டால்ஸ்டாயும் தாஸ்தாயேவ்ஸ்கியும்

டால்ஸ்டாயும் தாஸ்தாயேவ்ஸ்கியும்

(ஜார்ஜ் ஸ்டைனர் எழுதிய விமரிசனக் கட்டுரை ஒன்றின் கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது. எழுதப்பட்ட ஆண்டு 1996. பின்னர் இது ‘டால்ஸ்டாயா, தாஸ்தாயேவ்ஸ்கியா?’ என்னும் தலைப்பில் ‘நிகழ்’ இதழ் ஒன்றில் வெளிவந்தது.)

ரஷ்யாவின் மிகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி இருவரும் என்பதில் எவருக்கும் சந்தேகமி ருக்க இயலாது. ‘அன்னா கரினினா’, ‘போரும் சமாதானமும்’ போன்ற முக்கியமான நாவல்களைப் படைத்தவர் டால்ஸ்டாய். ‘கரமசாவ் சகோதரர்கள்’, ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற முக் கியமான நாவல்களைப் படைத்தவர் தாஸ்தாயேவ்ஸ்கி. இவர்கள் இருவரும் தங்கள் தங்கள் அளவில் மேதைகள் என எவரும் நிறுவவேண்டிய அவசியமேயில்லை. இருவர்க்கும் இடையிலான வேறுபாடுகள்தான் முக்கியமானவை. ஜார்ஜ் ஸ்டைனரின் திறனாய்வு, அந்த வேறுபாடுகளை நாம் எளிதில் மனம் கொள்ள உதவி செய்கிறது. குறிப்பாக இலக்கிய அணுகுமுறை, சமயநெறி போன்றவற்றில் காணப்படும் வேறுபாடுகளை நன்கு அறியமுடி கிறது. இருவரிலும் இலக்கியச் சிறப்பில் மேலானவர் தாஸ்தாயேவ்ஸ்கியே என்று ஐயமின்றி நிறுவுகிறார் ஸ்டைனர்.

1
செவ்வியக்கால, மறுமலர்ச்சிக்கால அவல நாடகங்களுக்கு இணையான முறையில் அவல வடிவங்களைப் படைக்கவேண் டும் என்ற ஆவலில் படைப்பாளர்கள் ஈடுபட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கனவு இசையில் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. இப்செனும் செகாவும் தோன்றியபோது பழைய வீரயுக நோக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. இருப்பினும் அவல நாடகத்தின் தலைசிறந்த மேதையை -தாஸ்தாயேவ்ஸ்கியை -அந்நூற்றாண்டு அளித்தது. ‘பேதை’ (The Idiot), ‘பீடிக்கப்பட்டவன்’ (The Possessed), ‘கரம சோவ் சகோதரர்கள்’ போன்ற படைப்புகளைக் கண்ட அளவிலேயே அவற்றைப் பெரும் அவல நாடகங்கள் என நம் மனம் அறிந்து கொள்கிறது. ஒரு விமரிசகர், தாஸ்தாயேவ்ஸ்கியை ‘ரஷ்யாவின் ஷேக்ஸ்பியர்’ என்றே புகழ்ந்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண் டில் கிடைத்தற்கரிய விஷயமாகவே அவல நாடகம் இருந்தது. எனினும் போதிலேர், நீட்சே போன்ற ஆசிரியர்களிடம் அவல நோக்கின் கூறுகள் உள்ளன. இரண்டே இரண்டு இலக்கிய ஆசிரி யர்களிடம்தான் வாழ்க்கை பற்றிய வெளிப்படையான, முதிர்ந்த அவல நோக்கினைக் காண்கிறோம். ஹெர்மன் மெல்வில், தாஸ் தாயேவ்ஸ்கி ஆகிய இருவர்தான் அவர்கள்.

2
ஹெகல், நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது `இயக்கத்தின் முழுமை’ என்கிறார். தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களுக்கு முற் றிலும் இக்கூற்று பொருந்தும். தாஸ்தாயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களிலும் நாடகப்பாங்கு நிறைந்துள்ளது என்றாலும், நாடக மதிப்புகள், மரபுகள் ஆகியவை முற்றிலும் கடைப்பிடிக்கப் பட் டுள்ள தன்மையை முழுமையாகப் `பேதை’ நாவலின் தொடக்க இயல்களில் காணலாம். இந்த இயல்கள் இருபத்திநாலு மணி நேர நிகழ்ச்சிகளைக் கொண்டவை. `பீடிக்கப்பட்டவன்’ நாவலின் பெரு மளவு நிகழ்ச்சிகள் நாற்பத்தெட்டு மணிநேர எல்லையில் நிகழ்பவை. `கரமசோவ் சகோதரர்க’ளில், விசாரணை முழுவதும் ஐந்து நாட்களில் நிகழ்கிறது. இவை தாஸ்தாயேவ்ஸ்கியின் நோக் குக்கும் உள்நோக்குக்கும் மிக மையமானவை.

இலக்கியத்தில் காலம் பற்றிய பிரச்சினைகள் சிக்கலானவை. இதிகாசமும் காவியமும் நீண்ட கால உணர்வைத் தோற்றுவிக் கின்றன. நாடகம் இதற்கு மாறுபட்டது. நாடக நிகழ்ச்சிகள் இயங்கும் கால எல்லை ‘சூரியனின் ஒரு சுற்றாக’ (ஒரு நாளாக) இருக்கவேண்டும் என்று அரிஸ்டாடில் கால ஒருமைப்பாட்டுக் கட்டுப்பாடே (யூனிடி ஆஃப் டைம்) இருக்கிறது. கால ஒருமைப் பாடு பற்றிய இக்கட்டளை, நிகழ்ச்சி ஒருமைப்பாட்டை (யூனிடி ஆஃப் ஆக்ஷன்) வலியுறுத்துவதற்காக ஏற்பட்டதே ஆகும்.

