ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்

ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்—ஒரு குறிப்பு

சுதந்திரம், விடுதலை, தற்சார்பு நிலை, மக்களாட்சி, குடியரசு

நாம் 1947இல் சுதந்திரம் அடைந்தோம் அல்லது பெற்றோம் என்றுதான் பெரும்பாலும் யாவரும் எழுதுகிறார்கள். சுதந்திரம் என்ற வடமொழி சார்ந்த, ஆனால் தமிழில் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சொல்லுக்கு, ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரியான மூன்று சொற்கள் உள்ளன. லிபர்ட்டி, ஃப்ரீடம், இண்டிபெண்டென்ஸ் என்பன அவை.

தமிழில் விடுதலை என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் சுதந்திரம் என்பதிலிருந்து சற்றே வேறுபட்டது. உதாரணமாக இந்தியா சுதந்திரம் அடைந்தது, விடுதலை அடைந்தது என்ற பயன்பாடுகளில் வேற்றுமை இல்லை.
ஆனால் ஒருவர் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார் என்று சொல்வது போல சிறையிலிருந்து சுதந்திரம் பெற்றார் என எவரும் எழுதுவதில்லை.
ஆங்கிலப் பயன்பாட்டில் “இந்தியா அட்டெய்ன்ட் லிபர்ட்டி” என்று பெரும்பாலும் எழுதுவதில்லை.
“இந்தியா அட்டெய்ன்ட் ஃப்ரீடம்” என்பதிலோ
“இந்தியா காட் இன்டிபென்டென்ஸ்” என்பதிலோ தவறில்லை. இதற்கு இந்த மூன்று சொற்களுக்கும் உள்ள அர்த்த எல்லைகள்தான் காரணம்.
லிபர்ட்டி என்பது தானே இயல்பாக சுதந்திரமாக இருக்கும் நிலை. அது ஒருவர் கொடுத்து மற்றவர் பெறுவதல்ல என்று கருதுகிறேன். ஐரோப்பியர் வருகைக்கு முன் இந்தியா உட்படப் பல நாடுகள் அப்படித்தான் தாங்களே சுதந்திரமாக இருந்தன. அவர்கள் வந்துதான் அடிமைப் படுத்தினார்கள். மேலும் தாங்களே அந்த நாடுகளைக் கண்டுபிடித்ததாகவும் பெருமையடித்துக் கொண்டார்கள்.

லிபர்ட்டி என்ற சொல்லின் பயன்பாட்டைப் பாருங்கள். “ஐ ஆம் அட் லிபர்ட்டி டு டூ சம்திங்”. அது ஒரு இடம். ஐ ஆம் அட் ஹோம் என்பது போல ஐ ஆம் அட் லிபர்ட்டி. “நான் ஏதோ ஒன்றைச் செய்யும் (செய்வதற்குச்) சுதந்திரத்துடன் இருக்கிறேன்”. லிபர்ட்டி, எதைச் செய்வதற்கு என்பதோடு தொடர்புடையது.
ஃப்ரீடம் என்பது வேறு ஏதோ ஒன்றிலிருந்து பெறுகின்ற விடுபாடு அல்லது விடுதலை. குடிப் பழக்கத்திலிருந்து ஒருவர் விடுதலை அடையலாம், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு விடுதலை அடையலாம். அது எதிலிருந்து—என்பதோடு தொடர்புடையது. ஆனால் அதை நாமேதான் சிரமப்பட்டு அடைய வேண்டும். “அட்டெய்ன்” என்ற சொல் (சிரமப்பட்டு அடைவது) அதற்கேற்றதாக உள்ளது.

லிபர்ட்டி என்ற சொல்லின் வேர் லிப்ரே என்ற ஃபிரெஞ்சுச் சொல். ஆனால் அதற்கும் கட்டற்ற நிலை, விடுபட்டநிலை என்றுதான் அர்த்தம். அர்த்தங்கள் ஒன்றாக இருந்தாலும் பயன்பாடுகள் இவற்றுக்கு வேறாக உள்ளன.
இன்டிபென்டன்ஸ் என்பது ‘டிபன்டன்ஸ்’-க்கு எதிர்ச்சொல். ‘டிபன்டன்ஸ்’ என்பது ஒன்றைச் சார்ந்திருக்கும் தன்மை. இன்டிபன்டென்ஸ் என்றால் அதைச் சாராத நிலை. சுயசார்புநிலை. நாம் இப்போது பல நாடுகளை நமது வர்த்தகத்திற்குச் சார்ந்திருக்கிறோம். பொருளாதாரத்தில் நமக்குச் சார்பற்ற நிலை இல்லை. “வி ஆர் நாட் இன்டிபென்டண்ட் இன் இகனாமிக் ஃபீல்ட். வி ஆர் டிபென்டன்ட் ஆன் அமெரிக்கா”. இண்டிபெண்ட்ன்ஸை அடைய வேண்டும், பெற முடியாது. அது ஒரு சாதனை (அச்சீவ்மெண்ட்).

