கல்வி-கேள்விகள். கேள்வி 4

(4) கல்வி என்று வரும்போது பெற்றோர் தம் குழந்தைகளின் மீது இத்தனை இரக்கமற்றவர்களாகவும், போட்டி மனப்பான்மையைத் தூண்டி, சுயநலத்தை வளர்ப்பவர்களாகவும் இருப்பது ஏன்?

வேலை வாய்ப்பின்மைதான் காரணம். நான் பள்ளியில் (1960களின் தொடக்கம்) படித்த காலத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை 40 கோடியாக இருந்தது. இப்போது 130 கோடியைத் தாண்டிவிட்டது. (ஒரே தலைமுறையில்!) அதற்குத் தக வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றனவா?
பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டு அமைப்பு இந்தியா குறித்த பொருளாதார சர்வேயை நடத்தியது. இந்திய இளைஞர்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் (சுமார் 12 கோடிப் பேர்) எந்த வேலையிலும் இல்லை, வேலைக்கான கல்வியும் பயிலவில்லை, எந்தத் தொழிற்பயிற்சியிலும் ஈடுபடவில்லை. மோசமான பொதுநல நிலை, அதிகரித்துவரும் சமமின்மை, புதிய திறன்களைத் தேடும் பொருளாதாரம், புதுப்புதுப் பொருள்கள் மீதான கனவுகளைக் கொண்ட நுகர்வோர் கலாச்சாரம், தடையில்லாத வன்முறைகள், லட்சக்கணக்கான போராட்டங்களைக் கொண்ட பாரம்பரிய சமூகம் ஆகியவை சேர்ந்து வேலைவாய்ப்புக்கு உலை வைக்கின்றன.
இன்று, இந்தியாவின் மக்கள்தொகையில் 42 விழுக்காடு இளைஞர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் இளைஞர்களின் வீக்கம் ஏற்படுவது நன்கு தெரிகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரி வயது 29ஆக இருக்கும். இதன் மூலம் உலகின் இளமையான நாடாக இந்தியா உருவெடுக்கும். மேலும் மக்கள்தொகையில் 64 விழுக்காட்டினர் பணிபுரிவதற்கான வயது வரம்பிற்குள் இருப்பார்கள். இவர்கள் வேலைவாய்ப்புக்கு என்ன வழி?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் 1 கோடி முதல் 1.2 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். ஆனால், 2012 முதல் 2016 வரை வெறும் 50 லட்சம் வேலைவாய்ப்புகளையே இந்தியா உருவாக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் 50 கோடிப் பேருக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி, மூன்றாண்டுகளின் இறுதியில் 2 கோடிப் பேருக்கு மட்டுமே பயிற்சியளிக்க முடியும் என்று பின்னர் கூறி அரசு இத்திட்டத்தைக் கைவிட்டது. இச்சமயத்தில் பெற்றோர் வேறு என்ன செய்ய முடியும்? தாங்கள் நினைக்கும் கல்வியில் தங்கள் மகன்/மகள் படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அப்படியும் மதவாதம், பாசிசம், குற்றங்கள், போர், போதை மருந்துகள், சமூக வலைத் தளங்கள் போன்றவற்றுக்கு நமது தலைமுறை மாணவர்கள் இரையாகிறார்கள். மாறி வரும் தொழிலாளர் சந்தைக்கு ஏற்பக் கல்வித் தரத்தையும், தொழிற்பயிற்சிகளையும் மாற்றியமைப்பது ஒன்றே வழி. மறுபடியும் தவறு அரசாங்கத்தின் பக்கமே.

கேள்வி பதில்