தாஸ்தாயேவ்ஸ்கி, ஒரு நாடகாசிரியரின் கோணத்திலிருந்து காலத்தை உணர்ந்தவர். மிகக்குறுகிய காலவட்டத்திற்குள் எண் ணற்ற சிக்கலான நிகழ்ச்சிகளைத் திணித்தலும் அவற்றை இசைவுபடுத்தலும் அவருக்குக் கைவந்த கலைகள். இந்தச் செயல் திணிப்புகள், அவருடைய நாவல்களுக்கு ஒரு பயங்கரக் கனவுத் தோற்றத்தைத் தந்துவிடுகின்றன. ஓர் அலைபோல, மெதுவாக, உயர்ந்தும் தாழ்ந்தும் இயங்குமாறு டால்ஸ்டாய் தம் நாவலை நடத்துகிறார். தாஸ்தாயேவ்ஸ்கியோ காலத்தைக் குறுக்கி வளைக் கிறார். பகலைப் போல இரவையும் தம் கதாபாத்திரங்களின் முழு மோதல்கள், வெறுப்புகள் ஆகியவை திணிந்ததாக அமைக்கிறார். மயக்க பிம்பங்களைத் தருகின்ற பகல்களும், பீட்டர்ஸ்பர்கின் வெள்ளை இரவுகளும் தாஸ்தாயேவ்ஸ்கி தருபவை. டால்ஸ்டாய் காட்டுவனவோ ஆண்ட்ரூ இளவரசன் கிடக்கும் விஸ்தாரமான பகற்பொழுதுகளும், லெவின் அமைதியைக் காணும் நட்சத்திர இரவுகளும்.

“நாடகக் கோணத்திலிருந்து பார்க்கும்போது, மோதல் இயக்கத் திற்கு உதவாத எந்த ஒரு நாடகக் கதாபாத்திரமும் அல்லது கதா பாத்திரப் பண்புக்கூறும் தேவையற்றவை” என்கிறார் ஜார்ஜ் லூகாச். தாஸ்தாயேவ்ஸ்கியின் எழுத்துத் திறனை ஆள்வது இந்தக் கொள்கைதான்.

3
அமைப்பு ரீதியாக, `பேதை’தான் தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் மிக எளிமையானது. மிஷ்கினின் அழிவு பற்றி முன் னுரைத்தல் தொடங்கி, உண்மையான கொலைவரை ஒரு வரைபடத்திட்ட எளிமையோடு கதை நேராகச் செல்கிறது. பழைய கால முதலாக வரும் துன்பியல் நாயகனின் புதிர்த் தன்மையை நேரடியாக முன்வைக்கிறது. இளவரசன், கள்ளமற்றவனும்தான், அதேசமயம் குற்றமுள்ளவனும்தான்….. இளவரசன் மிஷ்கினின் குற்றம், அவனிடம் இயல்பான அன்புக்கும் அதிகமான அளவில் கருணை இருப்பதுதான். ஏனெனில் அன்பிலும் குருட்டுத்தனம் உண்டு. இளவரசிகள் அக்லேயா, நாஸ்டாசியா இருவரையும் காதலிக்கிறான். எனினும் அவனது அன்புப்பிடிக்குள் இருவருமே வரவில்லை. மூவருக்கு இடையிலான முக்கோணக்காதல் தாஸ் தாயேவ்ஸ்கியை வசீகரித்த ஒரு கதைக்கரு. துன்பியல் போக் குக்கு மிகவும் ஏற்றது. தாஸ்தாயேவ்ஸ்கி இரண்டுபேரை, இருவ ரில் ஒருவரையும் விலக்காமல் – காதலிக்க முடியும் என்று நம்பி னார். இதில் பிறழ்வு ஏதுமில்லை. மாறாக, அன்பு செலுத்தும் ஆற்றலை இது மிகுவிக்கிறது என்பது அவர் கருத்து.

நாவலின் பல இடங்களில் மிஷ்கின், பாலியல் உறவுக்குத் தகுதியற்றவன் என்று சொல்ல முற்படுகிறார். `பேதை’ நாவலின் முடிவை எப்படி அமைப்பது என்பது பற்றி தாஸ்தாயேவ்ஸ் கியினால் பல நாட்கள் நிச்சயிக்க இயலவில்லை. ஒரு பிரதியில் நாஸ்டாசியா, மிஷ்கினை மணக்கிறாள். மற்றொன்றில், திருமண நாளுக்கு முன் இரவு அவள் தப்பிச் சென்று வேசியர் விடுதி ஒன்றிற்கு ஓடிவிடுகிறாள். இன்னொரு பிரதியில் அவள் ரோகா ஜினை மணந்து கொள்கிறாள். இன்னொரு பிரதியில், அவள் அக்லேயாவை மிஷ்கினின் வைப்பாட்டி ஆக்கி விடும் சாத்தியம் உண்டா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்தமாதிரித் தடு மாற்ற நிலை, தாஸ்தாயேவ்ஸ்கியின் கற்பனையின் பரப்பைக் காட்டுகிறது. டால்ஸ்டாயின் படைப்புநிலை, அவரது கதாபாத் திரங்கள் மீது இடைவிடாத சர்வஞானக் கட்டுப்பாட்டினை உடையது. இதற்கு மாறாக, தாஸ்தாயேவ்ஸ்கி உண்மையான நாடகாசிரியர்களைப் போலவே கதாபாத்திரங்களின் தன்னிச்சை யான, எதிர்பாராத செயல் இயக்கத்தினைத் தமக்குள்ளாகவே மனக் காதினால் கேட்டு முடிவுசெய்தார்.

4
`குற்றமும் தண்டனையும்’ `பேதை’ `பீடிக்கப்பட்டவன்’ `பண்படா இளைஞன்’ `கரமசோவ் சகோதரர்கள்’ என்பவையும் பிற முக்கியக் கதைகளும் காதிக் (Gothic) மரபினைச் சேர்ந்தவை. காதிக் மரபி லிருந்தே தாஸ்தாயேவ்ஸ்கியின் சூழலமைப்பு, சிற்றறைகளில் நிகழும் கொலைகள், தெருக்களின் இரவுக்காட்சிகள், இவையடங் கிய தாஸ்தாயேவ்ஸ்கியினுடைய உலகம், அதன் கைவிடப்பட்ட எளிய நிலை, வலிந்து பிறர் பொருள் கவரும் காமுகத் தன்மை, அதன் மறைவான குற்றங்கள், நகரின் பேரிரவில் நிகழும் ஆன்மாவினை அழிக்கின்ற செயல்கள் ஆகியவை எழுகின்றன.

