எழுபத்தொன்றில் அடியெடுத்து…

1949 மே 14 என் பிறந்த நாள். அந்தக் கணக்குப்படி இன்று எழுபது முடிந்து எழுபத்தொன்றாம் வயதில் அடியெடுத்து வைக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகள் முடிந்தபோது-41இல் அடியெடுத்து வைத்தபோது, நானும் மனைவியும் மகன் துணையோடு சீனாவுக்குச் சென்று வந்தோம். (அந்தக் குறிப்புகளைக்கூட இன்றுவரை எழுதமுடியவில்லை!) என் வாழ்க்கை வரலாற்றில்தான் அதைப் பற்றி எழுத வேண்டும். இப்போது எழுபத்தொன்றாவது வயதில் அடிவைக்கும்போது, வெளிநாட்டுக்கு இல்லை என்றாலும், மீண்டும் ஒரு சிறு பயணமேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன்படி மங்களூர், மேற்குக் கடற்கரை வரை சென்றுவர வேண்டும் என்று முடிவுசெய்தேன். நேற்று மூகாம்பிகைக்கும் முருதேஷ்வருக்கும் சென்றுவிட்டு வரும் வழியில் உடுப்பி அருகில் மேற்குக் கடற்கரைச் சாலையில், கடற்கரையில் மாலை நேரம் சுமார் மூன்று மணிநேரம் செலவிட்டோம். பக்திக்காகக் கோயிலுக்குச் செல்ல வில்லை. மனத்துக்குப் பிடித்த மேற்குக் கடற்கரைச் சாலை, அரபிக் கடலில் சூரிய அஸ்தமனக் காட்சி…இம்மாதிரி விஷயங்களுக்காகத்தான். கடவுள் என ஒன்றிற்குப் பெயர்தர வேண்டுமானால், இயற்கைதான் கடவுள். இயற்கையின்றி மனிதன் ஏது?
இன்று பெங்களூர் திரும்புகிறோம்.

General