கல்வி-கேள்விகள். கேள்வி 6

(6) நம் சமுதாயத்தில் இன்று கல்விக்குத் தவறான வகையில் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

ஆம். ஒருவகையில்.
கீழ்த்தட்டு மக்களுக்குத் தேர்ந்தெடுத்தல் (சாய்ஸ்) என்பது இல்லை. மிகக் கீழ்த்தட்டு மக்களுக்குப் படிப்பு என்பதைவிட சிறுவயதில் வேலைக்குச் செல்வதே (ஓட்டல்களில் மேசை துடைப்பது, தட்டுக்கழுவுவது, கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் டீ வாங்கி வருவது…, கிராமப் புறமாக இருந்தால் மாடுமேய்ப்பது, சுமை தூக்குவது…) முக்கியம். இந்த எண்ணிக்கையினர்தான் நமது சமூகத்தில் (ஏறத்தாழ 20 சதவீதம்) உள்ளனர். இவர்களைப் பற்றி நாம் (அரசு உள்பட) என்றும் கவலைப்பட்டதே இல்லை. அவர்கள் முடிந்தவரை, நாலாவதோ, ஐந்தாவதோ படித்துவிட்டு வேலையில் ஈடுபடுகிறார்கள். (இங்கு கேட்கப்படும் கேள்விகள்கூட நடுத்தர வர்க்கத்தினர் பார்வையில் உள்ளனவே தவிர, கீழ்த்தட்டு மக்களின் பார்வையில் அறவே இல்லை.) இன்னும் சிறார்-உழைப்பு (சைல்ட் லேபர்) நம் நாட்டில் நீக்கப்படவில்லை.
பெரும்பாலும் அரசினர் பள்ளிகளில் படிக்கும் பிற கீழ்த்தட்டு மக்களுடைய குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்போது எந்தப் படிப்பை கல்வி நிர்வாகத்தினர் தருகின்றார்களோ (அது பி.ஏ. பொருளாதாரமோ, இலக்கியமோ, பி.எஸ்சி. தாவரவியலோ எதுவாயினும்) அதைப் படித்தாக வேண்டும். இதையெல்லாம் தாண்டி இலட்சிய நோக்குடன் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பது மிகக் குறைந்த சிலரால்தான் முடியலாம்.
மிகப் பெரிய பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை சர்ச் பார்க் முதலிய எவ்விதப் பள்ளிகளிலும் படிக்கவைக்க முடியும். அவர்களுக்குக் கல்வி என்பது பொழுதுபோக்கு. தான் எதைப் படிக்கவேண்டும் என்பதைவிட அவர்களுக்கு அடுத்து தங்கள் வணிகத்தை அல்லது தொழிலை கவனித்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படைக் கல்வியும் ஆங்கிலப் பேச்சும் தோரணையும் இருந்தால் போதுமானது.
நடுத்தர மக்களுக்குத்தான் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தால் வேலைகிடைக்கும் என்ற பெரிய கேள்வி முன்நிற்கிறது. அதற்குப் படிப்பு மட்டும் போதாது, ஆங்கிலப் பேச்சு நன்றாக வர வேண்டும், மேல்தட்டு மக்களுடைய தைரியமும் தோரணையும் வரவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதற்காக எவ்வளவு செலவு செய்தாயினும் சிறந்த பள்ளி ஒன்றில் (வேலம்மாள் குழுமத்தின் பள்ளிகள் முதலியன) முதலிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
“தவறான முக்கியத்துவம்” தருபவர்கள் இவர்கள்தான்!
சான்றாக, 2000ங்களின் தொடக்கத்தில் கணினிப்படிப்பு முடித்தவுடன் மிக அதிக ஊதியம் கிடைக்கிறது என்ற நினைப்பில் எல்லாரும் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்த்தார்கள். அதற்குத் தக, பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. சந்தர்ப்பவாத முதலாளிகளும் அரசியல்வாதிகளும் நிறையக் காசு பார்த்தார்கள். இப்போது கணினிப் பொறியியல் படித்தால் வேலை இல்லை என்றபோது அந்தக் கல்லூரிகள் மூடப்படுகின்றன. அதேபோல் ஒருசமயம் எம்.பி.ஏ. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்போது அது குறைந்துவிட்டது. இப்போது பி.காம் படிப்பு படித்தால் வாய்ப்பிருக்கிறது என்று எல்லாரும் அதன்பின் ஓடுகிறார்கள். ஆக, நடுத்தர வர்க்கத்தின் தவறான மனப்பாங்குதான் கல்வியின் அதீத முக்கியத்துவங்களையும் நிர்ணயிக்கிறது. ஆங்கிலவழிக் கல்விக்காகத் தாய்மொழி வழிக் கல்வியை அறவே ஒழித்தவர்களும் இவர்களே.
நடுத்தர வர்க்கத்தின் மனப்பான்மைதான் மாறவேண்டும். முதலில் எதைப் படித்தாலும் நாம் நமது சுய உழைப்பினாலும் தைரியத்தினாலும் முயற்சியாலும் வாழ்க்கை நடத்த முடியும் என்ற தைரியத்தைப் பிள்ளைகளுக்கு நமது நடுத்தர வர்க்கத்தினர் உருவாக்குவது இல்லை. இத்தனைக்கும் அயல்நாடுகளில் மனப்பாடமற்ற செயல்வழிக் கல்வி எவ்விதம் அளிக்கப் படுகிறது என்பதை அறிந்தவர்கள் அவர்கள்தான்.

கேள்வி பதில்