காதிக் இயல்போடு தொடர்புடையதுதான் உணர்ச்சிமயச் செய லமைப்பு (மெலோடிராமா). `குழந்தைப் பருவம்’, `சிறுவயதுப் பருவம்’ `இளமைப்பருவம்’ ஆகியவற்றில் டால்ஸ்டாய்க்கு யூஜின் சூவின் பாதிப்பு உண்டு. தாஸ்தாயேவ்ஸ்கியும் `பாரிஸ் நகரப் புதிர்கள்’ `அலைந்து திரிந்த யூதன்’ போன்ற படைப்புகளை அறிந்திருந்தார். அவர் காலத்திய முக்கிய ரஷ்யப் படைப்பாளிகள் எவரையும் விட அவர் ஒருவரே ஐரோப்பிய இலக்கியத்திற்கு வாரிசாகவும் திகழ்ந்தார். நரகத் தன்மை வாய்ந்த நகரப் படைப்புக்கு அடித்தளமாக விளங்கியவை இவரது படைப்புகளே.
தாஸ்தாயேவ்ஸ்கி காதிக் மரபுக்கும் மெலோடிராமா மரபுக்கும் கடன்பட்டவர் என்பதை மனத்திற்கொண்டு அவரது தொடர்ந்த கதைக்கருப் பொருளான `குழந்தைகள் மீது வன்முறை செலுத்து தல்’ என்பதைக் காணவேண்டும். `குற்றமும் தண்டனையும்’ நாவ லில் ஸ்வித்ரிகேலோல், இளஞ்சிறுமியர்க்குத் தான் இழைத்த கொடுமைகளை ஒப்புக் கொள்கிறான். தாஸ்தாயேவ்ஸ்கி, காதிக் மரபிலிருந்து சற்றும் வழுவாமல் இரு கதைகளைப் படைத்தார். `போபோக்’ `இகழத்தக்க மனிதனின் கனவு’ ஆகியவை அவை. தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் `இகழத்தக்க மனிதன்’ தான் சிறு பெண் ஒருத்திக்கு இழைத்த கொடுமையை நினைவு கூர்கிறான். இந்தக் கதைக்கரு, அவரது கடைசி நாவல் முழுமை யும் விரவிக் கிடக்கிறது.

குழந்தைகளைக் கொடுமைப்படுத்தல் – குறிப்பாக அவர்களைப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல்தான் முழுத்தீமையின் அடையாளம், அதற்கு மாற்றே கிடையாது என்று தாஸ்தா யேவ்ஸ்கி கருதினார். இறைமைவாதம் பேசும் டால்ஸ்டாய், கடவுள் பழிவாங்குவார், தண்டிப்பார் என்கிறார். தாஸ்தாயேவ்ஸ் கியோ, இவ்வாறு குழந்தைகள் சித்திரவதைப்பட்டபின் எந்த வித மான பழிவாங்கல், அல்லது தண்டனையிலும் அர்த்தம் உண்டா என்று கேட்கிறார்.

5
ரஷ்ய நாவலின் மிக முக்கியமான தன்மை யதார்த்தப்போக்கு, ரஷ்ய வாழ்க்கையின் சமூக, தத்துவ, தர்மசங்கட நிலைமைக ளைச் சரியான முறையில் சித்திரித்துக்காட்டுதல் என்றார் பெலின்ஸ்கி. இந்த ஆணையை தாஸ்தாயேவ்ஸ்கி ஏற்றுக்கொண் டார். ஆனால் அவரது யதார்த்தப்படைப்பு, டால்ஸ்டாய், டர்கனீவ், கோங்கரோவ் போன்றோரது யதார்த்த முறையினின்றும் வேறு பட்டது. டர்கனீவ், கோங்கரோவ் படைத்த யதார்த்தம் மேலோட் டமானது. டால்ஸ்டாயினது யதார்த்தமோ, காலஞ்சென்றது, சம காலத்தின் வேதனைகளுக்கு அப்பாற்பட்டது. ‘தாஸ்தாயேவ்ஸ் கிய-யதார்த்தம்’ (அவரே, `பேதை’ நாவலுக்கான குறிப்புகளில் பயன்படுத்தியது இச்சொல்) துன்பியல்சார்ந்த ரொமாண்டிக் தன் மை கொண்டது. ரஷ்யச் சிக்கல் நிலைமைகள் பிறக்கும்போதே அவற்றை நாடக கணங்களுக்குள்-தீவிர வெளிப்பாட்டுக் கணங்க ளுக்குள் பொருத்தி, ஆழ்ந்து கவனிப்பதன்மூலம், முழுமையான உண்மையான சித்திரத்தை அளிப்பது. இவ்வாறான ஆழ்ந்த கவனித்தலுக்கு தாஸ்தாயேவ்ஸ்கி கையாண்ட உத்திகள், கடைத் தெருக்களில் தொங்கும் மலிவான கிளர்ச்சி நாவல்களிலிருந்து பெருமளவு எடுக்கப்பட்டவை.

தாஸ்தாயேவ்ஸ்கியின் துன்பியல் சார்ந்த ரொமாண்டிக் யதார்த்தம், அதன் காதிக் உட்கூறுகள் ஆகியவை, நாவல் பற்றிய டால்ஸ்டாயின் கருத்திலிருந்து அவருடையதை முழுவதும் வேறுபடுத்தின. டால்ஸ்டாயின் நாவல்கள் பொதுவாக இயல்பான மனித உருக்களைக் கொண்டவை. ஆரோக்கியமான பிம்பங்கள் நிரம்பியவை. திட்டமான ஒளி நிரம்பியவை. நாட்டுப்புற வாழ்க் கை சார்ந்தவை. டால்ஸ்டாயின் முல்லைத்திணை வாழ்க்கைப் பார்வை சமகால உணர்ச்சிமயச் செயலமைப்பை (மெலோடிராமா வை)ப் புறக்கணித்தது. அவருடையது இதிகாசப் பாணி எழுத்து. இதிகாசப்பாணி முல்லைத்திணை வாழ்க்கைப் பார்வையோடு தொடர்புடையது.

