சுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்

சுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்

நாவல், சிறுகதை, விமரிசனம், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் தம் படைப்பு ஆளுமையை வெளிப்படுத்தி அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளை வைத்து, அவரது படைப்புகளில் வெளிப்படும் சுற்றுச்சூழலியல் பற்றிய கருத்துகளை மதிப்பிடும் முயற்சி இது.

சுந்தர ராமசாமி நவீனத்துவத்தின் குழந்தை. புதுமைப்பித்தனுக்குப் பிறகு மிகச் சிறப்பாக நவீனத்துவம் வெளிப்படுவது இவர் கதை-கவிதைகளில்தான்.

நவீனத்துவத்திற்குச் சில மேன்மைகள் உண்டு என்பதுபோல் சில குறைபாடுகளும் உண்டு. நவீனத்துவம், அதற்கு முன்னர் உலகெங்கும் பரவியிருந்த நேர்க்காட்சிவாதத்தின் (பாசிட்டி விசத்தின்) குழந்தை. அறிவியலைப் போற்றக்கூடிய தன்மை படைத்தது. மனிதமைய வாதத்தை-மனிதன் முக்கியத்துவத்தை, முதன்மையைப் போற்றக்கூடியது. அவன் அறிவின் வாயிலாக ஆற்றக்கூடியவற்றைப் பாராட்டுவது. இப்படிப்பட்ட மனிதமைய வாதத்தில் சுற்றுச்சூழல், இயற்கை பற்றிய கவலைகள் இருப்பதில்லை. சுந்தர ராமசாமியிடம் ஒரு மனிதன் என்ற முறையில், ஒரு படைப்பாளி என்ற முறையில், சகஜீவிகளுக்குக் காட்டக்கூடிய இரக்கம், பரிவு, கருணை எல்லாம் வெளிப்படு கின்றன. ஆனால் அதற்குமேல் இயற்கைமீது அவருடைய கரிசனம் செல்லவில்லை.

இயற்கையை நான்கு நிலைகளாகப் பிரித்துப்,

பெருவெளிப்பரப்பு (பாலை வனங்கள், கடல்கள், மனித சஞ்சாரமற்ற கண்டப்பகுதிகள்),

உன்னதக் காட்சிகள் (காடுகள், ஏரிகள், மலைகள், சிகரங்கள், அருவிகள்),

நாட்டுப்புறம் (குன்றுகள், விளைநிலங்கள், வனங்கள்),

வீட்டுப்புறம்-(பூங்காக்கள், தோட்டங்கள், தெருக்கள்)

என்று காணலாம். இவற்றினு£டாக நாம் வரும்போது தூய இயற்கை என்பதிலிருந்து முழு கலாச்சாரத்திற்கு மாறிவருகிறோம்.

சுந்தர ராமசாமியின் படைப்புகளில் பெரு வெளிப்பரப்புகளைக் காணமுடியாது. அபூர்வமாகக் கடல் பற்றிய குறிப்புகள் உண்டு. உன்னதக் காட்சிகள் என்ற பிரிவில், மலைகள் சிகரங்கள் போன்றவற்றைக் காணமுடியவில்லை. அபூர்வமாகக் காடுகள், அருவிகளைக் காணமுடிகிறது. நாட்டுப் புற, வீட்டுப்புற இயற்கைக் காட்சிகள்தான் பற்பல உள்ளன. இந்த நோக்கு, சுந்தர ராமசாமி கலாச்சாரம் சார்ந்த படைப்பாளர், இயற்கை சார்ந்த படைப்பாளர் அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பொதுவாக நோக்கும்போது சுந்தர ராமசாமியின் தொடக்ககாலக் கதைகள் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ஏற்றவகையில் இருக்கின்றன. அதிகமும் ‘தான்’ வெளிப்படாத கதைகள் அக்கால கட்டத்தியவைதான்.

‘முதலும் முடிவும்’ கதையில், மேற்கத்தியதுரையின் புதிய வீட்டைப்பார்த்து ஆறுமுகப்பிள்ளை வீடுகட்டுவதும், அதைப் பார்த்து அழகுவுக்கு அங்கேயே இருக்கவேண் டும் என்ற ஆசை உண்டாவதும் ஆடம்பரநோக்கினைக் காட்டுபவை. இந்த ஆடம்பர நோக்கினை சுந்தர ராமசாமி ஏற்றுக்கொள்கிறாரா அல்லது ஒதுக்குகிறாரா என்பது கதையில் தெளிவாக வெளிப்படவில்லை.

‘தண்ணீர்’ கதையில், விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்காததால் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். வாலிபர்கள் தண்ணீர்பெறத் திட்டம்போட்டு அதை நிறைவேற்றுகிறார்கள். மறுநாள் போலீஸ்படை வந்து அவர்களைத் தாக்குகிறது. நடந்த போராட்டத்தில் வாலிபர்களே அன்றி, காசநோய்க்காரர் ஒருவரும் ஒரு கிழவியும் ஒரு சிறுபெண்குழந்தையும் தாக்கப்படுகிறார்கள். பிற்காலத்தில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர், தண்ணீர் நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் முன்னோடியான கதை.

மனிதன் இயற்கையை வெல்ல ஆரம்பித்த முயற்சிதான் சுற்றுச்சூழல் அழிவுக்கான தொடக்கம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான் சிறப்பானது. இயற்கையை வெல்ல வேண்டும் என்பதன் தொடக்கம் விவசாயம். எனவே அதுவும் சரியானதல்ல என்றாலும், ஒருசார் அதனை ஏற்றுக்கொண்டு நோக்கும்போது, விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்கவேண்டியது இன்றியமையாமை. ஆனால் கோவில்தெப்பத்திருவிழாவுக்குத் தண்ணீர் அளிக்க அரசு முற்படுகிறது. இதனை சுந்தர ராமசாமி ஆதரிக்க வில்லை என்பது வெளிப்படை.

‘அக்கரைச் சீமையிலே’ கதை புகையிலைத் தோட்டம் என்ற மனிதன் உருவாக்கிய செயற்கை எவ்விதம் மனிதனையே அழிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமன்றி, கருப்பு-வெள்ளை, ஆப்பிரிக்க காபிரியர்-இந்தியர் போன்ற வேறுபாடுகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதையும் காட்டுகிறது.