மேலும் ஃப்ரீடம் பொதுநிலை, இண்டிபெண்டன்ஸ் தனிநிலை. உதாரணமாக, ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு, எழுத்துச் சுதந்திரம். ஆனால் இண்டிபெண்டன்ஸ் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் ஒரு தனிநபரது எழுத்து அல்லது பேச்சுப்பாணி, நடை.

இந்தியா ‘லிபர்ட்டி’ அடையவில்லை. அயல்நாட்டார் வருவதற்கு முன் இந்தியா என்பதும் இல்லை. தனித்தனி நாடுகள்தான் இருந்தன. அந்த நாடுகள் லிபர்ட்டி நிலையில் இருந்தன. அடிமைப்பட்ட இந்தியா, இங்கிலாந்திடமிருந்து ‘ஃப்ரீடம்’ பெற்றது, அதனால் ‘இன்டிபென்டன்ஸ்’ (தற்சார்பு) அடைந்தது என்பது வரலாறு.
லிபர்ட்டி இயல்பான இருப்புநிலை, ஃப்ரீடம் பிறரிடமிருந்து பெறுவது, இண்டிபெண்டன்ஸ் தான் எய்தவேண்டியது. ஆனால் மூன்றுமே தமிழில் சுதந்திரம்தான்.
இன்று நம்மிடம் இந்த மூன்றுமே இல்லை. நாம் விரும்புவதைச் செய்யுமாறு ‘சுதந்திரமாக’ இல்லை. “வீ ஆர் நாட் அட் லிபர்ட்டி”. சமூகத்திலிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல அடிமைத்தனங்களிலிருந்து நாம் விடுதலை பெறவில்லை.
சிந்திப்பதற்கும் செயல்படுவதற்குமான சுதந்திரமும் (ஃப்ரீடம்) இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் (ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன்) பறிக்கப்படுகிறது.

நாம் யாரையும் சாராத நிலையிலும் (இண்டிபெண்டன்ட் ஆகவும்) இல்லை.
இரண்டைப் பெற்றோம், மூன்றையும் இன்று இழந்து நிற்கிறோம் என்பது உண்மை.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாம் 1952இல் “ரிபப்ளிக்” நிலை அடைந்தோம். ரிபப்ளிக் என்பதற்கு மக்களாட்சி—அதாவது ஜனநாயகம், குடியரசு என்ற இரு அர்த்தங்கள் உள்ளன. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்பது நம்மை நாமே ஆளுகின்ற தன்மை. அது பரந்துபட்ட பொருளுடையது. குடியரசு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களாட்சி நிறைவேற்றப் படுகின்ற தன்மை. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
உதாரணமாக அருந்ததி ராய் “ப்ரோகன் ரிபப்ளிக்” என்று ஒரு நூல் எழுதினார். அவர் மக்களாட்சி நொறுங்கியது என்கிறாரா, குடியரசு நொறுங்கியது என்கிறாரா?
குடியரசு நொறுங்கியது என்றால் இந்தியா குடியரசு நாடாக இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம். ஆனால் சுதந்திர நாடாக அது இருக்கலாம். உதாரணமாக பழங்கால அரசாட்சிகள் சுதந்திரமாகத்தான் இருந்தன, ஆனால் அவை குடியரசுகள் அல்ல.
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் நொறுங்கியது என்றால் மக்களை மக்களே ஆளும் தன்மை இல்லாமல் போய்விட்டது, அடிமைத்தனம் நிலவுகிறது என்று அர்த்தம். குடியரசு நொறுங்கியது என்றால் அதன் அடிப்படையான குடிமக்களாக இருக்கும் தன்மை (சிட்டிசன்ஷிப்) போய்விட்டது என்று பொருளாகும். இன்றைய இந்தியாவில் எது நொறுங்கியது, எது போய்விட்டது என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.

தினம்-ஒரு-செய்தி