டால்ஸ்டாயின் கலைக்கும் தாஸ்தாயேவ்ஸ்கியின் கலைக்கு மான வேறுபாடுகள், உத்திவேற்றுமைகள், உலகக் கண்ணோட்ட வேற்றுமைகள் யாவுமே நகர்ப்புறப் பார்வை – நாட்டுப்புறப் பார் வை என்னும் என்றைக்குமுள்ள இருமை முரண்களுக்குள் அடங் குபவை என்று விமரிசகர்கள் கருதுகிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கி யின் பாத்திரப் படைப்புகளுள் முக்கியமானது `கீழுலக மனிதன்’. தாஸ்தாயேவ்ஸ்கி, மனித ஆன்மாவின் பன்முக பிம்பம் பற்றிய கருத்துக்கு வந்தவர் – ஆழ்மன மொழியைக் கையாள்வதில் கை தேர்ந்தவர். மனிதனின் இரண்டு ஆளுமைகளில் ஒன்று, பகுத்தறி வுள்ளது – மனிதனின் சமூகப் பாத்திரம். மற்றொன்று, அவனுக்கு ஆவியுலகு, அடிமனம் போன்றவற்றைக் கொணர்வது – தர்க்க அறிவுக்குப் புறம்பானது, குற்றங்கள் புரிவது. மிஷ்கின், ரோகோ ஜின் போன்ற பாத்திரங்கள், இரண்டு தனித்த வேறான ஆளுமை கள் உடனுறையும் நிலையைக் காட்டுகின்றன. கோலியாத்கின் பாத்திரப்படைப்பு, கரமசோவ் பேயுடன் நடத்தும் உரையாடல் போன்றவற்றில் தாஸ்தாயேவ்ஸ்கி பிளவுபட்ட ஆளுமை (ஸ்கி ஸோஃப்ரீனியா) பற்றிய அறிவில் தலைசிறந்தவராக இருக்கிறார். எனினும் `கீழ் உலகிலிருந்து கடிதங்கள்’ என்ற படைப்பில்தான், அவர் மனித உணர்வு நிலையின் பலகுரல்கள் கொண்ட குழப்ப நிலையை ஒரே குரலில் நாடகப்படுத்தி வடிக்கும் பிரச்சினையில் வெற்றி பெற்றார்.