‘கோயில்காளையும் உழவுமாடும்’ கதையும் இயற்கையை மனிதன் எவ்விதமேனும் வெல்லவேண்டும் என்ற ஆவலைக் காட்டுகின்ற கதைதான். இருப்பினும் எந்திரங்களைப் போற்றவில்லை, மனித உழைப்பின் வெற்றியை மட்டுமே எதிரொலிக்கிறது என்ற அளவில் சுற்றுச்சூழல் சார்பான கதையாகவே கணிக்கப்படவேண்டியது.

‘கைக்குழந்தை’ என்ற கதையில், கணவனைக் கைக்குழந்தைபோலவே கவனித்து வரும் பெண் பற்றிய சித்திரிப்பு இடம்பெறுகிறது. ஆனால் இந்தக் கணவனை எல்லோரும் henpecked என்று ஏளனம் செய்கிறார்கள். தன் மனைவியின் பராமரிப்பை ஏற்கும் ஆடவனே இதனைத் திருப்பிச் சொல்லும்போது அவள் மனம் புண்படுகிறது. பெண் மை பற்றிய சித்திரிப்புகளும் சுற்றுச்சூழலியல் திறனாய்வின் ஒருபகுதியாகவே கருதப் படுகின்றன என்பதால் இதையும் நாம் இங்கு விமரிசனத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கதையில் மனைவியின் தரப்பிலேயே சுந்தர ராமசாமி இருக்கிறார்.

இதுபோலவே ‘அடைக்கலம்’, ‘லவ்வு’, ‘செங்கமலமும் ஒரு சோப்பும்’, ‘கிடாரி’, ‘சீதை மார்க் சீயக்காய்த் தூள்’, ‘லீலை’  போன்ற கதைகளும் பெண்களை ஆதரிக்குமுகமாகவே படைக்கப்பட்டவை. இவை வலுவாக ஆண்  x பெண் இருமைகளை முன்வைப்பவை.

‘ரயில் தண்டவாளத்தில் ஓடும்’ ஒரு சிறப்பான கதை. ஒரு எஞ்சின் டிரைவர் தான் வழக்கமாகச் செல்லும் பாதையில் முதல் நாளே ஒரு எருமை அடிபட்டுச் சாவதைக் காண நேர்கிறது. பின்னர், தான் வழக்கமாகச் செல்லும் பாதையில், ஒரு பெண்ணுக்குக் கல்யாணமாவதைப் பார்க்கிறான். பிறகு அவளுக்குக் குழந்தை பிறந்திருப்பது தெரிகிறது. அவள் குழந்தையும் அவனுக்குப் பழக்கமாகிவிடுகிறது. அந்தக் குழந்தையைப் பார்க்க எஞ்சின் டிரைவர் ஒருநாள் பூப்போட்ட சட்டையை எடுத்துக்கொண்டு செல்கிறான். ஆனால் அந்தக் குழந்தை இறந்துவிட்டான் என்று தெரிகிறது. “கடைக்காவூர் பக்கம் நு£ற்றுக்கணக்கான பூவரசு மரங்களுக்கிடையே ஒரு தென்னை மரம் தலையைத் தூக்கிநிற்கும் காட்சிதான் என் நினைவில் எழும்.” இயற்கைக்கு இடையே செயற்கை செம்மாந்து தலைதூக்கும் காட்சி இது. இந்தக் கதையில் ரயில் விதியின் உருவமாக அமைந்திருக்கிறது.
“வேலையில் அமர்ந்த சில நாட்களுக்கெல்லாம் ஓர் எருமைமீது ரயில் ஓடிவிட்டது. பிராணாவஸ்தையில் எழுந்த அதிபயங்கரமான அலறல். என்னை அப்படியே ஒரு முழம் மேலே தூக்கிப் போட்டுக் கீழே தள்ளியபோதும் நிலைகுலைந்துபோய்விடாமல்
மனசை இரு கைக ளாலும் ஏந்திச் சுருட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணைவிழித்துப் பார்த்தேன். ரயில் தண்ட வாளத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.”
“மாதவ பணிக்கர் தன் எருமையை இழந்ததும் கண்ணனை அவனுடைய தாய் இழந்ததும் அதற்கு(இரயிலுக்கு) ஒன்றுதான்”

என்பதில் இரயிலை சர்வேஸ்வரனுக்கு இணையாக வைத்துப்பார்க்கும் பார்வை தெரிகிறது. நல்லவேளை, எந்திரத்தை இயக்கி இயக்கி, இந்த மனிதனும் இயந்திரமாகிவிடவில்லை.

‘ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு’ என்பதும் இங்கு கவனிக்கவேண்டிய கதை. ஒரு பங்களாவைச் சேர்ந்த சிறுவர்கள் சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள். வேலைக்காரி மகள் கனகம் வளர்ப்பு நாயை வைத்திருக்கிறாள். ஒரு குளுவச்சிறுவன் பாம்பைத் தலையில் சுற்றிக்கொண்டு வந்து அரிசியும் வஸ்திரமும் கேட்கிறான். அரிசி போட்டாகி விட்டது. வஸ்திரம் இல்லையென்று கூறிச் சிறுவனை நாயை விட்டு விரட்டு கிறார்கள். இயற்கை சிறுவனோடு அணுக்கமாக இருக்கிறது. செயற்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. செயற்கைச் சமூகம் அவனை விரட்டுகிறது. பாம்பை எளிதாக அணிந்துகொண்டிருக்கும் அவனால் நாயைக்கண்டு பயப்படாமல் இருக்க இயலவில்லை.

‘தயக்கம்’ கதையில், “கடலில் வீசி எறியப்பட்ட இயந்திரம் உப்பை உற்பத்தி செய்வது போல், மனசு எண்ணங்களை உற்பத்தி செய்து தள்ளுகிறது” என்ற வாக்கியம் வருகிறது. இதன் பொருள் நமக்குப் பிடிபடவில்லை. எந்திரத்தையும் மனித மனத்தையும் சமப்படுத்திப்
பார்க்கும் தன்மை தெரிகிறது.

