ஊடகங்களின் பாரபட்சம்

நான்காண்டுகளுக்கு முன்பு நான் மொழிபெயர்ப்புக்கென சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எந்தக் காட்சி ஊடகமும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. என் பெயரோ நிழற்படமோ அவற்றில் வரவில்லை. இன்று யாரோ கேவி ‍ஜெயஸ்ரீ என்ற பெண்மணி மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாதெமி பெற்றமைக்கு விடாமல் எல்லா ஊடகங்களும் அந்த அம்மையாரின் முகத்தையும் பெயரையும் பேட்டியையும் வெளியிட்டுவருகின்றன. எனக்கு அந்த அம்மையார்மீது எந்தக் கோபமும் இல்லை. யார் என்றும் தெரியாது. ஆனால் அந்த அம்மாள் ஒரு பார்ப்பனியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால்தான் ஒருவேளை ஊடகங்கள் இவ்வளவு அக்கறை காட்டுகின்றனவோ என்னமோ? இம்மாதிரிப் போக்குகள் மனசுக்குக் கஷ்டமாக இருக்கின்றன.
அதற்கும் மேல் மலையாளத்திலிருந்து தமிழுக்குப் பெயர்ப்பதுதான் இந்தியமொழிகள் எல்லாவற்றிலும் எளியது. அந்த அம்மையாரும் கேரளத்தில் பிறந்தவராம். ஆக இது ஒரு பெரிய சாதனை என்று பேசுகின்றன புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள். சரி. இப்படித்தான் உலகம் என்று போக வேண்டியிருக்கிறது. ஆனால் இ்ந்த ஊடகங்கள் ஐம்பது புத்தகங்களை உயிரைக் கொடுத்து மொழிபெயர்த்தவனை–அதிலும் முற்றிலும் ஒரு கண் பார்வையை இழந்து, மற்றொரு கண்ணிலும் அரைகுறைப் பார்வையோடு, தமிழுக்கு ஏதேனும் நன்மை செய்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு மொழிபெயர்ப்பவனை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
ஆனந்தவிகடன்கூட மூன்று முறை என்னை விருதுக்கு உரியவனாகத் ‍தேர்ந்தெடுத்தபோதிலும் விருது வழங்கும் விழா மேடையில் வெளிப்படுத்திக் கொள்ளப் போதிய அவகாசம் அளித்ததில்லை. அதற்கு பதிலாக எத்தனையோ அர்த்தமற்ற கூத்துகளுக்கு பல மணி நேரம் வீணாக்கப்படுகிறது. மாலை 5 முதல் இரவு 12 மணி வரை நடக்கும் விழாவில் எனக்கு விருது வழங்கும்போது என்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு ஐந்து நிமிடம் தருவதற்கு மனம் ஒப்புவதில்லை, அங்குள்ள காம்பியர்களுக்கு. இதில் சாகித்திய அகாதெமிதான் விதிவிலக்கு. எங்களை நன்கு பாராட்டியதோடு, எங்கள் வெளிப்பாட்டிற்கும் உரிய நேரம் அளித்தார்கள்.

சமூகம்