`கீழுலகிலிருந்து கடிதங்கள்’ இருபகுதிகளால் ஆனது. முதல் பகுதி சுதந்திர இச்சைக்கும் இயற்கையின் ஒழுங்குக்கும் இடை யிலான முரண்பாட்டைப் பற்றிய தனிமொழி. பயன் நோக்குவாத, அனுபவவாத மகிழ்நோக்கை எதிர்ப்பதே இதன் நோக்கம். கதைசொல்பவன் கொண்டுள்ள கீழுலகம், குறித்த இலக்கிய, வரலாற்று உள்ளர்த்தங்களை அடக்கியது. ஆன்மிக வெறுமை வாதத்தை எதிர்க்கும் தாஸ்தாயேவ்ஸ்கியின் கருத்துக்களைத் தொகுத்துக் கொண்டுள்ளது இந்நூல். இதில் ஆன்மாவும், தர்க்கத் துக்கு எதிரான அறிவும் முனைப் போடு ஒரு தீவிர எல்லையில் எதிர்க்கின்றன. தாந்தே நரகத்தில் ஒட்டுக்கேட்டது போன்ற அதிர்ச்சி தரக்கூடிய உண்மைகளை வாசகன் ஒட்டுக்கேட்கிறான்.
இதற்குமுன் இப்படிப்பட்ட பாத்திரப்படைப்பு இலக்கியத்தில் இருந்ததில்லை. “மேன்மக்களே, நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் – நீங்கள் அதைச் செவிமடுத்துக் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி – நான் ஒரு பூச்சியாக மாற அடிக்கடி விரும்பியிருக்கிறேன். ஆனால் என் ஆசையை அடைய முடிய வில்லை” என்கிறான் கீழுலக மனிதன். காஃப்காவின் `உருமாற் றம்’ கதைக்கான குறிப்பைக் கொண்டிருக்கும் இக்கருத்து, படைப்பு முழுதும் திரும்பத் திரும்ப வருகிறது. மற்ற ஆட்கள், கதைசொல் பவனை ஒரு ஈ எனக் கருதுகிறார்கள். அவன் தன்னைத்தானே `பூமியிலுள்ள மிகக் கேவலமான ஒரு புழு’ என வருணித்துக் கொள்கிறான். ‘பூச்சியாக ஆகுதல்’ என்னும் குறியீடு, பால்சாக் கிடமிருந்து தாஸ்தாயேவ்ஸ்கி பெற்றது என்கிறார்கள். இதில் நாம் காணும் புதுமை, இப்படிமத்தைத் தொடர்ந்து கையாண்டு மனிதனைக் கீழிறக்கும் – மனிதத் தன்மையற்றவனாக மாற்றும், அல்மனிதனாக்கும் உத்திதான். கீழுலக மனிதன். மனிதநிலையி லிருந்து தப்பிவந்துவிட்டவன். நவீன இலக்கியம் இன்றைய நமது உலகப்பார்வைக்குத் தந்திருக்கும் ஒரு முக்கியப் பங்களிப்பு, இந்த மனிதத்தன்மை இழப்பு.
`கீழுலகினின்றும் கடிதங்கள்’ நூலுக்குப் பின், நாம் மனிதன்மீது பூச்சிகள் ஆதிக்கம் கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதை அறி கிறோம். பழைய புராணங்கள், அரைத் தெய்வங்களைப் பாத்திரங் களாகக்கொண்டன. தாஸ்தாயேவ்ஸ்கிக்குப் பின்னரான தொன்ம வியல், அரைமனிதர்களாக இருக்கும் கரப்பான் பூச்சிகளைக் கொண்டுள்ளது. ரொமாண்டிக் கலையின் வாயிலாக வேகம் பெற்று வந்த தூய அறிவுக் கொள்கை மீது தெளிவான விமரி சனத்தை வைத்தது `கீழுலகினின்றும் கடிதங்கள்’ நூலின் பெரும் முக்கியத்துவம். ஹெகலிய இலட்சிய வாதத்தைத் தகர்த்தெறி கிறது இது.
இருத்தலியவாதிகள் தோற்றம் கொள்ளுமுன்னரே கீழுலகமனி தன் அபத்தநிலையின் மேன்மையைப் பிரகடனம் செய்கிறான். இதனால்தான் சுதந்திர அனுபவவாதிகளை எதிர்க்கும் எழுச்சிக் காரர்களான பாஸ்கல், பிளேக், கீர்க்கேகார்ட், நீட்சே வரிசையில் தாஸ்தாயேவ்ஸ்கியும் இடம்பெறுகிறார். நீட்சேவின் ஜாரதுஷ் டிரன், கீர்க்கேகார்டின் சமயவியல் தொடர்உருவகங்கள் ஆகிய வற்றை விட மேம்பட்ட இலக்கியச் சுவையுடன் இருப்பது இதன் சிறப்பு. தாஸ்தாயேவ்ஸ்கி இப்படைப்பின் மூலம் கவித்துவ தத்துவ ஆற்றல்களுக்குள் மிக அரிதாகிய ஒரு படைப்புச் சம நிலையினை அடைந்துவிட்டார்.
கொடிய வறுமையிலும் டால்ஸ்டாயினுடைய மனிதன், மனித னாகவே இருக்கிறான். கொடுமைக்குள்ளாகும்போது அவனது மானிடப் பண்பு ஆழமடைகிறது. டால்ஸ்டாய் மனிதனை `மாறாத பகல்ஒளியில்’ பார்த்தவர். மனிதன் விலங்காக வீழ்ச்சியடையும் மயக்க நிலை அவருக்கு அந்நியமானது. மிகக் கொடிய துயர் நோக்கிலும் டால்ஸ்டாயின் பாத்திரங்களுக்கு ஒரு மைய நம்பிக் கை உண்டு. மானிடர்கள் வெறுமனே துன்பங்களைத் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல, அவற்றைக் கடந்து உயர்வார்கள் என்பது டால்ஸ்டாயின் நம்பிக்கை. டால்ஸ்டாயின் தத்துவம் பகுத்தறிவு அடிப்படையிலானது. தாஸ்தாயேவ்ஸ்கியின் அபத்தவழி பாடு, சாதாரண வாழ்வியக்கங்களுக்கு உட்பட்டனவற்றைத் தாக்குவது போன்றவை டால்ஸ்டாய்க்குப் பைத்தியக்காரத் தனமாகத் தோன் றியிருக்கும்.
“தாஸ்தாயேவ்ஸ்கி, கன்பூசியஸ் சிந்தனைகளையும் புத்தர் கொள்கைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அது அவரைச் சாந்தப்படுத்தியிருக்கும்” என்று டால்ஸ்டாய் கார்க் கிக்குக் கூறினாராம். அப்போது கீழுலக மனிதன் தனது வளையி லிருந்து ஏளனமாகச் சிரித்திருப்பான். நம் காலம் அவனது ஏளனத்திற்கு உருக்கொடுத்திருக்கிறது. சாவுக்கிடங்குகளும், சித் திரவதைக்கூடாரங்களும் நிறைந்த உலகு. தனிப்பட்டும், கூட்ட மாகவும் மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் மனப்பான்மை – விலங்குத் தன்மை இவற்றில் தாஸ்தாயேவ்ஸ் கிக்கு இருந்த உள்ளொளியைக் காட்டுகிறது.
டால்ஸ்டாய் – தாஸ்தாயேவ்ஸ்கி இருவரது மெய்யியல்களும் எதிரெதிர் நிலையில் வேறுபடுகின்றன. இந்த உலகு, இதில் அவத ரித்துள்ள மனிதன் பற்றிய டால்ஸ்டாய் – தாஸ்தாயேவ்ஸ்கி மாறுபாடு, அவர்களது மாறுபட்ட புனைவு முறைகளின் மூலம் வெளிப்படுகிறது. இரு வேறுபட்ட கலைவடிவங்களை உருவாக்கு கிறது. உணர்ச்சியனுபவ எல்லைப் பரப்பில், கலைப்பொருள் மீதான ஆதிக்கத்தின் இடமகன்ற தன்மையில், வளத்தில், மனிதா பிமானத்தில், டால்ஸ்டாயின் மேதைமை சிறந்து விளங்குகிறது. ஆனால் அவரது தொன்ம உலகம் குறைபாடுடையது. இக்குறை பாடு அவரது படைப்பிலும் எதிரொலிக்கிறது. குறித்த சில பகுதி களில் நாவலின் கட்டுமானம் மங்கி, எடுத்துரைக்கும் முறை தடுமாறுகிறது. இந்த இடங்களில் எல்லாம், டால்ஸ்டாயின் தத்துவம் வெறுக்கும் எதிர்முனைகள், எதிர் கொள்ளாத பிரச்சினை கள், இவற்றைக் கதைப்போக்கு சந்திப்பதையும் நாம் காணலாம். இம்மாதிரி இடங்களில்தான் தாஸ்தாயேவ்ஸ்கி சிறப்படைகிறார்.

6
டால்ஸ்டாயின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் அவரது சிந்தனையின் அவதாரங்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. இப்பாத்திரங்கள் டால்ஸ்டாய் ஆட்டிவைக்கும் பொம்மைகள். டால்ஸ்டாய் தம் இதயத்தில் காணாத எதையும் நாம் நாவலில் காண்பதில்லை. இப்படிப்பட்ட சர்வசக்தி வல்லமை அவரது செய்நேர்த்தியின் அடிப்படைக் கோட்பாடுகளையே அழித்துவிடுகிறது. கடவுளைப் போலவே, டால்ஸ்டாயும் தமது சொந்த உயிர்ப்பையே தம் படைப்புகளுக்கு அளித்தார். ஆனால் இதற்குப் படைப்பாழத்தில் அவர் கொடுத்த விலை மிக அதிகம். ஆயினும் டால்ஸ்டாய் தமது பாத்திரங்களுக்கு வலுவான சூழல் களையும் வகுத்துக் கொடுத்து, நமக்கு அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை மிகப் பொறுமையான பாசத்தோடு விளக்கிச் சொல்லும் வகையில் சிறந்துநிற்கிறார்.