‘திரைகள் ஆயிரம்’ பொதுவாகப் பெண்களுக்குச் சார்பான நோக்கில் படைக்கப்பட்டது என்ற தோற்றம் தருகிறது.

     “பெரிய வண்ணாத்திப்பூச்சி ஒன்று அந்தரத்தில் இந்திரஜாலம் பண்ணிக்கொண்டிருந்தது. என்ன அழகு! என்ன அற்புதமான வண்ணக்கலவை! பளிச்பளிச்சென்று நினைக்காத நிமிஷங்களில் இடமும் வலமும் வெட்டி திரும்பி என்னென்ன ஜாலங்க ளெல்லாம் காட்டுகிறது அது!….கடைசியில் உட்கார்ந்துவிடுமென்று எதிர்பார்த்த நிமிஷத்தில் மீண்டும் அது அவளை ஏமாற்றிவிட்டது போலும்!” வழக்கம்போல விதியின் சாகசம்.

     “இந்த உலகத்திலே உயிர்களும் பொருள்களும் ஒண்ணு பாக்கியில்லாமே பூராவும் சட்டை உரிச்சுண்டேதான் இருக்கும். பார்க்கப் பாக்கச் சட்டைகள் கழன்றுபோறது தெரிஞ்சுண்டே தான் இருக்கும்”  வேதாந்தக் கருத்து இது. சுந்தர ராமசாமிமீது வேதாந் தக்கருத்தியலின் தாக்கம் மிகுதியாகவே இருக்கிறது. அது சுற்றுச்சூழல் பார்வையை எப்படி பாதிக்கிறது என்பதைப் பின்னால் வரும் உதாரணங்களில் காணலாம்.

      “இந்தப் பெண்ஜென்மம்னு ஒரு ஜென்மத்தை பகவான் படைச்சிருக்காரே அதுக்கு என்ன அர்த்தம்? இந்த ஜென்மங்கள் உலகத்திலே பிறந்து என்ன சுகத்தைக் கண்டுடுத்துகள்? இவா படற கஷ்டங்களுக்கும் சங்கடங்களுக்கும் விமோசனமே கிடையாதா?” என்று பெண்களுக்கு ஆதரவான தொனி கேட்கிறது.

‘இல்லாத ஒன்று’ கதையில் ராஜசேகரன் சட்டக்கல்லூரி மாணவன். இலக்கிய ரசிகன். படைக்கும் ஆற்றல் அவனிடம் இருக்கிறது. ராமானந்த சாகர் என்ற கவிஞனைத் தேடிச் சென்று பார்த்து ஏமாற்ற மடைகிறான். ரிசல்ட் வரும்போது அவன் காதலிக்கும் அலமேலு பாசாகியிருக்கிறாள். அவனுக்கு எழுதத் தூண்டுகோல் தருகிறாள்.

     “ரிஷீசுவரனுக்கு விலகும் நதிபோல் கும்பல் பிளவுண்டு ஒதுங்கியது. கப்பல் போன்ற கார் ஒன்று மிதந்து வந்துகொண்டிருந்தது”.

இதுபோன்ற வருணனைகள் அவ்வப்போது சிறுகதைகளில் வரும். ஞானிகளைக் கண்டு சுந்தர ராமசாமிக்கு ஒரு பிரமிப்பும், எந்த ஞானியாவது வந்து தனக்குக் கடைத்தேற்றம் புரிவாரா என்ற கேள்வியும் இருந்துகொண்டே இருக்கின்றன. இவை முதற்காலக் கதைகளில் அதிகம் இல்லை. இரண்டாவது காலக்கதைகளில் தொடங்கி இந்த ஞானத் தேடல் அவருக்கு வந்துவிடுகிறது. அதன்கூடவே அதற்கு அனுசரணையான மேட்டிமைத் தனமும்.

உதாரணமாக, இக்கதையில், சாதாரண மக்களின் ரசனை பற்றி சுந்தர ராமசாமி பேசும் இடம் வருகிறது. “அசட்டு வாசகர்களின் அசட்டு இளிப்புகளைக் கண்டும், அவர்கள் சலிப்பின்றித் தொடுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளுக்கு பதில்சொல்லியும் பொறுமையிழந்து போயிருக்கலாம்”.

எழுத்தாளர்களைப் பொறுத்தவரை “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற சரிநிகர் மனப்பான்மை வேண்டும். அதுதான் அவர்கள் பக்குவம் பெற்றதற்கான அத்தாட்சி. இங்கே சுந்தர ராமசாமி இரசனையில் கீழ்ப்பட்டவர்களை இகழ்வது அவருக்குத் தகுதி சேர்ப்பதாக இல்லை.

பிறகு அவனுக்கு அலமேலு சொல்கிறாள்: “உன் வாசல்களை நீதான் தட்டித்திறக்கவேண்டும். பேனாவில் மையை நிரப்பு. அதன் ஆரம்பம் அது தான்”.  ‘உன் கவிதையை நீ எழுது’ போன்றவற்றில் அவர் சொல்வதும் இதுதான். ஆனால் உண்மையில் மேற்கண்ட இரு கருத்துகளுக்கான வரலாற்று வேர்கள் தேடப்பட வேண்டியவை.

இதனைத் தொடர்ந்துவரும் ‘அழைப்பு’ கதையிலும் வேதாந்தக்கருத்துகள் தொடர்கின்றன. இது இயற்கைவெளிக்கும் மன உளைச்சலுக்குமான தொடர்பினைச் சொல்கின்ற கதை. ஓர் அருவியைப் பார்த்து, ‘சதா ஒரு அருவி கொட்டி என் மனமும் இதுபோல் சுத்தப்படாதா என்று எண்ணினேன்’ என்கிறான் கதைசொல்லி. அலைகள் இன்றிக் குளம்போல் பரந்து கிடக்கிறது கடல். “ஒரு திவ்வியாத்மாவின் ஆக்ஞைக்குக் கட்டுண்டு அலைகள் அடங்கிப்போனதுபோல் இருக்கிறது” என்ற வருணிப்பு வருமிடத்தில் ரிஷீசுவரனுக்கு அலைகள் கட்டுப்பட்டன என்று முன்னர் சுந்தர ராமசாமி சொல்லியது நினைவுக்கு வருகிறது.

