யாப்பில் எழுதிவிட்டால் மட்டும் கவிதையாகாது. அது வெறும் செய்யுளா கவே நிற்கும். யாப்பு என்பது செங்கல்லை வைத்துக் கட்டடம் கட்டுவது போன்றது. அது கலையழகுமிக்க நேர்த்தியான கட்டடம் ஆகப்போகிறதா, எவ்விதச் சிறப்புமற்ற குட்டிச்சுவர் ஆகப்போகிறதா என்பது கட்டுவோனின் கலைநோக்கினைப் பொறுத்ததுதானே? அதுபோலத்தான் யாப்பும். அதைக் கம்பரைப்போல, பாரதியைப் போல, பாரதிதாசனைப்போல, செம்மையாகப் பயன்படுத்தினால் நல்ல கவிதையும் ஆகும். தெருவுக்குத் தெரு நம்நாட்டில் கவிஞர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு எழுதுபவர்கள் கையில் குட்டிச்சுவரும் ஆகும்.

புதுக்கவிதையும் அதுபோலத்தான். அதுவும் நல்ல கவிஞர்களிடம்தான் உயிர் பெறும். கலையாகும். எவர் வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைத்தால் உரைநடைக் குட்டிச்சுவர்கள்தான் மிஞ்சும். எல்லாப் புதுக் கவிதைகளையுமே கவிதைச் சிதைவுகள் என்று பார்க்கலாகாது. ஆழ்ந்த உணர்வுகளை எழுப்புகின்ற சிறந்த புதுக்கவிதைகளும் உள்ளன.

ஆனால், புதுக்கவிதை யாப்பினைக் கைவிட்டதால், நல்ல உணர்வைத் தரக்கூடிய ஒரு சிறந்த கருவியை இழந்துவிட்டது என்பது உண்மை. கவிதையின் பொருளுக்கு யாப்பின் இசைநயம் அனுசரணையாக இருந்து உயிர் தருகிறது, அந்தக் கவிதைப் பொருளைச் செழுமையாக்குகிறது. கம்பரின் பல கவிதைகள், மிகச் சிறப்பாகக் கவிதைப்பொருளுக்கு அனுசரணையாகச் சந்தத்தைப் பயன்படுத்தக்கூடியவை.

கேள்வி பதில்