டால்ஸ்டாயின் முழுமை பொற்ற பாத்திரங்களும் எட்ட முடியாத விளைவுகளும், காண முடியாத உள்ளொளிகளும் உண்டு. இவை நாடகப்பாங்கின் விளைவாக வருபவை. ஒரு நாடகப் பாத்திரத்தின் முழுமையில் எப்போதுமே ஒரு எதிர்பாராத நிகழ்ச்சிக்கான சாத்தியமும் ஒழுங்கின்மைக்கான கொடையும் உள்ளன. செறிவு, நாடகத்தின் உயர் அழுத்தம், இவை ஒரு பகுதி அறிந்தும் ஒரு பகுதி அறியாமையிலும் ஆசிரியன் இருப்பதனால் உருவாகுபவை. தாஸ்தாயேவ்ஸ்கி தமது பாத்திரங்களை ஒரு இரசிகன் காணுவது போன்ற நிலையிலேயே (அடுத்து என்ன நிகழ்வதற்கு இருக்கிறது என்று தெரியாமல்) பார்க்கிறார். நிகழ்ச்சிகள் தாமாக விரியும் முறையில் நம்மைப் போலவே அவரும் குழம்புகிறார். அதிர்ச்சி அடைகிறார். டால்ஸ்டாய்க்கு இந்தத் தொலைவு இருப்பதில்லை.

டால்ஸ்டாயின் படைப்புத் தன்மையில் மிகப் பெரிய குறை யாகச் சொல்லப்படுவது அவருடைய நீதிபோதனை. அவருடைய எழுத்துகள் யாவும் ஒரு திட்டவட்டமான நோக்கம் உடையவை. இதை மீறியும் `அன்னா கரீனினா’ சிறந்த ஓர் அழகியல் படைப் பாக அமைந்துள்ளது. அதற்குக் காரணம், அதன் கவித்துவமான வடிவம், ஒழுக்க போதனையினை மறுப்பதுதான். இக்கவித்து வமான வடிவத்திற்கும் நீதிபோதனைக்கும் இடையே இடையறாத சமநிலையும் ஒழுங்கிசைவான இழுவிசையும் அமைகின்றன. டால்ஸ்டாயின் பாத்திரங்களிலேயே அன்னா மட்டும்தான் ஆசிரி யரின் கட்டுப்பாட்டிற்கும் முன்னறிவிற்கும் உட்படாமல் வெவ் வேறு திசைகளில் வளர்ந்து செல்கிறாள். இக்கதைப்பின்னல் அமைப்பினால் `அன்னா கரீனினா’வின் சமநிலை தப்பிக்கிறது.
`அன்னா கரீனினா’விற்குப் பிறகு டால்ஸ்டாயினுள்ளிருக்கும் அறவியல், நீதிபோதனையியல் தன்மை அவரது படைப்புகளில் முதன்மை பெறுகிறது. `இவான் இலியிச்சின் மரணம்’ `கிராய்ட்சர் சோனாடா’ என்ற அவரது இறுதிக்காலப் படைப்புகள் ஐயமின்றித் தலைசிறந்தவை. இவற்றில் அதீத அழுத்தம், கற்பனை மேலோங் கியிருப்பதனால் அல்ல. கற்பனைக் காட்சியின் குழப்பத்தினா லேயே ஏற்படுகிறது. பாஷ்-இன் ஓவியங்களில் வரும் குள்ள ஓவியங்களைப் போல இவற்றில் அதீத அழுத்தத்தினாலாகிய ஆற்றல்கள் நிரம்பி யிருக்கின்றன. `இவான் இலியீச்சின் மரணம்’ தாஸ்தாயேவ்ஸ்கியின் `கீழுலகினின்றும் கடிதங்கள்’ படைப்புக்கு எதிர்ப்பாதியாக இயங்குவது.

டால்ஸ்டாயின் மேதைமை, ஒரு தீர்க்கதரிசி – சமயசீர்திருத்த வாதியினுடையது. இறையியலாளருடையதன்று. `கிறித்துவ போதனை’ என்னும் தமது நூலில் டால்டாய் எழுதுகின்றார்: “ஒவ்வொரு மனிதனுக்குள்ளாகவும் கொதிகலனில் அடைபட்டிருக்கும் நீராவி போல அன்பு நிறைந்திருக்கிறது. இந்த நீராவி விரிவடைகிறது. பிஸ்டன்களை இயக்கி வேலை செய்கிறது”. விசித்திரமான இந்த உவமை, ஒரு மீட்பியக்கவாதியின் போதனை மொழியைப் போல எளிமையாக இருக்கிறது. தாஸ் தாயேவ்ஸ்கியின் மெய்யியலும் இறையியலும் கடுமை மிகுந் தவை. நவீனத் தத்துவ நோக்கில், குறிப்பாக இருத்தலிய நோக்கில், தாஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகள் மிக முக்கியமா னவை. பெர்தியேவ் சொல்லுவதுபோல, “கரமசோவ் சகோதரர் களின் ஆசிரியர், பெரும் சிந்தனையாளர். ஒரு ஞானி. அதே சமயம், ஒரு “வாசகன் ஒரு மிகப் பரந்த விசித்திரமான புதிய சிந்தனைப் பிரபஞ்சத்திற்குள் முழுகிப்போகத் தயாராக இருந்தா லன்றி, தாஸ்தாயேவ்ஸ்கியைப் புரிந்துகொள்ள முடியாது”.

தாஸ்தாயேவ்ஸ்கியின் உலகம், தனிதத அமைப்பைத் தன்னுள் கொண்டுள்ளது. சுவர்க்கம்-நரகம், கிறிஸ்து-எதிர்க்கிறிஸ்து ஆகிய வற்றிற்கு ஊடாக, மனிதனின் அனுபவத் தளம், குறுகிய இடை வெளியில் நகருகின்றது. வீழ்ச்சியின் தூதர்களும் அருளின் முகவர்களும் நம் ஆன்மாவை அலைக்கழிக்கின்றனர். இவற்றின் அன்பின் அலைக்கழிப்பும் தாக்குதலும் நம்மை மிகுதியாக உட் கொள்கின்றன. தாஸ்தாயேவ்ஸ்கியின் வார்த்தைகளிலே மனித னின் மீட்பு என்பது அவனது `வடுப்படும்’ நிலையைச் சார்ந்தது. துன்பங்களோடு எதிர் நிற்றலும், மனச்சாட்சியின் சங்கடங்களும் மனிதனைக் கட்டாயமாகக் கடவுள் என்னும் தர்மசங்கட நிலை யைச் சந்தித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்றன.