“நான் அணைத்துக்கொள்ளப்படுவேன். அழுந்த மறுத்துக் கரையேற நான் அடித்த நீச்சல் உலகின் எந்த சக்தியையும் ஓய்வுகொள்ள விடாது” என்று ஒரு சந்தோஷநோக்குடன் முடிகிறது. இதில் காணப்படும் நோக்கும் கவிதைகளில் வெளிப்படும் நோக்குதானே!

‘போதை’ கதையில் இரண்டுவித போதைகள் ஒப்பிடப்படுகின்றன. அரசியல், பெண் ஆகிய இரண்டும். இதில் வரும் ஒரு ஜோடியின் வருணனை கவனிக்க வேண்டியது.

     “அவர் ஒல்லியாகவும் ரொம்பச் சிவப்பாகவும் பெரிய வழுக்கையுடனும் சுத்தமாகச் சவரம் செய்த கன்னங்களுடனும் இருந்தார். அவருடைய முகத்தையும் வாயின் அமைப்பையும் பார்த்தபோது சரளமாக இங்கிலீஷ் பேசக்கூடியவர் மாதிரி தோன்றியது”.

வாயைப்பார்த்தவுடனே ஆங்கிலம் பேசும் வாயா, இந்தி பேசும் வாயா என்பது சற்றே அபத்தமாக இல்லையா? இது ஒரு பிராமண ஆடவன் குறித்த வருணனை.

     “வரதக்ஷணைக்கு ஆசைப்பட்டு கறுப்பியும் ஸ்தூலியுமான ஒரு பெண் ணை அந்தக் காலத்தில் இந்த வழுக்கைக்குக் கட்டிவைத்ததன் விளைவுதான் காரிலுள்ள குழந்தைகள் என்று நினைத்துக் கொண்டேன்”.

மீண்டும் மேட்டிமைத் தனமான ஒரு பார்வை வெளிப்பாடு. முஸ்லிம் ஊர்வலம் ஒன்றின்மீதான வெறுப்பு இந்தக் கதையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து வரும் ‘பல்லக்குத் தூக்கிகள்’ கதையிலும் மேட்டிமைத்தனமும், ஆசிரியர் கீழானவர்கள் என்று கருதுவோர் மீதான வெறுப்பும் பதிவாகியுள்ளன. பெரியவர் வராவிட்டாலும் பழக்கத்திற்காகப் பல்லக்கு தூக்கிக்கொண்டு செல்கி றார்கள் பல்லக்குத் தூக்கிகள். முக்கியமாக கவனிக்கவேண்டியது, அவர்களாகத் தூக்கிச் செல்லவில்லை, தூக்கிக்கொண்டு செல்லவைக்கப்படுகிறார்கள்.

நுணுக்கமாக மூன்றுவித சாதிகள் வெளிப்படும் கதை இது. பல்லக்குத் தூக்கிகளைக் கீழாகப் பார்க்கும் பாங்கு. அவர்களின் கனமான கருத்த உடல்களையும் முடியடர்ந்த கால்கைகளையும் பார்க்கும்போதே கதைசொல்லிக்கு மாளாத வெறுப்பு உண்டாகி விடுகிறது. இது உண்மையில் உழைப்பவர்களைக் கீழாகப் பார்க்கும் பார்வையா, அல்லது திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கேவலப்படுத்தும் பார்வையா என்பது தெளிவாகவில்லை.

‘அலைகள்’ கதையில், சட்டம் ஒழுங்கின் ஜபர்தஸ்து காட்டப்படுகிறது. முன்பு ஒரு சந்நியாசி (விவேகானந்தர் என்பது குறிப்பாக வெளிப்படுவது) அலைந்ததையும் மரணப்பாறைக்கு நீச்சலடித்துச் சென்றதையும் இரசிக்கும் ஒரு சாமியாரும் காவலதி காரியும் அதேகாரியத்தைச் செய்ததற்காகச் சட்டம் ஒழுங்கை மீறுகிறார் என்று ஒருவரைக் கைதுசெய்கிறார்கள். இதில் ஆசிரியக் கூற்றாக வரும் ஒரு பகுதி:
“விவசாயிகள் ராப்பகல் பாடுபட்டு நிமிர்த்த பயிரை நடுநிசியில் பள்ளத்தாக்கிலிருந்து துஷ்ட ஜந்துக்கள் கூட்டம் கூட்டமாய் இறங்கி மிதித்து துவம்சம் செய்துவிட்டு விடியக் கருக்கில் அமைதியாய் திரும்பும் காட்சிகளும் மனதில் விட்டுவிட்டுத் தோன்றும்”.

இங்கு சொல்லப்படும் துஷ்ட ஜந்துக்கள் யானைகள்தான். அவற்றை துஷ்ட ஜந்துக்கள் என்பது பொருத்தமாக இல்லை என்பதோடு, அவற்றின் இடத்தை நாம் எடுத்துக் கொண்டு எல்லை மீறுகிறோமே தவிர, அவை நம் எல்லைக்குள் புகுந்து ‘துவம்சம்’ செய்யவில்லை என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது. இங்கு ஒரு பொதுப்புத்திப் பார்வையே வெளிப்படுகிறது.

     “உண்மையில் விச்ராந்தியை எனக்குச் சில கணங்களேனும் பிரக்ஞையுடன் சுவாசிக்க ஆசையாய் இருந்தது. என்னதான் வேண்டித் தவம் கிடந்தாலும் அது எனக்கு லபிதமாகாது என்றும் பட்டது….ஆத்மாஞானி சொன்னார்: “வேஷ்டியைக் காவியில் முக்கி எடுத்துவிடலாம் க்ஷணப்பொழுதில். க்ஷணப்பொழுதில் மனதை முக்க, பரமேச்வரா”

இரு கரங்களையும் வானத்தை நோக்கி விரிக்கிறார் அவர். இது சுந்தர ராமசாமியிடம் தொடர்ந்து வெளிப்படும் ஆதங்கம். தாம் எப்படி ஈடேறுவோம் என்ற தொடர்ந்த அவலக்குரல். அவ்வப்போது ஒரு ஞானி எட்டிப்பார்த்து ஆறுதல் சொல்வது.

