கலப்பு

தமிழில் மாதப் பெயர்கள் பாதி சமஸ்கிருத அல்லது பிராகிருதத் திரிபுகளாகவும் பாதி தமிழ்ப்பெயர்களாகவும் உள்ளன. சைத்ர, வைசாக என்று தொடங்கி பால்குன வரை செல்வன வடநாட்டு மாதப் பெயர்கள். சித்திரை, வைகாசி எனத் தொடங்கி பங்குனி வரை தமிழ்மாதப் பெயர்கள் செல்கின்றன. சித்திரை என்பது சைத்ர என்பதன் திரிபு, வைசாக என்பது வைகாசி ஆயிற்று, பால்குன என்பது பங்குனி ஆயிற்று, ஆஷாட என்பது ஆடி ஆயிற்று என்பவற்றை ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் ஆனி, தை, மாசி போன்ற பெயர்கள் தூயதமிழ்ப் பெயர்களாக உள்ளன. மேலும் வடமொழியிலிருந்து ஏற்கப்பட்ட பெயர்களும் நன்கு தமிழ்வடிவப் படுத்தப்பட்டுள்ளன. பூர்வபாத்ரபத என்பது புரட்டாசி என அழகான தமிழ் வடிவம் கொண்டிருக்கிறது. ஸ்ராவண என்பது ஆவணி என அழகான தமிழ்ப் பெயராகக் காட்சியளிக்கிறது.மிருகசீரிஷ என்ற பெயர் மிக அழகாக மார்கழி ஆகியிருக்கிறது.
எவ்விதம் ஒருமொழி பிற மொழிகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துவைத்திருந்தனர். இப்போதோ தலைகீழாக நடக்கிறது. எவ்வித மரபுமின்றி மனம்போன போக்கில் மொழியைக் கையாளுகிறார்கள். ஈச்வர என்ற வடசொல் அழகாக ஈசுவரன் என்றே தமிழில் எழுதப்பட்டு, சொல்லப்பட்டு வந்தபோதிலும் இன்று வேண்டுமென்றே தமிழ் மரபுக்கு மாறாக ஈஷ்வர் என்று எழுதுகின்ற, பேசுகின்ற திமிரைக் காண்கிறோம்.

தினம்-ஒரு-செய்தி