தாஸ்தாயேவ்ஸ்கியின் உலகில், கிறிஸ்துவின் பிம்பமே ஈர்ப்பு விசையின் மையம். உண்மையை அல்லது பகுத்தறிவை விடக் கிறிஸ்துவே அவருக்கு முக்கியமானவர், எல்லையில்லா மேன் மையுடையவர் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். கடவுளின் குமாரன் உருவத்தின் மீது அவருடைய பார்வை உணர்ச்சிமய மான ஆழத்துடன் பதிந்திருந்தது. ஆகவே தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களின் பெரும்பகுதியைப் புதிய ஏற்பாட்டிற்கு எழுதப்பட்ட உரைநூல்களாகவே வாசிக்க இயலும்.

தாஸ்தாயேவ்ஸ்கியின் இறையியல், மனிதன் பற்றிய அறி வியல் ஆகியவை முழுச் சுதந்திரம் என்னும் அடிப்படைக் கருது கோளின்மீது கட்டப்பட்டவை. மனிதன் பயப்படும் அளவிற்கு முழுச்சுதந்திரம் உடையவனாக இருக்கிறான். நல்லதையும் தீயதையும் கண்டறிவதற்கும், அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தனது சுதந்திரத்தைச் செயல்படுத்துவதற்கும் அவனால் முடியும். `பீடிக்கப்பட்டவன்’ நாவலில் முழுமை பெற்ற ஒரு சமூகத்திற்கான திட்டத்தை வெளியிடுகிறான். அது ராட்ச ஸத்தனமானது என்று தாஸ்தாயேவ்ஸ்கி காண்பது, சட்ட, தனி மனித, குடியுரிமைகளை அது அழித்துவிடும் என்பதால் அல்ல. (இவைபற்றி தாஸ்தாயேவ்ஸ்கி கவலைப்படுவதில்லை). அது, மனிதர்களைத் மனநிறைவு கொண்ட விலங்குகளாக ஆக்கிவிடு கிறது என்பதனால்தான். அவர்களது வயிறுகளை நிரப்பிவிட்டு அவர்களது ஆன்மிகத்தைத் திணறவைக்கிறது அது.

தனித்த அருள்வெளிப்பாடுகள், ஒளிக்காட்சிக்கணங்கள், மானிட ஆன்மாவுக்குள் நிகழ்கின்றன. அதனால் அது தூயதாகிறது. இந்தக் கணங்களில், ராஸ்கோல்னிகாவ் போன்ற கொடியவர்களும் பிரபஞ்சப் பேரன்பில் முழுகி நனைகிறார்கள். அருள் முழுக்கில் அல்யோஷா சந்தேகத்தின் பெருந்துன்பங்களிலிருந்து வெளிப்பட்டு எல்லா மனிதர்களையும், எல்லா உணர்தன்மையுள்ள இயற்கைப் பொருள்களையும் புகழ்ந்து தரையில் விழுந்து வணங்குகிறான். இந்த இயங்கியலிலிருந்து தாஸ்தாயேவ்ஸ்கியினுடைய தீமை பற்றிய கொள்கை எழுகிறது. தீமை இல்லாவிட்டால் மனிதனு டைய சுதந்திரத் தேர்வு செயல்பட இடமில்லை. கடவுளை அறிவதில் அவனை முன்னோக்கித் தள்ளுகின்ற அலைக்கழிப்பும் இல்லை. தாஸ்தாயேவ்ஸ்கியின் கருத்தினை நன்குணர்ந்த பெர்தி யேவ் கூறுகிறார்-“கடவுளின் இருப்பினை நிரூபிப்பதற்குச் சான்று, தீமை இருப்பதாகும். உலகில் முழுதும் நன்மையும் நேர்மையுமே நிறைந்திருந்தால் அங்கு கடவுளுக்கு அவசியம் ஏதுமில்லை. ஏனெனில் அப்போது உலகமே கடவுளாக இருக்கும். தீமை இருக்கிறது. அதனால் கடவுள் இருக்கிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் சுதந்திரம் இருக்கிறது, அதனால் கடவுள் இருக் கிறார் என்பதே”.

கடவுளைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அதுபோலவே கடவுளை மறுப்பதும் சமமான யதார்த்தத்தில் நிகழவேண்டும். கிரிலோவ் காட்டுவதுபோல, யாருக்குச் சுதந்திரம் இருக்கிறதோ, ஆனால் கடவுளின் இருப்பினை ஒப்புக் கொள்ள முடியவில்லையோ, அவர்கள் சுயஅழிவுக்குள் செலுத்தப் படுகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகம் ஒரு குழப்பமான அபத்த நிலை. பெருஞ்சேதம் விளைவிக்கும் மனிதத்தன்மையற்ற நிலை. கொடுமையான கேலிக் கூத்து. தாஸ்தாயேவ்ஸ்கிய பிரபஞ்சக் கோட்பாட்டில் தீயஆவி, சக்திகளுக்குத் தனித்ததோர் இடமிருக் கிறது.
தாஸ்தாயேவ்ஸ்கி தமது கதாபாத்திரங்களை ஒரு மாயச் சக்தி வலையால் சூழச்செய்தார். இவான் கரமசோவ் பேயுடன் உரையா டுதல் போன்ற மீயியற்கை நிகழ்ச்சிகள், தாஸ்தாயேவ்ஸ்கி யினுடைய `உடைபடக்கூடிய ஆன்மா’ கொள்கைக்கும் காதிக் உத்திகளுக்கும் உள்ள நெருங்கிய ஒருமைப்பாட்டினைக் காட்டு கின்றன. தாஸ்தாயேவ்ஸ்கி, புலனுணர்வு சார்ந்த உலகிற்கும், பிற உலகுகளுக்கும் கடுமையான எல்லைகள் எதையும் வகுக்க வில்லை. மெரேஷ்கோவ்ஸ்கி கூறுகிறார் – “டால்ஸ்டாய்க்கு வாழ்வு சாவு என்னும் என்றுமுள்ள எதிர்நிலையே இருந்தது. தாஸ்தாயேவ்ஸ்கிக்கு அவற்றின் ஒருங்கிணைவே கண்ணில் பட்டது”.