எல்லா மனிதர்களையும் போலவே, சுந்தர ராமசாமிக்கு (அல்லது அவரது கதைசொல்லிகளுக்குப்) பெண்கள் பற்றிய பிரச்சினை பெரிதாக இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் ஸ்தூலிகள். அவர்களுடைய ஆக்கிரமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதுதான் சுத்தமாதல் என்ற எண்ணமும் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே கதைக்குக் கதை ஆத்மஞானிகள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அற்புதச் செயல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. மிக எளிதாகவே சொல்லிவிடலாம்-இது அந்நியமாதலின் விளைவு. இயற்கையைவிட்டு நீங்கி செயற் கையில் மாட்டிக்கொண்டதன் அவஸ்தை.

இந்த ஆன்மிகத் தேடலை வருணிப்பதற்காகவே இயற்கையையும் அவர் பயன்படுத்துகிறார். சான்றாக இக்கதையில்:

     “சூரியன் மறைந்தபிறகு கடற்கரையில் மிஞ்சியிருக்கும் வெளிச்சத்துக்கு ஆயுள் சொற்பம். கணத்துக்குக் கணம் இருள் ஊடு ருவிக் கறுத்துக்கொண்டிருக்கும். வெளியிட முடியாத பெரும் துக்கத்துக்கு ஆட்பட்டுக் கலங்கும்.”

கதைசொல்லியின் மானிடக்கலக்கம் இயற்கைமீது சுமத்தப்படுகிறது.

இயற்கையை வருணிக்கும் போதும் செயற்கை சார்ந்த, மனிதன் சார்ந்த வருண னைகளையே சுந்தர ராமசாமி பயன்படுத்துகிறார் என்பது முக்கியமானது.

     “காற்றுப்பிடித்து உன்னியெழும் அலைகள் கரைநோக்கி வரும். சர்ப்பவீரர்களின் குதி ரைப்படை குதித்து குதித்து நம்மை நோக்கி நெருங்கும்….கரையோரம் படைகள் சின்னாபின்னப்பட்டு சிதறிப்பின்திரும்பி ஓடும். இதைவிட அழகானது எதுவுமில்லை”.

இதுவும் மனிதமையப்படுதலின் விளைவே அன்றி இயற்கை அல்லது சூழல்மயப்படுதலின் விளைவு அல்ல.

‘ரத்னாபாயின் ஆங்கிலம்’  கதையில் கதாபாத்திர மனநிலைக்கு ஏற்றாற்போல் தமிழ் வாக்கியங்கள்கூட ஆங்கில வாக்கியங்கள்போலவே தோன்றுமாறு எழுதியிருக் கும் திறமை மிகச் சிறப்பானது. ரத்னாபாயின் மிக அந்நியப்பட்ட, செயற்கையான, ஒருவித obsessive disorderக்கு ஆளான மனப்பான்மையை வெளிப்படுத்துவதில் இக்கதை பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தக்கது.

குரங்குகளை விரட்ட மனிதர்கள் செய்த எளிய உபாயம். தண்ணீர்ப் பாம்புகளைப் பொட்டலமாகக் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். பாம்புகளைப் பிடித்த குரங்குகள் பயத்தினால் கத்திக் கத்திச் செத்துப்போகின்றன. குரங்குகள் மீது நியாயமாகவே இரக்கம் ஏற்படத்தான் வேண்டும். ஏனெனில் அவற்றின் இடங்களை மனிதர் கள் ஆக்கிரமித்துக்கொண்ட அத்துமீறலினால் ஏற்படும் விளைவுதான் அவற்றின் அழிவும். ஆனால் இதன் விளைவையும் சுந்தர ராமசாமி, ஆன்மிகப்படுத்தி சமப்படுத்திவிடுகிறார். கடைசியில் ஒரு பெரியவர் “ஆஞ்சநேய அவதாரமான உனக்கு இது மட்டும் தெரியவில்லையே” என்று புலம்புவதில் இது வெளிப்பட்டுவிடுகிறது.

‘பள்ளம்’ கதையும் செயற்கையின் அவலம்தான். அளவுக்கு மீறிய திரைப்பட  ஈடுபாடு எப்படி ஒரு பையனின் கண்ணை வாங்கிவிடுகிறது என்பது.

ஒரு தீவிர எல்லையில், இயற்கை முழுதும்அழிந்து பாழ்பட்டுப்போன நிலையில் மனிதர்கள் வேறுவழியின்றிக் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்வதையே ‘கொந்தளிப்பு’ காட்டுகிறது என்று காணலாம். இதுவும் சுற்றுச்சூழல் பற்றிய கதை யாகிறது.

‘இரண்டு முகங்கள்’ கதையில், நகர்ப்புறக் கட்டடங்கள் எழுப்புவதற்காக பயிர் நிலங்கள் அழிக்கப்படும் கொடுமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘வழி’ கதை, ஃப்ராய்டிய விவரிப்பு வேண்டுகின்ற தளத்தை உடையது. காட்டில் வழியைத் தொலைத்துவிட்ட ஒருவன் மீண்டுவருவதைப் பற்றிய கதை. எது காடு, எது வழி என்பதுதான் கேள்வி. ‘பெண்களிடம் ஆசைகொண்ட ஒருவன் அவர்களிடமிருந்து மீள்வதுதான் வாழ்க்கை’ என்பது போன்ற பார்வையைத் தருகிறது. இது சுத்தமான ஆண்மனநிலை வெளிப்பாடு. ஏன் உலகமுழுவதும் ஆண்களிடம் ஆசைகொண்ட பெண் எவளேனும் மீட்சி அடைவது பற்றிக் கவிதை இல்லை?

இந்தக் கதையிலும் ஒரு வயசாளி-மிக அழகான கட்டான உடலமைப்பு உடையவர்-ஞானியாகத் தோற்றம் அளிக்கிறார். காட் டிற்குள் செல்ல முனையும் கதைசொல்லியை “வேண்டாம் ஐயா” என்றுசொல்லித் தடுக்கிறார். இந்தக் கதையிலும் போராட்டம், வெற்றி யாருக்கு என்ற கேள்வி.

