சூரியன் எப்படிக் கிடைத்தது நமக்கு?

ஆதிகாலத்தில் வெறும் இருள்தான் இருந்தது. மனிதர்கள் ஒருவர்மீது ஒருவர் மோதிக் கொண்டே இருந்தார்கள். உலகின் மறுபக்கத்தில் நிறைய வெளிச்சம் இருக்கிறது, ஆனால் பேராசை பிடித்த அவர்கள் அதைப் பகிர்ந்துகொள்ள ஒப்பமாட்டார்கள் என்று நரி கூறியது.


போஸம் என்ற பிராணி கொஞ்சம் ஒளியைத் திருடிக்கொண்டுவரச் சென்றது. எல்லா வற்றிற்கும் ஒளியூட்டிக்கொண்டு சூரியன் ஓர் உயர்ந்த மரத்தில் தொங்குவதைப் பார்த்தது. கொஞ்சம் சூரியத் துண்டினை எடுத்துத் தன் வாலில் மறைத்துக் கொண்டது. ஆனால் வெப்பம் அதன் வாலின் மென்மயிர்களை எரித்துவிட்டது. ஆகவேதான் போஸங்களுக்கு வாலில் மயிரின்றி மொட்டையாக இருக்கிறது.

பிறகு கழுகுபோன்ற பறவையான பஸார்டு என்பது தன் தலைமீது ஒளியைக் கொண்டுவர முயன்றது. அந்த முயற்சியும் வீணாயிற்று. வெப்பம் அதன் தலைமீதிருந்த இறகுகளை எரித்துவிட்டது. அதனால்தான் பஸார்டுகளுக்குத் தலை மொட்டையாக இருக்கிறது.

அடுத்தபடியாக சிலந்தி முயற்சிசெய்தது. அது களிமண்ணால் ஆன ஒரு கிண்ணத்தைச் செய்தது. பிறகு பெரிய வலை ஒன்று பின்னி வானில் அதை ஒரு பால்வழியாக அடுத்த பக்கம் செல்லுமாறு வீசியது. அதில் சென்று முழுச் சூரியனையும் களிமண் கிண்ணத்தில் பறித்து உலகின் இந்தப் பக்கமாகக் கொண்டுவந்துவிட்டது.
இப்படித்தான் நமக்குச் சூரியன் கிடைத்தது.

-செரோக்கீ நாட்டுப்புறக் கதை.

இலக்கியம்