என் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2

என் மகனுக்குப் பெண் நிச்சயித்த சமயம். 2012 பிப்ரவரி-மார்ச் ஆக இருக்கலாம். பெண்வீட்டாரில் ஒரு பதினைந்துபேர் எங்கள் வீட்டைப் பார்க்க வந்தார்கள். அப்போது நாங்கள் கிண்டியில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குக் குடியிருந்தோம். நான் நிறைய எழுதியிருந்த போதிலும் அங்கீகாரங்களோ விருதுகளோ கிடைக்காத காலம் அது. 2011இல் ஆனந்தவிகடனின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்திருந்த போதிலும் அவர்கள் அப்போது அதற்கான பட்டயங்களோ அடையாளங்களோ எதையும் அளித்திருக்கவில்லை.
மாமரத்தில் ஏறிய குரங்குப் பட்டாளம் போல் வீடுமுழுவதையும் அடைத்துக் கொண்டார்கள். அவர்கள் திமிர்ப்பேச்சு தாங்க முடியவில்லை. பெண்ணுக்குத் தாய்வழிப் பாட்டனாம் ஒரு கிழவன். எங்கள் பெண்ணைப் போல் உலகத்தில் இருக்க முடியாது, எவ்வளவு சீர்செனத்தி செய்வீர்கள்? 100 பவுன் போடுவீர்களா? என்றெல்லாம் கிண்டலோ, நிஜமோ தெரியாது, பேசிக் கொண்டிருந்தான். பெண் ஏதோ ஒரு கம்பெனியில் இரண்டு வருஷமாக வேலை செய்கிறாளாம். பெண்ணின் மாமன் என்று ஒருவன். இவன் இரயில்வேயில் உத்தியோகத்தில் இருக்கிறானாம், இவனுடைய ஆணவப் பேச்சையும் சகிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் என் மகனோ மனைவியோ, “இவங்க ஒரு எழுத்தாளர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறாங்க” என்று என்னைப் பற்றிக் கூறினார்கள். “எழுத்தாளராம்…எழுதுகிறானாமே இவன்? என்ன சார் எழுதறீங்க?” என்று கிண்டலடித்தார்கள் பெண் வீட்டில். சாண்டில்யனைப் படித்துக்கூட புரிந்துகொள்ள முடியாத கும்பல், இந்த மாதிரிப் பேசியது. சிவனே என்று பொறுத்துக் கொண்டு உபசரித்து அனுப்பிவைத்தோம். வெறும் பண அருமை தவிர வேறு எதுவும் தெரியாத கும்பல். அப்போதே அதன் தகுதி தெரிந்துவிட்டது. கட் பண்ணி யிருக்க வேண்டும். ஆனால் பெண்பார்த்த அன்றே “உங்கள் பெண் பிடித்திருக்கிறது, எடுத்துக் கொள்கிறோம்” என்று என் மனைவியையும் கேட்காமல் வாக்குக் கொடுத்துவிட்டேன். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அன்றும் பேசாமல் இருந்தேன். அதனால் எனக்குப் பின்னால் ஏற்பட்ட அவமானங்கள் சொல்லி முடியாது. என்ன செய்ய?
கொண்டு குலம்பேசக் கூடாது என்பார்கள். ஆனால் தேவையின்றி எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் வாழ்க்கையில் மிகுதி. குறிப்பாக எங்கள் சாதியைச் சொல்லவேண்டும். எப்படியோ பிஎஸ்.சி, பி.இ., என்றெல்லாம் சற்றே படித்து, பெரும்பாலோர் வேலையில் இருந்தார்கள். ஆனால் பொது அறிவு பூஜ்யம். பாடப்புத்தக அறிவுக்குமேல், பணம் சம்பாதிப்பதற்குமேல், சற்றும் வெளி விஷயங்கள் இருக்கின்றன என்பதை அறியாத சோற்றுக் கூட்டம்.
இப்படிப்பட்ட சாதியில் பிறந்துவிட்ட வள்ளலார் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க மனம் தாள முடியவில்லை. அதனால்தானோ என்னவோ, “கடைவிரித்தேன், கொள்வாரில்லை” என்று கடைசியில் சொல்லிப் போனார், பூவினும் மெல்லிய மனமுடைய அந்தப் பெரியார்.

General