‘அழைப்பு’ கதையில் வந்ததுபோலவே முடிவு. “என்னைத் தோற்கடிக்க முடியாது என்று கத்தினேன். அந்தக் கத்தல் சகல அம்மண மரங்களுக்கும் கேட்டது. அந்த அம்மண ஸ்தூலிகள் எனக்கு உதவாமல்இருக்கலாம்” என்பது போன்ற தொடர்கள்.

     “இந்தக் கானகத்தில் விழுந்துகிடந்து துஷ்டைகளின் கொத்தலுக்கும் பிடுங்கலுக்கும் ஆளா னேன் என்றால் இயற்கை தன் அவலத்தை நிரூபித்துக்கொள்கிறது என்றுதானே அர்த்தம்?” என்கிறான் கதைசொல்லி. இயற்கையைவிடச் செயற்கைதான் சிறந்தது, நல்லது என்ற கருத்தோட்டம் ஆசிரியர் மனத்தில் ஊறிக்கிடந்ததை இப்பகுதி எடுத்துக்காட்டுகிறது.

இன்னும் சற்றுப் பின்னால்:

     “இயற்கையை நேசித்துவாழும் அந்த மகோன்னத ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகள் சூட்சுமமானவை. நுட்பம் கூடியவை. மிகை அற்றவை. இருப்பினும் அவற்றைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கும் இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனுபவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை”.

அதாவது புத்தக வருணனை இன்பமூட்டுகிறது, கனவு நன்றாக இருக்கிறது, நிஜம் அவ்வாறில்லை என்பது அர்த்தம்.

‘கோலம்’ என்ற கதையில் ஆதரவற்ற கிழவன்-கிழவி கடைசியாகக் கடலில் இறங்கிவிடுகிறார்கள். திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பற்றிய வெறுப்பு. சூரியனே அசுத்தப்பட்டுப்போகும் என்ற மிகை வருணனை. வாய்க்கால் தாண்டிவிட்டால் ஏதோ கொஞ்சம் ஒழுங்கும் நியதியும் கூடிவருவதுபோல் இருக்கும். ஃப்ராய்டு சொன்னது போல, anal fixation உள்ளவர்கள்தான் மிகுதியாக ஒழுங்கு, நியதி பற்றிப் பேசுவார்கள் போலும்.

இன்னொரு வருணனை: “ஒருவரை ஒருவர் பிடித்துக்கொள்ளும்போது சரிவின் துஷ்டத்தனம் குறைந்துவிடுகிறது”. இதுவும் இயற்கையின்மீது பழிபோடுவது தான். கல்லில் நாம் இடித்துக்கொண்டு அது இடித்துவிட்டது என்று சொல்வது போலத்தான், சரிவுக்கு துஷ்டத்தனம் இருப்பதாகச் சொல்வதும்.

கதையின் பிற்பகுதியில், இயற்கை நாசமாவது பற்றிய பிரலாபம் ஒலிக்கிறது.

     “சிறுபிராயத்தில் அந்தக் கடற்கரையில் மனித காரியம் என்று எதுவும் இல்லை. காலமும் இயற்கையும்தான் அங்கு புணர்ந்துகிடந்தன. அதைப் பார்க்கக்கூட எவரும் இலலை. எப்போதேனும் யாரேனும் வந்து தம் காலடிச்சுவடுகளைப் பதிப்பார்கள். அவர்கள் நகர்ந்ததும் அவர்களுடைய அடிச்சுவடும் அழிக்கப்பட்டுவிடும். இப்போது கட்டிடங்கள். நொறுங்கிக் கிடக்கும் விமானங்கள் மாதிரி. கற்சுவர். கடலுக்கும் கரைக்கும் நடுவே. அந்தப் பிரிவின் கொடுமையைத் தாங்க முடியாமல் அவர் அந்தப் பக்கம் பார்க்காமலே நடந்தார்”.

‘எதிர்கொள்ளல்’ கதை, எப்படிச் செயற்கையான ஊடகத்தின் ஊடுருவலை மனித புத்தி எதிர்கொள்ளமுடியாமல் இடர்ப்படுகிறது என்பதை நன்றாக விவரிக்கிறது. ஒரு வியப்புணர்ச்சி. ‘காணாமல் போனது’ கதையிலும் அதுபோன்ற இன்னொரு வியப்புணர்ச்சி. ஒரு குறிப்பிட்ட வாத்தை-நொண்டிவாத்துதான்-அதை எப்படி இனம்கண்டுபிடிக்க ஒரு சிறுமியால் எப்படி முடிகிறது என்ற வியப்பு.

‘விகாசம்’ கதை, ‘கோயில்காளையும் உழவுமாடும்’ கதை போன்றது. மானிட இனத்தின் வெற்றி. அது உடலுழைப்பின் வெற்றியைக் கொண்டாடுகிறது என்றால் இது புத்தியின் வெற்றி. தான் எதனாலும் தோற்கடிக்கப்படமாட்டேன் என்று நிரூபிக் கும் ராவுத்தர். சுந்தர ராமசாமியின் மிகச் சிறந்த கதைகளில் இது ஒன்று.

காகங்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் வரும் லாரியிலிருந்து சிந்தும் அரிசி மணிகளை உண்பவை-பல ஆண்டுகளாக. இப்போது அந்தப் பாதை மூடப்படுவதால் அவற்றுக்கு உணவில்லை. அவற்றின் சார்பாகப் பேசும் ஒரு மனிதன். ஏற்கெனவே அவன் ஒரு நோயாளி. இப்போது மன நோயாளியாகவும் ஆகிறான். இந்தக் கதையிலும் சுந்தர ராமசாமியின் சார்பு தெளிவாக இல்லை. காகங்களின் சார்பாகப் பேசுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். ‘பட்டுவாடா’, ‘நாடார் சார்’, ‘இருக்கைகள்’ போன்றவை அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தை எடுத்துக்காட்டுகின்ற கதைகள்.

