திரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்

movie-crews-seven-samuraiசெவன் சாமுராய்ஸ் என்ற ஜப்பானியப் படத்தை நான் சரியாக முப்பதாண்டுகளுக்கு முன்பு திருச்சி திரைப்படச் சங்கத்தில் (சினி ஃபோரத்தில்) பார்த்தேன். உலகம்போற்றும் திரைப்படக் கலைமேதைகளில் முக்கியமானவர் அகீரா குரோசேவா. அவரது திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது இப்படம். சத்யஜித் ராய்க்கும் மிகவும் பிடித்த படம் இது. (நம்மூர் ரஜனிகாந்த் கூடச் சில படங்களில்-உதாரணம் தளபதி-ஜப்பானிய சமுராய் வீரன் வேஷத்தில் அவ்வப் போது காட்சியளித்திருக்கிறார்!)

விறுவிறுப்பான நிகழ்ச்சிகளும் வீரசாகசமும் வன்முறையும் காதலும் நிறைந்த கதை. அதைச் சுவையாகச் சொல்கிறார். கூடவே அதில் வெளிப்படும் ஆழ்ந்த சிந்தனை, நுணணறிவு, படக்கோவை நேர்த்தி ஆகியவற்றைப் பார்த்துத் தான் தெரிந்துகொள்ளமுடியும்.

சாமுராய்கள் என்பவர்கள் யுத்ததர்மம் அறிந்த ஜப்பானிய வீரமறவர். நிலப்பிரபுத்துவ வரலாற்றில் மிக உன்னதமாக வாழ்ந்த குலத்தினர். இப்படம் காட்டுவது அக்குல¢சீர்கெட்டு அழிந்துவரும் காலத்தை. நித்தம் சோறு தேடித் திரியும் நிலை.

ஒரு கிராமத்தில் கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் அத்துமீறிப் போகிறது. இனி நம்மால் சமாளிக்கமுடியாது என்று அக்கிராமத்தினர் சாமுராய் கள் ஏழுபேரைக் கூலிபேசி அழைத்துவருகிறார்கள். கொள்ளையரிடமிருந்து ஊரைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். வேலை முடிகிறவரை அவர்களுக்கு மூன்று வேளை சோறு என்பதுதான் கூலி. அந்த ஊர் ஏழை விவசாயிகளால் அவ்வளவுதான் முடியும்.

இந்த ஏழுபேரின் தலைவன், ஒரு சேனைத் தளபதியைப் போலவே சாதுரியத்துடன் பாதுகாப்பு உத்திகளை திட்டமிடுகிறான். தன் சகாக்களையும் கிராமத்தினரையும் சேர்த்துக்கொள்கிறான். குதிரையேறித் துப்பாக்கிகளுடன் படையெடுத்துவந்த கொள்ளையரை ஒருவர் விடாமல் அழிக்கிறார்கள் சாமுராய்கள்.

ஆனால் ஏழுபேரில் நான்குபேர் போரில் மடிந்துபோகிறார்கள். மூவர் மட்டும் பிழைத்திருக்கிறார்கள். வந்த காரியம் முடிந்துவிட்டது. கிராமத்தினரிடம் அவர்களது ஒப்பந்தமும் முடிந்துவிட்டது. கிராமத்தைவிட்டு நகர்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லக்கூட ஒரு ஜீவன் இல்லை. விவசாயிகள் தங்கள் நடவுவேலையைப் பார்க்க ஆனந்தமாகப் போய்விடுகிறார்கள்.

ஊருக்கு வெளியே வீரமரணம் எய்திய நான்கு சாமுராய்களின் கல்லறைகள். அனைத்தையும் மறந்து சற்றுத்தொலைவிலேயே பாடிக்கொண்டு வேலைசெய்யும் மக்கள். அவற்றைப் பார்த்துநிற்கிறார்கள் மூவரும். தலைவன் சொல்கிறான்: “தோற்றுப்போனது நாம்தான்”.

வீர சாகசங்களோடு, விறுவிறுப்பும் வயிறுகுலுங்கச் செய்யும் நகைச்சுவை யும் கூடிய படம். ஒரு ஜனரஞ்சக “த்ரில்லர்” என்று எளிதாகச் சொல்லிவிடலாம். அமெரிக்க வெஸ்டர்ன்ஸ் மரபில் வந்த படம். இது எப்படி உன்னதமான கலைப் படைப்பாகவும் ஆகிறது, இதைப் பற்றி எவ்வளவு உற்சாகமாக இன்னும் திரைப் படக்கலையின் படைப்பாளிகளும் விமரிசகர்களும் எழுதுகிறார்கள்! மிக ஜனரஞ் சகமான திரைப்படத்தையே மிக உயர்ந்த கலைப்படைப்பாக மாற்றும் அபூர்வ ரசவாதி அகீரா குரோசேவா. பார்க்க முயற்சி செய்யுங்கள்!

General