டால்ஸ்டாய், இந்த உலகின் நோக்கிலிருந்து, இவ்வுலக வாழ்க்கையிலிருந்து சாவை நோக்குகிறார். தாஸ்தாயேவ்ஸ்கி யோ ஆவியுலகின் கண்களோடு, இங்குள்ளவர்களுக்குச் சாவு என்று தோன்றுகின்ற எல்லையில் நின்றுகொண்டு வாழ்க்கை யைக் காண்கிறார்”. அனாதைகள், உடல் வலுவற்றோர், வலிப்புக் காரர்கள் போன்றோர் முக்கியமான நன்மை ஒன்றைப் பெற்றிருக் கிறார்கள். அவர்களது லோகாயத நிர்வாணத்துவமும், வலிப்பின் பிடிகளும், காமவுலகு-உடல்நலத்தன்மை ஆகியவற்றின் கோட்டை யைக் கிழித்து அவற்றினூடே புலக்காட்சியின் முழுமையைத் தருகின்றன. மிஷ்கினும் கிரிலோவும் வலிப்பு நோய் உடையவர் களே.

7
டால்ஸ்டாய்க்கும் தாஸ்தாயேவ்ஸ்கிக்கும் உள்ள முரண்பாடு கள் அவர்களது இறப்புடன் மறையவில்லை. மாறாக, தொடர்ந்து வந்த நிகழ்சசிகளால் அவை கூர்மையடைந்தும் நாடகப்படுத்தப் பட்டும் உள்ளன.

மார்க்சிய இலக்கிய விமரிசனம் ஓரளவு வளமான வகையில் டால்ஸ்டாயின் மேதைமை பற்றி ஆராய்ந்திருக்கிறது. தாஸ்தா யேவ்ஸ்கியின் படைப்புகளை அது பெரும்பாலும் கண்டனம் செய்துள்ளது அல்லது ஒதுக்கிவந்துள்ளது. மார்க்சியப் புரட்சியா ளன் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் உலகப்பார்வையினை தாஸ்தாயேவ்ஸ்கிய நாவல்கள் கொண்டுள்ளன. ஆனால் ரஷ்யா வுக்கு வெளியில் இதற்கு எதிர்மாறாக நிகழ்ந்துள்ளது. சமகாலச் சிந்தனையை டால்ஸ்டாயைவிட தாஸ்தாயேவ்ஸ்கி ஆழமாகப் பாதித்துள்ளார். நவீனக் கூருணர்வின் முக்கியத் தலைவர்களில் அவர் ஒருவர். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய நவீனப் புனைகதையின் உளவியலிலும் அபத்தத்தின் மெய்யியலிலும் துன்பியல் சார் சுதந்திரத்திலும் தாஸ்தாயேவ்ஸ்கியின் சிந்தனைக் கூறுகள் நிறைந்துள்ளன.

இவ்வாறு இறப்புக்கு அப்பாலும் இந்த இரு நாவலாசிரியர் களும் முரண் நிலையில் நிற்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால்,
டால்ஸ்டாய், இதிகாச மரபுகளின் தலைமை வாரிசு. தாஸ்தாயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியருக்குப் பின்விளைந்த நாடக உணர்வுடையோருள் சிறந்தவர்.
டால்ஸடாய், தர்க்க அறிவு, மெய்ம்மை இவற்றில் திளைப்பவர். தாஸ்தாயேவ்ஸ்கி, பகுத்தறிவுவாதத்தை மறுப்ப வர், முரண்நிலையை நேசிப்பவர்.
டால்ஸ்டாய், நாட்டுப்புறச் சித்திரிப்பாளர் முல்லைத்திணை வாழ்க்கையை, மனப்பான்மையைச் சித்திரிப்பவர். தாஸ்தா யேவ்ஸ்கி நவீனப் பெருநகரங்களை மொழிப் பிராந்தியத்தில் சாதித்தவர்.
டால்ஸ்டாய், உண்மையின் தாகத்தில் தம்மையும் தம்மைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கே அழித்துக்கொண்டவர். தாஸ்தா யேவ்ஸ்கி, கிறித்துவுக்கு எதிராக இருப்பதைவிட, உண்மைக்கு
எதிராக நிற்பவர். முழுமையான புரிதல் இயலுமா எனச் சந்தேகம் கொண்டவர். அறிய இயலாததின் பக்கம் சார்ந்திருப்பவர்.
டால்ஸ்டாய், கோலரிட்ஜின் தொடரில் சொன்னால், “வாழ்க் கையின் நெடுவழியில் எப்போதும் தொடர்ந்து செல்பவர்”. தாஸ்தாயேவ்ஸ்கி, இயற்கைக்கு அப்பாற்பட்டதன் ஏமாற்று வழிகளுக்குள் ஆன்மாவின் உள்ளறைகளுக்குள், சதுப்புநிலங்க ளுக்குள் முன்னேறுபவர்.
டால்ஸ்டாய், புலன்களால் அறியக்கூடிய உலகினைச் சில எட்டுக்களால் கடந்து விடக்கூடிய பேருருவம், பருமையான அனுபவத்தின் மெய்ம்மை, தொட்டுணரும் தன்மை, புலன்க ளால் உணரும் முழுமை ஆகியவற்றைத் தருபவர்.
தாஸ்தாயேவ்ஸ்கி, மாயக்காட்சிகளின் விளிம்பில் நிற்பவர். ஆவியுலகு சார்ந்த மனித இயல்புக்கு அப்பாற்பட்ட குறுக்கீடுகளுக்கு இடம்தருபவர். (இவை இறுதியில் வெறும் கனவுகளின் மென்திரையாகவே முடியக்கூடும்.)
டால்ஸ்டாய், ஒலிம்பிய ஆரோக்கியம், உயிர்த்தன்மை இவற்றின் உருவம். தாஸ்தாயேவ்ஸ்கி, நோயும் பீடித்தலும் தாக்கும் சக்திகளின் மொத்த உருவம்.
என்று இவர்களுக்கிடையே வேற்றுமைகளை உணரமுடியும்.

திறனாய்வு