இதன் பிறகு வருபவை கலிஃபோர்னியாக் கதைகள். குழந்தை தாணுவின் கண்ணை மயில் கொத்திவிடுகிறது. ஆனால் அவன் தாத்தாவான பிறகு தன் பேரனிடம் மயில் என்றே விடைவரும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பது ஏன்? கலிஃபோர்னியாக் கதைகள் பெரும்பாலும் சுயசரிதைக் கதைகள். பொதுவாக, சுயசரி தைக் கதைகள்தான் சூழலியல் திறனாய்வுக்கு மிகவும் உதவிகரமானவை என்று விமரிசகர்கள் சொல்வார்கள். சுந்தர ராமசாமி இதற்கு விதிவிலக்கு.

‘தனுவும் நிஷாவும்’ கதையில், அவர்கள் இருவரும் ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். செல்லப் பிராணிகளைப் பார்த்துக்கொள்ளும் வேலை. செல்லப் பிராணிகளுடன் அவர்களுக்கு நெருக்கம் இருந்தாலும்-குறிப்பாக பாஞ்சா என்ற நாயை மிக அன்போடு கவனித்துக்  கொள்கிறார்கள்-அந்த நெருக்கம் சூழலோடுள்ள, இயற்கையுடனான உறவைக் குறிப்ப தாக இல்லை. இவர்களும் கம்பெனி ஆரம்பித்து நேர்மையாக வியாபாரம் செய்பவர்கள். இவர்களிடம் பிராணிகளை விட்டுச் செல்பவர்களும் தங்கள் வேலைநிமித்தமாக வே அவ்வாறு செய்கிறார்கள். மிக திட்டவட்டமான, வரையறுக்கப்பட்ட. விதிமுறைக ளுக்கு உட்பட்ட வணிக உறவுகள், இருந்தாலும், ஏதோ ஒருவிதத்தில் பிராணிகளு டன்-இயற்கையுடன் நெருக்கம் ஏற்படுகிறது என்றவகையில் திருப்தி அடையலாம்.

‘களிப்பு’ என்ற கதையும் இவ்வாறானதே. ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடித’மும் வளர்ப்புப் பிராணிகள்மீது மறியாவுக்கு இருக்கும் ஆசையையும், அதை தாமு மதிப்பதையும் காட்டுகிறது. என்றாலும், இவை சுற்றுச்சூழல் ஈடுபாட்டை எடுத்துக் காட்டுவன அல்ல. நாற்றுநடும்  பாடலை மேடையில் செய்யும்போது எப்படி அது தன் சுயஇயல்பை இழந்து  நாடக நிகழ்ச்சி ஆகிவிடுகிறதோ அதுபோல இயற்கைமீதான ஆசையையும் பிராணிவளர்ப்பு, பான்சாய் வளர்ப்பு என்று காட்டும்போது நாடகத்தன மாக மாறிவிடுகிறது.

‘ஈசல்’ கதையில் இயற்கை நிகழ்வு-மழைநாளில் ஈசல்கள் பெருகு தல் சொல்லப்படுகிறது. அவற்றை நாம் பல்புகளில் பசைக்காகிதம் ஒட்டிச் சாகடிக்கிறோம். நாம் செய்யும் படுகொலையை மீண்டும் இயற்கை சார்ந்த விவகாரமாகப் பார்க்கிறார் சுந்தர ராமசாமி. பார்வையில்லாமல் தான் அவை (ஈசல்கள்) பிறக்க வேண்டுமென்றால் அவை ஏன் பிறக்கவேண்டும்? அவைகளுக்குச் சிறகுகள் எதற்கு? என்றெல்லாம் கதைசொல்லும் பையனின் எண்ணங்கள் ஓடுகின்றன.

மனிதனாக, சமூகமாக ஒன்றுசேர்ந்தோ, தனியாகவோ செய்து உருவாக்கும் செயல்களை/அல்லது இயற்றும் தீமைகளையெல்லாம் இயற்கை அல்லது இறைவன் உருவாக்கி விட்டதாகச் சொல்வது-அதாவது சமூகப் பிரச்சினைகளை இருத்தலியல் பிரச்சினைகளாக மாற்றுவது என்பது எப்போதுமே ஆதிக்கவர்க்கத்தினரின் போக்கு. பிரச்சினைகள் மட்டுமல்ல, எந்தச் செயலானாலும் ஆன்மிகவாதிகள் என்போரின் நிலைப்பாடு இதுதான். இது சுந்தர ராமசாமியிடம் காலப் போக்கில் தொற்றிக் கொண்ட ஒன்று என்றுதான் சொல்லவேண்டும். ‘ஈசல்கள்’ கதையில் மட்டுமின்றி, ‘பிள்ளைகெடுத்தாள் விளை’யிலும் இது வெளிப்படுகிறது. குளம் மனிதன் இயற்றியது. ஆனால் கதைசொல்லுத் தங்கக் கண், “குளமா, கடவுளுடைய மாஜிக்” என்பான்.

கொசு, மூட்டை, பேன் இவை மூன்றும் மனித இரத்தத்தையே உணவாகக் கொள்ளும் ரத்த உணவாளிகள். இவற்றின்மீது ஒரு அனுதாபம்-அக்கறை இருப்பதா கச் சொல்கிறார் கதைசொல்லி. இதில் நேரடியாகவே சூழலியல் அக்கறை வெளிப்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் நாம் இன்று புலி, மான், பாம்பு இவற்றையெல்லாம் காப்பாற்ற sanctuaries வைத்துக்காப்பாற்றுவதுபோல கொசு, மூட்டை, பேன் இவற்றை யும் காப்பகம் வைத்துக்காப்பாற்றவேண்டிவரலாம் என்று நையாண்டிசெய்கிறார் சு.ரா.

போர் பற்றிய நல்ல வரையறை ஒன்று இக்கதையில் இடம்பெறுகிறது:

     “போர் என்பதே உடல் உடல் என்று நாம் சொல்லிவருபவற்றைச் சடலங்களாக மாற்றுவதுதானே! …முழுசாக இருக்கும் உடம்புகளின் உறுப்புகளை இயன்ற அளவு குறைப்பதுதானே!”

ஆனால் கதையின் இறுதியில் ஒரு மேட்டிமைத்தனமான பார்வை வருகிறது:

     “மனித ஜீவன்கள் எலும்பு உருவங்களாக மருத்துவ மாணவர்களுக்கு நேரடியாகப் பயன்படும் படி வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். திடகாத்திரமானவர்களை அழிப்பதைவிடவும் கஷ்டமானது நோஞ்சான்களையும் தரித்திரவாசிகளையும் அழிப்பது. பெரிய நாகரிகங்கள் அழிந்துபோயிருக்கலாம். நாகரிகமே இல்லாதவர்களிடம் அழிந்துபோக என்ன இருக்கிறது?”

‘பள்ளியில் ஒரு நாய்க்குட்டி’ சிறுகதைத்தொகுப்பில், பள்ளிக்கூடத்தில் பேரனைச் சேர்க்க வரும் தாத்தா ஏற்படுத்தும் சலனங்கள் கதையின் ஒருபுறம். இன் னொருபுறம், அந்தப் பள்ளிக்கூடத்தின் முன்னால் வளர்ந்திருக்கும் ஒரு பெயர் தெரியாத மரத்தின்மீது ஏற்படும்  ஈடுபாடு. அதை ஒரு சீனக்கலைஞன் அப்படியே வரைந்திருப்பதில் ஏற்படும் ஆச்சரியம். மரத்தோடு ஒட்டுதலால் ஏற்படும் நட்பு. அதைக் கடைசியாக முதலமைச்சரின்(அம்மா) வருகைக்கென வெட்டுவதில் ஏற்படும் காயம் ஆகியவை சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

‘பள்ளியில் ஒரு நாய்க்குட்டி’ கதையில், பள்ளியில் அதிகாலை நடைபயில வரும் ஒருவர் ஒரு நாய்க்குட்டியைப் பார்க்கிறார். அதைத்தொடர்ந்து நாய்கள் பற்றிய சிந்தனைகள். இந்த நாய்க்குட்டி என்ன ஆகும் என்ற கவலை. அது பாதுகாப்பற்ற நிலையில் போலீசார்களுக்கு இடையில் செல்கிறது. ஒரு சிறுவன் வந்து நாய்க்குட்டிக்கு உதவுகிறான். ஆனாலும் அது மறுநாள் இறந்துபோகிறது. இங்கும் ஒரு உள்ளோட்டம்:

     “எல்லாப் பிரச்சினைகளும் காலத்தின் நீட்சியில் முடிந்துபோகின்றன. ஒரு சிலவற்றுக்குத் தீர்வு. வேறு சிலவற்றிற்கு முடிவு”.

சுற்றுச் சூழலியல் இன்று உலகில்-மனித இனத்தின்-அழிவுச்சாத்தியத்தைப் பற்றிப் பேசுகிறது. காலப்போக்கில் முடியப் போகும் இந்தப் பிரச்சினைக்கு நாம் தீர்வு காணப்போகிறோமா, அல்லது முடிவா?

இதுவரை கண்ட உதாரணங்களை வைத்து நோக்கும்போது, சுந்தர ராமசாமியி டம் ஒருநிலையில் நேர்க்காட்சிவாதம் சார்ந்த பண்புகளும், இன்னொரு நிலையில்-அதற்கு அனுசரணையாக, நிறைவுசெய்யும் வகையில், ஆன்மிக நோக்கும் காணப்படுகின்றன என்பதை அறியமுடியும். இந்த இரண்டுமே சூழலியல் திறனாய்வு எதிர்க்கக் கூடியவை.

அறிவியலினால் எல்லாவற்றையும் சாதிக்கமுடியாது என்பதோடு இன்றைய அழிவுக்கும் அதுதான் முக்கியக் காரணமாகவும் இருக்கிறது என்பது தெளிவு. ஆன்மிகம் என்பது இன்றைய எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. அது ஒரு தப்பிப்பு முறை-அவ்வளவே.

தம் சொந்தப் பிரச்சினைகளுக்கு-கதைசொல்லிகளின் பிரச்சினை களும் சுந்தர ராமசாமியின் சொந்தப் பிரச்சினைகள்தானே-ஆன்மிகத்தைத் தீர்வாகத் தேடி உள்முகமாகச் செல்லும்போது சுந்தர ராமசாமி பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க விழைகிறார் என்பதே தெளிவாகிறது. அதன் விளைவாக, தண்டவாளத்தில் ஓடும் ரயி லையும் சாமியார்களையும் ஞானிகளாக்கி அவற்றின்/அவர்களின் அறிவுரைகளை ஏற்கும் மனநிலைக்கும் செல்கிறார்.

இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பவை பன்னாட்டு முதலாளித்துவத்தின் விழுதுகள். பன்னாட்டு முதலாளித்துவம் உருவாக்கா விட்டாலும் எந்த ஆதிக்கத்திற்கும் நெருக்கமாகச் சென்று கைகட்டிநிற்கக்கூடியதுதான் ஆத்திகம்.

சுந்தர ராமசாமியிடம் காணப்படும் ஈரடிநிலை என்ன வென்றால், நேரடியாகச் சில கதைகளில் அவர் இயற்கைமீதும், இயற்கைசார்ந்த விலங்குகள் மீதும் தாவரங்கள் மீதும் அவர் இரக்கமும் பரிவும் காட்டுவதாகவே வெளிப்பாடு இருக்கிறது. ஆனால் அவற்றின் பின்னுள்ள அக்கறையை நோக்கும்போது அது சூழலியல் சாராம்சத்துக்கு எதிராகச் செல்வதாகத் தெரியவருகிறது. இந்த ஈரடிநிலை நவீனத்துவத்தின் ஈரடி நிலை.

இயற்கை பாழ்பட்டுப்போனதாக, மனிதனின் உறவுகள் அந்நியப்பட்டுப் போன தாக எழுதிக்கொண்டே, அத்தகைய விஞ்ஞானத்தின், தத்துவத்தின் அடிப்படைகளை மட்டும் கேள்விகேட்காமல் ஏற்கும் தத்துவம்தான் நவீனத்துவம். அதன் குழந்தையான சுந்தர ராமசாமியிடம் இந்த ஈரடிநிலை இல்லாமல் எப்படிப் போகும்?

 

திறனாய்வு